Tamil Virtual Academy

TAMIL VIRTUAL ACADEMY - தமிழ் இணையக் கல்விக்கழகம்

Languages

tamilnadu_temples_new

அருள்மிகு கங்காதரேசுவரர் திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

Other Names :

வைத்தீஸ்வரர்

Place :

புரசைவாக்கம்

Taluk :

அமைந்தகரை

District :

சென்னை

Religious Type :

சைவம்-சிவபெருமான்

Lord Name :

கங்காதரேஸ்வரர்

Procession On God :

சோமாஸ்கந்தர்

Mother / Goddess Name :

பங்கஜாம்பாள்

Temple Tree :

புரசு

Tirukkulam / River :

கங்கா தீர்த்தம்

Agamam :

Worship Time :

காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்

Festivals :

மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை

History :

சூரியகுலத்து வேந்தன் சகரன், அயோத்தியை தலைநகரமாக கொண்டு அரசாண்டு வந்தான். தனது நாடும் மக்களும் நலமுடன் வாழ அஸ்வமேத யாகம் தொடங்கினான். வேள்விக் குதிரையை ஒவ்வொரு தேசமாக அனுப்பியபோது, தனது பதவிக்கு இது ஆபத்தாக முடியுமோ என அஞ்சிய இந்திரன், வேள்விக் குதிரையை கவர்ந்து சென்று பாதாள லோகத்தில் கபில முனிவர் தவம் செய்யும் குகையில் கட்டி வைத்தான். குதிரையைக் காணாது தவித்த சகரன், குதிரையைத் தேட தனது அறுபதாயிரம் புதல்வர்களை அனுப்பினான். தவத்தில் ஆழ்ந்திருந்த கபிலர் தான் குதிரையை கவர்ந்து கொண்டு வந்திருப்பார் என எண்ணிய சகர புத்திரர்கள் கபிலரைத் தாக்கினர். கடுங்கோபம் கொண்ட கபிலர் தம் தவ வலிமையால் சகர புத்திரர்கள் அனைவரையும் சாம்பலாக்கினார். தனது புதல்வர்கள் நாடு திரும்பாததைக் கண்டு கலங்கிய சகரன், அவர்களைத் தேடி வர தனது பேரன் அம்சுமானை அனுப்பினான். கபிலரை சந்தித்த அம்சுமான் அவரைப் பணிந்து வணங்கினான். நடந்தவை அனைத்தையும் அவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான். ஆகாச கங்கையை பூமிக்கு கொண்டு வந்து அந்தப் புனித நீரினால் பாதாளத்தில் உள்ள சகர குமாரர்களின் சாம்பலைக் கரைத்தால், அவர்கள் சாபம் நீங்கி நற்கதியடைவார்கள் என்பதையும் தெரிந்து கொண்டான். கங்கையை பூமிக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கிய அம்சுமான், கடும் தவம் புரிந்தான். பலனில்லை. அம்சுமானின் தவத்தை அவரது வாரிசான திலீபனும் மேற்கொண்டான். கங்கையை பூமிக்கு கொண்டு வர தளராது உழைத்தான். அவன் வாழ்நாளில் அந்தப் பெரிய பணியை முடிக்க முடியவில்லை. திலீபனைத் தொடர்ந்தான் பகீரதன். ஈசனின் கருணையால் பகீரதனின் கோரிக்கை நிறைவேறியது. ஆகாச கங்கையை தன் முடியில் தாங்கி, ஈசன் பூமியில் மெல்ல ஓட விட்டார். பகீரதன் கங்கையை அழைத்து சென்று, பாதாள லோகத்தில் இருக்கும் தன் முன்னோர்களின் சாம்பலை அதன் புனித நீரில் கரையச் செய்தான். சகர புத்திரர்கள் சாபம் நீங்கி நற்கதி அடைந்தனர். கடமையை வெற்றிகரமாக நிறைவேற்றிய பகீரதன், அயோத்தியின் சிம்மாசனத்தில் அமர்ந்து அரசாள தொடங்கினான். காலப் போக்கில் இறை வழிபாட்டை மறந்தான். பகீரதனுக்கு பாடம் புகட்ட ஈசன் திருவுளம் கொண்டார். அயோத்தி ராஜ தர்பாரில், பெண்களின் நடனத்தில் மூழ்கித் திளைத்திருந்தான் பகீரதன். அதனால் நாரத மகரிஷியின் வருகையைக் கூட கவனிக்காத்திருந்தான். பகீதரனின் மிதமிஞ்சிய போகமும், அதனால் அவன் காட்டிய அலட்சிய மும் நாரதருக்கு கோப மூட்டியது. பெண்களிடம் மோகம் கொண்ட உனக்கு மேக நோய் பீடிக்கட்டும்” என்று பகீ ரதனுக்கு சாபமிட்டார். தவறை உணர்ந்த பகீரதரன், நாரத முனிவரின் பாதம் பற்றி அழுதான். மன்னித்தருளுமாறு கதறினான். உடனே, கருணையால் கனிந்த நாரதர், “பகீரதா…. இதுவும் பரமனின் திருவிளையாடலே. கவலைப்படாதே, பாரத தேசமெங்கும் சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபடு. 1008-வது லிங்கப் பிரதிஷ்டையின்போது சாபம் நீங்கி நலம் பெறுவாய்” என்றார். அதன்படி நாடு முழுவதும் லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட பகீரதன் நிறைவாக 1008-வது லிங்கத்தை எங்கு பிரதிஷ்டை செய்வது என்று கண்மூடி இறைவனை வேண்டினான். அப்போது அவனது மனதில் நெருப்பு மலர்களாய் பூத்துக் குலுங்கும் புரசுவனம் தோன்றியது. அங்கே 1008-வது லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட இறைவனின் ஆணை கிடைத்தது. அதன்படி பாரதத்தின் தென் பகுதியில் உள்ள புரசுக் காட்டை அடைந்தான். வனத்தின் அழகில் மனம் லயித்த பகீரதன் ஒரு பெரிய புரசு மரத்தின் கீழ் லிங்கப் பிரதிஷ்டை செய்தான். அதற்கு அபிஷேகம் செய்ய புனித நீர் வேண்டுமென பிரார்த்தித்தான். அங்கே கங்கை பிரசன்னமானாள். அந்த கங்கா தீர்த்தத்தைக் கொண்டு அபிஷேகம் செய்து, உள்ளமுருக வழிபட்டான். அப்போது ஈசன் தோன்றி பகீரதனின் சாபம் நீக்கி, அவனது நோயை மறையச் செய்தருளினார். பகீரதனின் நோய் தீர்த்த ஈசன், புரசுவனத்திலேயே, “கங்காதரேசுவரர்” என்ற திருநாமத்தோடு கோவில் கொண்டு, இன்றும் தம்மை நாடிவரும் அடியார்களின் துயரங்களை துடைத்து அவர்களின் வாழ்வில் வளம் சேர்த்து அருள்கிறார்.

Protecting Company :

இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.

Nearest Temples Arc :

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மயிலாப்பூர் கபாலிச்சுவரர் கோயில், சிந்தாதிரிப்பேட்டை பெருமாள் கோயில்

Summary :

சென்னையில் அமைந்தகரை வட்டத்தில் உள்ள புரசைவாக்கம் கங்காதரேசுவரர் திருக்கோயில் பிற்காலச் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக தெரிகிறது. ஆனால் கல்வெட்டுகள் விசயநகரர் காலத்திலிருந்தே கிடைக்கின்றன. தற்போது இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. பழமையான கட்டடக்கலையின் எச்சங்கள் எதுவும் காணக்கிடைக்கவில்லை. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இக்கோயில் பெரிய திருக்குளத்தைக் கொண்டுள்ளது. சிற்பங்களும் கோயில் புனரமைப்பின் போது நிர்மாணிக்கப்பட்டவையாகவே உள்ளன. சுமார் ஐம்பது அடி உயரம் கொண்ட சிவபெருமானின் சுதையாலான சிற்பம் இக்கோயிலுக்கு தனித்துவமாக அமைந்துள்ளது. சிவபெருமானுக்கு கீழே லிங்கத் திருமேனிக்கு பகீரதன் பூஜை செய்வது போல அமைந்துள்ள இந்த சுதைச் சிற்பம், கோயிலின் தலவரலாற்றை எடுத்துக்கூறுவதாய் அமைந்துள்ளது.

Period / Ruler :

கி.பி.15-ஆம் நூற்றாண்டு / விஜயநகரர்

Inscription / Copper :

ஜயங்கொண்ட சோழ மண்டலத்து புலியூர் நாட்டுத் திருவான்மியூரில் உள்ள உலகாளுடைய நாயனாருக்கு விளக்கு எரிப்பதற்காக நீலகங்கரையன் என்பான் கொடையளித்துள்ளான். இக்கல்வெட்டு இக்கோயிலில் ஒரு கல்லில் உள்ளது. கங்காதரேசுவரர் கோயில் முதற் சுற்றில் உள்ள ஒரு கல்லில் காணப்படும் கல்வெட்டொன்று ஸ்ரீவீரப்பிரதாப தேவராய மகா இராயர் என்ற பெயரைக் கொண்டுள்ளது. பிற தகவல்கள் சிதைந்துள்ளன. இக்கோயிலில் காணப்படும் கல்லில் உள்ள மற்றொரு கல்வெட்டு, ஆயர்களில் ஒருவரான கொங்...கோன் அழகப்பெருமாள் என்பவரை கோயிலுக்கு நித்தம் திருவிளக்கு ஏற்றுவதற்காகக் குடி அமர்த்தப்பட்டதைக் குறிப்பிடுகிறது. இக்கோயில் கருவறையின் வடபுறத்தில் உள்ள மற்றொரு கல்வெட்டு முழுமையான செய்தியை பெற்றிருக்க வில்லை. காணிக்கை, வேண்டுகோள் போன்ற வரிகளைக் குறிப்பிடுகிறது.

Murals :

இல்லை

Sculptures :

கிழக்கு நோக்கிய கருவறையில் இலிங்க வடிவில் கங்காதரேசுவரர் உள்ளார். தெற்கு நோக்கிய கருவறையில் பங்கஜாம்பாள் நின்ற நிலையில் உள்ளார். உற்சவர் மண்டபத்தில் 63 நாயன்மார்களின் சிற்பங்கள் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் வெளிச்சுற்றில் மேற்குப்புறத்தில் கிழக்கு நோக்கியவாறு மிகப்பெரிய சுதையாலான சிவன் வடிவம் நின்ற நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. பகீரதன் இலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபடும் சிற்பமும் உள்ளது. பாண லிங்கம், நவக்கிரக ஆலயம், வள்ளலார் மற்றும் பாலசுப்ரமணியர், விநாயகர், நந்தி ஆகியோருடைய தனிக் கோயில்களில் சிற்பங்கள் அமைந்துள்ளன. கருவறைத் திருச்சுற்றில் சூரிய- சந்திரர்களையும், தில்லை வாழ் அந்தணர், திருநீலகண்ட நாயனார் முதலிய நாயன்மார்களின் உருவங்களைக் கொண்ட கல்தூண்களையும் காணலாம். சோமாஸ்கந்தர் அடுத்து நால்வர், நாகர்கள், தவக்கோலத்தில் பகீரதன், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் வீரபத்திரர் சிற்பங்கள் அமைந்துள்ளன. மேலும் ஊன்றீஸ்வரர், மின்னொளி நாயகி, உச்சிஷ்ட கணபதி, ஆறுமுகம், துர்க்கை, பைரவர் மற்றும் கருவறைக் கோட்டங்களில் தெற்கே விநாயகரும், தட்சிணாமூர்த்தியும், மேற்கே மகாவிஷ்ணு, வடக்கே பிரம்மன், துர்க்கை ஆகிய சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கருவறைத் திருச்சுற்றில் வடபுறத்தில் சண்டிகேசுவரர் அமர்ந்துள்ளார். கோயிலின் முதற் சுற்றில் சுவர்களில் சுதையாலான சிற்பங்கள் புடைப்புச் சிற்பங்களாகக் காட்டப்பட்டுள்ளன. அவை சிவபுராணச் சிற்பங்களாக அமைந்துள்ளன.

Temple Structure :

கிழக்கு நோக்கியதாக இராஜகோபுரம் அமைந்துள்ளது. கோயிலின் முதல் திருச்சுற்றின் சுவர்களில் சுதையாலான சிவபுராணச் செய்திகள் சிற்பங்களாக இடம் பெற்றுள்ளன. மேலும் இச்சுற்றில் பாணலிங்கம், நவக்கிரகம், விநாயகர், சுப்ரமணியர், வைத்தீசுவரர் ஆகிய தெய்வங்களுக்கான தனி சிறு கோயில்கள் அமைந்துள்ளன. கிழக்கில் இறைவன் கருவறைக்கான கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி அமைக்கப்பட்டுள்ளன. தென்புறத்தில் கொடிமரம், பலிபீடம், சிம்ம வாகனம் ஆகியன அம்மன் கருவறைக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ளன. தென்புறத்தில் ஒரு நுழைவாயில் உள்ளது. தென் கிழக்கு மூலையில் குளம் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கியதாக அமைந்துள்ள இறைவனின் கருவறை சதுர வடிவில் உள்ளது. ஒரு சிறிய அர்த்த மண்டபம் அதனைத் தொடர்ந்து தூண்களுடன் கூடிய மகாமண்டபம் ஆகியவற்றைப் பெற்றுள்ளது. இறைவனின் கருவறை மேல் அமைந்துள்ள விமானம் தற்காலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுவதும் சுதையாலானது. சுதைச் சிற்பங்கள் அவற்றில் இடம் பெற்றுள்ளன. மகாமண்டபத்திலேயே தெற்கு நோக்கிய நிலையில் அம்மன் கருவறை அமைந்துள்ளது. அம்மன் கருவறை சதுரவடிவமாகும். ஒரு சிறிய அர்த்தமண்டபமும் கொண்டுள்ளது. கருவறைத் திருச்சுற்றில் கோட்டத் தெய்வங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மன், துர்க்கை ஆகிய இறையுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தென் கிழக்கு மூலையில் பைரவர் சிற்பம் காணப்படுகிறது. கருவறைச் சுற்றின் வடபுறத்தில் சண்டிகேசுவரர் சிறுகோயில் கொண்டுள்ளார். பள்ளியறை சிறிய கோயிலாக காட்சியளிக்கிறது. கங்காதரேசுவரரின் கருவறை அருகில் சோமாஸ்கந்தருக்கான தனி கோயில் அமைப்பு காணப்படுகிறது. அதனை ஒட்டி நால்வர் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதனையடுத்த வெளியில் உற்சவருக்கான மண்டபம் ஒன்று தூண்களுடன் காணப்படுகிறது. இம்மண்டபத்தில் 63 நாயன்மார்களின் சிற்பங்களும் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.கிழக்கு நோக்கியதாக இராஜகோபுரம் அமைந்துள்ளது. கோயிலின் முதல் திருச்சுற்றின் சுவர்களில் சுதையாலான சிவபுராணச் செய்திகள் சிற்பங்களாக இடம் பெற்றுள்ளன. மேலும் இச்சுற்றில் பாணலிங்கம், நவக்கிரகம், விநாயகர், சுப்ரமணியர், வைத்தீசுவரர் ஆகிய தெய்வங்களுக்கான தனி சிறு கோயில்கள் அமைந்துள்ளன. கிழக்கில் இறைவன் கருவறைக்கான கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி அமைக்கப்பட்டுள்ளன. தென்புறத்தில் கொடிமரம், பலிபீடம், சிம்ம வாகனம் ஆகியன அம்மன் கருவறைக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ளன. தென்புறத்தில் ஒரு நுழைவாயில் உள்ளது. தென் கிழக்கு மூலையில் குளம் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கியதாக அமைந்துள்ள இறைவனின் கருவறை சதுர வடிவில் உள்ளது. ஒரு சிறிய அர்த்த மண்டபம் அதனைத் தொடர்ந்து தூண்களுடன் கூடிய மகாமண்டபம் ஆகியவற்றைப் பெற்றுள்ளது. இறைவனின் கருவறை மேல் அமைந்துள்ள விமானம் தற்காலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுவதும் சுதையாலானது. சுதைச் சிற்பங்கள் அவற்றில் இடம் பெற்றுள்ளன. மகாமண்டபத்திலேயே தெற்கு நோக்கிய நிலையில் அம்மன் கருவறை அமைந்துள்ளது. அம்மன் கருவறை சதுரவடிவமாகும். ஒரு சிறிய அர்த்தமண்டபமும் கொண்டுள்ளது. கருவறைத் திருச்சுற்றில் கோட்டத் தெய்வங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மன், துர்க்கை ஆகிய இறையுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தென் கிழக்கு மூலையில் பைரவர் சிற்பம் காணப்படுகிறது. கருவறைச் சுற்றின் வடபுறத்தில் சண்டிகேசுவரர் சிறுகோயில் கொண்டுள்ளார். பள்ளியறை சிறிய கோயிலாக காட்சியளிக்கிறது. கங்காதரேசுவரரின் கருவறை அருகில் சோமாஸ்கந்தருக்கான தனி கோயில் அமைப்பு காணப்படுகிறது. அதனை ஒட்டி நால்வர் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதனையடுத்த வெளியில் உற்சவருக்கான மண்டபம் ஒன்று தூண்களுடன் காணப்படுகிறது. இம்மண்டபத்தில் 63 நாயன்மார்களின் சிற்பங்களும் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.

Location :

அருள்மிகு கங்காதரேசுவரர் திருக்கோயில், புரசைவாக்கம், சென்னை.

Phone :

Website :

Email :

Temple Opening Time :

காலை 6.00-12.00 முதல் மாலை 4.30-8.30 வரை

Way :

Nearby Bus Station :

புரசைவாக்கம், எழும்பூர்

Nearby Railway Station :

சென்னை எழும்பூர்

Nearby Airport :

சென்னை மீனம்பாக்கம்

Accommodation :

சென்னை மாநகர விடுதிகள்
சாலை வரைபடம்
Updated Date : 07-12-2016 18:19:55 IST