4.6 தொகுப்புரை

பொதுப் பெயர்கள் எனும் இப்பாடத்தின் வாயிலாக, பால்பகா அஃறிணைப் பெயர்கள், இருதிணைக்குரிய பொதுப் பெயர்கள், பால்பொதுப் பெயர், மூவிடங்களிலும் வரும் பொதுப் பெயர் தொடர்பான செய்திகளை அறிந்து கொண்டோம். அஃறிணைப் பெயர்களுள் ஒருமை என்றும் பன்மை என்றும் பால்பகுக்கப்படாத பெயர்கள் உள்ளன. அவை ஒன்றன்பாலுக்கும், பலவின்பாலுக்கும் பொதுப் பெயர்களாக வரும் என்பதைக் கண்டோம். உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாக பெயர்கள் இருதிணைப் பொதுப் பெயர்கள் ஆகும்; அவை முதற்பெயர் முதலாக இருபத்து ஆறு ஆகும் எனத் தெளிந்தோம். இப்பெயர்கள் ஒவ்வொன்றும் உயர்திணையிலும் அஃறிணையிலும் தனக்குரிய பால்களை ஏற்று வரும் என்பது கூறப்பட்டது. அடுத்து, தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடங்களிலும் தனித்தனியே வருகின்ற பன்னிரு பொதுப்பெயர்கள் பற்றியும் அறிந்தோம். தொழிற்பெயர், படர்க்கைக்கே உரியதெனவும், வினையாலணையும் பெயர், மூவிடங்களுக்கும் உரியதெனவும், எண்ணால் வரும் உயர்திணைப் பெயர், இருபாற் பொதுப் பெயர் ஆகியன பற்றியும் உரிய எடுத்துக்காட்டுகள் மூலம் தெளிவாகத் தெரிந்து கொண்டோம்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. சூரியன், சந்திரன் ஆகிய பெயர்கள் இருதிணையிலும் வரும் விதத்தைக் கூறுக.
2. ‘தான்’ என்ற சொல் பொதுப்பெயராவது எவ்வாறு?
3. ‘எல்லாம்’ என்ற சொல் பொதுப் பெயராவது எங்ஙனம்?
4. வினையாலணையும் பெயர் எவ்விடத்திற்கு உரியது?
5. ஒருவர் என்னும் பால்பொதுப்பெயர் ஒருமைச் சொற்களோடு முடியுமா? பன்மைச் சொற்களோடு முடியுமா? தெளிவுபடுத்துக.
6. தொழிற் பெயர்கள் எவ்விடத்திற்கு உரியன?
7. பொருத்துக
(1) அவன்தான் - ஓடினார்
(2) நரியார் - புலவர்கள்
(3) அமைச்சர் தாம்சொன்னபடி - பறவை
(4) ஒருவன் - மனிதன்
(5) யாம் - பாடினான்
(6) நான் - நடந்தார்