ஒரு சமயம் சிலம்ப வித்தையில் கெட்டிக்காரனான ஒருவன் வந்தான். அவன் வயதில் பெரியவன். பல இடங்களில் வெற்றி பெற்றவன். அவனை எதிர்த்து விளையாட விவேகானந்தர் முன்வந்தார்.
சிலருக்கு இது வியப்பாக இருந்தது. ‘இவனோ சிறுபையன் ! போதிய அனுபவமும் இல்லாதவன். இவன் அந்த முரடனுடன் சண்டைக்குப் போகிறானே !’ என்று கூறி அவர்கள் வியந்தார்கள்.
பலர் கேலி செய்தனர். “ஆளைப் பார்த்தால் ஆழாக்குப் போல் இருக்கிறான். இவனாவது, அம்மல்லனுடன் சிலம்பம் விளையாடுவதாவது ! எங்காவது கையைக் காலை ஒடித்துக் கொள்ளப் போகிறான்” என்று கூறி அவர்கள் கேலி செய்தனர். விவேகானந்தர் தயங்கவில்லை. வீரமாக அவனுடன் சிலம்பம் விளையாடினார். இருவரும் நெடுநேரம் வெகு மும்முரமாக விளையாடினார்கள்.
விவேகானந்தரின் ஆட்டத்தைப் பார்த்த எல்லோருமே ஆச்சரியப்பட்டார்கள். அவரது திறமையையும், நுட்பமதியையும் பாராட்டினார்கள். ‘ஊம், விடாதே !... சபாஷ்...’ என்றெல்லாம் ஊக்க மூட்ட ஆரம்பித்தார்கள்.
கடைசியில் விவேகானந்தரே வெற்றி பெற்றார் ! சாதாரணமாக வெற்றி பெறவில்லை ; எதிரியின் சிலம்பத் தடியைச் சின்னா பின்னமாக உடைத்தெறிந்து வெற்றிபெற்றார் ! * * * விவேகானந்தர் சிறுவனாக இருந்த போது அவருடைய நண்பன் ஒருவனின் வீட்டுக்கு அடிக்கடி |