191-200

191. முல்லை
உதுக்காண் அதுவே: இது என மொழிகோ?-
நோன் சினை இருந்த இருந் தோட்டுப் புள்ளினம்
தாம் புணர்ந்தமையின், பிரிந்தோர் உள்ளத்
தீம் குரல் அகவக் கேட்டும், நீங்கிய
ஏதிலாளர் இவண் வரின், ''போதின்
பொம்மல் ஓதியும் புனையல்;
எம்மும் தொடாஅல்'' என்குவெம்மன்னே.

பிரிவிடை ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

192. பாலை
''ஈங்கே வருவர், இனையல், அவர்'' என,
அழாஅற்கோ இனியே?-நோய் நொந்து உறைவி!-
மின்னின் தூவி இருங் குயில், பொன்னின்
உரை திகழ் கட்டளை கடுப்ப, மாச் சினை
நறுந் தாது கொழுதும் பொழுதும்,
வறுங் குரற் கூந்தல் தைவருவேனே.

பிரிவிடை வற்புறுத்த வன்புறை எதிர் அழிந்து கிழத்தி உரைத்தது.- கச்சிப்பேட்டு நன்னாகையார்.

193. முல்லை
மட்டம் பெய்த மணிக் கலத்தன்ன
இட்டு வாய்ச் சுனைய பகுவாய்த் தேரை,
தட்டைப் பறையின், கறங்கும் நாடன்
தொல்லைத் திங்கள் நெடு வெண்ணிலவின்
மணந்தனன்மன் எம் தோளே;
இன்றும், முல்லை முகை நாறும்மே.

தோழி கடிநகர் புக்கு, ''நலம் தொலையாமே நன்கு ஆற்றினாய்!'' என்றாட்குக் கிழத்தி உரைத்தது - அரிசில் கிழார்

194. முல்லை
என் எனப்படுங்கொல்-தோழி! மின்னு வர
வான் ஏர்பு இரங்கும் ஒன்றோ? அதன் எதிர்
கான மஞ்ஞை கடிய ஏங்கும்;
ஏதில கலந்த இரண்டற்கு என்
பேதை நெஞ்சம் பெரு மலக்குறுமே?

பருவ வரவின்கண், ''ஆற்றாளாம்'', எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கோவர்த்தனார்.

195. நெய்தல்
சுடர் சினம் தணிந்து குன்றம் சேரப்
படர் சுமந்து எழுதரு பையுள் மாலை,
யாண்டு உளர் கொல்லோ வேண்டு வினை முடிநர்?
''இன்னாது, இரங்கும்'' என்னார் அன்னோ-
தைவரல் அசைவளி மெய் பாய்ந்து ஊர்தரச்
செய்வுறு பாவை அன்ன என்
மெய் பிறிதாகுதல் அறியாதோரே!

பிரிவிடைப் பருவ வரவின்கண் கிழத்தி மெலிந்து கூறியது. - தேரதரன்.

196. மருதம்
வேம்பின் பைங் காய் என் தோழி தரினே,
''தேம் பூங் கட்டி'' என்றனிர்; இனியே,
பாரி பறம்பில் பனிச் சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்,
''வெய்ய உவர்க்கும்'' என்றனிர்-
ஐய!-அற்றால் அன்பின் பாலே.

வாயில் வேண்டிப் புக்க கிழவற்குத் தோழி கூறியது. - மிளைக் கந்தன்.

197. நெய்தல்
யாது செய்வாம்கொல்-தோழி!-நோதக
நீர் எதிர் கருவிய கார் எதிர் கிளை மழை
ஊதைஅம் குளிரொடு பேதுற்று மயங்கிய
கூதிர் உருவின் கூற்றம்
காதலர்ப் பிரிந்த எற் குறித்து வருமே?

பருவ வரவின்கண் வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது - கச்சிப்பேட்டு நன்னாகையார்.

198. குறிஞ்சி
யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவில்
கரும்பு மருள் முதல பைந் தாட் செந் தினை
மடப் பிடித் தடக்கை அன்ன பால் வார்பு,
கரிக் குறட்டு இறைஞ்சிய செறிக் கோட் பைங் குரல்
படுகிளி கடிகம் சேறும்; அடுபோர்
எஃகு விளங்கு தடக் கை மலையன் கானத்து
ஆரம் நாறும் மார்பினை,
வாரற்கதில்ல; வருகுவள் யாயே.

தோழி குறியிடம் பெயர்த்துக் கூறியது. - கபிலர்

199. குறிஞ்சி
பெறுவது இயையாதுஆயினும், உறுவது ஒன்று
உண்டுமன் வாழிய-நெஞ்சே!-திண் தேர்க்
கை வள் ஓரி கானம் தீண்டி
எறிவளி கமழும் நெறிபடு கூந்தல்
மை ஈர் ஓதி மாஅயோள்வயின்,
இன்றை அன்ன நட்பின் இந் நோய்
இறு முறை என ஒன்று இன்றி,
மறுமை உலகத்து மன்னுதல் பெறினே.

தோழி செறிப்பு அறிவுறுப்ப, நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது. - பரணர்

200. நெய்தல்
பெய்த குன்றத்துப் பூ நாறு தண் கலுழ்
மீமிசைத் தாஅய், வீசும் வளி கலந்து,
இழிதரும் புனலும்; வாரார்-தோழி!-
மறந்தோர் மன்ற; மறவாம் நாமே-
கால மாரி மாலை மா மலை
இன் இசை உருமினம் முரலும்
முன் வரல் ஏமம் செய்து அகன்றோரே.

பருவ வரவின்கண் ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி, ''பருவம் அன்று; வம்பு''என்ற வழி, தலைமகள் சொல்லியது. - ஒளவையார்.