அருள்மிகு பாமணி நாகநாதசுவாமி திருக்கோயில்
- கோவில் விவரங்கள்
- சிறப்புகள்
- செல்லும் வழி மற்றும் வரைபடம்
- காட்சிக்கூடம்
Other Names :
சர்ப்பபுரீஸ்வரர், நாகநாதர், பாம்பணிநாதர், திருப்பாதாளேச்வரர்
Tirukkulam / River :
பிரம்மதீர்த்தம், தேனு தீர்த்தம், ருத்ரதீர்த்தம், நிலத்வஜ தீர்த்தம், பாமணியாறு
Worship Time :
காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்
Festivals :
சித்திரை வருடப்பிறப்பு, சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை, தைப்பூசம், மகாசிவராத்திரி, கந்தசஷ்டி
History :
சூதமா முனிவர் சிவபெருமானின் திருவிளையாடல்களைப் பற்றி தன் சீடர்களுக்கு கூறிக்கொண்டிருந்தார். அப்போது சீடர்கள் சிவபெருமான் பசுவிற்கு கைலாய காட்சியளித்தது பற்றியும் பசுவிடமிருந்து கிடைக்கும் பொருட்களுக்கு புனிதத் தன்மை கிடைத்தது பற்றியும் கூறுமாறு சூத முனிவரைக் கேட்டனர். அதற்கு அவர் ஒரு சமயம் சுகல முனிவர் தன் தாயாரின் அஸ்தியை கரைப்பதற்காக காசியை நோக்கி தன் சீடனுடன் சென்று கொண்டிருந்ததாகவும் அப்போது மாலை நேரமானதால் சந்தியாவந்தனம் செய்ய எண்ணி அந்த அஸ்திப் பொதியை தன் சீடனிடம் கொடுத்து வைத்திருக்கச் சொன்னார். அப்போது அச்சீடன் அஸ்தியைப் பொதியைப் பிரித்துப் பார்க்க அதில் அஸ்தியின்றி தங்கம் காட்சியளித்தது. உடனே பயந்து அச்சீடன் மூடி பழையபடி அதனை வைத்துவிட்டான். சுகல முனிவர் காசிக்குச் சென்று அந்த அஸ்தி மூட்டையைப் பிரித்தார். அப்போது அவரது சீடன் தான் முன்னர் பார்த்த போது அஸ்திக்கு பதிலாக தங்கம் இருந்ததைக் கூறினான். இதனைக் கேட்ட முனிவர் நீ அஸ்தியை பிரித்துப் பார்த்த அந்த இடம் காசியை விட புனிதமிக்கதாக இருக்கவேண்டும் என்று கூறி உடனே அவ்விடம் நோக்கி தம் சீடனுடன் புறப்பட்டார். அந்த இடமே பாமணி ஆகும். இங்கு தற்போது வெட்டு குளம் எனப்படும் ருத்ரதீர்த்தக் குளத்தின் கரையில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி ஆகியோருக்கு ஆலயம் அமைத்து இக்குளத்திலேயே தம் தாயாரின் அஸ்தியையும் கரைத்து விட்டு இங்கேயே தங்கி விட்டார். அப்போது அவர் தன் குடிலில் வளர்த்து வந்த பசு ஒன்று புற்றின் மீது தானாவே பால் சொரிவதைக் கண்டு கோபமுற்று பசுவை அடித்தார். பசுவின் கால் புற்றின் மீது பட்டு பிளவுற்று உள்ளிருந்து லிங்கம் வெளிப்பட்டது. வலி தாளாத பசு தென்திசையில் இருந்த குளத்தில் விழுந்து இறந்தது. உடனே சிவபெருமான் ரிஷபாரூடராய் கைலாய காட்சியளித்து பசுவை உயிர்ப்பித்து அதன் பால் அபிஷேகத்தால் மனம் மகிழ்ந்ததாகக் கூறி என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அது தன்னிடமிருந்து கிடைக்கும் அனைத்தும் ஈசனுக்கே அர்ப்பணம் ஆக வேண்டும் என்று கேட்டது. ஈசனும் அதை ஏற்று வரமளித்தார். இதுவே பசுவினின்று பெறப்படும் பொருட்களுக்கு புனிதத்தன்மை பெற்ற கதை என சூத முனிவர் தன் சீடர்களுக்கு விளக்கினார். மகத நாட்டில் தர்மாரண்யம் என்ற அக்ரஹாரத்தில் தேவசர்மா என்ற அந்தணர் இருந்தார். அவருக்கு ப்ருகு மகரிஷியின் புதல்வி காந்திமதியை திருமணம் செய்தனர். . அவள் பெயருக்கு ஏற்றார்போல் மிகவும் ஆழகாயிருந்தாள். ஒரு சமயம் தேவசர்மா அவருடைய தமையன் செய்த யாகத்திற்கு சென்றபோது அவருடைய இல்லத்திற்கு அதிதியாக அகத்தியர் வந்தார். அவர் மிகுந்த பசியில் ‘‘பவி பிக்ஷாந்தேகி’’ என்று உணவு கேட்டபோது அவள் மீண்டும் தனக்கு பசியாய் இருப்பதாய் கூறவே அவள் அலட்சியம் செய்தாள். அதனால் அவர் கோபம் கொண்டு ‘‘பிசாசாகக் கடவாய்’’ என்று சாபமிட்டார். அவளும் கோர உருமாறி வீட்டை விட்டு கத்திக்கொண்டே சென்று விட்டாள். யாகத்திற்கு சென்ற தேவசர்மா தன் வீட்டிற்க்கு திரும்பி மனைவியைக்காணாமல் தேடினான் அருகில் இருந்தவர்கள் மூலமாக விஷயம் அறிந்து தன் மனைவியை தேடினார். ஒரு ஆள் நடுக்காஆட்டில் தன் மனைவியைக் கண்டு அவளை அழைத்தார். அவள் தன் கணவனை அறியாது கண்டபடி திட்டினாள். பிறகு அவர் அவளை பலவாறு சமாதானம் செய்து பின் பரத்வாஜ முனிவர் ஆசிரமம் வந்தபோது அவர் தன் ஞான திருஷ்டியால் இவர்கள் நிலை அறிந்து ‘‘தை மாதம் பூச நட்சத்திர தினத்தில் திருப்பாதளேச்வரம் பாம்பணி ஆற்றில் தீர்த்தமாடும்போது தரிசனம் செய்து நீங்களும் தீர்த்தமாடி நாகநாத சுவாமியை வழிப்பட்டவுடன் சாபம் நீங்கப் பெற்று காந்திமதி தன் பழை உருவை அடைந்தாள். பிறகு அவர்கள் இருவரும் இங்கேயே தங்கி நாகநாதசுவாமிக்கு தங்கள் பணிவிடை செய்து சிறப்பாக இல்லறம் நடத்தி 4 குழந்தைகளை பெற்றனர். அவர்களுடைய புத்திரர் பெயர் நந்தன்,பத்ரன் ,மதி, கிருதி ஆகும் . இன்று இக்கோயிலில் தைபூச தீர்த்தவாரி மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பாம்பினங்களின் தலைவனான ஆதிசேஷன் திருப்பாற்கடலில் அமுதம் கடைந்தபோது உண்டான விஷத்தை ஈசன் உண்டதால் தனக்கும் தோஷம் ஏற்பட்டதாகக் கருதி அதற்குப் பரிகாரம் வேண்டி பாதாளேச்வரரை வழிபட்டால் உன் மனக்குறை நீங்கும் என அசரீரி வாக்கு ஒலித்தது. இதனால் ஆதிசேஷன் தனஞ்செய முனிவராக மனிதமுகமும், சர்ப்ப உடலுமாகத் தோன்றி இத்தலத்தில் பசுவால் வழிபடப்பட்ட சுயம்பு லிங்கத்தையும் வழிபட்டு தன் தோஷம் நீங்கப் பெற்றார். தேவர்களுக்கும் அசுரர்களுக்குமான போரில் ஒரு சமயம் தேவர்கள் அசுரர்களால் விரட்டப்பட்டனர். இதையறிந்த முசுகுந்த சக்கரவர்த்தி இந்திரன் வேண்டுகோளுக்கிணங்க அசுரர்களை போரிட்டு வென்றான். அதற்கு இந்திரன் தான் தினமும் பூஜித்து வந்த மரகத லிங்கத்தையும் கொடி முந்திரியையும் (திராட்சை) அவனுக்குப் பரிசாக அளித்தான். அவர் அந்த லிங்கத்துடனும் திராட்சையுடனும் திருவாரூர் தியாகராஜர் சன்னதிக்கு வந்தான். திருப்பாதாளேச்வரத்தில் பிரம்மோற்சவம் நடப்பதால் அங்கு சென்று திராட்சை நிவேதனம் செய்வாயாக என அசரீரி ஒலித்தது. அது முதல் இங்கு திராட்சை நிவேதனம் செய்யப்படுகிறது. அம்சத்வஜ மகாராஜாவின் புதல்வன் நீலத்வஜ மகாராஜா இக்கோயிலின் மேல்புறம் (நீலத்வஜ தீர்த்தம் என்ற நம்பிகுளம்) ஒரு குளம் வெட்டி ஒரு சத்திரம் கட்டி அன்னதானங்கள் செய்து அதனால் சீரும் சிறப்புமாக வாழ்ந்தான். இதனால் அவன் அன்னத்வஜன் என புகழப்பட்டான். பாண்டி நாட்டிலுள்ள ஆதி ரத்னேஸ்வரி என்ற ஸ்தலத்திலிருந்து பிப்பலாயன் என்னும் அந்தணனுக்கு குன்மநோய் வந்து தீர்க்க முடியாததாய் இருந்தது. அவன் வில்வாரண்யத்தில் தீர்த்தமாடி வில்வாரண்யரை வணங்கியபோது அசரீரியாக நீ பாதாளேச்வரம் சென்று தீர்த்தமாடி சிவ தரிசனம் செய்தால் உன் ரோகம் நீங்கும் என்றது. உடனே அவன் பாதாளேச்வரம் வந்து தீர்த்தமாடி நாகநாதசுவாமியைத் தரிசனம் செய்து சிவார்ப்பணம் செய்யப்பட்ட நிவேதனத்தை உண்டவுடன் அவனது குன்ம நோய் நீங்கியது. திருப்பாற்கடலில் அமுதல் கடையும்போது சிறப்பான 4 மாங்கனிகள் தோன்றின. அதையெடுத்த பிரமன் ஒன்றை விநாயகருக்கும் மற்றொன்றை ஆறுமுகனுக்கும் மூன்றாவதை காஞ்சியில் முளைக்கும் படி ஊன்றிவிட்டு நான்காவது பழத்தை இத்தலத்திற்கு கொண்டு வந்து நாகநாதசுவாமிக்கும் பழத்தைப் பிழிந்து அபிஷேகம் செய்தார். பின்பு அதன் கொட்டையை பிரம்ம தீர்த்தத்தின் வடகரையில் ஊன்றினார். அது முதல் மாமரம் இத்தல விருட்சமானது. அதன் காரணமாக இன்றும் மாம்பழச்சாறு விசேஷமாய் இத்தலத்தில் நாகநாதருக்கு அபிஷேகம் செய்விக்கப்படுகிறது.
Protecting Company :
இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
Nearest Temples Arc :
மன்னார்குடி இராஜகோபாலசுவாமி கோயில், திருத்துறைப்பூண்டி சிவன் கோயில், திருவாரூர் சிவன் கோயில்
Summary :
பாமணி ஆற்றின் தென்கரையில் நாகநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. முன்பு இக்கோவில் பாமணி ஆற்றின் வடகரையில் இருந்ததாகவும் ஆற்றின் போக்கில் காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவே இக்கோவில் தற்போது தென்கரையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இத்தலத்தில் மூலவர் சிவபெருமான் சுயம்பு மூர்த்தமாக புற்று மண்ணால் உருவானவர். இவ்வாறு பாதாளத்திலிருந்து சுயம்பு மூர்த்தமாக சிவபெருமான் லிங்க வடிவில் வெளிப்பட்டதாலும் பாடல் பெற்றதாலும் இத்தலத்திற்கு திருப்பாதாளேச்சுரம் என்ற பெயரும் உண்டு. பாம்பணி, சர்ப்பபுரம் என்பன இதன் வேறு புராணப் பெயர்கள் ஆகும். இக்கோவில் முற்றிலும் நகரத்தார் கட்டிடக்கலைப் பாணியைக் கொண்டு காணப்பட்டாலும் இது பாடல் பெற்ற தலமாகையால் சோழர் காலத்திற்கும் முற்பட்ட கோவிலாக இருக்கலாம். இது பிற்காலத்தில் முற்றிலும் நகரத்தார்களால் புனரமைக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது. கிழக்கு நோக்கிய இக்கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லை. மாறாக இரண்டாம் பிரகாரத்தின் பிரதான வாயிலின் மேற்புறம் உள்ள மாடத்தில் சிவபெருமான், பார்வதிதேவி, விநாயகர், பாலசுப்ரமணியர், நாரதரோடு காட்சி தரும் சுதைச் சிற்பம் உள்ளது. முதற்பிரகாரத்தின் வாயிலின் மேற்புரம் 3 கலசங்களோடு கூடிய ஒரே ஒரு நிலையுடன் சிறு ராஜகோபுரம் காணப்படுகிறது. இக்கோவிலுக்கு 30.06.1966 அன்றும் 5.2.2003 அன்றும் ஆக இரண்டு முறை திருக்குடமுழுக்கு நடைபெற்றதை இங்குள்ள இரு கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. தற்போது குடமுழுக்கிற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
Period / Ruler :
கி.பி.17-18-ஆம் நூற்றாண்டு / நகரத்தார்
Inscription / Copper :
இக்கோவில் புனரமைப்பின் போது இக்கல்வெட்டுகள் சிதைக்கப்பட்டிருக்கலாம். நமக்கு கிடைத்துள்ள ஆண்டறிக்கை பதிவின் படி இக்கோவிலின் 6 கல்வெட்டுகளில் 3 கல்வெட்டுகள் சோழர் காலத்தவை. முதலாம் ராஜராஜன் கல்வெட்டு ஒன்றும் மூன்றாம் ராஜராஜன் கல்வெட்டு ஒன்றும் அடங்கும். மற்றொரு கல்வெட்டில் அரசன் பெயர் காணப்படவில்லை. ஒரே ஒரு கல்வெட்டு பாண்டியர் காலத்தைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் காலத்தைச் சேர்ந்தது. மற்ற இரு கல்வெட்டுகளிலும் வம்சம், அரசன் பெயர் அறிய இயலவில்லை. ஸ்ரீபூதி விண்ணகர் கோயிலில் தினமும் ஒரு அடியார்க்கு உணவிட காசு கொடை, ஸ்ரீபூதி விண்ணகர் ஆழ்வாருக்கு ஒரு நந்தா விளக்கெரிக்க 96 ஆடுகள் கொடை, சுத்தவல்லி வளநாட்டு பாம்புணிக்கூற்றம் என்ற குறிப்பு, விழுப்பரையரின் மகள் கங்காண்டார் முன்பு தான் நிறுவிய தெய்வத்திருமேனியை வழிபட நிலக்கொடை வழங்குதல், உடையான் காண்டன் நூற்றெண்மன் கோயிலுக்கு ஆடு கொடை, திருப்பாடலீஸ்வரம் உடையார் கோயில் நிலத்தை வடக்கில் மடத்தைச் சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்தல் ஆகிய செய்திகளை உள்ளடக்கிய கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
Sculptures :
மூலவர் நாகநாதசுவாமி சன்னதியின் தெற்கு, மேற்கு, வடக்குப்புற தேவகோட்டங்களில் மட்டுமே கோட்ட மூர்த்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இடமிருந்து வலமாக முதல் திருச்சுற்றில் தென்திசையில் முதலாவதாக நர்த்தன கணபதியும், இரு சிங்கங்கள் மீது அமைக்கப்பட்ட சிறு மண்டபத்தோடு கூடிய தேவகோட்டத்தில் சனகாதி முனிவர்களோடு கூடிய தக்ஷிணாமூர்த்தியும் காணப்படுகின்றனர். இதனையடுத்து இத்திருமுன்னின் பின்புறமுள்ள மேற்குப்புற தேவகோட்டத்தில் அண்ணாமலையார் எனும் லிங்கோத்பவர் வீற்றுள்ளார். இதனையடுத்து வடபுற தேவகோட்டத்தில் பிரம்மா, மகிஷன் தலை மீது நிற்கும் விஷ்ணுதுர்க்கை ஆகிய சிற்பங்கள் கோட்ட மூர்த்தங்களாக நிறுவப்பட்டுள்ளன. இக்கோவிலில் ஸ்வாமி, அம்பாள், விநாயகர், வள்ளி,தெய்வயானை சமேத சுப்ரமணியர், க்ராதமூர்த்தி, அம்பாள், பிரதோஷ நாயகர், நடராஜர், சிவகாமி, சுக்ரவார அம்மன் (பள்ளியறை சுவாமி, அம்பாள்), சந்திரசேகர சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர், நால்வர், சோமாஸ்கந்தர், போகசக்தி அம்மன் ஆகிய உற்சவ மூர்த்தங்கள் இக்கோவிலில் உள்ளன. கிழக்குப்புற திருச்சுற்று மாளிகையில் நின்ற திருக்கோலத்தில் காலபைரவர், சனீஸ்வரர், நவகிரகம், அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் சிற்பங்களும் அதனையடுத்து இறுதியாக சந்திரன் சிற்பமும் உள்ளது.
Temple Structure :
இக்கோவிலின் பிரதானக் கடவுள்களான மூலவர் நாகநாதசுவாமி, அமிர்தநாயகி அம்மன் மட்டுமின்றி விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய மூர்த்தங்களுக்கும் விமானத்தோடு கூடிய தனித்த சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஏகதள விமானம் என்பது ஒரு பொதுவான அம்சம். மூலவர் நாகநாதசுவாமி விமானத்தில் மட்டும் மூர்த்தங்களுடன் கூடிய வெகு அலங்காரமிக்க தேவகோஷ்ட்டங்கள் காணப்படுகின்றன. அதாவது ஜகதி, பத்மம், முப்பட்டகக் குமுதம், கண்டம், உச்சியில் புஷ்ப போதிகையும் அதன் கீழ் பலகையோடு உள்ள அரைத்தூண்களோடு கூடிய தேவகோஷ்ட்டம், பிரஸ்தரம் ஆகிய உறுப்புகளோடு மூலவர் சன்னதி விமானம் உள்ளது. அரைத்தூண்கள் சதுர வடிவிலும், உருளை வடிவிலும், நாற்பட்டையோடும் காணப்படுகிறது. வியாழ வரிசை மற்றும் பூதகண வரிசை விமானத்தில் காணப்படவில்லை. கபோதப் பகுதியில் வழக்கம்போல் கர்ணகூடு உள்ளது. அதன் மேற்புறம் கலசம் வரையில் முற்றிலும் சுதையால் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் கட்டுமானம் ஆகும். அம்மன் சன்னதி மற்றும் பிற மூர்த்தங்களுக்கான விமானம் மேற்கூறப்பட்ட அலங்காரங்கள் இன்றி சதுர வடிவ அரைத்தூண்களோடு அமைக்கப்பட்டுள்ளது. நகரத்தார் திருப்பணி செய்துள்ளதை முற்றிலும் மெருகூட்டப்பட்டுக் காணப்படும் கட்டிடக்கலைக்கூறுகளைக் கொண்டே எளிதில் அறிய முடிகிறது. அம்பாளை வலம் வந்தால் ஓம் என்ற வடிவம் வருமாறு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அம்பாளுக்கென தனி சண்டிகேஸ்வரர் சந்நிதி உள்ளது. மூலவர் நாகநாதசுவாமி மற்றும் அமிர்தநாயகியம்மன் சன்னிதிகள் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகியவற்றை ஒருங்கே கொண்டுள்ளன. இங்குள்ள தூண்கள் சதுரவடிவுடையதாகவும் கட்டு, சதுரம் என்ற அமைப்பில் 16 பட்டைகளைக் கொண்டதாகவும் உச்சியில் புஷ்ப்ப போதிகையோடும் காணப்படுகிறது. தூண்களின் சதுரப் பகுதியில் மலர், யாளி, பாம்பு போன்ற விலங்குருவங்கள், சிவலிங்கம் என பல வகையான சிறு புடைப்புச் சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அர்த்தமண்டபத்தின் புறச் சுவர்களில் அதிக அலங்காரங்கள் ஏதுமின்றி சதுரவடிவ அரைத்தூண்கள் காணப்படுகின்றன. இவை தவிர இரண்டாம் திருச்சுற்றில் கொடிமரத்தை அடுத்து சிறு நந்திமண்டபமும் அதனையடுத்து கோவிலின் தென்புறம் வசந்தமண்டபமும் காணப்படுகிறது இந்த வசந்த மண்டபத்தில் உற்சவ மூர்த்தங்களுக்கான வாகனங்கள் வைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் திருச்சுற்று மண்டபம் முதலாம் திருச்சுற்றின் மதில்சுவரையொட்டி அமைக்கப்படாமல் மூலவர் நாகநாதசுவாமி சன்னதியின் கருவறை, அர்த்தமண்டபத்தையொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுமானத்தில் எங்கும் சுதையோ அல்லது சிமெண்ட் போன்ற தற்காலக் கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தாது முற்றிலும் கருங்கற்களாலேயே அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இங்குக் காணப்படும் தூண்கள் கட்டு, சதுரம் என்ற அமைப்பில் உச்சியில் புஷ்ப்பபோதிகையோடு உள்ள எண்பட்டைத் தூண்கள் ஆகும். அர்த்தமண்டபம் மற்றும் மகாமண்டபம் ஆகியவற்றில் உள்ள தூண்களைப் போலவே இத்தூண்களில் மலர், மரம், பூந்தொட்டி, பூங்கொடி, சிவலிங்கம், யாளி போன்ற பல புடைப்புச் சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
Location :
அருள்மிகு அமிர்தநாயகி உடனுறை நாகநாதசுவாமி கோயில், பாமணி, திருவாரூர்
Temple Opening Time :
காலை 6.00-12.00 முதல் மாலை 5.00-8.30 வரை
Way :
உடையார் மானியத்திற்கு தெற்கேயும் மன்னார்குடி இரயில் நிலையத்திற்கு வடக்கே சுமார் 2 கி.மீ. தொலைவிலும் மன்னார்குடி பேருந்து நிலையத்திலிருந்து வடக்கே சுமார் 4 கி.மீ. தொலைவிலும் நாகநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது.
Nearby Airport :
திருச்சி, சென்னை மீனம்பாக்கம்
சாலை வரைபடம்
Temple Gallery
-
நாகநாதர் கோயில், அமிர்தநாயகி அம்மன், பாமணி, திருவாரூர், கி.பி.17-18-ஆம் நூற்றாண்டு
-
நாகநாதர் கோயில், ஆக்ஞா கணபதி, பாமணி, திருவாரூர், கி.பி.17-18-ஆம் நூற்றாண்டு
-
நாகநாதர் கோயில், உலாவரும் செப்புத் திருமேனிகள், பாமணி, திருவாரூர், கி.பி.17-18-ஆம் நூற்றாண்டு
-
நாகநாதர் கோயில், உலாவரும் செப்புத் திருமேனிகள், பாமணி, திருவாரூர், கி.பி.17-18-ஆம் நூற்றாண்டு
-
நாகநாதர் கோயில், காளிங்க நர்த்தனம், பாமணி, திருவாரூர், கி.பி.17-18-ஆம் நூற்றாண்டு
-
நாகநாதர் கோயில், கொடிமரம், பாமணி, திருவாரூர், கி.பி.17-18-ஆம் நூற்றாண்டு
-
நாகநாதர் கோயில், கொடிமரம் மற்றும் பலிபீடம், பாமணி, திருவாரூர், கி.பி.17-18-ஆம் நூற்றாண்டு
-
நாகநாதர் கோயில், சண்டேசர், பாமணி, திருவாரூர், கி.பி.17-18-ஆம் நூற்றாண்டு
-
நாகநாதர் கோயில், ஞானசரஸ்வதி, பாமணி, திருவாரூர், கி.பி.17-18-ஆம் நூற்றாண்டு
-
நாகநாதர் கோயில், தண்டாயுதபாணி, பாமணி, திருவாரூர், கி.பி.17-18-ஆம் நூற்றாண்டு
-
நாகநாதர் கோயில், தனஞ்செயர், பாமணி, திருவாரூர், கி.பி.17-18-ஆம் நூற்றாண்டு
-
நாகநாதர் கோயில், தீர்த்தக்கிணறு, பாமணி, திருவாரூர், கி.பி.17-18-ஆம் நூற்றாண்டு
-
நாகநாதர் கோயில், தூண் புடைப்புச் சிற்பம் - இலிங்கம், பாமணி, திருவாரூர், கி.பி.17-18-ஆம் நூற்றாண்டு
-
நாகநாதர் கோயில், வசந்த மண்டபம், பாமணி, திருவாரூர், கி.பி.17-18-ஆம் நூற்றாண்டு
-
நாகநாதர் கோயில், நந்தவனம், பாமணி, திருவாரூர், கி.பி.17-18-ஆம் நூற்றாண்டு
-
நாகநாதர் கோயில், நந்தி, பாமணி, திருவாரூர், கி.பி.17-18-ஆம் நூற்றாண்டு
-
நாகநாதர் கோயில், நவக்கிரகம், பாமணி, திருவாரூர், கி.பி.17-18-ஆம் நூற்றாண்டு
-
நாகநாதர் கோயில், நால்வர் மற்றும் சந்திரன், பாமணி, திருவாரூர், கி.பி.17-18-ஆம் நூற்றாண்டு
-
நாகநாதர் கோயில், நிருத்தகணபதி, பாமணி, திருவாரூர், கி.பி.17-18-ஆம் நூற்றாண்டு
-
நாகநாதர் கோயில், பைரவர் மற்றும் சனைஸ்சரன், பாமணி, திருவாரூர், கி.பி.17-18-ஆம் நூற்றாண்டு
-
நாகநாதர் கோயில், மூலவர் நாகநாதர், பாமணி, திருவாரூர், கி.பி.17-18-ஆம் நூற்றாண்டு
-
நாகநாதர் கோயில், இலக்குமி, பாமணி, திருவாரூர், கி.பி.17-18-ஆம் நூற்றாண்டு
-
நாகநாதர் கோயில், விநாயகர், பாமணி, திருவாரூர், கி.பி.17-18-ஆம் நூற்றாண்டு
-
நாகநாதர் கோயில், விஷ்ணுதுர்க்கை, பாமணி, திருவாரூர், கி.பி.17-18-ஆம் நூற்றாண்டு
-
நாகநாதர் கோயில், நாகராஜர், பாமணி, திருவாரூர், கி.பி.17-18-ஆம் நூற்றாண்டு