“ஐம்பது ரூபாய்க்குச் சில்லறை எப்படி அண்ணாச்சி இருக்கும்?” என்றான் ஐஸ்காரன். நாகன் ரூபாயை அருகே இருந்த ஒருவனிடம் கொடுத்துச் சில்லறை மாற்றி வரச் சொன்னான். ஐஸ்காரன் ஆளுக்கொரு ஐஸ்புரூட் கொடுத்தான். நாகன் ஒன்றை வாங்கிச் சுவைத்துக் கொண்டிருந்தபோதுதான் அழகன் அங்கு வந்தான். நாகன் அழகனைப் பார்த்தான். அழகனிடம் அன்று ஒருநாள் வாங்கிய உதை நன்றாக நினைவிருந்தது. அது மட்டுமா அவனுடைய பல் ஒன்று இன்னும் ஆடிக் கொண்டிருக்கிறதே! இதையெல்லாம் நினைத்த நாகன் அழகனைத் தன் பக்கம் சேர்த்துக்கொள்ள விரும்பினான். அதனால் ஐஸ்காரனிடம் மற்றொரு ஐஸ்புரூட்டை வாங்கிக் கொண்டு அழகனிடம் போனான். “அழகா, இந்தா ஐஸ்புரூட் சாப்பிடு” என்று அதை நீட்டினான். நாகனைக் கண்டதுமே அழகன் முகம் மாறியது. “சே....இங்கே வந்தது இவன் முகத்தில் விழிக்கவா?” என்று நொந்துகொண்டு “வேண்டாம்” என்று சொன்னான். “இதோ பார் அழகா, உன்னை நான் பகைவனாகக் கருதவில்லை. நமது சண்டை அன்றோடு போனது உம்...இதை வாங்கிக்கொள்.” “ஐயா மகாத்மா காந்தியே, பகைவனாகக் கருதாத மனப்பக்குவம் எப்போது வந்தது? நீ இப்படி சொல்வதைப் பார்த்தால் இதன்மூலமும் ஏதோ லாபத்தை எதிர்பார்க்கிறாய் என்பது தெரிகிறது” என்றான் அழகன். அழகன் அவ்வளவு சுலபத்தில் தன்னோடு சேர மாட்டான் என்பதைப் புரிந்துகொண்டான் நாகன். “அழகா, பழனியைப் பற்றி நான் சொன்னதை நினைத்துத் தானே இப்படிப் பேசுகிறாய்? நீயே சொல்! முதல் மார்க்கு வாங்க வேண்டிய நான் ஒவ்வொரு முறையும் ஏமாந்தால் எப்படி |