வினைச்சொல்

வினைச்சொல்

பாடம்
Lesson


'Elango Runs'

'இளங்கோ ஓடுகிறான்'

Elango - Name / Noun
இளங்கோ - பெயர்ச்சொல்
Runs - Action / Verb
ஓடுகிறான் - வினைச்சொல்

'Runs' என்ற ஆங்கில வினைச்சொல் வழியாக அது 'III Person' Singular, present Tense என்பவை மட்டும் தெரியவரும்.

ஆனால் 'ஓடுகிறான்' என்ற தமிழ் வினைச் சொல்லின் மூலம்

ஓடுகிறான் -

  (1) உயர்திணை

  (2) ஆண்பால்

 (3) ஒருமை

 (4) படர்க்கை

 (5) நிகழ்காலம்

(1) ஓடுபவன் இளங்கோ (பையன்) எனவே அவன் உயர்திணை.

(2) அவன் ஆண் எனவே ஆண்பால்.

(3) அவன் ஒருவன் அதனால் அவன் ஒருமை

(4) அவன் ஓடுவதைப் பிறர் ஒருவர் கூறுகிறார். எனவே படர்க்கை இடம்.

(5) அவன் தற்போது ஓடுகிறான் என்பதால் நிகழ்காலம்.

இவ்வாறு ஐந்து செய்திகளைப் பெற முடியும். ஆங்கில மொழியைக் காட்டிலும் தமிழ்மொழி வினைச் சொற்கள் வாயிலாகப் பல கூடுதல் செய்திகளை இவ்வாறு பெற முடியும்.

இவை தவிர மேலும் சில செய்திகளையும் நாம் பெற இயலும்.

ஓடுகிறான்:

என்ற சொல் வழியாக

(1) ஓடுபவன் யார்? என்ற கேள்விக்குப் பதில் பெற இயலும். ஓடுபவன் 'அவன்'. அதாவது செயலைச் செய்பவன் யார் எனத் தெரியும்.
(2) அடுத்து ஓடுவதற்கு அவனுக்கு உதவியது எது? என்ற கேள்விக்குப் பதில் பெற இயலும். கால்கள் அவனுக்கு ஓடுவதற்கு உதவின. இதற்குக் கருவி எனப் பெயர்.
(3) எதன்மீது ஓடினான்? என்ற கேள்விக்கு அவன் மண்மீது ஓடினான் எனப் பதில் கூறமுடியும். இதற்கு 'இடம்' அல்லது 'நிலம்' (place) என்று பெயர்.
(4) அடுத்து நடைபெற்ற செயல் என்ன எனக் கேட்டால் ஓடுதல் என்ற பதில் கிடைக்கும். இதற்குச் செயல் (Action) என்று பெயர்.
(5) ஓடி அவன் பெற்ற பயன் என்ன? எனக் கேட்டால் ‘அவன் விரைவாய்ச் செயலை முடித்தான்’ என்று பதில் தரலாம். இதற்குச் செய்பொருள் என்று பெயர்.

இவ்வாறு பல செய்திகளை ஒரே வினைச்சொல் தந்து விடும்.

இப்போது வினைச்சொல் என்பதன் முக்கியத்துவம் உங்களுக்குத் தெரிந்து இருக்கும்.

• வினைச்சொல்லின் பகுதிகள் -

வினைச் சொல்லில், திணை, எண், பால், இடம், காலம் காட்டும் பகுதி எது என்று சிந்திப்போம்.

ஓடுகிறான்

இதில், ‘றான்’ - என்பதை (ற்+ஆன்) ஆன் என எடுத்துக் கொள்வோம். 'ஆன்' என்பதுதான் பால், காலம் என்பனவற்றைக் காட்டுகிறது.

 

ஓடுகிறான் என்பதில் 'ஆன்' என்ற இறுதிப் பகுதி இச்செய்திகளைக் காட்டும்.

'ஓடுகிறாள்' என்பதில் 'ஆள்' என்ற இறுதிப் பகுதி இச்செய்திகளைக் காட்டும்.

(1) உயர்திணை

(2) பெண்பால்

(3) படர்க்கை

(4) ஒருமை

என்பவற்றைத் தருகிறது. எனவே, வினைச்சொல்லின் இறுதிப் பகுதிதான் திணை, பால், இடம், எண் ஆகியவற்றைப் பெற வைக்கிறது.

இடம் எண் முடிவு
தன்மை இடம் ஒருமை - நான் செய்தேன் - (ஏன்)
பன்மை - நாங்கள் செய்தோம் - (ஓம்)
முன்னிலை இடம் ஒருமை - நீ செய்தாய் - (ஆய்)
பன்மை - நீவீர் செய்தீர் - (ஈர்)
செய்தீர்கள் - (ஈர்கள்)
படர்க்கை
உயர்திணை ஒருமை - அவன், இவன்,
உவன், அவள்,
இவள், உவள்
அவன் செய்தான் - (ஆன்)
அவள் செய்தாள் - (ஆள்)
பன்மை - அவர்கள், இவர்கள் அவர்கள் செய்தார்கள் - (ஆர், கள்)
அஃறிணை ஒருமை - அது அது செய்தது - (து)
பன்மை - அவை அவை செய்த - (ன)

இந்த முடிவுகள் கொண்டே திணை, பால், எண், இடம், காலம் ஆகியன கண்டு பிடிக்கப்படுகின்றன.

• வினைச்சொல்லில் காலம்

காலம் மூன்று வகைப்படும் என முன்னர் பார்த்தோம். அவை இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்பனவாகும்.

ஒரு வினைச்சொல் என்பதன் சிறந்த அடையாளம் அது காலம் காட்டுவதே ஆகும். வினைச்சொல்லின் நடுவில் வரும் சில எழுத்துகள் காலம் காட்டும். அவற்றைக் காலம் காட்டும் இடைநிலைகள் என்பர்.

டினான் - ஓடு + இன்+ஆன்
ஓடுகிறான் - ஓடு+கிறு+ஆன்
ஓடுவான் - ஓடு+வ்+ஆன்

இந்த எழுத்துகள்தான் காலத்தைக் காட்டுகின்றன. இதுபோன்ற சில எழுத்துகள் வெவ்வேறு காலங்களைக் காட்டுகின்றன அவை பின்வருமாறு:

காலம் இடைநிலை எடுத்துக்காட்டு
இறந்த காலம் த் பார்த்தான்
ட் கேட்டான்
ற் சென்றான்
ன் சொன்னான்
நிகழ்காலம் கிறு வாழ்கிறான்
கின்று வாழ்கின்றான்
ஆநின்று வாழா நின்றான்
(வழக்கில் இல்லை)
எதிர்காலம் ப் கேட்பான்
வ் செல்வான்

• வினைச்சொல்லின் வகைகள்

வினைச்சொல் இரண்டு வகைப்படும். அவை,

(1) முற்று

(2) எச்சம்

இந்த இரண்டு தொடர்களையும் கவனியுங்கள்.

இளங்கோ சாப்பிட்டான்' என்ற தொடரில் 'இளங்கோ' என்பது பெயர்ச்சொல். 'சாப்பிட்டான்' என்பது வினைச்சொல்.

இதில் சாப்பிடுதல் என்ற தொழில் முடிவு பெற்று விட்டது. எனவே இதனை வினைமுற்று என்பர்.

அடுத்த தொடர் சாப்பிடும் இடம்

என்பதில் இடம் - என்பது பெயர்ச்சொல். சாப்பிடும் என்பது செயல் முடிவு பெறாத வினைச்சொல்.

சாப்பிடும் என்பதை மட்டும் படித்தால், அதன் பிறகு என்ன ஆயிற்று? யார் சாப்பிட்டார்கள்? என்ன நடந்தது?' எனப் பல கேள்விகள் எழும்.

எனவே, சாப்பிடும் என்ற சொல் முடிவு பெறாத வினைச்சொல் ஆகும். இதனை வினையெச்சம் என்பர்

இந்த எச்சமும் இருவகைப்படும். அவை,

(1) பெயரெச்சம்

(2) வினையெச்சம் என்பன.

• பெயரெச்சம்

செயல் முடிவு பெறாத வினைச்சொல், பெயர்ச் சொல்லைக் கொண்டு முடிந்தால் அது பெயரெச்சம் எனப்படும்.

எடுத்துக்காட்டு - சாப்பிடும் இடம்

‘சாப்பிடும்’ - என்ற முடிவு பெறாத வினைச்சொல். இடம் என்ற பெயரோடு முடிவதால் இது பெயரெச்சமாகும்.

• வினையெச்சம்

செயல் முடிவு பெறாத வினைச்சொல், மற்ற ஒரு செயல் முடிவு பெற்ற வினைச்சொல் கொண்டு முடிந்தால் அது வினையெச்சம் எனப்படும்.

எடுத்துக்காட்டு - சாப்பிட்டு முடித்தான்

இதில் சாப்பிட்டு என்ற சொல் முடிவு பெறாத வினைச்சொல்.

முடித்தான் என்பது செயல் முடிவு பெற்ற வினைச்சொல். சாப்பிட்டு என்ற எச்சம் முடித்தான் என்ற முற்றுடன் முடிந்துள்ளது. இது வினையெச்சம் எனப்படும்.