தந்தையின் புகழ் என்று நான்தான் இகழ்ந்தேன். பலமுறை இகழ்ந்தேன். பலரிடம் இகழ்ந்தேன். பழனி அது மகன் புகழ் என்பதை இன்று நிரூபித்துவிட்டான். காளித்தம்பி பழனிதான் என்பது எனக்குத் தெரியாது. காளித்தம்பியின் எழுத்தில் மயங்கி அவரை அழைக்குமாறு தலைமை ஆசிரியரிடம் நான்தான் வற்புறுத்திச் சொன்னேன். மல்லிகை இதழுக்கு எழுதி காளித்தம்பியின் முகவரியை அறிந்து கடிதம் எழுதினேன். பழனி காளித்தம்பியாக வந்துள்ளான். பழனி நீ திறமைமிக்கவன்; நீ தகுதி பெற்றவன்; நீ பெற்ற புகழ் உன் புகழே! உன் திறமைக்கு நான் தலை வணங்குகிறேன். நின் அறிவைக் கண்டு நான் வியக்கிறேன். பொறாமையால் ஏதேதோ சொல்லித் திரிந்த என்னை மன்னித்துவிடு; வைரம் குப்பையிலிருந்தாலும் சிறக்கும். நீ உண்மையான வைரம்! தானே ஒளிரும் ரேடியம்! உன்னால் இந்தப் பள்ளி - இந்த ஊர் புகழ் பெறுகிறது. ஏன், நான் உன்னை நண்பனாகப் பெற்றதால் பெருமை அடைகிறேன்” எனப் பலவாறு கூறினான். மன்னிப்புக் கேட்டபின் நன்றி செலுத்தினான். கூட்டம் இனிது முடிந்தது. பிறகே தந்தையிடம் சென்றான். அவர் காலில் விழுந்து வணங்கினான். சுந்தரேசர் பாசவெள்ளம் அணை கடந்து பாய தன் மகனை வாரி எடுத்து அணைத்துக்கொண்டார். “அப்பா, நான் முன்பின் தெரியாத சென்னையில் இந்த நிலை அடையக் காரணம் இதோ இந்தக் காளியப்பன்தான். அந்த நன்றி மறவாமல், ‘காளித்தம்பி’ என்ற புனைபெயரை வைத்துக்கொண்டேன்” என்று காளியை அறிமுகப்படுத்தினான். சுந்தரேசர் காளியையும் தழுவிக்கொண்டார். பழனி அழகனிடம் ஓடினான். அவனுக்குக் காளியை அறிமுகப்படுத்தினான். நாகன் அருகேயே இருந்தான். “நாகா, வகுப்பில் முதல் மார்க்கு வாங்குவது நீ தானே” என்று கேட்டான் பழனி. நாகன் முகம் வாடியது. தலை கவிழ்ந்தது. அவன் “இல்லை பழனி என் திமிரை உன் நண்பர்கள் நன்றாக அடக்கி |