101-110

101. குறிஞ்சி
விரிதிரைப் பெருங் கடல் வளைஇய உலகமும்,
அரிது பெறு சிறப்பின் புத்தேள் நாடும்,
இரண்டும், தூக்கின், சீர் சாலாவே-
பூப் போல் உண்கண், பொன் போல் மேனி,
மாண் வரி அல்குல், குறுமகள்
தோள் மாறுபடூஉம் வைகலொடு எமக்கே.

தலைமகட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது; (பொருள்) வலித்த நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியதூஉம் ஆம். - பரூஉ மோவாய்ப் பதுமன்

102. நெய்தல்
உள்ளின், உள்ளம் வேமே; உள்ளாது
இருப்பின், எம் அளவைத்து அன்றே; வருத்தி
வான் தோய்வற்றே, காமம்;
சான்றோர் அல்லர், யாம் மரீஇயோரே.

''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி, ''யான் யாங்ஙனம் ஆற்றுவேன்?'' என்றது.- ஒளவையார்

103. நெய்தல்
கடும் புனல் தொடுத்த நடுங்கு அஞர் அள்ளல்,
கவிர் இதழ் அன்ன தூவி செவ் வாய்,
இரை தேர் நாரைக்கு எவ்வம் ஆகத்
தூஉம் துவலைத் துயர் கூர் வாடையும்
வாரார் போல்வர், நம் காதலர்;
வாழேன் போல்வல்-தோழி!-யானே.

பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - வாயிலான் தேவன்

104. பாலை
அம்ம வாழி, தோழி! காதலர்,
நூல் அறு முத்தின் தண் சிதர் உறைப்ப,
தாளித் தண் பவர் நாள் ஆ மேயும்
பனி படு நாளே, பிரிந்தனர்;
பிரியும் நாளும் பல ஆகுபவே!

பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குக் கூறியது; ''சிறிய உள்ளிப் பெரிய மறக்க வேண்டாவோ?'' என்ற தோழிக்குக் கிழத்தி கூறியதூஉம் ஆம். - காவன்முல்லைப் பூதனார்.

105. குறிஞ்சி
புனவன் துடவைப் பொன் போல் சிறு தினைக்
கடி உண் கடவுட்கு இட்ட செழுங் குரல்
அறியாது உண்ட மஞ்ஞை, ஆடுமகள்
வெறி உறு வனப்பின் வெய்துற்று, நடுங்கும்
சூர் மலை நாடன் கேண்மை
நீர் மலி கண்ணொடு நினைப்பு ஆகின்றே.

வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - நக்கீரர்

106. குறிஞ்சி
புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர்
வரை இழி அருவியின் தோன்றும் நாடன்
தீது இல் நெஞ்சத்துக் கிளவி நம் வயின்
வந்தன்று-வாழி, தோழி!-நாமும்
நெய் பெய் தீயின் எதிர்கொண்டு,
''தான் மணந்தனையம்'' என விடுகம் தூதே.

தலைமகன் தூது கண்டு, கிழத்தி தோழிக்குக் கூறியது. - கபிலர்

107. மருதம்
குவி இணர்த் தோன்றி ஒண் பூ அன்ன
தொகு செந் நெற்றிக் கணம்கொள் சேவல்!-
நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும்
பிள்ளை வெருகிற்கு அல்குஇரை ஆகி,
கடு நவைப் படீஇயரோ, நீயே-நெடு நீர்
யாணர் ஊரனொடு வதிந்த
ஏம இன் துயில் எடுப்பியோயே!

பொருள் முற்றி வந்த தலைமகனை உடைய கிழத்தி காமம் மிக்க கழிபடர் கிளவியால் கூறியது. - மதுரைக் கண்ணனார்.

108. முல்லை
மழை விளையாடும் குன்று சேர் சிறுகுடிக்
கறவை கன்றுவயின் படர, புறவில்
பாசிலை முல்லை ஆசு இல் வான் பூச்
செவ் வான் செவ்வி கொண்டன்று;
உய்யேன் போல்வல்-தோழி!-யானே.

பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குக் கூறியது. - வாயிலான் தேவன்

109. நெய்தல்
முட் கால் இறவின் முடங்கு புறப் பெருங் கிளை
புணரி இகுதிரை தரூஉம் துறைவன்
புணரிய இருந்த ஞான்றும்,
இன்னது மன்னோ, நல் நுதற் கவினே!

தலைவன் சிறைப்புறமாக, தலைவி வேறுபாடுகண்ட புறத்தார் அலர் கூறுகின்றமை தோன்ற, தோழி தலைமகட்குக் கூறுவாளாய்க் கூறியது. - நம்பி குட்டுவன்

110. முல்லை
வாரார் ஆயினும், வரினும், அவர் நமக்கு
யார் ஆகியரோ-தோழி!-நீர
நீலப் பைம் போது உளரி, புதல
பீலி ஒண் பொறிக் கருவிளை ஆட்டி,
நுண் முள் ஈங்கைச் செவ் அரும்பு ஊழ்த்த
வண்ணத் துய்ம் மலர் உதிர, தண்ணென்று
இன்னாது எறிதரும் வாடையொடு
என் ஆயினள்கொல் என்னாதோரே?

பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது; தலைமகனைக் கொடுமை கூறித் தலைமகளைத் தோழி வற்புறீஇயதூஉம் ஆம். - கிள்ளிமங்கலம் கிழார்