Manimeagalai

14 பாத்திர மரபு கூறிய காதை

 
 

[ மணிமேகலைக்கு அறவணர் அமுதசுரபி

 

    என்னும் பாத்திரம் சிந்தாதேவி ஆபுத்திரற்குக்

 

கொடுத்தவண்ணம் கூறிய பாட்டு ]

 

 

ஆங்குஅவற்கு ஒருநாள் அம்பலப் பீடிகைப்

பூங்கொடி நல்லாய் புகுந்தது கேளாய்:

மாரி நடுநாள் வல்இருள் மயக்கத்து

ஆரிடை உழந்தோர் அம்பலம் மரீஇத்

5

துயில்வோன் தன்னைத் தொழுதனர் ஏத்தி

வயிறுகாய் பெரும்பசி மலைக்கும் என்றலும்

ஏற்றுஊண் அல்லது வேற்றூண் இல்லோன்

ஆற்றுவது காணான் ஆர்அஞர் எய்த,

கேள்இது மாதோ கெடுகநின் தீதுஎன

10

யாவரும் ஏத்தும் இருங்கலை நியமத்துத்

தேவி சிந்தா விளக்குத் தோன்றி

ஏடா அழியல் எழுந்துஇது கொள்ளாய்

நாடுவறங் கூரினும்இவ் ஓடுவறம் கூராது

வாங்குநர் கையகம் வருந்துதல் அல்லது

15

தான்தொலைவு இல்லாத் தகைமையது என்றே

தன்கைப் பாத்திரம் அவன்கைக் கொடுத்தலும்

சிந்தா தேவி செழுங்கலை நியமத்து

நந்தா விளக்கே நாமிசைப் பாவாய்

வானோர் தலைவி மண்ணோர் முதல்வி

20

ஏனோர் உற்ற இடர்களை வாய்எனத்

தான்தொழுது ஏத்தித் தலைவியை வணங்கி,

ஆங்கவர் பசிதீர்த்து அந்நாள் தொட்டு

வாங்குகை வருந்த மன்உயிர் ஓம்பலின்

மக்களும் மாவும் மரம்சேர் பறவையும்

25

தொக்குஉடன் ஈண்டிச் சூழ்ந்தன விடாஅ

பழுமரத்து ஈண்டிய பறவையின் எழூஉம்

இழும்என் சும்மை இடைஇன்று ஒலிப்ப,

ஈண்டுநீர் ஞாலத்து இவன்செயல் இந்திரன்

பாண்டு கம்பளம் துளக்கியது ஆகலின்

30

தளர்ந்த நடையின் தண்டுகால் ஊன்றி

வளைந்த யாக்கைஓர் மறையோன் ஆகி

மாஇரு ஞாலத்து மன்உயிர் ஓம்பும்

ஆர்உயிர் முதல்வன் தன்முன் தோன்றி

இந்திரன் வந்தேன் யாதுநின் கருத்து

35

உன்பெருந் தானத்து உறுபயன் கொள்கென

வெள்ளை மகன்போல் விலாஇற நக்குஈங்கு

எள்ளினன் போம்என்று எடுத்துஉரை செய்வோன்

ஈண்டுச் செய்வினை ஆண்டுநுகர்ந் திருத்தல்

காண்தகு சிறப்பின்நும் கடவுளர் அல்லது

40

அறம்செய் மாக்கள் புறங்காத்து ஓம்புநர்

நல்தவம் செய்வோர் பற்றுஅற முயல்வோர்

யாவரும் இல்லாத் தேவர்நல் நாட்டுக்கு

இறைவன் ஆகிய பெருவிறல் வேந்தே

வருந்தி வந்தோர் அரும்பசி களைந்துஅவர்

45

திருந்துமுகம் காட்டும்என் தெய்வக் கடிஞை

உண்டி கொல்லோ உடுப்பன கொல்லோ

பெண்டிர் கொல்லோ பேணுநர் கொல்லோ

யாவைஈங்கு அளிப்பன தேவர்கோன் என்றலும்,

புரப்போன் பாத்திரம் பொருந்துஊண் சுரந்துஈங்கு

50

இரப்போர்க் காணாது ஏமாந் திருப்ப

நிரப்புஇன்று எய்திய நீள்நிலம் அடங்கலும்

பரப்பு நீரால் பல்வளம் சுரக்கென

ஆங்குஅவன் பொருட்டால் ஆயிரம் கண்ணோன்

ஓங்குஉயர் பெருஞ்சிறப்பு உலகோர்க்கு அளித்தலும்,

55

பன்னீ ராண்டு பாண்டிநல் நாடு

மன்உயிர் மடிய மழைவளம் இழந்தது

வசித்தொழில் உதவ மாநிலம் கொழுப்பப்

பசிப்புஉயிர் அறியாப் பான்மைத்து ஆகலின்

ஆர்உயிர் ஓம்புநன் அம்பலப் பீடிகை

60

ஊண்ஒலி அரவம் ஒடுங்கிய தாகி

விடரும் தூர்த்தரும் விட்டேற் றாளரும்

நடவை மாக்களும் நகையொடு வைகி

வட்டும் சூதும் வம்பக் கோட்டியும்

முட்டா வாழ்க்கை முறைமைய தாக,

65

ஆபுத் திரன்தான் அம்பலம் நீங்கி

ஊர்ஊர் தோறும் உண்போர் வினாஅய்

யார்இவன் என்றே யாவரும் இகழ்ந்துஆங்கு

அருந்தே மாந்த ஆர்உயிர் முதல்வனை

இருந்தாய் நீயோ என்பார் இன்மையின்

70

திருவின் செல்வம் பெருங்கடல் கொள்ள

ஒருதனி வரூஉம் பெருமகன் போலத்

தானே தமியன் வருவோன் தன்முன்,

மாநீர் வங்கம் வந்தோர் வணங்கிச்

சாவக நல்நாட்டுத் தண்பெயல் மறுத்தலின்

75

ஊன்உயிர் மடிந்தது உரவோய் என்றலும்,

அமரர்கோன் ஆணையின் அருந்துவோர்ப் பெறாது

குமரி மூத்தஎன் பாத்திரம் ஏந்தி

அங்குஅந் நாட்டுப் புகுவதுஎன் கருத்துஎன

வங்க மாக்களொடு மகிழ்வுடன் ஏறிக்

80

கால்விசை கடுகக் கடல்கலக் குறுதலின்

மால்இதை மணிபல் லவத்திடை வீழ்த்துத்

தங்கியது ஒருநாள் தான்ஆங்கு இழிந்தனன்

இழிந்தோன் ஏறினன் என்றுஇதை எடுத்து

வழங்குநீர் வங்கம் வல்இருள் போதலும்,

85

வங்கம் போயபின் வருந்துதுயர் எய்தி

அங்கு வாழ்வோர் யாவரும் இன்மையின்

மன்உயிர் ஓம்பும்இம் மாபெரும் பாத்திரம்

என்உயிர் ஓம்புதல் யானோ பொறேஎன்

தவம்தீர் மருங்கில் தனித்துயர் உழந்தேன்

90

சுமந்துஎன் பாத்திரம் என்றனன் தொழுது

கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சியின்

ஓர்யாண்டு ஒருநாள் தோன்றுஎன விடுவோன்

அருள்அறம் பூண்டுஆங்கு ஆர்உயிர் ஓம்புநர்

உளர்எனில் அவர்கைப் புகுவாய் என்றுஆங்கு

95

உண்ணா நோன்போடு உயிர்பதிப் பெயர்ப்புழி,

அந்நாள் ஆங்குஅவன் தன்பால் சென்றே

என்உற் றனையோ என்றுயான் கேட்பத்

தன்உற் றனபல தான்எடுத்து உரைத்தனன்

குணதிசைத் தோன்றிக் கார்இருள் சீத்துக்

100

குடதிசைச் சென்ற ஞாயிறு போல

மணிபல் லவத்திடை மன்உடம்பு இட்டுத்

தணியா மன்உயிர் தாங்கும் கருத்தொடு

சாவகம் ஆளும் தலைத்தாள் வேந்தன்

ஆவயிற்று உதித்தனன் ஆங்குஅவன் தான்என்.

 

பாத்திர மரபு கூறிய காதை முற்றிற்று.