Other Names :
குறுங்காலீசுவரர், குசலவபுரீஸ்வரர்
Mother / Goddess Name :
தர்மசம்வர்த்தினி (அறம் வளர்த்த நாயகி)
Worship Time :
காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்
Festivals :
இரதஸப்தமி, மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, கார்த்திகை, பங்குனி உத்திரம்
History :
ஸ்ரீராமரின் மகன்களான லவனும், குசனும் வணங்கிய சிவலிங்கமே, இன்றைய கோயம்பேடு குறுங்காலீசுவரர் என்பது ஐதீகம். எனவே இந்த கோயம்பேடு பகுதி முற்காலத்தில் குசவலபுரம் என்று அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவனுக்கும் கூட, ‘குசலவ ஈசர்’ என்ற பெயரும் இருப்பது இதனை உறுதி செய்கிறது. வேள்விக் குதிரையை ராமன் தேடிக் கொண்டு வரும்போது இங்குள்ள ஆற்றின் கரையில் அமர்ந்ததால், அந்த பகுதிக்கு ‘அமர்ந்த கரை’ என்று அன்னாளில் பெயர் வந்தது. அதுவே தற்போது, ‘அமிஞ்சிகரை’ என்று வழங்கப்படுகிறது. வனவாசம் முடிந்து வந்த இராமர் குடிமக்களில் ஒருவனின் அவதூறான பேச்சைக் கேட்டு நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சீதையை அழைத்துச் சென்று காட்டுக்குள் விட்டு வருமாறு லட்சுமணருக்கு ராமர் உத்தரவிட்டார். அதை ஏற்று லட்சுமணர், சீதையை அழைத்து வந்தார். அந்த காலக்கட்டத்தில் இப்போதைய கோயம்பேடு தர்ப்பைப் புற்கள், மாமரங்கள், பலா மரங்கள் நிறைந்த பகுதியாக இருந்தது. கூவம் நதி புனித நதியாக ஓடிக் கொண்டிருந்தது. சீதையை அங்கு விட்டு, விட்டு லட்சுமணர் சென்றுவிட்டார். தனிமையில் விடப்பட்ட சீதை தன் நிலையை எண்ணி சத்தம் போட்டு கதறி அழுதார். திருவான்மியூர் வனப் பகுதியில் ஆசிரமம் அமைத்து தங்கி இருந்த வால்மீகி முனிவர், தர்ப்பை சேகரிக்க வந்தார். சீதையின் அழுகுரல் கேட்டு சென்றவர், எல்லாவற்றையும் அறிந்தார். பிறகு சீதையை அவர் தன்னுடன் தங்க செய்து கவனித்துக் கொண்டார். சிறிது நாளில் சீதை லவன் எனும் மகனை பெற்றெடுத்தார். ஒருநாள் லவனை காணாததால் வால்மீகி முனிவர் தர்ப்பையை கிள்ளிப் போட்டு குசனை உருவாக்கினார். லவன், குசன் இருவரும் எல்லாவித பயிற்சிகளையும் கற்று சிறந்த வீரர்களாக தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில் அயோத்தியில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சத்தை போக்க ராமர் அஸ்வமேத யாகம் நடத்த ஏற்பாடு செய்தார். இதற்காக யாகக் குதிரை ஒன்றை நாடெங்கும் உலா செல்ல அனுப்பினார். ராமர் அனுப்பிய குதிரை என்பதால், எல்லா நாட்டு மன்னர்களும் அதற்கு மரியாதை செய்து அனுப்பி வைத்தனர். வால்மீகி முனிவரின் ஆசிரமத்துக்கு வந்த அந்த குதிரையை லவன், குசன் இருவரும் சேர்ந்து கட்டிப் போட்டனர். அதனால் தான் இந்த இடம் கோயம்பேடு என்று அழைக்கப்படுகிறது. கோ- அரசன், அயம்- குதிரை, பேடு- கட்டுதல் என்று பொருள்). இதை அறிந்ததும் படை வீரர்களுடன் லட்சுமணர் அங்கு விரைந்தார். அவர்களை லவன், குசன் இருவரும் போரிட்டு தோற்கடித்து விரட்டியடித்தனர். இதனால் வெகுண்டடெழுந்த ராமர், தானே நேரடியாக போர் களத்துக்கு வந்தார். அவருடனும் சிறுவாபுரி எனுமிடத்தில் லவன், குசன் இருவரும் போரிட்டனர். அப்போது வால்மீகி விரைந்து வந்து, நீங்கள் போரிடுவது உங்கள் தந்தையுடன்தான் என்று விளக்கமாக எடுத்துக் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த லவன், குசன் இருவரும், எங்கள் தந்தையுடன் சண்டையிட்ட தோஷம் நீங்க ஏதாவது வழி சொல்லுங்கள் என்று வால்மீகியிடம் கேட்டனர். அதற்கு வால்மீகி முனிவர், "சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து, அதற்கு பூஜை செய்து வழிபட்டால் உங்கள் தோஷம் நீங்கும்'' என்றார். அதன்படி லவன், குசன் இருவரும் குதிரையை கட்டிப் போட்ட இடத்தில் சிவலிங்கம் ஒன்றை நிறுவினார்கள். தங்கள் உயரத்துக்கு ஏற்ப உயரம் குறைந்த லிங்கத்தை அவர்கள் நிறுவி வழிபட்டனர். இதனால் அவர்களது தோஷம் நீங்கியது. அவர்கள் வழிபட்ட லிங்கத்துக்கு "குசலவபுரீஸ்வரர்'' என்ற பெயர் ஏற்பட்டது. பின்னாளில் இலிங்கம் மண் மூடியது. சோழமன்னன் ஒருவன் தேரின் மீது ஏறி சென்றபோது தேர்ச்சக்கரம் பட்டு அவ்விடத்தில் இரத்தம் பீறிட்டது. மன்னன் அவ்விடத்தில் இலிங்கம் இருப்பதை கண்டு, வணங்கி வழிபட்டான். தேர்ச்சக்கரம் பட்டதால் பாணம் பாதி புதைந்து குறுகிய வடிவாக காட்சியளித்ததால் அது குறுங்காலீஸ்வரர் என்ற பெயரை பெற்றது.
Protecting Company :
இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
Nearest Temples Arc :
கோயம்பேடு வைகுண்டவாசப் பெருமாள் கோயில், வடபழனி முருகன் கோயில், வடபழனி சிவன் கோயில்,
Summary :
இக்கோயில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது சிறப்பாகும். பிற்காலச் சோழர் கல்வெட்டுகளைக் கொண்டுள்ளது. குறுங்காலீசுவரர் கோயில் கருவறையில் வடதிசை நோக்கி இறைவன் இருப்பதால் இது மோட்ச தலமாகவும், இங்குள்ள தீர்த்தம் பித்ரு பரிகார பூஜை செய்ய ஏற்ற இடமாகவும் கூறப்படுகிறது. இத்தலத்தில் வேறொரு சிறப்பும் உண்டு. அது யாதெனில், தர்மசம்வர்த்தினி என்னும் அறம் வளர்த்த நாயகி அம்பாளும் வடதிசை நோக்கி நின்றவாறு தனிச் சன்னிதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். குறுங்காலீசுவரர் சிவன் கோயிலின் அருகில் வைகுண்டவாசப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. சிவன் கோயிலும், பெருமாள் கோயிலும் அருகருகே அமைந்திருப்பதால் கோயம்பேடு பகுதி சோழர் காலத்திலோ, அதற்கு முன்னரோ பிரம்மதேயமாக இருந்திருக்கலாம். பிரம்மதேயமாக கொடுக்கப்பட்ட ஊர்களில் இவ்விரு சமயக் கோயில்களும் அமைவது இயல்பு. குறுங்காலீசுவரர் கோயிலின் தலவரலாறு இராமாயணத்தோடு தொடர்புபடுத்தப் படுகிறது. இது நோக்கத்தக்கது. இப்பகுதி பண்டு கால்நடைகளுக்குரிய மேய்ச்சல் நிலமாக இருந்திருக்க வேண்டும். கோ அம் பேடு என்று பிரித்து பொருள் கொண்டால் பெற்றங்களை கொண்ட அழகிய தலைவன் ஆண்ட பகுதி என்ற பொருளில் வருகிறது. பெற்றம் என்பது மாட்டுச் செல்வம். கோ என்பது தலைவனைக் குறிக்கும். அம்மன் கருவறையின் எதிரே ஈசானிய மூலையில், நவக்கிரக திருமுன் அமைந்துள்ளது. சாயா தேவி, உஷாதேவி இருபுறமும் இருக்க, சூரியன் பகவான் ஏழு குதிரை பூட்டிய தேரில் வீற்றிருப்பதும், அந்தத் தேரை சூரியபகவானின் தேர் சாரதி அருணன் ஓட்டுவது போலவும் அமைந்த காட்சியும், சூரிய பகவானைச் சுற்றிலும் மற்ற கிரகங்கள் இருப்பதும் இங்கு தனிச் சிறப்பாகும். இந்த ஈஸ்வரனை வணங்கி லவன், குசன் இருவரும் தோஷ நிவர்த்திப் பெற்றதால், இவரை வணங்குபவர்களின் பித்ரு தோஷம் நீங்கும் என்பது ஐதீகமாகும். இத்திருத்தலத்தில் உள்ள முருகனை அருணகிரிநாதர் பாடியுள்ளார். அவர் தம் பாடலில இத்தலத்தை கோசை நகர் என்று குறிப்பிடுகின்றனார்.