1.2 வினை வகைகள்

வினைச்சொற்கள் முற்று, எச்சம் என்பதாக மட்டுமன்றி, அவை பயன்படுவதன் அடிப்படையில் பலவாகப் பகுத்துரைக்கப்படுகின்றன. அவ்வகையில்,

தன்வினை, பிறவினை;
செய்வினை, செயப்பாட்டுவினை;
உடன்பாட்டுவினை, எதிர்மறைவினை

என்பன போன்ற பல வகைப்பாடுகள் உள்ளன.

1.2.1 தன்வினை, பிறவின

தன்வினை என்பது ஒருவர் தானே செய்வது. பிறவினை என்பது பிறரைச் செய்யும்படி ஆக்குவது.

கரையைச் சேர்வான்

என்னும் தொடரில், சேர்தலாகிய தொழிலை ஒருவன் செய்வான் என்பது பொருள்.

கரையில் சேர்ப்பான்

என்பது சொல்லாயின், வேறு யாரையோ அல்லது எதையோ சேரும்படி இவன் செய்வான் என்பது பொருளாகும், முன்னதில் சேரும் வினை இவனுடையது. பின்னதில் அவ்வினை வேறு ஒரு பொருளுக்கு உரியது.

சேர்வான் என்பது தன்வினையாகிறது.
சேர்ப்பான் என்பது பிறவினை ஆகிறது.

தன்வினை - பிறவினை
வருந்துவான் - வருத்துவான் இவற்றில் மெல்லொற்று (ந்,ங்) வல்லொற்றாகிப் (த்,க்) பிறவினை ஆயிற்று.
திருந்தினான்- திருத்தினான்
அடங்கினான் -அடக்கினான்
டினான் - ட்டினான் இவற்றில் வல்லொற்று (ட்,ற்) இரட்டித்துப் (ட்ட், ற்ற்) பிறவினை ஆயிற்று.
மாறுவான் - மாற்றுவான்

பிறவினையாகும்போது வி, பி ஆகிய விகுதிகளில் ஒன்று, சேர்ந்து வருவதும் உண்டு.

நட - நடப்பி - நடப்பித்தான்
செய் - செய்வி - செய்வித்தான்

என்பனபோல வரும். சொல் வடிவை விட, அது உணர்த்தும் பொருளை வைத்தே தன்வினையா, பிறவினையா என அறிதல் வேண்டும்.

இனி, செய்வினை, செயப்பாட்டுவினை என்னும் வினைப் பகுப்பினைப் பார்ப்போம்.

1.2.2 செய்வினை, செயப்பாட்டுவினை

புத்தகம் படிக்கிறேன்
கொசு கடித்தது
நாயை அடிக்கிறான்

இத்தொடர்களில் உள்ள வினைச் சொற்கள் செய்வினைச் சொற்களாகும். இவற்றை வேறு ஒரு முறையிலும் கூறலாம்.

புத்தகம் (என்னால்) படிக்கப்படுகிறது.
நான் (கொசுவால்) கடிக்கப்பட்டேன்.
நாய் (அவனால்) அடிக்கப்படுகிறது.

இத் தொடர்களில் செயப்பாட்டு வினைகள் உள்ளன. செய்வினையில் படிக்கிறேன் என்றிருந்த சொல், செயப்பாட்டு வினையில் படிக்கப்படுகிறது என மாறுகிறது. படு என்னும் துணைவினைச் சொல் இவை அனைத்திலும் சேர்ந்து வருகிறது.

1.2.3 உடன்பாட்டு வினை, எதிர்மறை வின

வருகிறேன், செய்கிறான்
செய்வேன், பெறுவான்

என்பன போன்ற வினைச்சொற்கள் ஒரு வினையைச் செய்வதையோ, செய்யப் போவதையோ அறிவிக்கின்றன. இவற்றை உடன்பாட்டு வினைகள் என்கிறோம். ஒரு செயலைச் செய்வதற்கு உடன்பட்ட நிலையைத்தான் இவை அறிவிக்கின்றன.

வாரேன் (வர மாட்டேன் என்பது பொருள்)
செய்யேன் (செய்ய மாட்டேன் என்பது பொருள்)
செய்யான் (செய்ய மாட்டான் என்பது பொருள்)
பெறான் (பெற மாட்டான் என்பது பொருள்)

என்னும் சொற்கள் ஒருவன் ஒரு தொழிலைச் செய்ய உடன்படா நிலையை (அல்லது) எதிர்மறை நிலையைப் புலப்படுத்துகின்றன. எனவே இவை எதிர்மறைவினைகள் என்று சுட்டப்படுகின்றன. உடன்பாட்டு வினைச் சொற்களின் இடையில் எதிர்மறை இடைநிலை வந்து எதிர்மறைப் பொருளை உணர்த்துகின்றது.

செய் + + ஆன் - செய்யான்
தெரி + அல் + அன் - தெரியலன்
வந்து + இல் + அன் - வந்திலன்

இச் சொற்களில், ‘ஆ’, ‘அல்’, ‘இல்’ ஆகியன எதிர்மறைப் பொருள் உணர்த்துகின்றன. பெரும்பாலும் எதிர்மறைக்கு ‘ஆ’கார இடைநிலையே வரும். இக்காலத்தில் மாட்டான், மாட்டேன் என்பன போன்ற சொற்களால் எதிர்மறையைக் குறிக்கிறோம்.

சுருங்கச் சொன்னால், எதிர்மறை இடைநிலைகள் வாராத வினைகள் எல்லாம் உடன்பாட்டு வினைகளே. அவற்றைப் பெற்றிருப்பன எதிர்மறை வினைகளாகும்.

வினைமுற்றுச் சொற்களில் எதிர்மறை இருப்பது போன்று பெயரெச்ச, வினையெச்சச் சொற்களோடு ‘ஆ’ சேர்ந்தும் எதிர்மறைப் பொருள்படும்.

செய்ய வந்தேன், செய்து வந்தான் தொடர்களில் இடம்பெற்றுள்ள செய்ய, செய்து என்னும் சொற்கள் தமக்குப் பின் ஒரு வினைமுற்றுச் சொல்லைக் கொண்டே முடிவதால், வினையெச்சம் என்று சொல்லப் பெறுகின்றன.

கேட்கும் செவி, காணும் கண் என்னும் தொடர்களில் உள்ள, கேட்கும், காணும் என்னும் சொற்கள் தமக்குப்பின் ஒரு பெயர்ச்சொல் கொண்டு முடிவதால், அவற்றைப் பெயரெச்சம் என்கிறோம். இப்பெயரெச்ச, வினையெச்சச் சொற்களும் ‘ஆ’ என்னும் எதிர்மறை இடைநிலை பெற்று வரும்.

கேள் + ஆ - கேளாச் செவி எதிர்மறைப் பெயரெச்சம்
காண் + ஆ - காணாக் கண்

பாராது இருந்தாள் எதிர்மறை வினையெச்சம்
எழுதாமல் இருந்தான்

எனவே, உடன்பாட்டு வினைகளே எதிர்மறை இடைநிலை பெற்று, வினைமுற்றுச் சொற்களிலும் எச்சச் சொற்களிலும் எதிர்மறையை உணர்த்தும் என்பதை அறிக.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.

வினைமுற்றுச்சொல் எந்த ஆறு பொருள்களைத் தரும்?

விடை

2.

‘கரியன்’ என்னும் சொல் தனியே வந்தால் குறிப்புவினை ஆகுமா?

விடை

3.

குறிப்பு வினைச் சொற்கள் எவற்றின் அடியாகத் தோன்றும்?

விடை

4.

பிறவினைக்குரியனவாக நீவிர் அறியும் நான்கு சொற்களை எழுதுக.

விடை

5.

செயப்பாட்டுவினைத் தொடரில் வினை செய்பவர் பெயர் எவ்வாறு வரும் என்பதற்கு ஒரு சான்று தருக.

விடை

6.

உடன்பாட்டு வினைக்கும், எதிர்மறை வினைக்கும் சில எடுத்துக்காட்டுகள் தருக.

விடை