புணர்ச்சி
பாடம்
Lesson
புணர்ச்சி விதிகள்
மாணவ மாணவியரே !
வாழை மரம்
இத்தொடரில் வாழை என்பது நிலையான சொல். இதனை நிலைமொழி என்பர். மரம் என்பது வந்து சேர்ந்த சொல். இதனை, வருமொழி என்பர்.
நிலைமொழியும் வருமொழியும் சேரும் பொழுது எவ்வித மாறுபாடும் இல்லாமல் சேருவதை இயல்பு புணர்ச்சி என்பர்.
நிலைமொழியும் வருமொழியும் சேரும் பொழுது, ஏதேனும் ஓர் எழுத்துத் தோன்றுதல், எழுத்துத் திரிதல் அல்லது கெடுதல்ஆகிய மாறுபாடுகள் அடைவதை விகாரப் புணர்ச்சி என்பர்.
வாழைமரம் - இயல்பு புணர்ச்சி
வாழைப்பழம் - விகாரப்புணர்ச்சி
மாணாக்கரே!
இயல்பு புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு இயல்பு புணர்ச்சி என்ற தொடரே அமையும். இதே போல் விகாரப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக, விகாரப் புணர்ச்சி என்பதே அமைதலையும் காண்க.
இவ்வாறு தோன்றல், திரிதல், கெடுதல் என்பன யாவும் சில விதிகளின் படியே அமையும். அவ்விதிகளைப் புணர்ச்சி விதிகள் என்பர்.
புணர்ச்சி என்றால் என்ன என்பதையும், அதன் அடிப்படை இலக்கணத்தையும் முன் வகுப்பில் படித்தீர்கள் அல்லவா? அதை நினைவு படுத்திக் கொண்டு, மேலும், சில புணர்ச்சி இலக்கணத்தை, விதிகளின்படி சொற்கள் புணர்வதையும் இவ்வகுப்பில் படித்தறியுங்கள்!
பல, சில என்பனவற்றின் புணர்ச்சி
பல | + | பல | = | பலபல |
சில | + | சில | = | சிலசில |
இவை இயல்பாகப் புணர்ந்துள்ளன.
பல | + | பல | = | பலப்பல |
சில | + | சில | = | சிலச்சில |
இவை வருமொழி முதலில் உள்ள வல்லின எழுத்து மிக்குப் புணர்ந்துள்ளன.
பல | + | பல | = | பலற்பல |
சில | + | சில | = | சிலற்சில |
இவற்றில், நிலை மொழியில் ஈற்றில் உள்ள அகரம் கெட்டு, லகரம் றகரமாய்த் திரிந்துள்ளன.
இவ்வாறு, பல, சில என்னும் இரு சொற்களும் தமக்கு முன் தாம் வருமாயின் (பல + பல ; சில + சில) இயல்பாகவும், வல்லெழுத்து மிக்கம், நிலைமொழி ஈற்றின் அகரம் கெட்டு லகரம் றகரமாகத் திரிந்தும் புணரும்.
மேலும், பல, சில என்னும் சொற்களின் முன், பின் சொற்கள் வந்தால் நிலைமொழியின் அகரம் கெட்டுப் புணரும் ; கெடாமலும் புணரும் என்பதையும் அறிந்து கொள்க.
இதற்கான சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு :
பல | + | கலை | = | பலகலை ; | பல்கலை |
பல | + | சாலை | = | பலசாலை ; | பல்சாலை |
பல | + | தொடை | = | பலதொடை ; | பஃதொடை |
பல | + | மலர் | = | பலமலர் ; | பன்மலர் |
பல | + | நாடு | = | பலநாடு ; | பன்னாடு |
பல | + | வேண்டி | = | பலவேண்டி ; | பல்வேண்டி |
பல | + | அரண் | = | பலஅரண் ; | பல்லரண் |
சில | + | சொல் | = | சிலசொல் ; | சில்சொல் |
சில | + | மலர் | = | சிலமலர் ; | சின்மலர் |
சில | + | வளை | = | சிலவளை ; | சில்வளை |
சில | + | அணி | = | சிலவணி ; | சில்லணி |
இதற்கான புணர்ச்சி விதி கூறும் நூற்பா :
பல சில எனும் இவை தம்முன் தாம்வரின்
இயல்பும், மிகலும், அகரம் ஏக
லகரம் றகரம் ஆகலும் பிறவரின்
அகரம் விகற்பம் ஆகலும் உள பிற.
- (நன்னூல் நூற்பா - 170)
(விகற்பம் ஆகல் - ஒரே புணர்ச்சியில் அகரம் கெட்டுப் புணர்தல் ; கெடாது நின்றும் புணர்தல்)
திசைப் பெயர்ப் புணர்ச்சி
அன்பார்ந்த மாணவ மாணவியரே !
வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்பன திசையை உணர்த்தும் பெயர்களாதலால் இவை திசைப் பெயர்கள் ஆகும் என்பதை நீங்கள் அறிவீர்கள் !
ஒரு திசைப் பெயரோடு மற்றொரு திசைப் பெயரும் (வடக்கு + கிழக்கு = வடகிழக்கு) பிற பெயர்களும் (தெற்கு + நாடு = தென்னாடு) சேருவதைத் திசைப்பெயர்ப் புணர்ச்சி என வழங்குகிறோம்.
திசைப் பெயர்ப் புணர்ச்சிக்கான விதிமுறைகளை இப்பகுதியில் காண்போம்.
வடக்கு | + | கிழக்கு | = | வடகிழக்கு |
வடக்கு | + | மேற்கு | = | வடமேற்கு |
வடக்கு | + | வேங்கடம் | = | வடவேங்கடம் |
குடக்கு (மேற்கு) | + | திசை | = | குடதிசை |
குணக்கு (கிழக்கு) | + | திசை | = | குணதிசை |
இவை நிலைமொழியின் ஈற்றில் உள்ள க் என்னும் மெய்யெழுத்தும், கு என்னும் உயிர்மெய்யெழுத்தும் கெட்டுப் புணர்ந்தன.

தெற்கு | + | கிழக்கு | = | தென்கிழக்கு |
தெற்கு | + | மேற்கு | = | தென்மேற்கு |
தெற்கு | + | குமரி | = | தென்குமரி |
தெற்கு | + | பாண்டி | = | தென்பாண்டி |
இவை, நிலைமொழியீற்றில் உள்ள கு என்னும் உயிர்மெய் கெட்டு, றகர மெய் னகர மெய்யாகத் திரிந்து புணர்ந்தன.

மேற்கு | + | காற்று | = | மேல்காற்று |
மேற்கு | + | ஊர் | = | மேலூர் |
இத்திசைப் பெயர், திசைப் பெயரல்லாத வேறு பெயர்களோடு சேரும் பொழுது, நிலைமொழியிலுள்ள உயிர்மெய்யெழுத்தான கு கெட்டு, றகர மெய், லகர மெய்யாகத் திரிந்து புணர்ந்தன.

கிழக்கு | + | கடல் | = | கீழ்கடல் |
கிழக்கு | + | நாடு | = | கீழ்நாடு |
இத்திசைப் பெயர், பிறவற்றோடு சேரும் பொழுது, நிலைமொழியில் உள்ள ககர ஒற்றும், ஈற்றும் உயிர்மெய்யெழுத்தான கு வ்வும்,கிழஎன்பதில் உள்ள அகரம் கெட்டுக் கீழ்என முதல் எழுத்து நீண்டும் புணர்ந்தன.
மேற்காட்டியவாறு, திசைப் பெயர்கள் புணரும் முறைகளைக் கூறும் நூற்பா பின்வருமாறு :
திசையொடு திசையும் பிறவும் சேரின்
நிலையீற்று உயிர்மெய் கவ்வொற்று நீங்கலும்
றகரம் னலவாகத் திரிதலும் ஆம் பிற.
- (நன்னூல் நூற்பா - 186)
மையீற்றுப் பண்புப் பெயர்ப் புணர்ச்சி
அன்புக்குரிய மாணவ மாணவியரே !
நன்மை, தீமை, மென்மை, மேன்மை, வெண்மை, செம்மை போல்வன,மை என்னும் விகுதியைக் கொண்டு முடிந்து பண்பை உணர்த்தும் பெயர்கள். ஆதலால் இவற்றை மையீற்றுப் பண்புப் பெயர்கள் என்பர்.
இதனை அறிய, கீழ்க்காணும் நூற்பாவை அறிந்து கொள்க.
செம்மை சிறுமை சேய்மை தீமை
வெம்மை புதுமை மென்மை மேன்மை
திண்மை உண்மை நுண்மை இவற்றெதிர்
இன்னவும் பண்பின் பகாநிலைப் பதமே
- (நன்னூல் நூற்பா - 135)
மேற்காட்டிய மையீற்றுப் பண்புப் பெயர்கள் நிலைமொழியாக நின்று, வருமொழியோடு புணரும் போது அடையும் மாற்றங்களைக் கீழ்வருமாறு அறிந்து கொள்க.
1. | நல்லன் | = | நன்மை | + | காற்று |
வெண்பட்டு | = | வெண்மை | + | பட்டு | |
வெண்குடை | = | வெண்மை | + | குடை | |
செம்மலர் | = | செம்மை | + | மலர் |
இவை மை விகுதி மட்டும் கெட்டுப் புணர்ந்தன.
2. | பெரியன் | = | பெருமை | + | அன் |
சிறியன் | = | சிறுமை | + | அன் |
பண்புப் பகுதிகளின் மை விகுதி கெடுவதோடு, இடையில் உள்ள உகரம் (ரு, று) இகரமாகத் (ரி, றி) திரிந்துள்ளன.
3. | மூதூர் | = | முதுமை | + | ஊர் |
பாசி | = | பசுமை | + | இ |
முதுமை என்பதன் ஈறு(மை) போய், ஆதி (முதல்) நீண்டு மூதூர் என்று ஆயிற்று. பசுமை என்பதில் ஈறு போய் ஆதி நீண்டு பாசி என ஆயிற்று.
4. | பைங்கொடி | = | பசுமை | + | கொடி |
பைந்தார் | = | பசுமை | + | தார் |
இவற்றுள்பசுமை என்பதன் ஈறு போய் முதல் நின்ற அகரம் (ப) ஐகாரமாய்த் திரிந்து (பை) வருமொழியின் முதல் எழுத்து இனவெழுத்தாய் (ங், ந்) மெய் மிகுந்து புணர்ந்துள்ளன.
5. | சிற்றூர் | = | சிறுமை | + | ஊர் |
வெற்றிலை | = | வெறுமை | + | இலை |
இவற்றின் ஈறு போய் (மை) நடுவில் உள்ள ஒற்று இரட்டித்துப் புணர்ந்துள்ளன.
6. | வெவ்வேல் | = | வெம்மை | + | வேல் |
வெந்நீர் | = | வெம்மை | + | நீர் |
இவற்றில், வெம்மை என்பதன் ஈறு (மை) போய், முன் ஒற்றாகிய மகர வொற்று வகர ஒற்றாகவும், ‘ந’கர ஒற்றாகவும் (வ், ந்) திரிந்து முடிந்தன.
7. | செங்கோல் | = | செம்மை | + | கோல் |
செந்தமிழ் | = | செம்மை | + | தமிழ் |
இவற்றில், செம்மை என்பதன் ஈறு (மை) போய், வருமொழி முதல் எழுத்துக்கு இனவெழுத்துகளான (ங், ந்) என்பன மிக்குப் புணர்ந்துள்ளன.
மேற்காட்டிய, மையீற்றுப் பண்புப் பெயர்கள் புணர்ச்சியில் அடையும் மாற்றங்களைக் கீழ்க்காணும் நூற்பா விளக்குகின்றது. அதனைப் படித்து, நினைவில் நிறுத்துங்கள்.
ஈறுபோதல் ; இடை உகரம் இய்யாதல் ;
ஆதி நீடல் ; அடியகரம் ஐஆதல் ;
தன்னொற்று இரட்டல் ; முன்னின்ற மெய் திரிதல் ;
இனம்மிகல் இனையவும் பண்பிற்கு இயல்பே.
- (நன்னூல் நூற்பா - 136)
அன்பு மாணவ மாணவியரே !
மேற்காட்டிய நூற்பாவின் அடிப்படையில் கீழ்க்காணும் முறையில், மையீற்றுப் பண்புப் பெயர்ப் புணர்ச்சியை மீண்டும் நினைவு கூர்க.
விதி | எடுத்துக்காட்டு | ||||||
1. | ஈறு போதல் | - | வெண்மை | + | குடை | = | வெண்குடை |
2. | இடை உகரம் இய்யாதல் | - | பெருமை | + | அன் | = | பெரியன் |
3. | ஆதி நீடல் | - | பெருமை | + | ஊர் | = | பேரூர் |
4. | அடியகரம் ஐ ஆதல் | - | பசுமை | + | பொழில் | = | பைம்பொழில் |
5. | தன்னொற்று இரட்டல் | - | சிறுமை | + | ஊர் | = | சிற்றூர் |
6. | முன்னின்ற மெய் திரிதல் | - | வெம்மை | + | நீர் | = | வெந்நீர் |
7. | இனம் மிகல் | = | தமிழ் | + | செந்தமிழ் |
உடலும் உயிரும்
மாணாக்கச் செல்வங்களே !
தமிழ் | + | ஆசிரியர் | = | தமிழாசிரியர் |
கடவுள் | + | அருள் | = | கடவுளருள் |
பொருள் | + | அனைத்தும் | = | பொருளனைத்தும் |
இவை எவ்வாறு இப்படிப் புணர்ந்தன?
நிலைமொழியின் ஈற்றெழுத்து மெய்யெழுத்தாக இருந்து, வருமொழியின் முதல் எழுத்து உயிரெழுத்தாகவும் இருந்தால் அவை தாமே ஒன்று சேர்ந்து விடும்.
இதற்குரிய விதி,
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
- (நன்னூல் நூற்பா - 204)
பூப்பெயர்ப் புணர்ச்சி
பூ | + | கொடி | = | பூங்கொடி |
பூ | + | சோலை | = | பூஞ்சோலை |
பூ | + | தோட்டம் | = | பூந்தோட்டம் |
பூ | + | பாவை | = | பூம்பாவை |
பூ என்னும் சொல் நிலைமொழியாக இருந்து, வருமொழி முதலில் வல்லினம் வந்தால், அதற்கு இனமான மெல்லெழுத்துமிக்குப் புணரும்.
இதற்குரிய விதி,
பூப்பெயர் முன் இனமென்மையும் தோன்றும்
- (நன்னூல் நூற்பா - 200)
மென்மையும் - என்ற உம்மையால், அதே வல்லெழுத்து வந்து புணரும்.
(பூ | + | கொடி | = | பூங்கொடி ; | பூ | + | கொடி | = | பூங்கொடி |
பூ | + | கூடை | = | பூக்கூடை) |
தேங்காய் - புணர்ச்சி
அன்பு மாணவ மாணவியரே !
தேங்காய் | - | இச்சொல்லின் பகுதி என்ன தெரியுமா ‘தெங்கு’ (தென்னை) என்பதாகும். | ||
தெங்கு | + | காய் | = | தேங்காய் |
‘தெங்கு’ என்பது தேங்கு என நீண்டு, ஈற்றிலுள்ள ‘கு’ என்னும் உயிர்மெய்யெழுத்துக் கெட்டு, தேங்காய் என ஆனது.
இதற்குரிய விதி,
தெங்கு நீண்டு ஈற்று உயிர்மெய் கெடும் காய்வரின் என்பதாகும்.
தனிக்குறில் முன் ஒற்று
கண் | + | ஒளி | = | கண்ணொளி |
பண் | + | ஓசை | = | பண்ணோசை |
மண் | + | ஓசை | = | மண்ணோசை |
இவ்வாறு, நிலைமொழியில் தனிக்குற்றெழுத்தின் முன் மெய்வந்து வருமொழி முதலில் உயிர் வந்தால், நிலைமொழி இறுதியில் உள்ள மெய்யெழுத்து இரட்டித்துப் புணரும். (கண்ண்+ ஒளி = கண்ணொளி)
இதற்குரிய விதி,
தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்
என்பதாகும்.
உடம்படுமெய்
அன்பு மாணாக்கச் செல்வங்களே !
மணி | + | அடித்தது | = | மணியடித்தது. | (இ) |
தீ | + | எரிந்தது | = | தீயெரிந்தது | (ஈ) |
வாழை | + | இலை | = | வாழையிலை | (ஐ) |
நிலா | + | அழகு | = | நிலாவழகு | (வ) |
சே | + | அழகு | = | சேயழகு ; | சேவழகு (ய,வ) |
நிலைமொழியில் இகர, ஈகார, ஐகார ஈறுகள் வந்து வருமொழி முதலில் உயிர் வந்தால், இடையில் (ய்) யகர உடம்படுமெய் தோன்றும். பிற உயிர்கள் இருப்பின் (வ்) வகர உடம்படுமெய் தோன்றும். ஏகாரம் இருப்பின் யகரம் வகரம் ஆகிய இரண்டு உடம்படுமெய்களும் தோன்றும்.
உடம்படுமெய் விதியாவது,
இ, ஈ ஐ வழி யவ்வும் ஏனை
உயிர்வழி வவ்வும் ஏ முன் இவ்விருமையும்
உயிர்வரின் உடம்படுமெய் யென்றாகும்.
உடம்படுமெய் ஒரு விளக்கம் :
அன்பு மாணாக்கர்களே !
இரண்டு சொற்கள் புணரும் பொழுது, நிலைமொழி ஈறும், வருமொழி முதலும் உயிரெழுத்துகளாக இருப்பின் அவ்விரு சொற்களும் ஒன்றுபடாது விட்டிசைக்கும். அவை சேர்ந்திசைக்க வேண்டி, உடம்படாத அவ்விரண்டும் உடம்படுதற்கு (ஒன்று சேர்வதற்கு) அவற்றின் இடையே யகரமும், வகரமும் தோன்றும். இவ்வாறு, ஒன்றுபடுத்தற்காக வரும் மெய்களை உடம்படுமெய் என்பர்” என்பதறிக.
வல்லினம் மிகும் இடங்களும் மிகா விடங்களும்
அன்புக்குரிய மாணவ மாணவியரே !
தமிழில் சொற்களையும் சொற்றொடர்களையும் எழுதும்பொழுது கருத்திற் கொள்ள வேண்டுவன பற்றிச் சிறிது காண்போம்.
எழுதும்பொழுது, சில இடங்களில் வல்லெழுத்துகள் (க், ச், த், ப்) மிக்கு வரும்; சில இடங்களில் மிகாமல் வரும். மிக்கு வர வேண்டிய இடங்களில் அவற்றை எழுதாமலும், மிகா இடங்களில் அவற்றை எழுதியும் விடுவதால் பிழை தோன்றும்; மொழி மரபும் சிதையும்.
எடுத்துக்காட்டாக, யானைத் தந்தத்தால் செய்த பொம்மையைக் குறிப்பிடும் பொழுது தந்தப்பொம்மை என்று வல்லினம் மிக்கு எழுத வேண்டும். அவ்வாறு எழுதாமல் தந்த பொம்மை (வல்லினம் மிகாமல்) என்று எழுதினால், ‘யாரோ ஒருவர் தந்த பொம்மை’ என்று பொருள் மாற்றம் ஏற்பட்டு விடும்.
இது போன்ற பிழை ஏற்படாமல் எழுதிட, வல்லினம் மிகும் இடங்கள், வல்லினம் மிகா இடங்கள் பற்றிய இலக்கண மரபு மாணாக்கருக்குத் தெரிந்திருந்தல் வேண்டும்.
அவை பற்றி, பின்வருமுறையில் சில எடுத்துக்காட்டுகளுடன் அறிந்து கொள்க.
வல்லின எழுத்துகள் மிகும் இடங்கள்
1. அந்த, இந்த - முதலான சுட்டுத் திரிபுகளுக்குப் பின் வரும் வல்லினம் மிகும்.
அந்த | + | பையன் | = | அந்தப்பையன் |
இந்த | + | பெட்டி | = | இந்தப்பெட்டி |
2. அத்துணை, இத்துணை, எத்துணை என்னுஞ் சொற்களுக்குப் பின்வரும் வல்லினம் மிகும்.
அத்துணை | + | புகழ் | = | அத்துணைப் புகழ் |
இத்துணை | + | செழுமை | = | இத்துணைச் செழுமை |
எத்துணை | + | கொடுமை | = | எத்துணைக் கொடுமை |
3. அவ்வகை, இவ்வகை, எவ்வகை என்னும் சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும்.
அவ்வகை | + | காடு | = | அவ்வகைக்காடு |
இவ்வகை | + | தோப்பு | = | இவ்வகைத்தோப்பு |
எவ்வகை | + | பெயர் | = | எவ்வகைப்பெயர் |
4. மற்ற, மற்று, மற்றை - என்னும் சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும்.
மற்ற | + | கலைகள் | = | மற்றக்கலைகள் |
மற்று | + | சிலை | = | மற்றுச்சிலை |
மற்றை | + | பயன் | = | மற்றைப்பயன் |
5. “இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில்” வரும் வல்லினம் மிகும்.
மோர் | + | குடம் | = | மோர்க்குடம் |
மலர் | + | கூந்தல் | = | மலர்க்கூந்தல் |
தயிர் | + | பானை | = | தயிர்ப்பானை |
தண்ணீர் | + | தொட்டி | = | தண்ணீர்த்தொட்டி |
6. “மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில்” வரும் வல்லினம் மிகும்.
மரம் | + | குடம் | = | மரப்பெட்டி |
இரும்பு | + | தூண் | = | இரும்புத்தூண் |
தங்கம் | + | தாலி | = | தங்கத்தாலி |
7. “நான்காம் வேற்றுமையுருபும் பயனும் உடன்தொக்க தொகையில்” வரும் வல்லினம் மிகும்.
குடை | + | கம்பி | = | குடைக்கம்பி |
சட்டை | + | தூண் | = | சட்டைத்துணி |
8. “ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில்” வரும் வல்லினம் மிகும்.
அடுப்பு | + | புகை | = | அடுப்புப்புகை |
விழி | + | புனல் | = | விழிப்புனல் |
9. “பண்புத் தொகையில்’ வரும் வல்லினம் மிகும்.
புது | + | குடம் | = | புதுக்குடம் |
வட்டம் | + | பலகை | = | வட்டப்பலகை |
பொய் | + | செய்தி | = | பொய்ச்செய்தி |
10. ‘இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில்’ வல்லினம் மிகும்.
வேழம் | + | கரும்பு | = | வேழக்கரும்பு |
தாமரை | + | பூ | = | தாமரைப்பூ |
மார்கழி | + | திங்கள் | = | மார்கழித்திங்கள் |
11. ‘உவமைத் தொகையில்’ வரும் வல்லினம் மிகும்.
தாமரை | + | கண்ணன் | = | தாமரைக்கண்ணன் |
பவளம் | + | செவ்வாய் | = | பவளச்செவ்வாய் |
மலை | + | தோள் | = | மலைத்தோள் |
12. “அரை, பாதி என்னும் எண்ணுப்பெயர்ச் சொற்களின்” பின்வரும் வல்லினம் மிகும்.
அரை | + | காணி | = | அரைக்காணி |
அரை | + | படி | = | அரைப்படி |
பாதி | + | பங்கு | = | பாதிப்பங்கு |
அரை | + | தொட்டி | = | அரைத்தொட்டி |
பாதி | + | செலவு | = | பாதிச்செலவு |
13. ‘முற்றிலுகரச் சொற்களின் பின்’ வரும் வல்லினம் மிகும்.
திரு | + | கோவில் | = | திருக்கோவில் |
புது | + | புது | = | புதுப்புது |
பொது | + | சாலை | = | பொதுச்சாலை |
14.“தனிக்குறிலை அடுத்து வரும் ‘ஆ’காரத்தின் பின்வரும் வல்லினம் மிகும்.
வினா | + | குறி | = | வினாக்குறி |
பலா | + | பழம் | = | பலாப்பழம் |
15. ‘ஆய், போய் என்னும் வினை எச்சங்களுக்குப்’ பின்வரும் வல்லினம் மிகும்.
கருத்தாய் | + | கேட்டாள் | = | கருத்தாய்க்கேட்டாள் |
அன்பாய் | + | சொன்னார் | = | அன்பாய்ச்சொன்னார் |
போய் | + | பார் | = | போய்ப்பார் |
16. முன்னர், பின்னர் என்னும் இடைச்சொற்களுக்குப் பின்வரும் வல்லினம் மிகும்.
முன்னர் | + | கண்டோம் | = | முன்னர்க்கண்டோம் |
பின்னர் | + | காண்போம் | = | பின்னர்க்காண்போம் |
முன்னர் | + | செல்க | = | முன்னர்ச்செல்க |
பின்னர் | + | பணிந்தார் | = | பின்னர்ப்பணிந்தார் |
17. வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் வரும் வல்லினம் மிகும்.
பட்டு | + | சேலை | = | பட்டுச்சேலை |
பத்து | + | பாட்டு | = | பத்துப்பாட்டு |
வல்லின எழுத்துகள் மிகா இடங்கள்
அன்புக்குரிய மாணவ மாணவியரே !
வல்லின எழுத்துகளாகிய க், ச், த், ப் என்பன மிக்கு வரக்கூடிய இடங்கள் எவையென முன்பகுதியில் படித்தீர்கள். அல்லவா? இனி, இப்பதியில் அவ்வெழுத்துகள் மிகா இடங்கள் எவை என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் காண்போம்.
1. ‘அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு’ - என்னும் சொற்களின் பின்வரும் வல்லினம் மிகாது.
அவ்வளவு | + | பெரிது | = | அவ்வளவுபெரிது |
இவ்வளவு | + | கனிவா | = | இவ்வளவு கனிவா? |
எவ்வளவு | + | தொலைவு | = | எவ்வளவு தொலைவு? |
2. ‘அத்தனை, இத்தனை, எத்தனை’ - என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகாது.
அத்துணை | + | புத்தகங்களா | = | அத்தனை புத்தகங்களா? |
இத்துணை | + | தொழில்களா | = | இத்தனை தொழில்களா? |
எத்துணை | + | கருவிகள் | = | எத்தனை கருவிகள்? |
3. வினாப் பொருள் உணர்த்தும் ஆ, ஓ, ஏ என்னும் வினா எழுத்துகளின் பின்வரும் வல்லினம் மிகாது.
அவனா | + | கேட்டான் | = | அவனா கேட்டான்? |
அவளா | + | சொன்னாள் | = | அவளா சொன்னாள்? |
யாரே | + | கண்டார் | = | யாரே கண்டார்? |
4. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள் தவிர, மற்றப் பெயரெச்சங்களுக்குப் பின்வரும் வல்லினம் மிகாது.
பெரிய | + | பெண் | = | பெரிய பெண் |
கற்ற | + | சிறுவன் | = | கற்ற சிறுவன் |
நில்லாத | + | செல்வம் | = | நில்லாத செல்வம் |
அழியாத | + | கல்வி | = | அழியாத கல்வி |
5. ‘எட்டு, பத்து’ ஆகியவை தவிர மற்ற எண்ணுப்பெயர்களின் பின்வரும் வல்லினம் மிகாது.
ஒன்று | + | கேள் | = | ஒன்று கேள் |
ஒரு | + | பொருள் | = | ஒரு பொருள் |
இரண்டு | + | புத்தகம் | = | இரண்டு புத்தகம் |
இரு | + | பறவை | = | இரு பறவை |
மூன்று | + | குறிக்கோள் | = | மூன்று குறிக்கோள் |
நான்கு | + | பேர் | = | நான்கு பேர் |
ஐந்து | + | கதைகள் | = | ஐந்து கதைகள் |
ஆறு | + | கோவில் | = | ஆறு கோவில் |
அறு (ஆறு) | + | சீர் | = | அறுசீர் |
ஏழு | + | சான்றுகள் | = | ஏழு சான்றுகள் |
ஏழு | + | பிறப்பு | = | எழு பிறப்பு |
ஒன்பது | + | சுவைகள் | = | ஒன்பது சுவைகள் |
6. ‘இரட்டைக் கிளவியிலும், அடுக்குத் தொடரிலும்’ வல்லினம் மிகாது.
கல | + | கல | = | கலகல | ![]() |
- இரட்டைக் கிளவிகள் |
சட | + | சட | = | சடசட | ||
பள | + | பள | = | பளபள | ||
தீ | + | தீ | = | தீதீ | ![]() |
- அடுக்குத்தொடர்கள் |
பார் | + | பார் | = | பார்பார் ! |
7. வியங்கோள் வினைமுற்றுகளின் பின் வல்லினம் மிகாது.
கற்க | + | கசடற | = | கற்க கசடற |
வெல்க | + | தமிழ் | = | வெல்க தமிழ் |
வீழ்க | + | தண்புனல் | = | வீழ்க தண்புனல் |
8. ‘அஃறிணைப் பன்மை’ முன்வரும் வல்லினம் மிகாது.
பல | + | பசு | = | பல பசு |
சில | + | கலை | = | சில கலை |
அவை | + | தவித்தன | = | அவை தவித்தன |
9. ‘ஏவல் வினை’ முன் வரும் வல்லினம் மிகாது.
வா | + | கலையரசி | = | வா கலையரசி |
எழு | + | தம்பி | = | எழு தம்பி |
போ | + | செல்வி | = | போ செல்வி |
பார் | + | பொண்ணே | = | பார் பெண்ணே ! |
10. ‘மூன்றாம் வேற்றுமை உருபுகளாகிய ஒடு, ஓடு’ ஆகியவற்றின் பின் வல்லினம் மிகாது.
கோவலனோடு | + | கண்ணகி வந்தாள் | = | கோவலனோடு கண்ணகி வந்தாள். |
துணிவோடு | + | செல்க | = | துணிவோடு செல்க |
அண்ணனோடு | + | தங்கை வந்தாள் | = | அண்ணனோடு தங்கை வந்தாள். |
11. ‘செய்யிய’ என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் பின் வரும் வல்லினம் மிகாது.
காணிய | + | சென்றேன் | = | காணிய சென்றேன் |
உண்ணிய | + | சென்றாள் | = | உண்ணிய சென்றாள் |
மலை | + | தோள் | = | மலைத்தோள் |
12. “பொதுப் பெயர், உயர்திணைப் பெயர்களுக்குப்” பின்வரும் வல்லினம் மிகாது.
தாய் | + | கண்டாள் | = | தாய் கண்டாள். |
கண்ணகி | + | சீறினாள் | = | சீறினாள் |
13. ‘ஐந்தாம் வேற்றுமையின் சொல் உருபுகளான இருந்து, நின்று’ என்பவைகளின் பின் வரும் வல்லினம் மிகாது.
மாடியிலிருந்து | + | கண்டேன் | = | மாடியிலிருந்து கண்டேன். |
மரத்திலிருந்து | + | பறித்தேன் | = | மரத்திலிருந்து பறித்தேன். |
மலையினின்று | + | சரிந்தது | = | மலையினின்று சரிந்தது. |
14. “வினைத் தொகையில்” வல்லினம் மிகாது.
விரி | + | சுடர் | = | விரிசுடர் |
பாய் | + | புலி | = | பாய்புலி |
15. “உம்மைத் தொகையில்” வல்லினம் மிகாது.
காய் | + | கனி | = | காய்கனி |
தாய் | + | தந்தை | = | தாய்தந்தை |
16. ‘அது, இது’ என்னும் சுட்டுகளின் பின் வல்லினம் மிகாது.
அது | + | பறந்தது | = | அது பறந்தது. |
இது | + | கடித்தது | = | இது கடித்தது. |
17. எது, யாது என்னும் வினாச்சொற்களின் பின் வல்லினம் மிகாது.
எது | + | பறந்தது | = | எது பறந்தது? |
யாது | + | தந்தார் | = | யாது தந்தார்? |
18. ‘விளித் தொடரில்’ வல்லினம் மிகாது.
கண்ணா | + | பாடு | = | கண்ணா பாடு. |
அண்ணா | + | கேள் | = | அண்ணா கேள் ! |
19. வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் ‘கள், தல்’ என்னும் விகுதிகள் வரும்பொழுது வல்லினம் மிகாது.
எழுத்து | + | கள் | = | எழுத்துகள் |
கருத்து | + | கள் | = | கருத்துகள் |
வாழ்த்து | + | கள் | = | வாழ்த்துகள் |
போற்று | + | தல் | = | போற்றுதல் |
நொறுக்கு | + | தல் | = | நொறுக்குதல் |
20. ‘இரண்டு வட சொற்கள்’ சேரும் பொழுது வல்லினம் மிகாது.
கோஷ்டி | + | கானம் | = | கோஷ்டி கானம் |
சங்கீத | + | சபா | = | சங்கீத சபா |
மாணவ மாணவியரே !
இதுவரை கண்டது போல், வல்லின எழுத்துகள் மிகும் இடங்கள், மிகா இடங்கள் ஆகியவற்றுக்கு மேலும் பல எடுத்துக்காட்டுகளைக் கண்டு தொகுத்துக் கொள்ளுங்கள்; பயன்படுத்தி மொழி வளம் பெறுங்கள் !