3.7 தொகுப்புரை

செப்புத் திருமேனிகள் தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம், இரும்பு இவற்றின் கலவையால் உருவாக்கப் பட்டதாகும். தமிழகத்தில் சங்க காலத்தில் தொடங்கி, பல்லவர் காலத்தில் வளர்ந்து, சோழர் காலத்தில் இக்கலை பெருவளர்ச்சி கண்டது. தென்னிந்தியச் செப்புத் திருமேனிகள் என்றால் சோழர்கள்தாம் நினைவுக்கு வருவர். அவ்வகையில் கனமான அமைப்புடைய அவர்களது படிமங்கள் உலகப் புகழ் பெற்றனவாகும். விசயநகர - நாயக்க மன்னர்களும் இம்மரபைப் பெரிதும் பின்பற்றினர். இறையுருவங்களே அன்றிச்     சமயக்     குரவர்களான நாயன்மார்களுக்கும், ஆழ்வார்களுக்கும் கூடப் படிமங்கள் செய்விக்கப்பட்டன. இன்றும் இக்கலை வளர்ந்து வருகிறது. தஞ்சை மாவட்டம் சுவாமி மலையில் பலகலை வல்லுநர்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். முன்னமே குறிப்பிட்டது போல் இத்திருமேனிகள் கோயில் திருவிழாக்களின் போது பல்லக்கில் வீதிகளுக்கு எடுத்துச் செல்லப் படுபவை ஆகும்.

     தமிழகத்தில் கல் மற்றும் செப்புத் திருமேனிகளைப் போன்றே மரச் சிற்பங்களும் பரவலாகச் செய்விக்கப் பட்டன. கோயில்களிலும், கோபுரங்களிலும் அவை இடம் பெற்றன. கோயில் வாகனங்கள் அனைத்தும் தூக்கிச் செல்ல எளிதாக இருக்கும் பொருட்டு மரத்தாலேயே செய்யப் பட்டன. கோயில் கதவுகளை ஆன்மீக வாயில்கள் என்று அக்காலத்தில் கருதியிருக்க வேண்டும். அதனடிப் படையில் அவற்றிலும் சிற்பங்கள் செய்து பொருத்தப்பட்டன. திருவிழாக் காலங்களில் இறைவன் வீதி உலாச் செல்வதற்காக, நடமாடும் கோயில்களாக மரத் தேர்கள் செய்யப் பட்டன. அவற்றில் சிற்பங்கள் வடிக்கப் பட்டன. இதனால் கோயிலுக்குள் வராத ஒடுக்கப் பட்ட மக்களும் இறைவனின் பல்வேறு கதைகள் பற்றி அறிந்து கொள்ள ஏதுவானது.

தமிழகத்தில் உள்ள கிருத்தவத் திருச்சபைகளில் சிற்பங்களும், பீடங்களும் மரத்தால் செய்விக்கப் பட்டன. அவர்களது திருவிழாக் காலங்களிலும் தேர் இழுக்கப் பட்டது. அத்தேர்களில் இயேசுவின் வாழ்க்கை வரலாறு, பழைய புதிய ஏற்பாடுகள் தொடர்பான சிற்பங்கள்     இடம் பெற்றன. இதனைத்     திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிகளில் அதிகம் காணலாம். மன்னர்களின் செல்வாக்குக் குறைந்த தருணத்தில் நகரத்தார்கள் கலைஞர்களை ஆதரித்தனர். இதனால் நகரத்தார் வீடுகளின் கதவுகளும் நிலைகளும் மரச் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டன. இது மரக்கலை வளர்ச்சியில் ஒரு புதிய கட்டமெனலாம். தற்போது தமிழகத்தில் கிடைக்கும் மரச் சிற்பங்கள் ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்கு உட்பட்டவையே ஆகும்.

தந்தச் சிற்பங்கள் பற்றி இலக்கியங்களில் செய்திகள் கூறப்பட்டிருப்பினும் இன்று கிடைக்கும் சிற்பங்கள் முந்நூறு ஆண்டுகளுக்கு உட்பட்டவையே. இவை பெரும்பாலும் நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவையாகும். இவற்றில் சில வெளிநாட்டு அருங்காட்சியகங்களிலும், திருவரங்கம், மதுரைக் கோயில்களின் காட்சிக் கூடங்களிலும் உள்ளன.

     தமிழகத்தில் பல கிராமங்களில் சுடுமண் சிற்பங்களும், சுதைச் சிற்பங்களும் செய்து வழிபடப் பட்டன. இன்றும் திருவிழாக் காலங்களில் வழிபடப் படுகின்றன. அய்யனார், மாரியம்மன், காளியம்மன், அங்காளம்மன், முத்தாலம்மன் போன்ற தெய்வங்கள் மற்றும் அவர்களது வாகனங்கள் சுடு மண்ணாலும், சுதையாலும் செய்யப்பட்டன. திருவரங்கம், சமயபுரம், அழகர் கோயில், சீர்காழி, மதுரை கூடல் அழகர் கோயில் ஆகிய கோயில்களில் கருவறை மூலவர் சிற்பம் சுதையால் செய்து     வைக்கப்பட்டுள்ளது. விமானத்தின் மேற்பகுதியிலும், கோபுரங்களிலும் சுதைச் சிற்பங்கள் செய்து வைக்கப் பட்டுள்ளன. அவற்றிற்கு வண்ணமும் பூசப் பட்டுள்ளது. பழனியிலும்,     திருச்செங்கோட்டிலும் நவ பாஷாணக் கலவைச் சிற்பம் செய்யப்பட்டது. திருவட்டாறு, சுசீந்திரம் கோயில்களில் கடு சர்க்கரைக் கலவைச் சிற்பங்கள் உள்ளன.

தன்மதிப்பீடு : வினாக்கள் - II

1.

தேர்ச் சிற்பங்கள் பற்றி எழுதுக.

விடை

2.

என்னென்ன வாகனங்கள் மரத்தால் செய்யப்பட்டன?

விடை

3.

திருச்சபைத் தேர்களில் எவ்வகைச் சிற்பங்கள் உள்ளன?

விடை

4.

செட்டி நாட்டுக் கதவுகளில் என்னென்ன இறையுருவங்கள் செய்விக்கப் பட்டுள்ளன?

விடை

5.

திருவரங்கம் கோயில் கலைக் கூடத்துத் தந்தச் சிற்பங்கள் பற்றி எழுதுக.

விடை

6.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் கலைக் கூடத்தில் உள்ள தந்தச் சிற்பங்கள் பற்றி எழுதுக.

விடை

7.

அய்யனார்-குதிரைச் சிற்பங்களின் அமைவிடங்கள் யாவை?

விடை

8.

ஏழு கன்னிமார்களின் சுடுமண் சிற்பங்கள் எங்கெங்குள்ளன?

விடை

9.

எந்தெந்தக் கோயில் கருவறைகளில் மூலவர் சிற்பம் சுதை உருவமாக உள்ளது?

விடை

10.

விமானங்கள், கோபுரங்களில் எவ்வகைச் சிற்பங்கள் உள்ளன?

விடை