பக்கம் எண் :

82கவிமணியின் கவிதைகள்

Untitled Document
505 உடலு றுப்புகள்போல் - உலகில்
     ஒத்துழைப் போமேல்,
தடையி லாமலே - க்ஷேமம்
     தழைத்து வருமையா!

506 வறுமை அண்டாது - கொடிய
     வழக்கும் வாராது;
சிறுமை தருஞ் செயல் - ஏதும்
     தீண்ட மாட்டாது.

507 எமனை அஞ்சாமல் - தீமை
     யாது மில்லாமல்,
அமர வாழ்வுமிந்த - உலகில்
     அடைய லாமையா!

508 உலக க்ஷேமத்தைத் - தரும்
     உண்மை யிதுவையா!
பலபல வேறு - சொல்லிப்
     பயனொன் றில்லையா!

69. எனது சுகதுக்கங்கள்
509 வான வெளிதனிலே - கவிந்தெழு
     மாலைப் பொழுதினிலே,
கூனப் பிறைவரவே - சிவன்திருக்
     கோலம் தெளிவேன், அடி!

510 முற்றிய ஆழியிலே - அலை வந்து
     மோதி எறிகையிலே,
கற்றைக் கதிரெழவே - உமைதிருக்
     காட்சி வியப்பேன், அடி!

511 தாமரைப் பொய்கையிலே - கதிரொளி
     தட்டுமவ் வேளையிலே,
பூமலர்ந் தோங்கிடவே - அரியென்று
     போதம் நயப்பேன், அடி!

512 மாமலைச் சாரலிலே - மதமிகு
     வாரணக் கூட்டத்திலே,
காமலர் சிந்திடவே - கணேசர் என்
     கண்முனே நிற்பார், அடி!