5.3
இளையோர் விளையாட்டுகள்
|
விளையாட்டுப்
பருவமென்றால்
அது துள்ளித் திரியும் சிறுவயதுப்
பருவம்தான். வாழ்க்கையின் சுமையறியாத சுதந்திரமான கட்டுப்பாடற்ற
காலமல்லவா அது !
|
ஓடி
விளையாடு பாப்பா நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
|

|
மாலை
முழுதும் விளையாட்டு என்று
வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா
|
என்று
பாரதியார் அறிவுறுத்துவதைப் போல் மாலை நேரமானதும், ஊர்ப்
பொது மரத்தில் பறவைகளெல்லாம் ஒன்றுகூடி ஆரவார ஒலி
எழுப்புவதைப் போல், இளையோர் எல்லாரும் கூடி ஆர்ப்பரித்து
விளையாடும் காட்சி காண்போரையும் மகிழச் செய்வதாகும்.
|
இளவயதினர்
எல்லாரும் ஓரிடத்தில் வந்து கூடி விளையாட்டைத் தீர்மானிக்கின்றனர். விளையாட்டின்
தன்மைக்கேற்ப வீடும் வீதியும் ஊர் மந்தையும் விளையாட்டுக் களமாகின்றன.
இவர்களின் விளையாட்டுக்களம் மிகவும் விரிந்தது. தனியாக, இருவராக, குழுவாக
இணைந்து விளையாடி மகிழ்கின்றனர். இளையோர் விளையாட்டுகள் பெரும்பாலும் குழு
நிலையில் அமைந்து அனைவரையும் தம்பால் இணைத்துக் கொள்ளும் விரிந்த தளத்தைக்
கொண்டவையாக உள்ளன.
|
எந்தவோர்
ஆசிரியரின்
உதவியுமின்றி இளையோர்களே கூடித்
தீர்மானிக்கும் அவர்தம் விளையாட்டுகளில், கற்பனைத் திறனும்
சிந்தனையாற்றலும் நடிப்புத் திறனும் அபரிமிதமான
சக்தியும்
வெளிப்படுகின்றன. இவ்விளையாட்டுகள் பொழுதுபோக்கு நிலையில்
அமைந்தாலும் மன மகிழ்ச்சியையே அடிப்படையாகக் கொண்டவை.
பெரியோரது விளையாட்டுகளில் இதனைக் காண்பதரிது.
|
இது
நீங்களும்
கடந்து வந்த பருவம்தான். எங்கே உங்களது
இளமைக் கால நினைவுகளை நினைத்துப் பாருங்கள் !
|
இளையோர்
விளையாட்டுகள் சிறுவர் விளையாட்டுகள், சிறுமியர் விளையாட்டுகள், இருபாலரும்
ஆடும் விளையாட்டுகள் என்று வகைப்படுத்தி இங்கு விளக்கப்படுகின்றன.
|
5.3.1 சிறுவர் விளையாட்டுகள்
|
சிறுவர்
தனித்தும், சிறுமியர் தனித்தும், சிறுவர் சிறுமியர் இணைந்தும் பல விளையாட்டுகளை
நாட்டுப் புறங்களில் விளையாடுகின்றனர். இதில் சிறுவர்கள் ஆடும் விளையாட்டுகளே
மிகுதி. இவை புற விளையாட்டுகளாகவே (அதாவது வீட்டிற்கு வெளியே சென்று ஆடுதல்)
உள்ளன. இவற்றில் போட்டி விளையாட்டுகளும் உண்டு; உடல் திறன் விளையாட்டுகளும்
உண்டு; அறிவிற்கும் வேலையுண்டு.
|
சிறுவர்கள்
ஒரே
மாதிரியான விளையாட்டினை எல்லாக்
காலங்களிலும் ஆடுவதில்லை. அது காலத்திற்குக் காலம் மாறுபடும்.
ஒரு காலக் கட்டத்தில் கிட்டிப்புள் என்றால் மறு காலக் கட்டத்தில்
பம்பரம், கோலிக் குண்டு அடுத்துக் கபடி, நீச்சல் என்று
மாறிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு விளையாட்டிற்கும் ஒரு பருவம்
(சீசன்) உண்டு. அந்தந்தப் பருவத்திற்குத் தக்கவாறு தங்களைத் தயார்
படுத்திக் கொள்கின்றனர்.
|
சிறுவர்கள்
பச்சைக்
குதிரை, பம்பரம், கிட்டிப்புள், பந்து,
கோலிக் குண்டு, புளிய முத்து, கபடி, கள்ளன் போலீஸ் போன்ற
விளையாட்டுகளில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். சான்றாகப்
பச்சைக் குதிரை விளையாட்டு எவ்வாறு ஆடப்படுகிறது என்று
காண்போம்.
|
பச்சைக் குதிரை
|
விளையாட்டின்
தொடக்கத்தில் பட்டு வருபவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்வர். பட்டு வருபவர்
காலை நீட்டித் தரையில் குறுக்காக அமர்ந்து கொள்ளவேண்டும். விளையாட்டில்
பங்குகொள்ளும் ஏனைய சிறுவர்கள் நீ்ட்டிய காலில் படாமல் குதித்துத் தாண்ட
வேண்டும். பின்னர் கால் மேல் கால், கால் மேல் கை, கை மேல் கை என்று அமர்ந்திருப்பவர்
உயரத்தைக் கூட்டிக்கொண்டே வருவார். அந்த உயரங்களையும் தாண்டிவிட்டால் அமர்ந்தவர்
எழுந்து குனிந்து நிற்பார். அதையும் அவர் முதுகில் கை ஊன்றித் தாண்ட வேண்டும்.
அதிலும் உயரம் கூடிக் கொண்டே போகும். யாரால் குறிப்பிட்ட உயரத்தைத் தாண்ட
முடியவில்லையோ அவர் தோற்றவராகக் கருதப்படுவார். தோற்றவர் தரையில் அமர்ந்து
காலை நீட்ட வேண்டும். மறுபடியும் ஆட்டம் தொடரும், சிறுவரது உடல் திறனைக்
காண்பதற்குரிய விளையாட்டாக இது அமையும். நவீன விளையாட்டுகளில் ஒன்றான உயரத்
தாண்டுதல் (High Jump) என்ற விளையாட்டு இதனை ஒத்ததாகும்.
|
பச்சைக்
குதிரை
பெரிதாய்க்
காணப் படக்காட்சியை அழுத்துக
|
கபடி
|
சிறுவர்கள்
ஆடும்
கபடி விளையாட்டும் மிகச் சிறந்த உடல் திறன்
விளையாட்டாகும். உடல் திறனோடு மூச்சுப் பயிற்சியை வளர்க்கும்
களமாகவும் இது விளங்குகிறது.
|
ஓடுதல்,
தாவுதல், குதித்தல், வளைதல், தாண்டுதல்,
சுழலுதல் போன்ற செயல்களை உள்ளடக்கியனவாகச் சிறுவர் விளையாட்டுகள்
அமைந்து காணப்படுகின்றன.
|
5.3.2
சிறுமியர் விளையாட்டுகள்
|
சிறுமியர்
தனித்துக்
கரகர வண்டி, பிஸ்ஸாலே, கிச்சுக் கிச்சுத்
தாம்பூலம், சில்லு விளையாட்டு, பொம்மை விளையாட்டு, பூப்பறிக்க
வருகிறோம் போன்ற விளையாட்டுகளை விளையாடுகின்றனர். உடல்
திறனைவிட அறிவுத் திறனை வளர்க்கும் வகையிலேயே சிறுமியர்
விளையாட்டுகள் அமைந்துள்ளன. இவர்களின் விளையாட்டுக் களம்
குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டது. பெரும்பாலானவை போட்டியின்றி
ஆடப் பெறும் அக விளையாட்டுகள்; மேலும் மென்மைத் தன்மை
வாய்ந்தவை. சிறுமியரது விளையாட்டுகளில் பாடல்கள் சிறப்பிடம்
பெறுகின்றன.
|
கிச்சுக்
கிச்சுத் தாம்பூலம் |
பிஸ்ஸாலே
|
பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக
|
சிறுமியரின்
பூப்பறிக்க வருகிறோம் விளையாட்டு ஆடப்படும் முறை
குறித்துத் தெரிந்து கொள்வோமா?
|
பூப்பறிக்க வருகிறோம்
|
சிறுமியர்
குழுவாக இணைந்து ஆடும் விளையாட்டு இது. சிறுமியர் பூக்குழு, பூப்பறிக்கும்
குழு என இரு குழுக்களாகப் பிரிந்து எதிர்எதிர் வரிசையில் நின்று கொள்வர்.
பூக்குழுவில் இடம்பெறும் சிறுமியர் ஒவ்வொருவரும் ஒரு பூவின் பெயரைத் தங்களுக்குச்
சூட்டிக் கொள்வர் (சிலர் தங்கள் பெயருக்குப் பின்னால் தேவி பூ, கமலா பூ,
எழில் பூ என்று சூட்டிக் கொள்வதும் உண்டு). யார் யார் எந்தப் பூவின் பெயரைச்
சூட்டியுள்ளனர் என்பது பூப்பறிக்கும் குழுவிற்குத் தெரியாது. பூப்பெயர்
தெரியாத நிலையில் தேவி பூ, கமலா பூ என்று பெயரைக் குறிப்பிட்டே அழைப்பதும்
உண்டு. பூப்பறிக்கும் குழுவினருக்குத் தனிப் பெயர் சூட்டப்படுவதில்லை.
|
பூப்பறிக்க
வருகிறோம்
பெரிதாய்க்
காணப் படக்காட்சியை அழுத்துக |
முதலில்
பூப்பறிக்கும்
குழு எதிர்வரிசையில் நிற்கும் பூக்குழுவை
நோக்கி, "பூப்பறிக்க வருகிறோம்", "பூப்பறிக்க வருகிறோம்"
என்று
பாடிக் கொண்டே முன்னேறிச் செல்வர். பின்பு பூக்குழுவினர் "எந்தப்
பூவைப் பறிக்கிறீர்?" "எந்தப் பூவைப் பறிக்கிறீர்?" என்று
பாடிக்
கொண்டு முன்னோக்கி வருவர். பூக்குழு முன்னோக்கி வரும்போது
பூப்பறிக்கும் குழுவினர் பின்னோக்கிச் செல்வர். மீண்டும் பூப்பறிக்கும்
குழுவினர் "தேவி பூவைப் பறிக்கிறோம்", "தேவி பூவைப் பறிக்கிறோம்"
என்று பாடிக் கொண்டு முன்னோக்கிச் செல்வர். இப்படியாக
இரு குழுவினரும் பாடிக் கொண்டே முன்னோக்கியும் பின்னோக்கியும்
சென்று வருவர்.
|
பெரிதாய்க்
காணப் படக்காட்சியை அழுத்துக |
இறுதியில்,
பறிக்கப் போகும் பூ அடையாளப் படுத்தப்பட்டவுடன்
அடையாளப் படுத்தப்பட்ட சிறுமியும் பூவைப் பறிக்கும் குழுவிலிருந்து
ஒரு சிறுமியும் முன்னால் வந்து எதிர்எதிர் நின்று கொள்வர்.
குழுவிலுள்ள ஏனையோர் ஒருவர் பின் ஒருவராகக் கயிறு இழுக்கும்
போட்டியில் நிற்பதைப் போல் நின்று கொள்வர். பின் பூப்பறிக்கும்
குழுவினர் தாங்கள் விரும்பிய பூவைத் தங்கள் பக்கம் இழுக்க முயற்சி
மேற்கொள்வர். பூவைப் பறித்துத் தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டு
மீண்டும் விளையாட்டைத் தொடருவர். கடைசிப் பூவைப் பறிக்கும்
வரை விளையாட்டுத் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
(இவ்விளையாட்டில் இடம்பெறும் பாடல் விளையாட்டுப் பாடல்கள்
என்னும் பகுதியில் முழுமையாகத் தரப்பட்டுள்ளது.)
|
பூக்களின்
பெயர்களை
அறிதல், மாதங்களின் பெயர்களை அறிதல்,
இழுவைப் போட்டி, உடல் திறன் என்று மகிழ்ச்சியாக இவ்விளையாட்டு
ஆடப்பெறும்.
|
பூப்பறித்தல்
பெரிதாய்க்
காணப் படக்காட்சியை அழுத்துக |
சிறப்பு
|
சிறுமியர்
விளையாட்டில்
ஓடுதல், குதித்தல், சுழலுதல், நொண்டுதல்,
பாடுதல் என்ற செயல்கள் முதன்மையாய் அமைகின்றன. மேலும்,
கீழ்ப்படிதல், பொறுப்புடன் நடந்து கொள்ளுதல், பாதுகாப்புணர்வு
போன்றவற்றின் பயிற்சிக் களமாகவும் சிறுமியர் விளையாட்டுகள்
அமைந்திருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.
|
|
|
|
சிறுமியர் விளையாட்டுகள்
பெரிதாய்க்
காணப் படக்காட்சியை அழுத்துக |
5.3.3
இருபாலர் விளையாட்டுகள்
|
சிறுவர்,
சிறுமியர்
ஆகிய இருபாலரும் பங்கேற்கும் விளையாட்டுகள்
குழு விளையாட்டுகளாகவே அமைந்துள்ளன. பத்து வயதிற்கு உட்பட்ட
சிறுவர் சிறுமியரே இவ்விளையாட்டுகளில் கலந்து
கொண்டு
ஆடுகின்றனர். ஒரே குழுவாகவோ, இரு அணிகளாகப் பிரிந்தோ
(ஆண்கள் பெண்கள் என்று அல்ல) விளையாடுகின்றனர். கண்ணா
மூச்சி, பூசணிக்காய், குலைகுலையா முந்திரிக்காய், ஒரு குடம் தண்ணி
ஊத்தி, யாரு கொம்பு?, நொண்டி, கல்லா? மண்ணா? போன்ற
விளையாட்டுகள் இருபாலராலும் விளையாடப் படுகின்றன. இருபாலரும்
பங்கு பெறும் எலியும் பூனையும் விளையாட்டைப் பார்க்கலாமா?
|
எலியும் பூனையும்
|
எலியும்
பூனையும்
விளையாட்டில் பங்கு பெறுவோர் வட்டமாக
நின்று கொள்ள வேண்டும். அவர்களில் ஒருவர் எலியாகவும் ஒருவர்
பூனையாகவும் நடிக்க வேண்டும். எலியாக நடிப்பவர் வட்டத்திற்கு
உள்ளேயும் பூனையாக நடிப்பவர் வட்டத்திற்கு வெளியேயும் இருக்க
வேண்டும். இப்பொழுது பூனை, "எலி என்னா செய்யுது?" என்ற
வினாவோடு பாடலைத் தொடங்கும். அதற்கு வட்டத்தில் நிற்போர்
"தூங்குது"என்று பதில் கூற வேண்டும். மீண்டும் "எலி என்னா
செய்யுது?"
என்று பூனை கேட்கும். தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கும்.
எலியின் செயல்களுக்கு ஏற்ப வட்டத்தில் உள்ளோர் "எழுந்திரிக்கிது,
பல் தேய்க்கிது, சாப்பிடுது, சட்டை போடுது" என்று பதில் கூறிக்
கொண்டே வரவேண்டும். கடைசியாக "வெளியே வரப் பாக்குது" என்று
கூறியவுடன் பூனை எலியைப் பிடிக்கத் தயாராகிவிடும். பூனை
வட்டத்திற்கு உள்ளே வந்துவிட்டால் எலி வெளியே ஓடி விடும்.
பூனை வெளியே வந்தால் எலி வட்டத்திற்குள் ஓடிவிடும். வட்டத்தில்
நிற்போர் எலிக்கு ஆதரவாகச் செயல்படுவர். அதையும் மீறிப் பூனை
எலியைப் பிடித்துவிட்டால் ஆட்டம் முடிந்துவிடும். பின் வேறு இருவர்
எலியும் பூனையுமாக மாறி விளையாட்டைத் தொடருவர். யார்
திறமையானவர் எலியா? பூனையா? - என்று பலம் பார்ப்பதும்,
சிறியோரின் நடிப்புத் திறனை வெளிப்படுத்துவதும் இந்த விளையாட்டின்
அடிப்படையாகும். என்ன ! கார்ட்டூன் தொலைக்காட்சியில் டாம் அண்டு
ஜெர்ரி (Tom & Jerry) பார்ப்பதைப்போல் இருக்கிறதா? இந்த எலியும்
பூனையும் விளையாட்டே Tom & Jerry என்று உறுதியாகக் கூறலாம்.
|
இருபாலர்
விளையாட்டுகள்
போலச்செய்தல் என்ற பண்பைக்
கொண்டவையாகவும் நடிப்புக் கூறுகளை உள்ளடக்கியவையாகவும்
அமைந்துள்ளன. கூடியாடும் உணர்வையும் பெருமகிழ்ச்சியையும்
ஊட்டும் இவ்விளையாட்டுகளில் பாலினப் பாகுபாடு (ஆண் பெண்
பேதம்) தோன்றுவதில்லை. ஆணென்ன பெண்ணென்ன எல்லாம்
ஓரினம்தான் என்ற சமத்துவத் தத்துவத்தைப் பறை சாற்றுவனவாக
இருபாலர் விளையாட்டுகள் உள்ளன. உண்மைதானே சகோதர,
சகோதரிகளே?
|