பழனியைப் பழிவாங்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த நாவுக்கரசு, ‘பழனி தான் ரங்கன் என்று சொல்லி அவனை மாட்டி விடலாமா?’ என்று நினைத்தான். பழனி ரங்கன் இல்லைதான், இது அவனுக்கே நன்றாகத் தெரிந்தது. என்றாலும் “ஓரிரண்டு நாட்கள் போலீஸில் மாட்டிக்கொள்ளட்டுமே, அதுவும் இன்றைக்குத் தேர்வு. இந்த நேரத்தில் பழனியைப் போலீஸ் பிடித்துச் செல்லட்டும். இதுவே அவனுக்குச் சிறந்த தண்டனை” என்று நினைத்தான் நாவுக்கரசு. மணி பார்த்தான். காலை ஆறு மணி. நாவுக்கரசு கையில் காசுடன் வெளியே புறப்பட்டான். டெலிபோன் பூத்துக்குச் சென்றான். கதவை மூடிக்கொண்டான். தன்னை யாராவது கவனிக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டான். அந்தக் காலை நேரத்தில் சாலையில் யாருமில்லை. நாவுக்கரசு நடுங்கும் கையால் டெலிபோன் டைரக்டரியைப் புரட்டினான். பிறகு வேப்பேரி போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன் செய்தான். “இது போலீஸ் ஸ்டேஷன்தானே. மதுரையில் திருடிய ரங்கன் என்னும் பையன் சூளையில் பழனி என்ற பெயரோடு வசிக்கிறான். இப்போதே போய் அவனைப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்றான். செய்தியை மறுபுறம் கேட்ட இன்ஸ்பெக்டர், “எந்த இடத்தில் அவன் தங்கியிருக்கிறான்? முகவரி என்ன?” என்று கேட்டார். நாவுக்கரசு, பழனி இருக்கும் வீட்டு முகவரியை மடமடவெனக் கூறினான். இன்ஸ்பெக்டர், “சரி, நீங்கள் யார்? உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டார். நாவுக்கரசு தன்னை வெளிப் படுத்திக் கொள்வானா? பதில் சொல்லவில்லை. இன்ஸ்பெக்டர் “ஹலோ, ஹலோ” என்று கூப்பிட்டார். நாவுக்கரசு டெலிபோன் ரிசீவரை மாட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறினான். நாவுக்கரசு சொன்ன செய்தியை இன்ஸ்பெக்டர் முழுக்க முழுக்க நம்பவில்லை. முழுக்கமுழுக்க பொய் என்றும் |