Period / Ruler :
கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முதலாம் இராஜராஜ சோழன்
Inscription / Copper :
இராஜராஜன் கல்வெட்டுகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது அரசனின் மெய்க்கீர்த்தியாகும். கல்வெட்டு தொடக்கத்தில் இடம் பெறும் மெய்க்கீர்த்தி எனப்படும் அரசனது போர் வெற்றிகளைக் குறிப்பிடும் இம்முறை இராஜராஜனாலேயே முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது எனலாம். இக்கோயிலில் உள்ள “பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரம்” எனும் தொடரால்தான் இது மாமன்னன் ராஜராஜன் கட்டிய செய்தி உறுதி செய்யப்பட்டது.இராஜராஜன் கட்டிய இப்பெருங்கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் ஒன்று இராஜராஜனின் நேரடிக் கூற்றாக அமைந்துள்ளது. தஞ்சை இராஜராஜேச்சரத்தில் உள்ள இராஜராஜ சோழனின் முதல் கல்வெட்டு கூறும் செய்தி இது:- “நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீச்சரமுடையார்க்கு நாங்குடுத்தனவும், நம் அக்கண் கொடுத்தனவும் நம் பெண்டுகள் குடுத்தனவும் மற்றும் குடுத்தார் குடுத்தனவும் ஸ்ரீவிமானத்தின் கல்லிலே வெட்டுக என்று திருவாய் மொழிந்தருள, கல்லில் வெட்டின. யாண்டு இருபதாவது நாள் முன்னூற்றொரு பத்திரண்டினால் உடையார் ஸ்ரீராஜராஜதேவர் குடுத்த ஸ்ரீபலி எழுந்தருளும் பொன்னின் கொள்கை தேவர் ஒருவர் ஆடவல்லான் என்னுங் கல்லால் நிறை எண்ணூற்றிருபத்தொன்பதின் கழஞ்சேய் முக்காலே மூன்று மஞ்சாடி நாளதினாலேயே டுத்த பொன்னின் பத்மாஸன ஸ்ரீபலி தலம் ஒன்று மேற்படி கல்லால் நிறை தொள்ளாயிரத்து தொன்னூற்றைய்ங் கழஞ்சரையே நாலுமஞ்சாடி”. நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும் மற்றும் கொடுப்பார் கொடுத்தனவும் ஸ்ரீவிமானத்தின் கல்லிலே வெட்டுக என்ற சொற்றொடர் அமைந்த கல்வெட்டில் பெரிய கோயிலுக்கு பொருள் அளித்தவர் யாரெல்லாம் என்று பட்டியிலிட்டு அதனை கருவறை விமானத்தில் கல்வெட்டாய் நிலை பெறச் செய்ய ஆணையிடுகிறார். கோயிலில் அன்றாட கருமங்களை ஒழுங்காகச் செயல்படுத்துவதற்குப், பூசகர்களும், சிற்பிகளும் தேவார ஓதுவார்களும், இசைவாணர்களும்,நடனமாதர்களும், மேலும் இன்னோரன்ன பணியாட்களும் தேவைகளுக்கேற்ப நியமிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. 50 ஓதுவார்களும், 400 நடன மாதர்களும் கோயிலிலிருந்ததாகக் கல்வெட்டுச் சான்றுகள் பகர்கின்றன. பெருவுடையார் ஆலயத்துக்கு பணிக்கப்பட்ட தளிச்சேரிப் பெண்டுகளுக்கு தலைக்கு ஒரு வேலி வீதம் 400 வேலி நிலம் மான்யமாக அளிக்கப்பட்டிருக்கிறது. வேலி ஒன்றுக்கு 100 கலம் நெல்லை இவர்கள் பெற்றார்கள். இந்தப் பெண்கள் இறந்தாலோ அல்லது வெளியூர்களுக்குச் சென்றுவிட்டாலோ உரிமையுள்ள இவர்களது குடும்பத்தார் நிலத்தின் பலன்களைப் பெறமுடியும். இராஜராஜனின் தமக்கையார் குந்தவை பிராட்டியார் பெரிய கோயிலுக்கு தன் தந்தை சுந்தரச் சோழன், மற்றும் தன் தாய் வானவன் மாதேவி ஆகியோரின் செப்புத் திருமேனியையும், தக்ஷிணமேருவிடங்கர், தஞ்சை விடங்கர் ஆகிய இறைப் படிமங்களையும் வழங்கியதாக கல்வெட்டொன்று குறிப்பிடுகின்றது. மேலும் அவ்விறைவர்களுக்கு நாளமுது செய்ய நிவந்தமும் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மன்னன் ராஜராஜன் இத்திருக்கோயிலுக்கு அளித்த ஆயிரக்கணக்கான பொருட்கள் வரிசையில் முதலில் குறிப்பிடப் பெற்றவை 829 கழஞ்சு எடையில் செய்யப்பெற்ற ஸ்ரீபலி எழுந்தருளும் தேவர் பொன் திருமேனியும் 995 கழஞ்சு எடையில் செய்யப்பெற்ற பொன்னாலான பத்மத்துடன் கூடிய ஸ்ரீபலிபீடம் என்பதையும் அறியமுடிகிறது. இங்கு “ஸ்ரீபலி” என்று குறிப்பிடப்படும் சொல்லுக்கு “அர்ப்பணித்தல்” என்று பொருள். மாமன்னன் காலத்தில் இந்தக் கோயிலில் தினமும் வாத்திய இசையோடு கூடிய நாட்டியம் எனும் ஆடற்கலையும் ஈசனுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது எனும் செய்தி இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். இந்த ஆலய ஊழியத்துக்காக பரிசாரகர், பண்டாரி, கணக்கர் போன்றவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அதன்படி இங்கு 4 பண்டாரிகளும், 170 மாணிகளும், 6 கணக்கர்களும், 12 கீழ்கணக்கர்களும் பணியில் அமர்த்தப்பட்டனர். சிலர் நிரந்தர ஊழியர்கள். மற்றையோர் பல்வேறு ஊர்களிலிருந்து சுழற்சி முறையில் கோயில் பணியில் இருப்பார்கள் என்ற செய்தியும் கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது.
Murals :
தஞ்சை பெரிய கோயிலின் கருவறை உள் திருச்சுற்றின் சாந்தார நாழிகையின் சுவர்ப்பகுதிகளில் இராஜராஜன் சோழன் காலத்து ஓவியங்கள் காணப்படுகின்றன. நாயக்கர் காலத்தில் இவ்வோவியங்களின் மேல் புதிதாக ஒவியங்கள் வரையப்பட்டன. எனவே சோழர் ஓவியங்கள் தெரியாமலிருந்தன. காலடைவில் நாயக்கர் கால ஓவியங்களுக்கு அடியில் சோழர் கால ஓவியங்கள் வரையப்பட்டிருந்து கண்டறியப்பட்டது. நாயக்கர் கால ஓவியங்கள் தொழில் நுட்ப முறையில் மிகவும் சிரத்தையாக எடுக்கப்பட்டு கோயிலின் திருச்சுற்று மாளிகையில் வைக்கப்பட்டது. இப்பொழுது சாந்தார நாழிகையில் சோழர் கால ஓவியங்கள் காணக்கிடைக்கின்றன. சிவபெருமான் முப்புரமெரித்த காதையும், ஆலமரத்தடியில் தென்முகக் கடவுள் உயிர் குலத்திற்கு மறையோதிய காட்சியும், ஆடல் வல்லானின் ஓவியமும், ஆடல்வல்லானை இராஜராஜன் அவன் தன் தேவியரோடு வணங்கி நிற்கும் காட்சி, ஆடல் மகளின் நடனக் காட்சி, சுந்தரரின் வாழ்க்கை வரலாற்று ஓவியக் காட்சிகள் ஆகியன இடம் பெற்றுள்ளன. இவ்வோவியங்கள் பிரெஸ்கோ எனப்படும் ஓவிய வகையினைச் சார்ந்தது. காலத்தால் அழியாத கைவண்ணமாக இவ்வோவியங்கள் அமைந்துள்ளன.
Sculptures :
தஞ்சை பெரிய கோயிலில் உள்ள இரண்டு கோபுரங்களான கேரளாந்தகன் திருவாயில், இராஜராஜன் திருவாயில் இரண்டிலும் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. கோபுரத்தின் உட்புறம் அமைந்த புடைவில் இந்திரன், நாகராஜன் ஆகியோருடைய சிற்பங்கள் காணப்படுகின்றன. மேலும் புத்தர் மாயாவாதத்தை அசுரர்க்கு போதிக்கும் காட்சி செவ்வையாக காட்டப்பட்டுள்ளது. கருவறை விமானத்தில் திரிபுராந்தகர் சிற்பங்கள் வரிசையாக அமைந்துள்ளன. மேலும் பெரிய கோயிலில் காணப்படும் யாளி வீரர் சிற்பங்கள் மிகவும் எழில் வாய்ந்தவை. கணபதி, திருமகள், நிலமகளுடன் திருமால், இலிங்கபுராண தேவர், தாமரை மேல் அமர்ந்திருக்கு திருமகள், கபால மூர்த்தி, காலசம்ஹார மூர்த்தி, ஆடல் வல்லான், பிச்சதேவர், சங்கர நாராயணன், சந்திரசேகரர், உமாமகேசுவரர், திரிபுராந்தகர் ஆகிய சிற்பங்கள் கருவறையின் கோட்டச் சிற்பங்களாக அமைந்துள்ளன. பெரிய கோயிலில் அமைந்துள்ள வாயிற்காவலர் சிற்பங்கள் மிகவும் அளவில் பெரியவை. வியக்கத்தக்கவை. கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே மிக பெரியதாகும். ஆறு அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார், 13 அடி உயரமும், 23 அரை அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனிதனித் கருங்களனால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. சிவலிங்கத்தின் உயரம் கருதி கருவறை இரண்டு தளங்களாகக் காட்டப்பட்டுள்ளது. அவற்றுள் ஒரு தளச் சுற்றில் ஆடல்வல்லானின் 108 ஆடல் கரணங்களுள் 88 கரணங்கள் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.தஞ்சை பெரிய கோயிலில் உள்ள இரண்டு கோபுரங்களான கேரளாந்தகன் திருவாயில், இராஜராஜன் திருவாயில் இரண்டிலும் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. கோபுரத்தின் உட்புறம் அமைந்த புடைவில் இந்திரன், நாகராஜன் ஆகியோருடைய சிற்பங்கள் காணப்படுகின்றன. மேலும் புத்தர் மாயாவாதத்தை அசுரர்க்கு போதிக்கும் காட்சி செவ்வையாக காட்டப்பட்டுள்ளது. கருவறை விமானத்தில் திரிபுராந்தகர் சிற்பங்கள் வரிசையாக அமைந்துள்ளன. மேலும் பெரிய கோயிலில் காணப்படும் யாளி வீரர் சிற்பங்கள் மிகவும் எழில் வாய்ந்தவை. கணபதி, திருமகள், நிலமகளுடன் திருமால், இலிங்கபுராண தேவர், தாமரை மேல் அமர்ந்திருக்கு திருமகள், கபால மூர்த்தி, காலசம்ஹார மூர்த்தி, ஆடல் வல்லான், பிச்சதேவர், சங்கர நாராயணன், சந்திரசேகரர், உமாமகேசுவரர், திரிபுராந்தகர் ஆகிய சிற்பங்கள் கருவறையின் கோட்டச் சிற்பங்களாக அமைந்துள்ளன. பெரிய கோயிலில் அமைந்துள்ள வாயிற்காவலர் சிற்பங்கள் மிகவும் அளவில் பெரியவை. வியக்கத்தக்கவை. கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே மிக பெரியதாகும். ஆறு அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார், 13 அடி உயரமும், 23 அரை அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனிதனித் கருங்களனால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. சிவலிங்கத்தின் உயரம் கருதி கருவறை இரண்டு தளங்களாகக் காட்டப்பட்டுள்ளது. அவற்றுள் ஒரு தளச் சுற்றில் ஆடல்வல்லானின் 108 ஆடல் கரணங்களுள் 88 கரணங்கள் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
Temple Structure :
முதலாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோயில் முழுவதும் கற்றளியாக விளங்குகிறது. மிகப் பரந்த நிலப்பரப்பில் இக்கோயில் அமைந்துள்ளது. கேரளாந்தகன் திருவாயில், இராஜராஜன் திருவாயில் என இரண்டு கோபுரங்கள் அமைந்துள்ளன. கோபுரத்தில் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இரு கோபுரத்தைக் கடந்ததும் நந்தி மண்டபம் காணப்படுகின்றது. நந்தி மண்டபத்தின் மையமாக நாயக்கர் கால நந்தி அமைந்துள்ளது. சோழர் கால நந்தி திருச்சுற்று மாளிகையில் வைக்கப்பட்டுள்ளது. கொடிமரம், பலிபீடம் கடந்தால் யானை துதிக்கைப் பிடி கொண்ட படிகளுடன் கூடிய நுழைவு அமைந்துள்ளது. முக மண்டபத்தில் அளவில் பெரியதான வாயிற்காவலர்கள் நிற்கின்றனர். பின் மகாமண்டபம், நாட்டிய மண்டபம், அர்த்த மண்டபம், இடை நாழிகை, கருவறை என்பனவாக வரிசையாக அமைந்துள்ளன. கருவறை இரண்டு தளங்களைக் கொண்டதாக உயரத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் கருவறையில் அமைந்துள்ள பெருவுடையார் இலிங்கத்தின் உயரத்திற்கேற்ப இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது. கருவறையைச் சுற்றி சாந்தார நாழிகை என்னும் கருவறை இடைச்சுற்று அமைந்துள்ளது. இச்சுற்றில் கருவறையின் இருதளங்களிலும் ஓவியங்களும், சிவ வடிவங்களும், சிவன் ஆடல் கரண சிற்பங்களும் வடிக்கப்பட்டுள்ளன. கருவறை விமானம் 216 அடி உயரமுடையது. அதிட்டானம் முதல் கிரீவம் வரை நாகர பாணியாகவும், சிகரம் எண்பட்டையாக திராவிட பாணியகாவும் இரு கலைப்பாணி இணைந்த கலப்பு நிலையில் விமானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிக உயரமான விமானம் இதுவேயாகும். 16 தளங்களைக் கொண்டதாக இவ்விமானம் அமைந்துள்ளது. தக்ஷிணமேரு என்று விமானம் அழைக்கப்படுகிறது. விமானத் தளங்களில் தளச் சிற்பங்களாக திரிபுராந்தகர் வடிவம் அமைக்கப் பெற்றுள்ளது. விமானம் உயரமான துணைத் தாங்குதளத்துடன் கூடியதாக அமைந்துள்ளது. தாங்குதளத்தின் ஜகதியில் நாற்புறமும் சுற்றிலும் கல்வெட்டுகள் அமைந்துள்ளன. மண்டப புறச் சுவர்களிலும், கருவறை விமானத்தின் புறச் சுவர்களிலும் அமைக்கப்பட்டுள்ள கோட்டங்களில் சிவ வடிவங்கள், துர்க்கை, விஷ்ணு, கணபதி, சூரியன், சந்திரன் போன்ற சிற்பங்கள் மிகப் பெரிய அளவில் வடிக்கப்பட்டுள்ளன. நீண்ட நெடிய பரப்பில் திருச்சுற்று மாளிகை தூண்களுடன் நாற்புறமும் அமைந்துள்ளது. இத்திருச்சுற்று மாளிகையில் நாயக்கர் கால ஓவியங்கள் காணப்படுகின்றன. தென்மேற்கில் கணபதி சிற்றாலயமும், வடமேற்கில் சுப்பிரமணியர் திருமுன்னும், வடபுறத்தில் பெரியநாயகி அம்மன் திருமுன்னும் விளங்குகின்றன. சண்டேசருக்கு தனித் திருமுன் வடக்குச் சுற்றில் அமைந்துள்ளது.முதலாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோயில் முழுவதும் கற்றளியாக விளங்குகிறது. மிகப் பரந்த நிலப்பரப்பில் இக்கோயில் அமைந்துள்ளது. கேரளாந்தகன் திருவாயில், இராஜராஜன் திருவாயில் என இரண்டு கோபுரங்கள் அமைந்துள்ளன. கோபுரத்தில் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இரு கோபுரத்தைக் கடந்ததும் நந்தி மண்டபம் காணப்படுகின்றது. நந்தி மண்டபத்தின் மையமாக நாயக்கர் கால நந்தி அமைந்துள்ளது. சோழர் கால நந்தி திருச்சுற்று மாளிகையில் வைக்கப்பட்டுள்ளது. கொடிமரம், பலிபீடம் கடந்தால் யானை துதிக்கைப் பிடி கொண்ட படிகளுடன் கூடிய நுழைவு அமைந்துள்ளது. முக மண்டபத்தில் அளவில் பெரியதான வாயிற்காவலர்கள் நிற்கின்றனர். பின் மகாமண்டபம், நாட்டிய மண்டபம், அர்த்த மண்டபம், இடை நாழிகை, கருவறை என்பனவாக வரிசையாக அமைந்துள்ளன. கருவறை இரண்டு தளங்களைக் கொண்டதாக உயரத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் கருவறையில் அமைந்துள்ள பெருவுடையார் இலிங்கத்தின் உயரத்திற்கேற்ப இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது. கருவறையைச் சுற்றி சாந்தார நாழிகை என்னும் கருவறை இடைச்சுற்று அமைந்துள்ளது. இச்சுற்றில் கருவறையின் இருதளங்களிலும் ஓவியங்களும், சிவ வடிவங்களும், சிவன் ஆடல் கரண சிற்பங்களும் வடிக்கப்பட்டுள்ளன. கருவறை விமானம் 216 அடி உயரமுடையது. அதிட்டானம் முதல் கிரீவம் வரை நாகர பாணியாகவும், சிகரம் எண்பட்டையாக திராவிட பாணியகாவும் இரு கலைப்பாணி இணைந்த கலப்பு நிலையில் விமானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிக உயரமான விமானம் இதுவேயாகும். 16 தளங்களைக் கொண்டதாக இவ்விமானம் அமைந்துள்ளது. தக்ஷிணமேரு என்று விமானம் அழைக்கப்படுகிறது. விமானத் தளங்களில் தளச் சிற்பங்களாக திரிபுராந்தகர் வடிவம் அமைக்கப் பெற்றுள்ளது. விமானம் உயரமான துணைத் தாங்குதளத்துடன் கூடியதாக அமைந்துள்ளது. தாங்குதளத்தின் ஜகதியில் நாற்புறமும் சுற்றிலும் கல்வெட்டுகள் அமைந்துள்ளன. மண்டப புறச் சுவர்களிலும், கருவறை விமானத்தின் புறச் சுவர்களிலும் அமைக்கப்பட்டுள்ள கோட்டங்களில் சிவ வடிவங்கள், துர்க்கை, விஷ்ணு, கணபதி, சூரியன், சந்திரன் போன்ற சிற்பங்கள் மிகப் பெரிய அளவில் வடிக்கப்பட்டுள்ளன. நீண்ட நெடிய பரப்பில் திருச்சுற்று மாளிகை தூண்களுடன் நாற்புறமும் அமைந்துள்ளது. இத்திருச்சுற்று மாளிகையில் நாயக்கர் கால ஓவியங்கள் காணப்படுகின்றன. தென்மேற்கில் கணபதி சிற்றாலயமும், வடமேற்கில் சுப்பிரமணியர் திருமுன்னும், வடபுறத்தில் பெரியநாயகி அம்மன் திருமுன்னும் விளங்குகின்றன. சண்டேசருக்கு தனித் திருமுன் வடக்குச் சுற்றில் அமைந்துள்ளது.