தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05113l3-3.3 இலக்கணச் சான்றுகள்

3.3 இலக்கணச் சான்றுகள்

    தமிழில் கிடைத்துள்ள     முதல்     இலக்கண நூல்
தொல்காப்பியம்
. வழக்கு மொழிக்கும் செய்யுள் மொழிக்கும்
உரிய இலக்கணத்தைச் சொல்லி, செய்யுள் அல்லது பாடல்
இலக்கணத்தையும் கூறிடும் முழுமையான இலக்கண நூலாக அது
உள்ளது.

மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்

(தொல். எழுத்து. நூன் மரபு-15)

உட்பெறு புள்ளி உரு ஆகும்மே

     (தொல். எழுத்து. நூன் மரபு-14)

............................. ஆய்தம் என்ற
முப்பாற்புள்ளியும்................

     (தொல். எழுத்து. நூன்மரபு-2)

என்று அந்நூல், வரி வடிவத்துக்கு இலக்கணம் கூறுகிறது.

அ, இ, உ, எ, ஒ.............ஓர் அளபு இசைக்கும்
குற்றெழுத்து

(மேலது. 3)

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ
ஓ, ஒள.....
ஈர் அளபு இசைக்கும் நெட்டெழுத்து (மேலது. 4)

என்று குறிலுக்கும்,     நெடிலுக்கும்     உச்சரிப்பு அளவு
வரையறுப்பதில், ‘பேச்சு மொழி - ஒலி அளவு’ கூறுகிறது. தமிழ்
மொழியின் கட்டமைப்பை விவரிக்கும் முழு இலக்கண நூல்
தொல்காப்பியம்.
தொல்காப்பியத்துக்கு முன்னரே இருந்த
தமிழ்மொழி, அதன் அமைப்பு, தமிழ் இலக்கியங்கள், புலமை
வல்லார் பற்றிய அனைத்துத் தகவல்களும் அதில் இடம்
பெற்றுள்ளன. இதற்குப் பின் இலக்கண நூல்கள் பல
தோன்றியுள்ளன. அவை முழுமையானவையாகத் திகழவில்லை
என்றாலும் வெவ்வேறு காலத்திய தமிழைப் பற்றி அறியவும்,
ஆராயவும் உதவுகின்றன.     அவ்வகையில் நேமிநாதம்,
வீரசோழியம், நன்னூல்
போன்ற இலக்கண நூல்கள் சோழர்கால
மொழியமைப்பைப் பற்றி ஆராய உதவுகின்றன. முத்துவீரியம்
சிற்றிலக்கியக் கால மொழி அமைப்பைப் புலப்படுத்துகிறது.
1680 இல் கோஸ்டா பால்த்சரா என்பவர் இலத்தீன் மொழியில்
எழுதிய தமிழ் இலக்கண நூல், கால்டுவெல் எழுதிய,
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்
என்ற நூல், சீகன்
பால்கு எழுதிய தமிழ் இலக்கண நூல், வீரமாமுனிவர் எழுதிய
தமி்ழ் இலக்கண நூல்
முதலியன அந்நியர் வருகைக்குப் பின்
தமிழ்மொழி அமைப்பைப்     பற்றிப் புலப்படுத்துகின்றன.
தமிழ்மொழியில் நேரிட்ட மாற்றம், வளர்ச்சி போன்றவற்றை
இவற்றின் துணை கொண்டு ஆராய்ந்து அறிய முடியும்.

    சான்றாகத் தொல்காப்பியத்தில் நிகழ்காலத்தைக் குறிக்க
இடைநிலை ஏதும் சொல்லப்படாமல் இருப்பதையும், நன்னூல்
என்னும் இடைக்கால இலக்கண நூலில்,

கிறு
- வருகிறான்
கின்று
- வருகின்றான்
ஆநின்று
- வாராநின்றான்

என்று     மூன்று     நிகழ்கால     இடை நிலைகள்
சொல்லப்பட்டிருப்பதையும் காட்டலாம். இது போல் அந்தந்தக்
காலத்திய மொழியமைப்பை இலக்கண நூல்கள் விளக்க
முற்படுவதால் அவை     மொழி வரலாற்றுக்கு உதவும்
சான்றுகளாகின்றன.

    பிறமொழியாளர் தமிழுக்கு இலக்கணம் எழுதினர். அவர்களது
நூல்கள் பேச்சுத் தமிழை அடியொற்றியமைந்தவை. கி.பி.1672 இல்
டச்சுக்காரர் பால்தே     என்பவர்     தமிழ்மொழியின்
உச்சரிப்புகள், வேற்றுமை, வேறுபாடுகள் முதலியவற்றை
எழுதுகிறார். கோஸ்டா பாத்சரா என்பவர் இலத்தீன் மொழியில்
எழுதிய தமிழ் இலக்கணம், கி.பி. 1686 இல் புருனோ எழுதிய
‘இலக்கண நூல்’, வீரமாமுனிவர், கால்டுவெல், சீகன்பால்கு
ஆகியோர் எழுதிய நூல்கள் முதலியன தமிழ் வரலாற்றைக்
குறிப்பாகப் பேச்சுத் தமிழ் வரலாற்றைப் பற்றி ஆராயத் துணை
புரிகின்றன. சான்றாக,     மரபுத் தமிழ் இலக்கணங்களில்
மூவிடப் பெயர்கள்     தனியாகச்     சொல்லப்படவில்லை.
பெயர்ச் சொற்களிலேயே சொல்லப்படுகின்றன. ஆனால் மேலை
நாட்டவரது     இலக்கண     நூல்களில்,     மூவிடப்பெயர்
பெயர்ச்சொல்லின் தனி உட்பிரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. அது
போலவே, ‘எந்த வினைச்சொல் எந்த எந்தக் காலம் காட்டும்
இடைநிலைகளைப் பெறும்’ என்பதையும் மேலை நாட்டாரின்
நூல்கள் விரிவாகக் கூறுகின்றன. டாக்டர் கிரால் என்பவர்
தமிழ் வினையடிச் சொற்களை அவை ஏற்கும் கால
இடைநிலைகளின் அடிப்படையில் மெல்வினை, இடைவினை,
வல்வினை
என மூன்று முக்கியப் பிரிவுகளாகப் பகுக்கின்றார்.

  • வகர எதிர்கால இடைநிலை பெறுவன மெல்வினை.
  • பகர எதிர்கால இடைநிலை பெறுவன இடைவினை
  • ப்ப் என்ற ஈரொற்றைப் பெறுவன வல்வினை.

    என்கிறார். இதுபோல் பேச்சுத் தமிழைத் துல்லியமாகப் பரிசீலித்து
    எழுதப்பட்டுள்ள     இடங்கள்     பெரிதும்     உதவுவன.
    இவ்விலக்கணங்கள்     முழுமையானவை     அல்ல.
    செம்மையானவையும் அல்ல; அயல்நாட்டார் புரிந்துகொண்ட
    வரையில் எழுதியவை என்ற அளவில் சான்றுகளாகக்
    கொள்ளத் தக்கவை.

        தமிழ் இலக்கண நூல் தொல்காப்பியத்துக்குக் கிடைத்த
    பழைய உரை இளம்பூரணர் எழுதிய உரை ஆகும். அவர் மூன்று
    அதிகாரத்துக்கும் உரை எழுதி உள்ளார். சேனாவரையர்,
    தெய்வச்சிலையார், கல்லாடனார், பெயர் தெரியா ஒருவர்

    ஆகியோர் சொல் அதிகாரத்துக்கு மட்டும் உரை எழுதியுள்ளனர்.
    நச்சினார்க்கினியர்     எழுத்ததிகாரம்,     சொல்லதிகாரம்,
    பொருளதிகாரத்தில்     அகத்திணையியல், புறத்திணையியல்,
    களவியல், கற்பியல், பொருளியல், செய்யுளியல் ஆகியவற்றுக்கு
    உரை எழுதி உள்ளார். செய்யுளியல், மெய்ப்பாட்டியல், உவம
    இயல், மரபியல் (பொருளதிகாரம்) ஆகிய நான்கு இயல்களுக்கும்
    பேராசிரியர் உரை எழுதினார். இவ்வுரைகளும் மொழி
    வரலாறு அறிய உதவும் சான்றுகளாக உள்ளன. ஏனெனில்,
    அவர்கள் நூற்பாக்களின் கருத்துகளை மட்டும் விளக்கவில்லை;
    ‘உரையில் கோடல்’ என்று தம் உரையில் தம் கால
    மொழியமைப்பு மாற்றம் பற்றிய செய்திகளையும் குறிப்பிட்டே
    எழுதும் போக்கை அவர்கள் கையாண்டதால், அவர்களது கால
    மொழியமைப்பையும் புலப்படுத்தும் சான்றுகளாக உரைகள்
    திகழ்கின்றன. சான்றாக, தொல்காப்பிய வினையியல் முதல் நூற்பா
    (சொல். 200) இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா
    அம்முக்காலமும்
    எனக் காலங்கள் இறந்தகாலம், நிகழ்காலம்,
    எதிர்காலம் ஆகிய மூன்று என்கிறதே அல்லாமல் காலம் காட்டும்
    இடைநிலைகளைச் சொல்லவில்லை. ஆனால் முக்காலங்களுக்கும்
    எடுத்துக்காட்டாக,

    உண்டான்,
    உண்ணாநின்றான்
    உண்பான்

    என்பவற்றைச் சேனாவரையர்     தருகின்றார் பிற
    உரையாசிரியர்களும் இவ்வாறே தருகின்றனர். ஆனால்
    தமிழ்மொழி வரலாற்றில் சங்க காலத் தொகை நூல்களில்
    இறந்தகாலம் வினைச்சொற்களில் தெளிவாக அமைந்துள்ளது.
    எதிர்காலம் தெளிவாக அமைந்துள்ளது. ஆனால் நிகழ்காலம்
    அமைந்திருக்கவில்லை. எதிர்காலமும், நிகழ்காலமும் இணைந்து
    அமைந்திருக்கலாம். நிகழ்காலம் பற்றிய தெளிவு உரையாசிரியர்
    கால வளர்ச்சியாக இருக்கலாம். அது போலவே தொல்காப்பியர்
    வியங்கோள் வினைமுற்றுக்கு ஈறு (ஈறு-இறுதியில் வரும் எழுத்து)
    கூறவில்லை. உரையாசிரியர்கேளா ஈறுகளைக் குறிப்பிடுகின்றனர்.

    இளம்பூரணர்,
    தெய்வச்சிலையார்
    வியங்கோள் வினைமுற்று
    ஈறு - க
    சேனாவரையர்
    க, யா, அல்
    நச்சினார்க்கினியர், கல்லாடர்
    க, யா, அல், ஆல், ஆர்,
    மார், உம், று

    இவ்வாறு உரையாசிரியரது உரைகள் அவர்களது கால
    மொழியமைப்பை விளக்குகின்றன. அதனால் அவற்றை மொழி
    வரலாற்றுச் சான்றுகளாக ஏற்றுக் கொள்கிறோம்.

        ஒரு மொழியில் சொற்களின் பொருளை அகர வரிசையில்
    விளக்குவது அகராதி ஆகும். தமிழில் உரிச்சொல் பனுவல்,
    நிகண்டு, அகரமுதலி
    ஆகிய சொற்கள் ‘அகராதி’யைக்
    குறிக்கின்றன. திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு போன்ற
    தமிழ் நிகண்டுகள் தமிழ்ச் சொல்லுக்குப் பொருள் கூறுவன.
    அவை செய்யுள் வடிவில் அமைந்துள்ளன. ஒன்பதாவது
    நூற்றாண்டில் தோன்றிய முதல் நிகண்டு திவாகர நிகண்டு. இது
    ஒன்பதாயிரத்து ஐந்நூறு     சொற்களைக் கொண்டுள்ளது.
    சொல்லுக்குப் பொருள் கூறி அகராதி இயலுக்குத் தொல்காப்பிய
    உரியியல் வித்திட்டது. ஒரு மொழிக்குப் பிறமொழிப் பொருள்
    கூறும் அடிப்படையில் அகராதிகள் தோன்றின. வீரமாமுனிவரது
    ‘சதுரகராதி’
    கி.பி. 1782 இல் பதிப்பிக்கப்பட்டது. இதில்
    பன்னிரண்டாயிரம் சொற்கள் உள்ளன. அவர் ஏழு அகராதிகளை
    வெளியிட்டார். தமிழ்-போர்த்துகீசியம், தமிழ்-இலத்தீன், தமிழ்-
    பிரெஞ்சு, பிரெஞ்சு-தமிழ், தமிழ்-ஆங்கிலம், ஆங்கிலம்-தமிழ்
    என்ற அடிப்படையில் அவை அமைந்தன சென்னைப்
    பல்கலைக்கழகம் வெளியிட்ட தமிழ்ப் பேரகராதியில் இலட்சத்து
    நாலாயிரத்து நானூற்று ஐந்து சொற்கள் உள்ளன. எமனோவும்
    பர்ரோ
    வும் இணைந்து, திராவிடச் சொற்பிறப்பியல்
    அகராதி
    யை வெளியிட்டனர். தமிழ் வேர்ச்சொல் ஆய்விலும்,

    தமிழ்     அகரமுதலி     தயாரிப்பிலும்
    ஞா. தேவநேயப் பாவாணர் சிறப்பிடம்
    பெற்றவர். கிரியாவின் தற்காலத் தமிழ்
    அகராதி
    வரை முயற்சிகள் தொடர்கின்றன.
    இவற்றிலிருந்து சொற்களின் பொருள்
    மாற்றத்தை அறியலாம். வேற்று மொழிகளில்
    எழுத்துப் பெயர்ப்புச் செய்யப்பட்டிருப்பதால்
    தமிழ்ச் சொற்களின் ஒலியமைப்பை ஓரளவு
    அறியலாம். சொற்பொருளியல் ஆய்வுக்கு


    ஞா. தேவநேயப்
    பாவாணர்

    அகராதிகள் பெருமளவு உதவுகின்றன. சான்றாக, சொற்கள்
    பொருளில் அடையும் மாற்றங்களைப் பழந்தமிழ் என்ற நூலில்
    பேராசிரியர் இலக்குவனார் கீழ்க்கண்ட சான்றுகளின் மூலம்
    காட்டுவதைக் காணலாம்.
    சொல்
    பழம்பொருள்
    புதுப்பொருள்
    அகம்
    உள், மனம்
    கர்வம்
    இறத்தல்
    கடத்தல்
    சாதல்
    கண்ணி
    மாலை
    வலை
    கிழவன்
    உரியவன்
    முதியவன்
    கோடை
    மேல்காற்று
    வெயில் காற்று
    மணிவிழா
    அழகிய விழா
    அறுபதாண்டுவிழா

    இவ்வாறு மொழியில்     சொற்களுக்குத்     தோன்றும்
    புதுப் பொருளை அறியலாம்.     மொழியில்     தோன்றிய
    புதுச் சொற்களைப் பரிசீலிக்கலாம். புதுச் சொல் அமைப்புகளை
    ஆராயலாம். இவற்றுக்கெல்லாம் வரலாற்றுச் சான்றுகளாகத்
    திகழ்வதில் நிகண்டுகளுக்கும் அகராதிகளுக்கும் தக்க இடம்
    உண்டு.

    Tags   :

    புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 04:47:00(இந்திய நேரம்)