போய்ச் சொல்லிவிட்டான். தலைமை ஆசிரியர் உடனே பழனியை அழைத்துச் சைக்கிள் காணாமற்போனது உண்மை தானா என்று விசாரித்தார். பழனி, நடந்ததைச் சொன்னான். சைக்கிளை எடுத்தவன் யார் என்பது தெரியாது என்றும் சொன்னான். தலைமை ஆசிரியர் நாவுக்கரசை அழைத்து விசாரித்தார். நாவுக்கரசு உண்மையை ஒப்புக்கொண்டான். தலைமை ஆசிரியர் கடுங்கோபம் கொண்டார். “நாவுக்கரசு இதுபோல் ஏதாவது இனிமேல் செய்தாயோ, உன்னைப் பள்ளியில் இருந்தே விலக்கிவிடுவேன்” என்று எச்சரித்தார். அது மட்டுமா, நாவுக்கரசின் தந்தையை வரவழைத்து, அதே மாதிரி எச்சரித்தார். நாவுக்கரசின் தந்தை நாவுக்கரசை நையப்புடைத்தார். நாவுக்கரசின் கோபமெல்லாம் பழனியின் மீது திரும்பியது. அவன் மீது நாவுக்கரசு கொண்ட பகை, குறைவதற்குப் பதில் வளர்ந்தது. சமயம் கிடைக்கும்போது பழிக்குப் பழி வாங்கத் திட்டமிட்டான். பிப்ரவரி சென்றது. மார்ச் வந்தது. பழனி ஒரு நொடியையும் வீணாக்காது படித்து வந்தான். மார்ச் கடைசி வாரத்தில் ஆண்டுத் தேர்வு. அதில் முதல் மார்க்கு வாங்க வேண்டுமல்லவா? மார்ச் இரண்டாவது வாரத்தில் பழனியின் உள்ளம் மகிழ்ச்சியால் நிறையும் நிகழ்ச்சி நடந்தது. மல்லிகை தொடர்கதைப் போட்டியில் காளித்தம்பியின் கதை பரிசு பெற்றது. அதே இதழில் காளித்தம்பி எழுதிய பரிசுத் தொடர் கதை ஆரம்பமானது. பழனியை மாணவர்கள் எல்லாம் பாராட்டினர். ஆசிரியர்கள் பாராட்டினர். தலைமை ஆசிரியர் இறைவழிபாடு நடக்கும்போது பழனிக்கு மாலையிட்டுப் பாராட்டினார். பழனி மகிழ்ச்சியில் மிதந்தான். அவன் எழுதிய கதை தன் சிறப்பால் பரிசு பெற்றது. தந்தையின் பொருளால் புகழால் பரிசு கிடைத்தது என்று சொல்ல முடியுமா? நினைக்கவும் முடியுமா? மல்லிகையின் ஆசிரியர் ஆயிரம் ரூபாய் அனுப்பினார். காளித்தம்பியின் புகைப்படம் ஒன்றையும் அனுப்புமாறு |