எனக்குச் சாப்பாடு போட பெற்றோர்கள் இந்த ஊரில் இல்லை. அதனால் நான் வேலை செய்கிறேன். இதில் என்ன இழிவு? நான் திருடவில்லை! பிச்சை எடுக்கவில்லை” என்றான் பழனி. “பிச்சைதான் எடுக்கிறாய்! வருகிறவர்களிடம் கையேந்துவது பிச்சை அல்லாமல் பெரிய வள்ளல் தன்மை என்ற நினைப்போ? உன்னுடன் பேசுவதே எனக்கு அவமானம். குருசாமி, ஒரு விஷயம் பேசவேண்டும். வரப்போகிறாயா? இல்லையா?” என்று அதிகாரத்துடன் கேட்டான் நாவுக்கரசு. “நாவுக்கரசு, பேசவேண்டியதை இங்கே பேசுவதானால் பேசு. இல்லையென்றால் போ” என்றான் குருசாமி. நாவுக்கரசு ஒரு முறை முறைத்துவிட்டு அங்கிருந்து போனான். “பழனி, இவனுக்குப் பள்ளிக்கூடத்தில் நிறைய செல்வாக்கு இருக்கிறது என்ற திமிர். இவன் சாரணர் குழுவின் தலைவன். சென்ற ஆண்டு உதவி மாணவர் தலைவனாக இருந்தான். ஆசிரியர்களிடமெல்லாம் நன்றாகப் பழகுவான். ஒவ்வொருவர் வீட்டுக்கும் போய் வருவான். பள்ளிக்கூடத்தில் இவனைத் தெரியாதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். அதனால் மண்டைக் கனம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து விட்டது. அதைக் குறைக்கவேண்டும்” என்று சொன்ன குருசாமி, “பழனி, சைக்கிள் துடைப்பது, பேப்பர் போடுவது போன்ற வேலைகளையெல்லாம் செய்வது எவ்வளவு சிரமம்? அந்தச் சிரமத்திலும் இப்படி நன்றாகப் படிப்பது எவ்வளவு கஷ்டம்! இத்தனை கஷ்டங்களையும் எப்படிப் பொறுத்துக் கொள்கிறாய்?” என்று கேட்டான். “குருசாமி, இந்த நகரத்தில் - அதுவும் குறிப்பாக இந்தச் சூளைப் பகுதியில் எத்தனை ஏழைகள் ஒருவேளை சோற்றுக்கும் வழியற்றுக் கஷ்டப்படுகிறார்கள். எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில், ஒரு தாய், தன் நான்கு குழந்தைகளை வீட்டு வேலை செய்வதனால் வரும் நூறே நூறு ரூபாயை வைத்துக்கொண்டு காப்பாற்றி வருகிறாள். அந்தக் குழந்தைகள் வயிறு நிறைய ஒரு வேளையும் சாப்பிட முடியாமல், பிறர் சாப்பிடும்போது |