Manimegalai

10 மந்திரம் கொடுத்த காதை

 
 

[ மணிமேகலாதெய்வம் வந்துதோன்றி

 

மந்திரம் கொடுத்த பாட்டு ]

 

 

அறவோன் ஆசனத்து ஆயிழை அறிந்த

பிறவியள் ஆயினள் பெற்றியும் ஐதுஎன

விரைமலர் ஏந்தி விசும்பூடு இழிந்து

பொருஅறு பூங்கொடி பூமியில் பொலிந்தென

5

வந்து தோன்றிய மணிமே கலாதெய்வம்

முந்தைப் பிறப்புஎய்தி நின்றோள் கேட்ப,

உயிர்கள் எல்லாம் உணர்வுபாழ் ஆகிப்

பொருள்வழங்கு செவித்துளை தூர்ந்துஅறிவு இழந்த

வறந்தலை உலகத்து அறம்பாடு சிறக்கச்

10

சுடர்வழக்கு அற்றுத் தடுமாறு காலைஓர்

இளவள ஞாயிறு தோன்றியது என்ன

நீயோ தோன்றினை நின்அடி பணிந்தேன்

நீயே ஆகிநிற்கு அமைந்தஇவ் ஆசனம்

நாமிசை வைத்தேன் தலைமிசைக் கொண்டேன்

15

பூமிசை ஏற்றினேன் புலம்புஅறுக என்றே

வலம்கொண்டு ஆசனம் வணங்குவோள் முன்னர்,

பொலங்கொடி நிலமிசைச் சேர்ந்துஎனப் பொருந்தி

உன்திரு அருளால் என்பிறப்பு உணர்ந்தேன்

என்பெருங் கணவன் யாங்குஉளன் என்றலும்,

20

இலக்குமி கேளாய் இராகுலன் தன்னொடு

புலத்தகை எய்தினை பூம்பொழில் அகவயின்

இடங்கழி காமமொடு அடங்கா னாய்அவன்

மடந்தை மெல்இயல் மலர்அடி வணங்குழிச்

சாது சக்கரன் மீவிசும்பு திரிவோன்

25

தெருமரல் ஒழித்துஆங்கு இரத்தின தீவத்துத்

தரும சக்கரம் உருட்டினன் வருவோன்

வெங்கதிர் அமயத்து வியன்பொழில் அகவயின்

வந்து தோன்றலும் மயங்கினை கலங்கி

மெல்இயல் கண்டனை மெய்ந்நடுக் குற்றனை

30

நல்கூர் நுசுப்பினை நாணினை இறைஞ்ச

இராகுலன் வந்தோன் யார்என வெகுளலும்

விராமலர்க் கூந்தல் அவன்வாய் புதையா

வான்ஊடு இழிந்தோன் மலர்அடி வணங்காது

நாநல் கூர்ந்தனை என்றுஅவன் தன்னொடு

35

பகைஅறு பாத்தியன் பாதம் பணிந்துஆங்கு,

அமர கேள்நின் தமர்அலம் ஆயினும்

அம்தீம் தண்ணீர் அமுதொடு கொணர்கேம்

உண்டி யாம்உன் குறிப்பினம் என்றலும்

எம்அனை உண்கேன் ஈங்குக் கொணர்கென

40

அந்நாள் அவன்உண் டருளிய அவ்வறம்

நின்ஆங்கு ஒழியாது நின்பிறப்பு அறுத்திடும்.

உவவன மருங்கில் உன்பால் தோன்றிய

உதய குமரன் அவன்உன் இராகுலன்

ஆங்குஅவன் அன்றியும் அவன்பால் உள்ளம்

45

நீங்காத் தன்மை நினக்கும்உண்டு ஆகலின்

கந்த சாலியின் கழிபெரு வித்துஓர்

வெந்துஉகு வெண்களர் வீழ்வது போன்ம்என

அறத்தின் வித்தாங்கு ஆகிய உன்னைஓர்

திறப்படற்கு ஏதுவாச் சேயிழை செய்தேன்.

50

இன்னும் கேளாய் இலக்குமி! நீநின்

தவ்வையர் ஆவோர் தாரையும் வீரையும்

ஆங்குஅவர் தம்மை அங்கநாட்டு அகவயின்

கச்சயம் ஆளும் கழல்கால் வேந்தன்

துச்சயன் என்போன் ஒருவன் கொண்டனன்

55

அவருடன் ஆங்குஅவன் அகல்மலை ஆடிக்

கங்கைப் பேர்யாற்று அடைகரை இருந்துழி

மறவணம் நீத்த மாசுஅறு கேள்வி

அறவணன் ஆங்குஅவன் பால்சென் றோனை

ஈங்கு வந்தீர் யார்என்று எழுந்துஅவன்

60

பாங்குஉளி மாதவன் பாதம் பணிதலும்

ஆதி முதல்வன் அறவாழி ஆள்வோன்

மாதுயர் எவ்வம் மக்களை நீக்கி

விலங்கும் தம்முள் வெரூஉம்பகை நீக்கி

உடங்குஉயிர் வாழ்கஎன்று உள்ளம் கசிந்துஉகத்

65

தொன்றுகா லத்து நின்றுஅறம் உரைத்த

குன்றம் மருங்கில் குற்றம் கெடுக்கும்

பாத பங்கயம் கிடத்தலின் ஈங்குஇது

பாதபங் கயமலை எனும்பெயர்த்து ஆயது

தொழுதுவலம் கொள்ள வந்தேன் ஈங்குஇப்

70

பழுதுஇல் காட்சியீர் நீயிரும் தொழும்என

அன்றுஅவன் உரைத்த அவ்வுரை பிழையாது

சென்றுகை தொழுது சிறப்புச் செய்தலின்

மாதவி ஆகியும் சுதமதி ஆகியும்

கோதைஅம் சாயல் நின்னொடு கூடினர்.

75

அறிபிறப்பு உற்றனை அறம்பாடு அறிந்தனை

பிறஅறம் உரைப்போர் பெற்றியும் கேட்குவை

பல்வேறு சமயப் படிற்றுஉரை எல்லாம்

அல்லியங் கோதை கேட்குறும் அந்நாள்

இளையள் வளையோள் என்றுஉனக்கு யாவரும்

80

விளைபொருள் உரையார் வேற்றுஉரு எய்தவும்,

அந்தரம் திரியவும் ஆக்கும்இவ் அருந்திறல்

மந்திரம் கொள்கென வாய்மையின் ஓதி

மதிநாள் முற்றிய மங்கலத் திருநாள்

பொதுஅறிவு இகழ்ந்து புலம்உறு மாதவன்

85

திருஅறம் எய்துதல் சித்தம்என்று உணர்நீ

மன்பெரும் பீடிகை வணங்கினை ஏத்தி

நின்பதிப் புகுவாய் என்றுஎழுந்து ஓங்கி,

மறந்ததும் உண்டுஎன மறித்துஆங்கு இழிந்து

சிறந்த கொள்கைச் சேயிழை கேளாய்

90

மக்கள் யாக்கை உணவின் பிண்டம்

இப்பெரு மந்திரம் இரும்பசி அறுக்கும்என்று

ஆங்குஅது கொடுத்துஆங்கு அந்தரம் எழுந்து

நீங்கியது ஆங்கு நெடுந்தெய்வம் தான்என்.

 

மந்திரம் கொடுத்த காதை முற்றிற்று.