பக்கம் எண் :

52கவிமணியின் கவிதைகள்

Untitled Document
335   பச்சிலையும் கனியும் - நிறைந்து
     படர்ந்து வளர் ஆலின்
உச்சியிற் சென்றிருந்தால் - எப்படியான்
     உன்னையும் கண்டிடுவேன்?

336   நாடும்என் உள்ளத்திலே - குடிபுகும்
     நாயகி கையமர்ந்து,
பாடி அமுதளிக்கும் - அழகிய
     பைங்கிளி நீயலவோ?

337   பூனைகள் இங்குவாரா - வேடர்தம்
     பொறியின் பயமும் இல்லை;
யானுனைக் காத்திடுவேன் - இறங்கிநீ
     என்கையில் வந்திடாயோ?

338   வட்டமா யுன்கழுத்தில் - ஒருநாளும்
     வாடாத ஆரமதை
இட்டவர் ஆரடியோ? - எனக்கும்
     இயம்புவையோ? கிளியோ!

339   மாணிக்க மூக்கழகும் - மரகத
     வர்ண வடிவழகும்
காணக்கண் ணாயிரந்தான் - இருப்பினும்
     கண்டு முடிந்திடுமோ?

340   கத்திரி போலவெட்டிக் - கனியினைக்
     கௌவி யெடுத்தோடச்
சித்திர வாயளித்த - கடவுள்
     திருவருள் சற்றோ, அம்மா!

341   சாய்ந்து தலைவணங்கி - இனிய
     தமிழைநீ கற்குமுறை,
ஆய்ந்த புலவருமே - எழுதி
     அயர்ந்துகை சோர்வார், அம்மா!

342 பறக்கச் சிறகிருந்தும் - மரக்கினை
     பற்றிநீ ஏறுவதேன்?
திறத்தை உலகினுக்கு - மிகவும்
     தெரிவிக்கவோ? கிளியே!