341-350

341. நெய்தல்
பல் வீ படரிய பசு நனை குரவம்
பொரிப் பூம் புன்கொடு பொழில் அணிக் கொளாஅச்
சினை இனிது ஆகிய காலையும், காதலர்
பேணார் ஆயினும், ''பெரியோர் நெஞ்சத்துக்
கண்ணிய ஆண்மை கடவது அன்று'' என,
வலியா நெஞ்சம் வலிப்ப,
வாழ்வேன்-தோழி!-என் வன்கணானே.

''பருவ வரவின்கண் வேறுபடும்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது- மிளைகிழான் நல் வேட்டன்

342. குறிஞ்சி
கலை கை தொட்ட கமழ்சுளைப் பெரும் பழம்
காவல் மறந்த கானவன், ஞாங்கர்,
கடியுடை மரம்தொறும் படு வலை மாட்டும்
குன்ற நாட! தகுமோ-பைஞ் சுனைக்
குவளைத் தண் தழை இவள் ஈண்டு வருந்த,
நயந்தோர் புன்கண் தீர்க்கும்
பயம் தலைப்படாஅப் பண்பினை எனினே?

செறிப்பு அறிவுறுக்கப்பட்டான் வரைவின்கண் செல்லாது, பின்னும் வரவு வேண்டின தலைமகனைத் தோழி நெருங்கிச் சொல்லி, வரைவு கடாயது.- காவிரிப்பூம் பட்டினத்துக் கந்தரத்தனார்

343. பாலை
நினையாய் வாழி-தோழி!-நனை கவுள்
அண்ணல் யானை அணி முகம் பாய்ந்தென-
மிகு வலி இரு புலிப் பகுவாய் ஏற்றை-
வெண் கோடு செம் மறுக் கொளீஇய, விடர் முகைக்
கோடை ஒற்றிய கருங் கால் வேங்கை
வாடு பூஞ் சினையின், கிடக்கும்
உயர் வரை நாடனொடு பெயருமாறே.

தோழி கிழத்தியை உடன்போக்கு நயப்பக் கூறியது. - ஈழத்துப் பூதன் தேவன்

344. முல்லை
நோற்றோர் மன்ற-தோழி!-தண்ணெனத்
தூற்றும் துவலைப் பனிக் கடுந் திங்கள்
புலம் பயிர் அருந்த அண்ணல் ஏற்றொடு
நிலம் தூங்கு அணல வீங்கு முலை செருத்தல்
பால் வார்பு, குழவி உள்ளி, நிரை இறந்து,
ஊர்வயின் பெயரும் புன்கண் மாலை,
அரும் பெறல் பொருட் பிணிப் போகிப்
பிரிந்து உறை காதலர் வர, காண்போரே.

பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் கூறியது. - குறுங்குடி மருதன்

345. நெய்தல்
இழை அணிந்து இயல்வரும் கொடுஞ்சி நெடுந் தேர்
வரை மருள் நெடு மணல் தவிர்த்தனிர் அசைஇத்
தங்கினிர்ஆயின், தவறோ-தகைய
தழை தாழ் அல்குல் இவள் புலம்பு அகல-
தாழை தைஇய தயங்குதிரைக் கொடுங் கழி
இழுமென ஒலிக்கும் ஆங்கண்
பெருநீர் வேலி எம் சிறு நல் ஊரே?

பகல் வந்து ஒழுகுவானைத் தோழி ''இரா வா'' என்றது. - அண்டர் மகன் குறுவழுதி

346. குறிஞ்சி
நாகு பிடி நயந்த முளைக்கோட்டு இளங் களிறு,
குன்றம் நண்ணி, குறவர் ஆர்ப்ப,
மன்றம் போழும் நாடன்-தோழி!-
சுனைப் பூங் குவளைத் தொடலை தந்தும்,
தினைப் புன மருங்கில் படுகிளி ஓப்பியும்,
காலை வந்து, மாலைப் பொழுதில்
நல் அகம் நயந்து, தான் உயங்கிச்
சொல்லவும் ஆகாது அஃகியோனே.

தோழி கிழத்தியை இரவுக்குறி நயப்பக் கூறியது. - வாயில் இளங்கண்ணன்

347. பாலை
மல்கு சுனை உலர்ந்த நல்கூர் சுரமுதல்
குமரி வாகைக் கோலுடை நறு வீ
மட மாத் தோகைக் குடுமியின் தோன்றும்
கான நீள் இடை, தானும் நம்மொடு
ஒன்று மணம் செய்தனள் இவள் எனின்,
நன்றே-நெஞ்சம்!-நயந்த நின் துணிவே.

பொருள் வலிக்கும் நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது.- காவிரிப் பூம் பட்டினத்துச் சேந்தன் கண்ணன்

348. பாலை
தாமே செல்பஆயின், கானத்துப்
புலம் தேர் யானைக் கோட்டிடை ஒழிந்த
சிறு வீ முல்லைக் கொம்பின் தாஅய்,
இதழ் அழிந்து ஊறும் கண்பனி, மதர் எழில்
பூண் அக வன் முலை நனைத்தலும்
காணார்கொல்லோ-மாணிழை!-நமரே?

செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட கிழத்தியைத் தோழி வற்புறீஇயது. - மாவளத்தன்

349. நெய்தல்
''அடும்பு அவிழ் அணி மலர் சிதைஇய மீன் அருந்தி,
தடந் தாள் நாரை இருக்கும் எக்கர்த்
தண்ணம் துறைவற் தொடுத்து, நம் நலம்
கொள்வாம்'' என்றி-தோழி!-கொள்வாம்;
இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய
கொடுத்து ''அவை தா'' எனக் கூறலின்,
இன்னாதோ, நம் இன் உயிர் இழப்பே?

பரத்தைமாட்டுப் பிரிந்து வந்த தலைமகன் கேட்கும் அண்மையனாக, தோழிக்குக் கிழத்தி கூறியது. - சாத்தன்.

350. பாலை
அம்ம வாழி-தோழி!-முன் நின்று,
''பனிக் கடுங்குரையம்; செல்லாதீம்'' எனச்
சொல்லினம்ஆயின், செல்வர்கொல்லோ-
ஆற்று அயல் இருந்த இருங் கோட்டு அம் சிறை
நெடுங் காற் கணந்துள் ஆள் அறிவுறீஇ,
ஆறு செல் வம்பலர் படை தலைபெயர்க்கும்
மலையுடைக் கானம் நீந்தி,
நிலையாப் பொருட் பிணிப் பிரிந்திசினோரே?

பிரிவு நேர்ந்த தலைமகள், அவனது நீக்கத்துக்கண் வேறுபட்டாளைத் தோழி வற்புறீஇயது. - ஆலந்தூர் கிழார்.