பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு85

Untitled Document
526 வம்புகள் பேசிடும் வாயையன்றோ - பூட்டி
     வைப்பது நீதி முறையாகும்;
நம்பி யிருப்போர்க்குத் துன்பம் இழைப்பது
     நல்லோர் பெரியோர் செயலாமோ?

527 வெள்ளிப்பூண் கட்டிய சேணமிட்டால் - நெஞ்சு
     வேதனை யில்லா திருந்திடுமோ?
அள்ளி யிடும்பிடிப் புல்லுக்காக - எங்கள்
     ஆவியைக் கொள்வ தழகாமோ?

528 பக்கம் திரும்பியே பார்த்திடாமல் - எங்கள்
     பார்வையைக் கட்டி மறைப்பதுமேன்?
திக்கெலாம் தந்த பிரமனிலும் - நீவிர்
     தீவிர புத்தி உடையவரோ?

529 திண்ணிய லாடமும் கட்டுவதேன்? - அதில்
     தீயெழ எம்மையும் ஒட்டுவதேன்?
புண்ணியம் நீர்செய்ய வேண்டாமையா - எம்மைப்
     போக்கிலே வீட்டில் போதுமையா!

530 எண்ணிக்கை அற்றதோல் பட்டைகளைக் - கட்டி
     எம்மீது இறுக்கி முறக்கிவைப்பீர்;
கண்ணுக் கழகவை ஆயிடினும் - எங்கள்
     கண்டம் நெரிவ தறியீரோ?

531 பற்றி முதுகினில் ஏறிக்கொள்வீர் - எம்மைப்
     பட்சிகள் போலப் பறக்கச் செய்வீர்;
சற்றும் இரக்கம் இலாதவரோ? - நீங்கள்
     சாத்திரம் கற்ற பயன் இதுவோ?

532 ஈசன் அளித்தகால் இரண்டிருக்க - நீரும்
     எங்கள் குறுக்கை முறிப்பதேனோ?
தாசரைப் போல்வேலை செய்திடினும் - தயை
     சற்றும் உமக்கு வருவதுண்டோ?

533 கையில் சவுக்கொன்று போதாதென்றோ - இரு
     காலிலும் முட்களைக் கட்டிக் கொண்டீர்?
ஐயையோ ஏழையேம்ஆவி பறித்திட
     ஆயிரம் கூற்றுவர் வேண்டுமேயோ?