துடைப்பதைக் கண்டு சிலர் வியப்படைந்தனர். சிலர் கிண்டல் செய்தனர். ஒருநாள் பழனி பள்ளியிலிருந்த அசோக மரத்தின் அடியில் உட்கார்ந்திருந்தான். அவன் வகுப்பில் படிக்கும் குருசாமி வந்தான். “பழனி, இதோ பார், இது எனக்குப் புரியவில்லை. ஆசிரியர் இன்று இதில் கேள்வி கேட்பாரல்லவா? கொஞ்சம் எனக்குச் சொல்லித் தருகிறாயா?” என்று கேட்ட குருசாமி தன் ஆங்கிலப் புத்தகத்தை அவனிடம் நீட்டினான். குருசாமிக்கு ஆசிரியர் நேற்று நடத்திய ஆங்கிலச் செய்யுள்தான் புரியவில்லையாம். “உட்கார் குருசாமி, எனக்குத் தெரிந்தவரை சொல்லித் தருகிறேன்” என்றான் பழனி. குருசாமி அவனருகே உட்கார்ந்தான். பழனி அந்த ஆங்கிலச் செய்யுளைப் படித்து, சொல்லுக்குச் சொல் சுவையாகப் பொருள் சொன்னான். பக்கத்திலிருந்த அவனுடைய வகுப்பு நண்பர்கள் பழனி சொல்வதைக் கேட்டார்கள். அவர்களும் நெருங்கிவந்து பழனி சொல்வதைக் கேட்டு மகிழ்ந்தனர். பழனி சொல்லி முடித்தான். “குருசாமி, உனக்குப் புரிகிறதா? இல்லையென்றால் சொல். இன்னொருமுறை சொல்கிறேன்” என்றான். “வேண்டாம் பழனி. எனக்கு நன்றாகப் புரிகிறது. நானே இப்போது இன்னொருவனுக்குச் சொல்லிக் கொடுக்கும் அளவு புரிகிறது. அடடா, எவ்வளவு அழகாகச் சொல்லிக் கொடுத்தாய். நம்ம ஆசிரியரைக் காட்டிலும் நீ மிக நன்றா....” குருசாமி முடிக்கவில்லை பழனி அவனுடைய வாயைத் தன் கையால் பொத்தினான். “சே....சே....இதென்ன பேச்சு. ஆசிரியர் எங்கே? நான் எங்கே? குருசாமி, நம் ஆசிரியரைப்பற்றி நாமே இப்படிப் பேசலாமா? இப்படி நினைக்கலாமா? அவர் சொல்லித் தந்ததைத்தானே கிளிப்பிள்ளைப் போல உன்னிடம் திருப்பிச் |