தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

1.4 காப்பியத்தின் இலக்கியத்திறன்

1.4 காப்பியத்தின் இலக்கியத் திறன்

3622 பாடல்களைக் கொண்டு விளங்குவது இரட்சணிய
யாத்திரிகம். சொல்லின்     செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை,
மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை, மாயூரம் வேதநாயகம்
பிள்ளை
முதலிய தமிழறிஞர்கள் இக்காப்பியத்தைப் போற்றிப்
பாராட்டியுள்ளனர்.     அவ்வாறே, இராபர்ட் கால்டுவெல்,
ஜி,யூ.போப், ஜான் மர்டாக்
     முதலிய ஐரோப்பியத்
தமிழறிஞர்களும் இக்காப்பியத்தால் பெரிதும் கவரப்பட்டுள்ளனர்.
இனி, இக்காப்பியத்தின் இலக்கியத் திறத்துக்குச் சில சான்றுகள்
காண்போம்.

1.4.1 அணி நலன்கள்

யாத்திரிகக் காப்பியத்தில் தமிழ் இலக்கணம் கூறும் பல்வேறு
அணிகள் மிகச் சிறப்பாக ஆளப்பட்டுள்ளன. உவமை அணியைக்
கவிஞர் மிகச் சிறப்பாகவும் மிகுதியாகவும் கையாளுகிறார்.
காப்பியத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை, கருத்து ஆழமும்
புதுமையும் செறிந்த பல்வேறு உவமைகளை நாம் காணமுடிகிறது.
சில சான்றுகளைக் காண்போம்.

காற்றில் அடிபட்ட சருகு

கதைத் தலைவனாகிய ஆன்மிகன், தன்கையிலுள்ள வேத
நூலை விரித்துப் படித்ததனால், தன் வாழ்வின் அவல நிலையை
உணர்ந்து தவிக்கிறான். தப்பிப் பிழைக்கும் வழியறியாது தவிக்கும்
அவன் மனநிலையை, ‘உலவையுற்ற சருகெனச் சுழல்வான்’ என
உவமை நயம்படப் பேசுகிறார் ஆசிரியர். அதாவது காற்றில்
அகப்பட்ட சருகினைப் போல அவனது மனநிலை உள்ளதாம்.

செக்கும் சுக்கும்

இவ்வாறே, இன்னோரிடத்தில்     இயேசு பெருமானின்
வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பாடும் போது சுவையான
ஓர் உவமையைப் பயன்படுத்துகிறார். ஒரு குற்றமும் அறியாத -
செய்யாத இயேசுக்கு, யூத மக்களின் கூக்குரலுக்குப் பயந்து, ரோம
ஆளுநன் ஆகிய பிலாத்து மரணத் தீர்ப்பு வழங்கி விடுகிறான்.
அவனது மனச்சான்று இதனால் அவனைத் துன்புறுத்துகிறது.
மனச்சாட்சியின் உறுத்தலால் மனம் கலங்கும் பிலாத்து இயேசுக்கு
எதிராகக் கூக்குரல் எழுப்பிய மக்கள் முன், ஒரு பெரிய
பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துவரச் சொல்லி, அதில் தன்
கைகளைக் கழுவி ‘இந்த நீதிமானின் இரத்தப் பழிக்கு நான்
பொறுப்பாக மாட்டேன், நீங்களே பொறுப்பு’ என்று கூறுகிறான்.
பிலாத்துவின் அந்தச் செயல் எப்படி உள்ளதென்றால் ஒரு பெரிய
செக்கினை விழுங்கிவிட்டு அது சீரணிப்பதற்காகச் சுக்குநீர்
பருகியது போல் உள்ளதென நயம்படப் பாடுகிறார்.
செக்கினை விழுங்கிப் பின்சீர ணித்திடச்
சுக்குநீர் அருந்துமச் சூழ்ச்சி ஒக்குமால்

(குமார பருவம், இரட்சணிய சரிதப் படலம், 261)

என்பவை அப்பாடல் அடிகள்

நெருப்பு ஆறும் வெண்ணெய்ப் பாலமும்

இவ்வாறே, வேறு ஒர் இடத்தில் ஒர் அரிய இறையியல்
உண்மையை விளக்குதற்கு, சுவையான உவமை ஒன்றைக்
கையாளுவதைக் காண்போம். மனித குலம் இயல்பிலேயே
பாவத்தில் ஊறியது. பாவத்தில் திளைப்பது. அதனால் கடவுளின்
கடுங்கோபத்துக்கு உள்ளாவது. கடவுளின் கோபத்தைத்
தணிப்பதற்கு, மனிதன் ஒரு சில புண்ணியச் செயல்கள் செய்தால்
போதும் என்று கருதுகிறான். இது தவறான எண்ணம்.
இயல்பிலேயே - பிறவியிலேயே பாவத் தன்மையுடைய மனித
குலம், இயேசு பெருமானின் சிலுவைத் தியாக மரணத்தை நம்பி
ஏற்பதாலேயே விடுதலை பெறும் என்பது கிறித்துவ இறையியல்
கோட்பாடு. இதனைப் பின்வரும் உவமையால் கிருஷ்ணபிள்ளை
விளக்குகிறார்.

மண்ணை விழுங்கக் கொதித்தெழும்பி
வரும் தீயாற்றைக் கடப்பதற்கு
வெண்ணெய்ப் பாலம் சமைப்பார்போல்
வேத நாதன் வெகுளிசுய
புண்ணி யத்தால் தீருமெனப்
புலம்ப வேண்டாம் புரைதீர்ந்த
அண்ணல் ஏசு குருதிமுகந்து
அவிக்க வாரும் செகத்தீரே

(நிதான பருவம், இரட்சணிய நவநீதிப்படலம், 7)

(தீயாறு = நெருப்பு நதி, வெகுளி = கோபம், வேதநாதன் =
இறைவன், செகத்தீரே = உலக மக்களே, குருதி = இரத்தம்,
முகந்து
= அள்ளி, அவிக்க = அணைக்க)

அதாவது இந்த     உலகத்தையே விழுங்கி விடுவதற்காக,
எழும்பி வரும் நெருப்பு ஆற்றைக் கடப்பதற்கு வெண்ணெயினால்
பாலம் கட்டுவது எவ்வளவு பேதமையோ, அது போன்றதுதான்
கடவுளின் கோபத்தை     நமது     சில நற்செற்கைகளால்
தணித்து விடலாம் எனக் கருதுவதும் என்கிறார் கவிஞர்.
இவ்விடத்தில் மனோன்மணீயம் ஆசிரியர் சுந்தரம்பிள்ளை தமது
காப்பியத்தில் பயன்படுத்தும்     ‘வெண்ணெய்     ஆறும்
மயிர்ப் பாலமும்’ என்ற உவமையை ஒப்பு நோக்கலாம்.

உருவக அழகு

இரட்சணிய யாத்திரிகக் காப்பியத்தில் நெஞ்சைக் கவரும்
உருவகங்கள் பல அமைந்துள்ளன. இறைவனால் முதன் முதல்
படைக்கப்பட்ட ஆதி மனிதர்கள் கள்ளம் கபடம் அற்றவர்களாக
ஆடை அணிகலன்கள் இன்றித் தூய வடிவினராக விளங்கியதைப்
பின்வரும் பாடலில் உருவகம் செய்கிறார்.

ஒழுக்கமே கலன்க ளாக உடைபரி சுத்த மாக
இழுக்கறு கருமம் மேனிக்கு இடுநறுஞ் சாந்த மாக
பழுக்குமன் பத்தி அன்ன பானமாய்ப் பகல்கள் எல்லாம்
வழுக்கறு மரபிற் போக்கி மாதவம் புரிவர் நாளும்

(ஆதி பருவம், இராஜதுரோகப் படலம், 8)

(கலன்கள் = நகைகள், கருமம் = செயல், சாந்தம் = சந்தனம்,
அன்ன பானம்
= உணவும் நீரும்)

அதாவது, ஆதி மானிடர் ஒழுக்கத்தையே அணிகலன்களாகவும்,
தூய்மையை உடையாகவும், குற்றமற்ற செய்கைகளை உடலில் பூசும்
சந்தனமாகவும், அன்பினால் பழுக்கும் பக்தியை உணவாகவும்,
நீராகவும் கொண்டு, எல்லா நாளும் நெறி தவறாத மிகப்பெரிய
தவத்தைச் செய்துவந்தனர் என்பது கருத்து.

இவ்வாறே சிலேடை அணி, மடக்கு முதலிய சொல்லணிகள்,
சுவையணி முதலிய பல அணிகளும் யாத்திரிகப் பாக்களில்
பரவலாக அமைந்துள்ளன.

நகைச்சுவை

கவிஞர் மிகவும் நகைச் சுவையாக எழுதக் கூடியவர். கவிஞரது
நிதானி மாயாபுரியின் கடைவீதி வழியாக வருகிறான். சத்தியம்
இருந்தால் வாங்குவதாக அறிவிக்கிறான். மாயாபுரி அங்காடி
வணிகர், சத்தியத்தைத் தவிரப் பிற எல்லாம் எங்களிடம் உண்டு,
அவற்றை வாங்கலாமே!     என்று தூண்டினர். நிதானி
மறுத்துவிடுகிறான். அக்குற்றத்திற்காக,

முழுப் பொய்யன் என்னும் நீதிபதி அளிக்கும் தீர்ப்பு இது:

சத்தியமென் றுரைதந்த
அத்தனையும் பொய்அபத்தம்
எத்தனைவிட் டிடல்என்றான்
புத்தியிலா முழுப்பொய்யன்.

(நிதான பருவம், நிதானி கதி கூடு படலம், 68)

(அபத்தம் = பொய்யுரை)

இப்படிப் பல சுவையான பாடல்கள் உள்ளன.

1.4.2 மொழிநடைச் சிறப்பு

கிருஷ்ணபிள்ளை, காப்பியம் எழுதத் தொடங்கிய ஆரம்ப
காலத்தில் வட சொல் கலப்பற்ற செறிவுள்ள தமிழ் நடையில்
பாடியுள்ளமை தெரிகிறது. ஆனால், பின்னாளில் தமது
நண்பர்களின் ஆலோசனைப்படி, பலருக்கும் பயன்பட வேண்டும்
என்ற கருத்தில் - அனைவரும் எளிதில் பொருள் அறிந்து
கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தில் கடினச் சொற்களை
(திரிசொற்கள்) விலக்கி விட்டதாகக் குறிப்பிடுகிறார். இருப்பினும்,
தம் காலப் போக்கிற்கு ஏற்ப, வடசொற்களை ஆங்காங்குப்
பயன்படுத்தி உள்ளார். மணிப் பிரவாள நடையென இது
அழைக்கப்படும். சான்றாக, ஆத்தும ரட்சணை, ஜீவகோடிகள்,
வியாக்கியானி, பரம ராஜ்யம், ஜீவகங்கை முதலிய தொடர்களைக்
குறிப்பிடலாம்.

மொழி நடையின் போக்கேயன்றி, காப்பிய நடையில் சந்தச்
சிறப்பு மிகுந்து, கற்பார்க்குச் சுவை கூட்டுகிறது. மடைதிறந்த
வெள்ளம் போன்று சொற்கள் பாயும் ஓசைநயம் மிக்க பல
பாடல்களைக் கவிஞர் படைத்துள்ளார். ஒரு சான்று இது:

புதுவிரை மதுமலர் பொதுளிய முதுசினை
பொழிலுழை தழுவுவ புயல்;
வதுவையி னதிபதி பொருவரு கிருபையின்
மலைதலை பொழிவன மழை;
அதிரிடி முழவெழ வரிமுரல் சுருதியின்
அகவுவ மகளிரின் மயில்;
மதுரிய நறைகுட மடிபடி யுகுபயன்
அளவிய விளைவன வயல்

(ஆரணிய பருவம், ஆனந்த சைலப் படலம், 5 )

1.4.3

(புது விரை = புதியமணம். பொதுளிய = நிரம்பிய. முரலுதல் =
மென்மையாக இசைத்தல்.
பொழில் = சோலை. புயல் = மேகம்.
வதுவை = திருமணம். இங்கு மணமகளாம் திருச்சபையைக்
குறித்தது.
வரிமுரல் = வரிவரியான வண்டுக் கூட்டங்களின் ஒலி.
மதுரிய நறை = இனிக்கும் தேன்.

1.4.3 பிற இலக்கியங்களின் செல்வாக்கு

விவிலியத் திருமறையையும், ஜான் பனியனது திருப்பயணியின்
முன்னேற்றம்
என்னும் நூலையும் முதல் நூல்களாகக் கொண்டு,
காப்பியம் படைத்த கிருஷ்ண பிள்ளை, பிற தமிழ்
இலக்கியங்களின் செல்வாக்கும் தமது காப்பியத்தில் தோன்றிடச்
செய்கிறார்.

கம்பராமாயணச் செல்வாக்கு

கிறித்துவக் கம்பர் என்று போற்றப்படும் கிருஷ்ண பிள்ளை,
தமது காப்பியத்தை இயன்ற மட்டில் கம்பராமாயணச் செய்யுள்
நடையையும் அதன் போக்கையும் ஒட்டியே எழுதியதாகக்
குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பல சான்றுகள் தரலாம். ஒன்று இது:
வெய்யோன்ஒளி தன்மேனியின் விரிசோதியின் மறைய
பொய்யோஎனும் இடையாளொடும் இளையானொடும்
போனான்
மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ
ஐயோஇவன் வடிவென்பதோர் அழியாஅழ குடையான்

(கம்பராமாயணம் - 2016)

இது கம்பரின் பாடல்.

(வெய்யோன் = சூரியன். மையோ = கருமை நிறமோ.
மரகதமோ
= மதிப்புமிக்க ஒளிவீசும் கல். முகில் = மேகம்)

வானோமகி தலமோசுடர் மதியோவயங் கொளிர்வான்
மீனோவிரி கடலோமழை முகிலோஒரு விதியில்
ஆனாநெறி யமைத்தாக்கிய அகிலாண்டஅச் சுதன்ஓர்
ஊனாடிய திருமேனிகொண் டுதித்தார்உல குவப்ப

(ஆதிபருவம், சுவிசேஷ மார்க்கப் படலம், 19)

(மகிதலம் = மண்ணுலகம். முகில் = மேகம். ஒரு விதியில் =
ஒரு கட்டளையில். ஆனாநெறி = குற்றமில்லாத வகை.
அகிலாண்ட
= அனைத்துலக. அச்சுதன் = தலைவன்.
ஊன்ஆடிய
= சதையோடு கூடிய. திருமேனி = மனித உடல்)

இது கிருஷ்ண பிள்ளையின் பாடல்.

காப்பியத்தின் முதற் பாடலே, "உலகம் யாவையும் தாமுள
வாக்கலும்" எனத் தொடங்கும் கம்பரின் பாடலை நினைவூட்டும்
வண்ணமாக. “உலகம் யாவும் புரந்தருள் உன்னதர்” எனத்
தொடங்குகிறது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 02:10:11(இந்திய நேரம்)