கை கால்களைக் கழுவிக்கொண்டு செல்ல இறங்கினர், பழனியும் அவன் நண்பனும். “பழனி, அதோ பார், நாக மாணிக்கம்” என்று அழகன் சுட்டிக் காட்டினான். பழனி, அழகன் காட்டிய பக்கம் பார்த்தான். நாகமாணிக்கம், தன் நண்பர்களுடன் குளத்துப் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டிருந்தான். நாகமாணிக்கத்தைப் பழனிக்கு நன்றாகத் தெரியும். பழனி படிக்கும் அதே பள்ளியில், அதே வகுப்பில் அவனும் படித்து வருபவன். அவன் பெரிய பணக்காரன் அல்ல. ஆனால், பணக்காரனைப்போல பாவனை செய்வதில் வல்லவன். நாகமாணிக்கத்தின் அப்பா மதுரையில் உள்ள வேறொரு ஆலையில் சாதாரண குமாஸ்தா வேலை செய்பவர்தான். அவர் பொறுப்பு நூல் பேல்களை பம்பாய் போன்ற நகரங்களுக்கு அனுப்புவது, லாரிகள் மூலம் பேல்கள் அனுப்புவது வழக்கம். நாகனுடைய தந்தை தனக்குக் கமிஷன் கொடுக்கும் லாரிகளில் மட்டும் பேல்கள் அனுப்புவார். சுருக்கமாகச் சொன்னால் லஞ்சம் வாங்கியே அவர் ஒரு மாடி வீடு கட்டிவிட்டார். பாங்கியிலும் போதுமான பணம் வைத்திருந்தார். நாகமாணிக்கம் இந்தத் திறமையில் தந்தைக்குச் சளைத்தவனல்ல. தீபாவளிக்குப் பட்டாசு வேண்டுமா? நாகன் அப்பாவைக் கேட்கமாட்டான். அப்பாவின் தயவை எதிர்பார்க்கும் டிரான்ஸ்போர்ட் கம்பெனி உரிமையாளர் ஒருவர்க்கு போன் செய்வான். போனில் ‘பட்டாசு வாங்க வேண்டும். அப்பாவுக்கு நேரமில்லையாம். நீங்கள் வாங்கி வருகிறீர்களா?‘ என்று நாசுக்காகச் சொல்வான். உடனே டிரான்ஸ் போர்ட் கம்பெனி உரிமையாளர், தம் சொந்த மகனுக்குப் பட்டாசு வாங்க மறந்தாலும் நாகனுக்குத் தேவையான பட்டாசுகளை வாங்கிக் கொடுப்பார். நாகன் பெரிய கோடீஸ்வரரின் பையனைப்போல அவற்றைச் சுட்டு மகிழ்வான். பட்டாசு மட்டும்தான் என்று நினைக்காதீர்கள். நாகன் தனக்கு எது தேவையென்றாலும் இப்படித்தான் வாங்கிக் கொள்வான். அவன் கையிலே கட்டியிருக்கும் வாட்ச்சு ஒரு லாரிக்காரர் கொடுத்தது. அவன் ஏறிச் சவாரி செய்யும் |