211-220

211. பாலை
அம் சில் ஓதி ஆய் வளை நெகிழ
நொந்தும், நம் அருளார் நீத்தோர்க்கு அஞ்சல்
எஞ்சினம் வாழி-தோழி!-எஞ்சாது
தீய்ந்த மராஅத்து ஓங்கல் வெஞ் சினை
வேனில் ஓர் இணர் தேனோடு ஊதி,
ஆராது பெயரும் தும்பி
நீர் இல் வைப்பின் சுரன் இறந்தோரே.

''இடைச்சுரத்துக் கவலுவன கண்டு, "நம்மை ஆற்றார்" என நினைந்து மீள்வர்கொல்?''எனக் கவன்ற கிழத்திக்குத் தோழி சொல்லியது. - காவன் முல்லைப் பூதனார்

212. நெய்தல்
கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடுந் தேர்
தெண் கடல் அடை கரைத் தெளிர்மணி ஒலிப்ப,
காண வந்து, நாணப் பெயரும்;
அளிதோ தானே, காமம்;
விளிவதுமன்ற; நோகோ யானே.

குறை நேர்ந்த தோழி குறை நயப்பக் கூறியது. - நெய்தல் கார்க்கியன்

213. பாலை
நசை நன்கு உடையர்-தோழி!-ஞெரேரெனக்
கவைத் தலை முது கலை காலின் ஒற்றிப்
பசிப் பிணிக்கு இறைஞ்சிய பரூஉப் பெருந் ததரல்
ஒழியின் உண்டு, அழிவு இல் நெஞ்சின்
தெறித்து நடை மரபின் தன் மறிக்கு நிழல் ஆகி,
நின்று வெயில் கழிக்கும் என்ப-நம்
இன் துயில் முனிநர் சென்ற ஆறே.

''நம்பெருமான் நம்பொருட்டு இடைநின்று மீள்வான்'' எனக் கவன்ற தலைமகட்குத் தோழி உரைத்தது. - கச்சிப் பேட்டுப் காஞ்சிக் கொற்றன்

214. குறிஞ்சி
மரம் கொல் கானவன் புனம் துளர்ந்து வித்திய
பிறங்கு குரல் இறடி காக்கும், புறம் தாழ்
அம் சில் ஓதி, அசை இயல், கொடிச்சி
திருந்து இழை அல்குற்குப் பெருந் தழை உதவிச்
செயலை முழுமுதல் ஒழிய, அயலது
அரலை மாலை சூட்டி,
ஏமுற்றன்று-இவ் அழுங்கல் ஊரே.

தோழி, வெறியாட்டு எடுத்துக் கொண்ட இடத்து, அறத்தொடு நின்றது. - கூடலூர் கிழார்

215. பாலை
படரும் பைபயப் பெயரும்; சுடரும்
என்றூழ் மா மலை மறையும்; இன்று அவர்
வருவர்கொல், வாழி-தோழி!-நீர் இல்
வறுங் கயம் துழைஇய இலங்கு மருப்பு யானை
குறும் பொறை மருங்கின் அமர் துணை தழீஇக்
கொடு வரி இரும் புலி காக்கும்
நெடு வரை மருங்கின் சுரன் இறந்தோரே.

பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

216. பாலை
அவரே, கேடு இல் விழுப்பொருள் தருமார், பாசிலை
வாடா வள்ளிஅம் காடு இறந்தோரே;
யானே, தோடு ஆர் எல் வளை ஞெகிழ, நாளும்
பாடு அமை சேக்கையில், படர் கூர்ந்திசினே;
''அன்னள் அளியள்'' என்னாது, மா மழை
இன்னும் பெய்யும்; முழங்கி
மின்னும்-தோழி!-என் இன் உயிர் குறித்தே

பருவ வரவின்கண், ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கச்சிப் பேட்டுக் காஞ்சிக் கொற்றன

217. குறிஞ்சி
தினை கிளி கடிதலின், பகலும் ஒல்லும்;
இரவு நீ வருதலின், ஊறும் அஞ்சுவல்;
யாங்குச் செய்வாம், எம் இடும்பை நோய்க்கு?'' என
ஆங்கு யான் கூறிய அனைத்திற்குப் பிறிது செத்து,
ஓங்கு மலைநாடன் உயிர்த்தோன்மன்ற;
ஐதேய் கம்ம யானே;
கழி முதுக்குறைமையும் பழியும் என்றிசினே.

உடன்போக்கு நயப்பத் தோழி தலைமகட்குக் கூறியது. - தங்கால் முடக்கொல்லனார்

218.பாலை
விடர் முகை அடுக்கத்து விறல் கெழு சூலிக்குக்
கடனும் பூணாம்; கைந் நூல் யாவாம்;
புள்ளும் ஓராம்; விரிச்சியும் நில்லாம்;
உள்ளலும் உள்ளாம் அன்றே-தோழி!-
உயிர்க்கு உயிர் அன்னர் ஆகலின், தம் இன்று
இமைப்பு வரை அமையா நம் வயின்
மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர்மாட்டே.

பிரிவிடை, ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கொற்றன்

219. நெய்தல்
பயப்பு என் மேனியதுவே; நயப்பு அவர்
நார் இல் நெஞ்சத்து ஆர் இடையதுவே;
செறிவும் சேண் இகந்தன்றே; அறிவே;
''ஆங்கண் செல்கம் எழுக'' என, ஈங்கே,
வல்லா கூறியிருக்கும்; அள் இலைத்
தடவு நிலைத் தாழைச் சேர்ப்பற்கு
இடம்மன்-தோழி!-''எந் நீரிரோ?'' எனினே.

சிறைப்புறம். - வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார்.

220. முல்லை
பழ மழைக் கலித்த புதுப் புன வரகின்
இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை
இருவி சேர் மருங்கில் பூத்த முல்லை,
வெருகு சிரித்தன்ன, பசு வீ மென் பிணிக்
குறு முகை அவிழ்ந்த நறு மலர்ப் புறவின்
வண்டு சூழ் மாலையும், வாரார்;
கண்டிசின்-தோழி!-பொருட் பிரிந்தோரே.

பருவ வரவின்கண் கிழத்தி தோழிக்கு உரைத்தது. - ஒக்கூர் மாசாத்தி