சரோஜினி தேவிக்கு வயது பதின்மூன்று இருக்கும். உடம்பு மிகவும் பலவீனமாக இருந்தது. ‘எழுதவோ படிக்கவோ கூடாது ; முழு நேர ஓய்வு வேண்டும்’ என்பது டாக்டர் உத்தரவு.
சரோஜினிக்கு சும்மா இருக்க முடியவில்லை. அவர் எதையாவது படித்துக் கொண்டும், எழுதிக் கொண்டுமே இருப்பார். டாக்டர் எவ்வளவோ தடுத்துப் பார்த்தார். சரோஜினியின் ஆர்வத்திற்கு அவரால் அணைபோட முடியவில்லை.
சரோஜினியின் அப்பாவும் எவ்வளவோ கூறிப் பார்த்தார் ; பயனில்லை. பள்ளிக்கூடம் போவதைக் கூடச் சிறிது காலம் நிறுத்தி வைத்தார். ஆனால், அதற்குப் பலன் இல்லாமல் போகவில்லை. சரோஜினி, வீட்டில் இருந்து கொண்டே ஒரு பெரிய கவிதையை எழுதிவிட்டார். 1300 வரிகள் கொண்டது அந்தக் கவிதை ! ஆறே நாட்களில் அதை இயற்றிவிட்டார் ! அத்துடன் ஒரு நாடகத்தையும் எழுதி முடித்தார் ! அப்போது அவர் எழுதிய கவிதை, சர் வால்டர் ஸ்காட் என்ற ஆங்கிலக் கவிஞர் எழுதுவதைப் போல்மிகவும் அழகாகவும், அருமையாகவும் இருந்ததென்று பலர் போற்றினர் ; சரோஜினியைப் பாராட்டினர். * * * சரோஜினி தேவி உப்புச் சத்தியாக்கிரகத்திலும், சட்ட மறுப்பு இயக்கத்திலும் ஈடுபட்டுச் சிறை சென்றிருக்கிறார். |