ஆம். அவனுடைய ‘பிச்சைக்காசு’ கதை ‘காளித்தம்பி’ எழுதியது என்று பிரசுரிக்கப்பட்டிருந்தது. பழனியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மாணவர் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் ஆயிரமடங்கு அதிக மகிழ்ச்சியடைந்தான். முதல் முதல் தன் கதையைப் பத்திரிகையில் பார்த்த எழுத்தாளனின் மகிழ்ச்சிக்குப் கடலை உவமையாகச் சொன்னாலும் பொருந்தாது. உலகிலுள்ள எல்லாக் கடல்களையும் ஒன்றாக்கி உவமைப்படுத்தினால் ஒருவேளை பொருந்தக்கூடும். பழனி அத்தகைய மகிழ்ச்சிக் கடலில் இறங்கினான். துள்ளினான். நீந்தி நீந்தி மகிழ்ந்தான். காளி பழனியின் மகிழ்ச்சியைப் பார்த்து மகிழ்ந்தான். பிறகு எழுந்தான். அதே மாடத்திலிருந்து ஒரு கவரை எடுத்து அவனிடம் கொடுத்தான். “பழனி, எழுத்தாளனாகிவிட்டாய். உனக்கு என் பாராட்டுக்கள். உன் பெயருக்கு மல்லிகை வரவே, அதைப் பிரித்துப் பார்த்து மகிழ்ந்தேன். இதோ பார், இந்தக் கவரும் வந்தது; கிழித்துப் பார்” என்று கொடுத்தான். கவரைப் பார்த்ததும் அதுவும் மல்லிகை அலுவலகத்திலிருந்து வந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டான் பழனி. அதைக்கிழித்தான். உள்ளே ஒரு கடிதம், செக்கோடு இணைக்கப்பட்டிருந்தது. அது மல்லிகை ஆசிரியர் எழுதிய கடிதம். பழனி படித்தான். “அன்புள்ள திரு.காளித்தம்பி அவர்களுக்கு வணக்கம், இந்த இதழில் ‘பிச்சைக்காசு’ கதையை வெளியிட்டுள்ளோம். அதை வெளியிடுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். அரிய கருத்து நிறைந்த சுவையான கதை. உங்கள் எழுத்து இளம் உள்ளங்களுக்கு ஏற்ற ஏழுத்து. மிக விரைவில் நீங்கள் புகழ்பெற்ற எழுத்தாளராகத் திகழ்வீர்கள் என்று நம்புகிறோம். இத்துடன் கதைக்கான சன்மானத் தொகை (செக். ரூபாய் 50-க்கு) |