பழனி சைக்கிள் துடைக்கச் சென்றான். * * * அழகன் ‘மல்லிகை’ சிறுவர் இதழைப் படித்துக் கொண்டிருந்தான். அவன் மனம் பத்திரிகையில் பதியவில்லை. விடுமுறை நாட்கள் யாவும் பழனி இல்லாததால் வீண் நாட்களாகக் கழிந்தன. அழகனுக்குப் பழனியைப் பிரிந்திருப்பது மிகவும் சிரமமாய் இருந்தது. அந்த நேரத்திலும் பழனியை நினைத்தான் அவன். பழனி மதுரையை விட்டுப்போன மறுநாள் மாலை சுந்தரேசர் அழகனின் வீட்டுக்கு வந்தார். “அழகா பழனி எங்கே போவதாக உன்னிடம் சொன்னான்?” என்று கேட்டார். அழகனுக்கு அந்தக் கேள்வியே வியப்பளித்தது. “கோயமுத்தூருக்குப் போவதாகச் சொன்னான். நீங்கள் தானே கோவைக்கு டிக்கெட் வாங்கினீர்கள். இப்போது ஏன் இப்படிக் கேட்கிறீர்கள்? ஏதாவது...” என்று இழுத்தான் அழகன். சுந்தரேசர் பெருமூச்சு விட்டார். “அழகா, பழனி கோவைக்குப் போகவில்லை. வேறு எங்கோ போயிருக்கிறான். அவனுக்கு நீ தானே உயிர் நண்பன். ஒரு வேளை உண்மையில் எங்கே போகப் போகிறான் என்பதை உன்னிடம் சொல்லியிருப்பானோ என்று நினைத்தேன்” என்றார் சுந்தரேசர். “பழனி கோவைக்குப் போகவில்லையா? பின் எங்கே போனான்?” அழகனுக்கு இது தெரியாது. “பழனி என்னிடமும் ஒன்றும் சொல்லலைங்க. எங்கே போயிருப்பான்? எனக்கு ஒன்றும் தெரியலைங்களே” என்றான். சுந்தரேசர் “சரி அழகா வருகிறேன். பழனி இல்லை என்பதற்காக வீட்டுப்பக்கம் வராமல் இருக்காதே அடிக்கடி வந்து கொண்டிரு” என்று கூறினார். |