2.9 தொகுப்புரை அரசர் வாகை மாலை சூடி வெற்றியைக் கொண்டாடுவது வாகைத் திணை. இத்திணையில் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர், பொருநர், அறிவர், தாபதர், அவையர், கணிவர், மறமகளிர், வீரர்கள் சான்றோர் முதலானோர் உறழ்ந்து பெறும் வெற்றியும் இயல்பாக அடையும் வெற்றியும் விளக்கப்பட்டுள்ளன. அரசரது கடமையும் செயல்களும் செங்கோன்மையும் அவனது முரசு, குடை ஆகியவற்றின் சிறப்பும் கடமை முடித்து உறக்கம் கொள்வதும் விளக்கப்பட்டுள்ளன. அந்தணருடைய தூதுச் செயலும், வணிகருடைய கொடைப் பண்பும், வேளாளருடைய ஒப்புரவும், அறிவருடைய முக்கால உணர்வும், தாபதரின் செயல்களும், சான்றோரின் நடுநிலை தவறாத தன்மையும், கணிவரின் ஆராய்ச்சித் திறனும், மறமகளிரின் வீரச்சிறப்பும், மறவர்களின் செஞ்சோற்றுக் கடன் கழிக்கும் தன்மையும் விளக்கப்பட்டுள்ளன. இறுதியாகப் புவி மீதுள்ள பற்றை ஒழித்து மெய்ம்மையை விரும்புதலும், உலகின் துயரை எண்ணிப் பற்று நீங்குதலும் உண்மையான வெற்றிகள் என வாகைப்படலம் உணர்த்துகிறது.
|