181-190

181. குறிஞ்சி
இது மற்று எவனோ-தோழி!-துனியிடை
இன்னர் என்னும் இன்னாக் கிளவி-
இரு மருப்பு எருமை ஈன்றணிக் காரான்
உழவன் யாத்த குழவியின் அகலாது,
பாஅல் பைம் பயிர் ஆரும் ஊரன்
திரு மனைப் பல் கடம் பூண்ட
பெரு முது பெண்டிரேம் ஆகிய நமக்கே?

தலைமகன் பரத்தையிற் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள் ஆற்றல் வேண்டித் தோழி இயற்பழித்தவழி, தலைமகள் இயற்பட மொழிந்தது. - கிள்ளிமங்கலம்கிழார்

182. குறிஞ்சி
விழுத் தலைப் பெண்ணை விளையல் மா மடல்
மணி அணி பெருந் தார் மரபிற் பூட்டி,
வெள் என்பு அணிந்து, பிறர் எள்ளத் தோன்றி,
ஒரு நாள் மருங்கில் பெரு நாண் நீங்கி,
தெருவின் இயலவும் தருவதுகொல்லோ-
கலிழ் கவின் அசைநடைப் பேதை
மெலிந்திலள்; நாம் விடற்கு அமைந்த தூதே?

தோழியால் குறை மறுக்கப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்கு உரைத்தது.- மடல் பாடிய மாதங்கீரன்

183. முல்லை
சென்ற நாட்ட கொன்றைஅம் பசு வீ
நம் போல் பசக்கும் காலை, தம் போல்
சிறு தலைப் பிணையின் தீர்ந்த நெறி கோட்டு
இரலை மானையும் காண்பர்கொல், நமரே?-
புல்லென் காயாப் பூக் கெழு பெருஞ் சினை
மென் மயில் எருத்தின் தோன்றும்
புன் புல வைப்பிற் கானத்தானே.

பருவ வரவின்கண், ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- ஒளவையார்

184. நெய்தல்
அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை;
குறுகல் ஓம்புமின் சிறுகுடிச் செலவே-
இதற்கு இது மாண்டது என்னாது, அதற்பட்டு,
ஆண்டு ஒழிந்தன்றே, மாண் தகை நெஞ்சம்-
மயிற்கண் அன்ன மாண் முடிப் பாவை
நுண் வலைப் பரதவர் மட மகள்
கண் வலைப் படூஉம் கானலானே.

கழறிய பாங்கற்குக் கிழவன் உரைத்தது. - ஆரிய அரசன் யாழ்ப் பிரமதத்தன்

185. குறிஞ்சி
''நுதல் பசப்பு இவர்ந்து, திதலை வாடி,
நெடு மென் பணைத் தோள் சாஅய், தொடி நெகிழ்ந்து,
இன்னள் ஆகுதல் நும்மின் ஆகும்'' எனச்
சொல்லின், எவன் ஆம்-தோழி!-பல் வரிப்
பாம்பு பை அவிந்தது போலக் கூம்பி,
கொண்டலின் தொலைந்த ஒண் செங் காந்தள்
கல்மிசைக் கவியும் நாடற்கு, என்
நல் மா மேனி அழி படர் நிலையே?

தலைமகன் இரா வந்து ஒழுகா நின்ற காலத்து வேறுபட்ட தலைமகளை,''வேறு பட்டாயால்'' என்றாட்குக் கிழத்தி உரைத்தது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

186. முல்லை
ஆர்கலி ஏற்றொடு கார் தலைமணந்த
கொல்லைப் புனத்த முல்லை மென் கொடி
எயிறு என முகையும் நாடற்குத்
துயில் துறந்தனவால்-தோழி!-எம் கண்ணே,

பருவ வரவின், ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- ஒக்கூர் மாசாத்தி.

187. குறிஞ்சி
செவ் வரைச் சேக்கை வருடைமான் மறி
சுரை பொழி தீம் பால் ஆர மாந்தி,
பெரு வரை நீழல் உகளும் நாடன்
கல்லினும் வலியன்-தோழி!-
வலியன் என்னாது மெலியும், என் நெஞ்சே.

வரைவு நீட்டித்த வழி, ஆற்றாளாகிய தலைமகளை ஆற்றுவிக்க வேண்டித் தலைமகனை இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது. - கபிலர்

188. முல்லை
முகை முற்றினவே முல்லை; முல்லையொடு
தகை முற்றினவே, தண் கார் வியன் புனம்-
வால் இழை நெகிழ்த்தோர் வாரார்-
மாலை வந்தன்று, என் மாண் நலம் குறித்தே.

பருவம் கண்டு அழிந்த கிழத்தி தோழிக்கு உரைத்தது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

189. பாலை
இன்றே சென்று வருதும்; நாளைக்
குன்று இழி அருவியின் வெண் தேர் முடுக,
இளம் பிறை அன்ன விளங்கு சுடர் நேமி
விசும்பு வீழ் கொள்ளியின் பைம் பயிர் துமிப்ப,
கால் இயல் செலவின், மாலை எய்தி,
சில் நிரை வால் வளைக் குறுமகள்
பல் மாண் ஆகம் மணந்து உவக்குவமே.

வினை தலைவைக்கப்பட்ட இடத்துத் தலைமகன் பாகற்கு உரைத்தது - மதுரை ஈழத்துப் பூதன் தேவன்.

190. முல்லை
நெறி இருங் கதுப்பொடு பெருந் தோள் நீவி,
செறிவளை நெகிழ, செய்பொருட்கு அகன்றோர்
அறிவர்கொல் வாழி-தோழி!-பொறி வரி
வெஞ் சின அரவின் பைந் தலை துமிய
நரை உரும் உரறும் அரை இருள் நடுநாள்,
நல் ஏறு இயங்குதொறு இயம்பும்
பல் ஆன் தொழுவத்து ஒரு மணிக் குரலே?

பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - பூதம்புல்லன்.