இன்ஸ்பெக்டர் கேட்டார். பழனி சற்றும் தயங்காமல், “இல்லை சார். எனக்கு யார்மீதும் சந்தேகம் இல்லை” என்றான். தலைமை ஆசிரியர், “பழனி, ஒரு வேளை முன்பு சைக்கிளைத் திருடிச் சென்றதைப்போல நாவுக்கரசே இதையும் செய்திருப்பானோ?” என்று கேட்டார். “இருக்காது சார். நாவுக்கரசு இப்படிச் செய்யமாட்டான் என்று நான் நம்புகிறேன் சார்” என்று உறுதியாகச் சொன்னான் பழனி. தலைமை ஆசிரியர் பழனியின் உள்ளத்தைப் புரிந்து கொண்டார். நாவுக்கரசின் பெயரை இழுப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை என்பதை அவர் உணர்ந்தார். இன்ஸ்பெக்டர் தலைமை ஆசிரியரிடமும் பழனியிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டார். பசி பொறுக்காத பழனியும் மெல்ல நடந்து சாப்பிடச் சென்றான். சாப்பிடும் இடத்தில் காளி காத்திருந்தான். காலையில் வேலைக்குப் போய்விட்டுத் திரும்பியபோது பழனி அறையில் இல்லை. அறை பூட்டியிருந்தது. “சரி, சாப்பிடப் போயிருப்பான்” என்று நினைத்துத் தன் வேலைக்குப் போய்விட்டான். அதனால் பகலாவது பார்ப்போம் என்று காத்திருந்தான். பழனி சோர்வோடு வந்து சேர்ந்தான். “என்ன பழனி, இப்படி யிருக்கிறாய்? தேர்வு எப்படி எழுதினாய்?” என்று கேட்டான் காளி. “அப்புறம் சொல்கிறேன். வா, முதலில் சாப்பிடுவோம்” என்று சாப்பிட உட்கார்ந்தான். காளியும் அருகே உட்கார்ந்தான். இருவரும் சாப்பிட்டு முடித்தனர். பின் தங்கள் அறைக்குச் சென்றனர். அங்கே, பழனி காலையில் நடந்ததைச் சொன்னான். ஆபத்து வந்ததும் போனதும் சொன்னான். காளிக்கு அது ஒரு கதையைப் போல இருந்தது. “தக்க சமயத்தில் உன்னைப் பள்ளிக்கு ஜீப்பில் அனுப்பினாரே, அந்த இன்ஸ்பெக்டர் வாழ்க” என்று பாராட்டினான் காளி. பழனி மற்றைய தேர்வுகளை மிக நன்றாக எழுதினான். இன்னும் ஒரே ஒரு தேர்வு மிச்சம். அதை எழுதிவிட்டால் தேர்வு |