புலியைத் தேடிப் புறப்பட்டவர் | 9 | அன்று பரத்பூர் குதிரைப் பந்தய மைதானத்தில் ஏராளமான கூட்டம் கூடியது. பந்தயக் குதிரைகள் புறப்படுவதற்குத் தயாராக நின்றன. அதே சமயம், அந்தச் சிறுவன் தன்னுடைய குதிரை மீதேறி கம்பீரமாக அங்கு வந்து சேர்ந்தான்.
அவனைப் பார்த்ததும், அங்கு நின்றவர்களில் சிலர், “தம்பி, நீயும் பந்தயத்திலே கலந்து கொள்ளப் போகிறாயா?... உம், கலந்து கொள். உனக்குத்தான் முதல் பரிசு !” என்று வேடிக்கையாகக் கூறினர்.
உடனே, அந்தப் பையனுக்கு உற்சாகம் பிறந்து விட்டது. தன்னுடைய குதிரையைத் தட்டி விட்டான். நாலுகால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருந்த பந்தயக் குதிரைகளின் பின்னால், அவனுடைய குதிரையும் வெகு வேகமாக ஓடியது.
ஆனால், அந்தக் குதிரையின் சேணத்தில் கால் வைத்துக் கொள்வதற்கான படிகள் (stirrups) இல்லை. ஆனாலும், அந்தப் பையன் கீழே விழாமல் தன் முழங்கால்களால் சேணத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டான். அதனால், குதிரை தாவித் தாவிச் செல்லும்போது, முழங்கால்கள் சேணத்தில் உராய்ந்தன ; இரத்தம் வழிய ஆரம்பித்தது. ஆயினும், அவன் சளைக்கவில்லை. விடாப் பிடியாகக் குதிரையை ஓட்டி, பந்தயத்தை முடித்தே தீர்த்தான். பந்தயத்தில் அவன் வெற்றி பெறாவிட்டாலும் அவனுடைய விடா முயற்சியைக் கண்டு எல்லோரும் வியந்தனர். |
|
|
|
|