ஒன்பதே முக்கால் மணிக்கு இன்ஸ்பெக்டர் வந்தார். பழனி ஆவலோடு எழுந்துநின்று பார்த்தான். அன்றொருநாள் தான் பணப்பை கொண்டு வந்து கொடுத்த போது பாராட்டினாரே அவராக இருக்கும் என்று நம்பிக்கையோடு பார்த்தான். என்ன ஏமாற்றம்! அவர் இல்லை. வேறு புதிய இன்ஸ்பெக்டர். ஹெட்கான்ஸ்டபிள் இன்ஸ்பெக்டரிடம் தான் பழனியை விசாரித்ததைப் பற்றிச் சொன்னார். “எனக்கு இவன்மேல் சந்தேகம் சார். மதுரையில் எங்கே இருந்தான், பெற்றோர் யார் என்று கேட்டால் வாயே திறக்கமாட்டேன் என்கிறான்” என்றார். இன்ஸ்பெக்டர் பழனியை அழைத்தார். அவன் முகம் அவரைக் கவர்ந்தது. “தம்பி, நீ ரங்கன் இல்லை என்கிறாயாம். அப்படியானால் மதுரையில் நீ எங்கே இருந்தாய், உன் பெற்றோர் யார் என்பவற்றைச் சொல்லலாமே?” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர். “மன்னிக்கவேண்டும் சார். என் பெற்றோர் பேரை நான் சொல்லப் போவதில்லை. தயவுசெய்து என்னை அதற்காக மன்னிக்கவேண்டும். ஆனால் நான் ரங்கன் அல்ல. என் பெயர் பழனி. சென்னை வந்த புதிதில் ஐம்பதாயிரம் ரூபாய் கொண்ட பணப்பை என்னிடம் கிடைத்தது. அதை இதே போலீஸ் ஸ்டேஷனில்தான் கொண்டு வந்து ஒப்படைத்தேன். அப்போது இன்ஸ்பெக்டராயிருந்தவர் என்னைப் பாராட்டினார். நீங்களே சொல்லுங்கள், நான் திருட்டுப் பயலாயிருந்தால் ஐம்பதாயிரம் ரூபாயைத் திருப்பிக் கொடுப்பேனா?” என்று கேட்டான் பழனி. “ஐம்பதாயிரம் ரூபாயை நீயா திருப்பிக்கொடுத்தாய்? ஹெட்கான்ஸ்டபிள், இந்தச் சம்பவம் உனக்கு நினைவிருக்கிறதா?” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர். ஹெட்கான்ஸ்டபிள் தலையைச் சொரிந்தார். பிறகு, “ஆமாம் சார். ஒரு பையன் பணப்பை கொண்டு வந்து கொடுத்த |