Manimeagalai

20 உதயகுமரனை வாளால் எறிந்த காதை

 
 

[ மணிமேகலை, காயசண்டிகைவடிவுஎய்தக் காயசண்டிகை கணவனாகிய காஞ்சனன்என்னும் விச்சாதரன் வந்து காயசண்டிகையாம் எனக்கருத அவள் பின்னிலைவிடா உதயகுமரனைப் புதையிருட்கண் உலகஅறவியில் வாளால்எறிந்துபோன பாட்டு ]

 
   
அரசன் ஆணையின் ஆயிழை அருளால்
நிரயக் கொடுஞ்சிறை நீக்கிய கோட்டம்
தீப்பிறப்பு உழந்தோர் செய்வினைப் பயத்தான்
யாப்புஉடை நற்பிறப்பு எய்தினர் போலப்
5
பொருள்புரி நெஞ்சில் புலவோன் கோயிலும்
அருள்புரி நெஞ்சத்து அறவோர் பள்ளியும்
அட்டில் சாலையும் அருந்துநர் சாலையும்
கட்டுஉடைச் செல்வக் காப்புஉடைத் தாக,
ஆயிழை சென்றதூஉம் ஆங்குஅவள் தனக்கு
10
வீயா விழுச்சீர் வேந்தன் பணித்ததூஉம்
சிறையோர் கோட்டம் சீத்துஅருள் நெஞ்சத்து
அறவோர் கோட்டம் ஆக்கிய வண்ணமும்
கேட்டனன் ஆகிஅத் தோட்டார் குழலியை
மதியோர் எள்ளினும் மன்னவன் காயினும்
15
பொதியில் நீங்கிய பொழுதில் சென்று
பற்றினன் கொண்டுஎன் பொன்தேர் ஏற்றிக்
கற்றுஅறி விச்சையும் கேட்டுஅவள் உரைக்கும்
முதுக்குறை முதுமொழி கேட்குவன் என்றே
மதுக்கமழ் தாரோன் மனம்கொண்டு எழுந்து
20
பலர்பசி களையப் பாவைதான் ஒதுங்கிய
உலக அறவியின் ஊடுசென்று ஏறலும்,
மழைசூழ் குடுமிப் பொதியில் குன்றத்துக்
கழைவளர் கான்யாற்றுப் பழவினைப் பயத்தால்
மாதவன் மாதர்க்கு இட்ட சாபம்
25
ஈர்ஆறு ஆண்டு வந்தது வாராள்
காயசண் டிகைஎனக் கையறவு எய்திக்
காஞ்சனன் என்னும் அவள்தன் கணவன்
ஓங்கிய மூதூர் உள்வந்து இழிந்து
பூத சதுக்கமும் பூமரச் சோலையும்
30
மாதவர் இடங்களும் மன்றமும் பொதியிலும்
தேர்ந்தனன் திரிவோன் ஏந்துஇள வனமுலை
மாந்தர் பசிநோய் மாற்றக் கண்டுஆங்கு,
இன்றுநின் கையின் ஏந்திய பாத்திரம்
ஒன்றே ஆயினும் உண்போர் பலரால்
35
ஆனைத் தீநோய் அரும்பசி களைய
வான வாழ்க்கையர் அருளினர் கொல்எனப்
பழைமைக் கட்டுரை பலபா ராட்டவும்,
விழையா உள்ளமொடு அவன்பால் நீங்கி
உதய குமரன் தன்பால் சென்று
40
நரைமூ தாட்டி ஒருத்தியைக் காட்டித்
தண்அறல் வண்ணம் திரிந்துவே றாகி
வெண்மணல் ஆகிய கூந்தல் காணாய்
பிறைநுதல் வண்ணம் காணா யோநீ
நரைமையில் திரைதோல் தகைஇன்று ஆயது
45
விறல்வில் புருவம் இவையும் காணாய்
  இறவின் உணங்கல் போன்றுவே றாயின
கழுநீர்க் கண்காண் வழுநீர் சுமந்தன
குமிழ்மூக்கு இவைகாண் உமிழ்சீ ஒழுக்குவ
நிரைமுத்து அனைய நகையும் காணாய்
50
சுரைவித்து ஏய்ப்பப் பிறழ்ந்துவேறு ஆயின
இலவுஇதழ்ச் செவ்வாய் காணா யோநீ
புலவுப் புண்போல் புலால்புறத் திடுவது
வள்ளைத் தாள்போல் வடிகாது இவைகாண்
உள்ஊன் வாடிய உணங்கல் போன்றன
55
இறும்பூது சான்ற முலையும் காணாய்
வெறும்பை போல வீழ்ந்துவேறு ஆயின
தாழ்ந்துஒசி தெங்கின் மடல்போல் திரங்கி
வீழ்ந்தன இளவேய்த் தோளும் காணாய்
நரம்பொடு விடுதோல் உகிர்த்தொடர் கழன்று
60
திரங்கிய விரல்கள் இவையும் காணாய்
வாழைத் தண்டே போன்ற குறங்குஇணை
தாழைத் தண்டின் உணங்கல் காணாய்
ஆவக் கணைக்கால் காணா யோநீ
மேவிய நரம்போடு என்புபுறம் காட்டுவ
65
தளிர்அடி வண்ணம் காணா யோநீ
முளிமுதிர் தெங்கின் உதிர்காய் உணங்கல்
பூவினும் சாந்தினும் புலால்மறைத்து யாத்துத
தூசினும் மணியினும் தொல்லோர் வகுத்த
வஞ்சம் தெரியாய் மன்னவன் மகன்என
70
விஞ்சை மகளாய் மெல்இயல் உரைத்தலும்,
தன்பா ராட்டும்என் சொல்பயன் கொள்ளாள்
பிறன்பின் செல்லும் பிறன்போல் நோக்கும்
மதுக்கமழ் அலங்கல் மன்னவன் மகற்கு
முதுக்குறை முதுமொழி எடுத்துக் காட்டிப்
75
பவளக் கடிகையில் தவளவாள் நகையும்
குவளைச் செங்கணும் குறிப்பொடு வழாஅள்
ஈங்குஇவன் காதலன் ஆதலின் ஏந்துஇழை
ஈங்குஒழிந் தனள்என இகல்எரி பொத்தி
மற்றுஅவள் இருந்த மன்றப் பொதியிலுள்
80
புற்றுஅடங்கு அரவின் புக்குஒளித்து அடங்கினன்
காஞ்சனன் என்னும் கதிர்வாள் விஞ்சையன்,
ஆங்குஅவள் உரைத்த அரசிளங் குமரனும்
களையா வேட்கை கைஉதிர்க் கொள்ளான்
வளைசேர் செங்கை மணிமே கலையே
85
காயசண் டிகையாய்க் கடிஞை ஏந்தி
மாய விஞ்சையின் மனம்மயக் குறுத்தனள்
அம்பல மருங்கில் அயர்ந்துஅறிவு உரைத்தஇவ்
வம்பலன் தன்னொடுஇவ் வைகுஇருள் ஒழியாள்
இங்குஇவள் செய்தி இடைஇருள் யாமத்து
90
வந்துஅறி குவம்என மனம்கொண்டு எழுந்து
வான்தேர்ப் பாகனை மீன்திகழ் கொடியனைக்
கருப்பு வில்லியை அருப்புக்கணை மைந்தனை
உயாவுத் துணையாக வயாவொடும் போகி,
ஊர்துஞ்சு யாமத்து ஒருதனி எழுந்து
95
வேழம் வேட்டுஎழும் வெம்புலி போலக்
கோயில் கழிந்து வாயில் நீங்கி
ஆயிழை இருந்த அம்பலம் அணைந்து
வேக வெந்தீ நாகம் கிடந்த
போகுஉயர் புற்றுஅளை புகுவான் போல
100
ஆகம் தோய்ந்த சாந்துஅலர் உறுத்த
ஊழ்அடி இட்டுஅதன் உள்அகம் புகுதலும்
ஆங்குமுன் இருந்த அலர்தார் விஞ்சையன்
ஈங்குஇவன் வந்தனன் இவள்பால் என்றே
வெஞ்சின அரவம் நஞ்சுஎயிறு அரும்பத்
105
தன்பெரு வெகுளியின் எழுந்துபை விரித்தென
இருந்தோன் எழுந்து பெரும்பின் சென்றுஅவன்
சுரும்புஅறை மணித்தோள் துணிய வீசிக்
காயசண் டிகையைக் கைக்கொண்டு அந்தரம்
போகுவல் என்றே அவள்பால் புகுதலும்,
110
நெடுநிலைக் கந்தின் இடவயின் விளங்கக்
கடவுள் எழுதிய பாவைஆங்கு உரைக்கும்:
அணுகல் அணுகல் விஞ்சைக் காஞ்சன
மணிமே கலைஅவள் மறைந்துஉரு எய்தினள்,
காயசண் டிகைதன் கடும்பசி நீங்கி
115
வானம் போவுழி வந்தது கேளாய்
அந்தரம் செல்வோர் அந்தரி இருந்த
விந்த மால்வரை மீமிசைப் போகார்
போவார் உளர்எனில் பொங்கிய சினத்தள்
சாயையின் வாங்கித் தன்வயிற்று இடூஉம்
120
விந்தம் காக்கும் விந்தா கடிகை
அம்மலை மிசைப்போய் அவள்வயிற்று அடங்கினள்.
கைம்மை கொள்ளேல் காஞ்சன இதுகேள்:
ஊழ்வினை வந்துஇங்கு உதய குமரனை
ஆர்உயிர் உண்ட தாயினும் அறியாய்
125
வெவ்வினை செய்தாய் விஞ்சைக் காஞ்சன!
அவ்வினை நின்னையும் அகலாது ஆங்குஉறும்
என்றுஇவை தெய்வம் கூறலும் எழுந்து
கன்றிய நெஞ்சின் சுடுவினை உருத்துஎழ
விஞ்சையன் போயினன் விலங்குவிண் படர்ந்துஎன.
   

உதயகுமரனை வாளால் எறிந்தகாதை முற்றிற்று.