“நீ சந்தேகப்படுவது உண்மையாக இருந்தாலும் இருக்கலாம். எதற்கும் சென்னைக்குப்போய் போலீசில் கேட்கிறேன். அவர்கள் செய்தியில் உள்ள பழனியைக்காட்டுவார்கள். அவன் நம் பழனிதானா என்று பார்க்கிறேன்” என்றார் சுந்தரேசர். “அதுதாங்க சரி. எதுக்கும் போய்ப் பாருங்க. எப்போது போகப்போறீங்க” என்று கேட்டான் அழகன். “இன்றைக்கு எனக்கு வேறு வேலை இருக்கிறது. அதற்காகத்தான் புறப்பட்டுக்கொண்டிருந்தேன். நீ வந்தாய். நாளை மாலை புறப்பட்டுப் போகிறேன். அழகா நான் வெளியே போகிறேன். நீ அம்மாவைப் பார்த்துவிட்டுப் போ. ஆனால் அவளிடம் இந்த விஷயத்தைச் சொல்லாதே” என்று சொல்லிவிட்டுச் சுந்தரேசர் வெளியே சென்றார். அழகன் பழனியின் தாயாரைப் பார்த்துச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான். பிறகு வீட்டிற்குச் சென்றான். மறுநாள் மாலை. அழகன் தன் அறையில் உட்கார்ந்து பழனிக்கு ஒரு கடிதம் எழுதினான். அதைச் சுந்தரேசரிடம் கொடுத்தனுப்ப விரும்பினான் அழகன் சுந்தரேசர் சென்னையில் பார்க்கும் பழனி, அவர் மகனாக இருந்தால் அவனிடம் கொடுக்குமாறு சுந்தரேசரைக் கேட்டுக்கொள்ள முடிவு செய்திருந்தான். கடிதம் எழுதி முடித்ததும அதை ஓர் உறையில் போட்டான். அதன்மேல் பா.சு.பழனி சென்னை என்று எழுதினான். அதை எடுத்துக் கொண்டு சுந்தரேசரின் வீட்டுக்கு ஓடினான். வெளியிலேயே காவல்காரனிடம் “சுந்தரேசர் இருக்கிறாரா” என்று கேட்டுக் கொண்டான். காவல்காரன் ‘இருக்கிறார்’ என்றான். “பரவாயில்லை இன்னும் ஸ்டேஷனுக்குப் புறப்படவில்லை” என்று நினைத்துக்கொண்டே உள்ளே நுழைந்தான். |