தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

குடைவரைக் கோயில் சிற்பங்கள்

2.3 குடைவரைக் கோயில் சிற்பங்கள்

வரை எனில் மலை எனப் பொருள்படும். குடைவரை என்பது
மலையைக் குடைந்து அமைக்கும் கோயில் ஆகும். பல்லவர்களால்
வெட்டுவிக்கப் பட்ட குடைவரைகள் முப்பத்து நான்காகும்.
அவைகளில் மகேந்திர வர்மனால் வெட்டுவிக்கப் பட்டதாகக்
கருதப்படுபவை சுமார் பன்னிரண்டு குடைவரைகள் ஆகும்.

2.3.1 மகேந்திர வர்மன் காலம் (கி.பி. 600 - 630)

மகேந்திர வர்மன் வாதாபிச் சாளுக்கியரோடு கொண்டிருந்த
தொடர்பினால் அங்கிருந்த குடைவரை     முறையைப்
பின்பற்றித் தமிழகத்தில் முதன்முதலாகப் பாறையைக் குடைந்து
குடைவரைக் கோயிலை     ஏற்படுத்தினான்.     இதனை
அவனது மண்டகப்பட்டுக் குடைவரையில் இடம் பெறும்
வடமொழிக் கல்வெட்டால் அறியலாம். அதி்ல் “இந்தக்
கோயிலை நான்முகன், திருமால், சிவன் ஆகிய முப்பெரும்
தெய்வங்களுக்கும் மண், உலோகம், சுதை, மரம் முதலான
பொருள்கள் இன்றி     விசித்திர சித்தனாகிய நான்
தோற்றுவித்தேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விசித்திர
சித்தன் என்பது மகேந்திரனின் சிறப்புப் பெயர்களுள் ஒன்று.

மகேந்திர வர்மனது குடைவரைகளின் இரு பக்கங்களிலும்
துவார பாலகர் என்று அழைக்கப்படும் வாயிற் காவலர்களின்
உருவங்கள் புடைப்பு உருவங்களாகச்     (Bas Relief)
செதுக்கப்பட்டிருக்கும். தனியே செய்து ஒட்டப்படாமல்
சுவரிலேயே செதுக்கப்பட்டுப் புடைத்துத் தெரியும் சிற்பம் ; ஒரு
புறம் மட்டுமே தெரியுமாறு இருப்பது புடைப்பு உருவம்
எனப்படும். இவையே தமிழகத்தில் கோயிலுக்குள் கிடைக்கும்
முதல் கற்சிற்பங்களாகும். இவற்றுக்கு உதாரணமாக மகேந்திர
வர்மனின் மாமண்டூர்க் குடைவரைக் கோயிலில் இடம்பெறும்
வாயிற் காவலர் சிற்பங்களைக் கூறலாம்.


புடைப்பு உருவங்கள் (Bas Relief)

இவனது காலக் குடைவரைகளில் வாயிற் காவலர் சிற்பங்கள்
கல்லில்     செதுக்கப்பட்டனவே அன்றிக் கருவறைகளில்
இறையுருவங்கள் கல்லினால் அமைக்கப்படவில்லை. மரத்தாலோ,
சுதையாலோ அல்லது உலோகத்தாலோ செய்யப்பட்ட
இறையுருவங்கள் வைக்கப்பட்டு இருந்திருக்கலாம். அவை
வைக்கப்பட்ட பள்ளம் மட்டும் கருவறைகளில் உள்ளன. கருவறை
என்பது இறைவனது உருவம் வைத்து வழிபடப்படும் முக்கியமான
இடமாகும்.

2.3.2 முதலாம் நரசிம்ம வர்மன் காலம் (கி.பி. 630 - 668)

மாமல்லன் காலத்திலும் குடைவரைகளில் புடைப்புச் சிற்பங்கள்
பல அமைக்கப்பட்டன. தனித்த சிற்பங்கள் அமைக்கப் படவில்லை.
பொதுவாக, மாமல்லன் வெட்டுவித்த குடைவரைகளின் முன்
மண்டபச் சுவர்களில் அழகிய சிற்பங்களும், சிற்பத் தொகுதிகளும்
புடைப்பு உருவங்களாகச் செதுக்கப்பட்டன. இவனது காலத்தில்
செதுக்கப்பட்ட அச்சிற்பங்கள் உலகப் புகழ் பெற்றனவாக இன்றும்
விளங்குகின்றன. அவற்றில் குறிப்பிடத் தக்க சிற்பங்கள்,

(1) மகிடாசுர மர்த்தினி
(2) அனந்த சாயி
(3) கோவர்த்தன தாரி
(4) பூவராக மூர்த்தி

ஆகியனவாகும். இவை தவிரத் திறந்த வெளிப் பாறைச் சிற்பமான
பகீரதன் தவம் அல்லது அர்ச்சுனன் தவம் எனப்படும் சிற்பம்,
இந்தியாவில் உள்ள மிகப் பெரிய சிற்பங்களில் ஒன்றாகும். இவை
மகாபலிபுரத்தில் உள்ளன. இச்சிற்பத் தொகுதிகள் அனைத்தும்
புராணக் கதைகளைக் கருவாகக் கொண்டு வடிக்கப்பட்டவை. இனி
இவற்றுள் ஒவ்வொன்றின் சிறப்புகளையும் காணலாம்.

  • மகிடாசுர மர்த்தினி


  • இக்குடைவரையின் முன் மண்டபத்து இருபக்கச் சுவர்களில்
    ஒன்றில் அனந்தசாயி திருமாலின் புடைப்புச் சிற்பம்
    செதுக்கப்பட்டுள்ளது. மற்றொன்றில் மகிடாசுர மர்த்தினி புடைப்புச்
    சிற்பம் இடம் பெறுகிறது. மகிடாசுர மர்த்தினி - மகிடாசுரன் என்ற
    எருமைத் தலை அசுரனைக் கொன்ற துர்க்கை. அசுரனால்
    துன்புற்ற தேவர்களையும் மக்களையும் காப்பாற்ற, அவனோடு
    போர்புரிந்து கொன்றாள் துர்க்கை. இக்குடைவரை சிவனுக்குரிய
    குடைவரைக் கோயிலாக இருப்பினும், மகிடாசுர மர்த்தினி
    சிற்பத்தின் சிறப்பால் அப்பெயர் பெற்றுள்ளது குறிப்பிடத்
    தகுந்ததாகும்.


    மகிடாசுர மர்த்தினி

    தேவி, சிம்மத்தின் மீது அமர்ந்து பல கரங்களில் பல விதமான
    படைக் கலங்களை ஏந்திப் பாய்ந்து வருவது போலக் காட்டப்
    பட்டுள்ளாள். தேவியின் பணிப்பெண்களும், பூத கணங்களும்
    கத்தியும் கேடயமும் ஏந்தி வருகின்றனர். எதிரே எருமைத்
    தலையுடைய மகிடாசுரனும் அவனது அசுரப் படையும் தோற்றுப்
    பின்வாங்குகின்றனர். அசுரர்கள் சிலர் வெட்டுப் பட்டுக் கீழே
    விழுவதும், சிலர் புற முதுகிட்டு ஓடுவதும் இதைக் கண்டு
    தேவியின் பூத கணங்கள் எக்காளத்துடன் முன்னேறுவதுமாக
    இச்சிற்பம் அமைந்துள்ளது. தேவியின் இடக் கையில் உள்ள வில்,
    அம்பு பாய்ச்சும் நிலையில் அமைந்துள்ளது. தேவியின் வாகனமான
    சிம்மம் கூடச் சினத்துடன் பாய்வதாக வடிக்கப்பட்டுள்ளது. இந்தச்
    சிற்பத்தின் அழகினை நம் நாட்டுக் கலை வரலாற்று
    அறிஞர்களும், வெளிநாட்டு அறிஞர்களும் வியந்து பல விதமாகப்
    பாராட்டியுள்ளனர்.

  • அனந்த சாயி


  • மகிடாசுர மர்த்தினி சிற்பத்திற்கு எதிரில் அமைந்துள்ளது
    அரவணையில் துயிலும் திருமாலின் சிற்பம். அனந்த சாயி:
    பாம்பணை மீது துயில் கொள்ளும் திருமால் மகிடாசுர மர்த்தினி
    சிற்பம் போர்க் காட்சியை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
    அனந்த சாயி சிற்பமோ அமைதியை அடிப்படையாகக் கொண்டு
    திகழ்கிறது. திருமால் அறிதுயில் நாராயணனாகக் கிடந்த
    கோலத்தில் காணப்படுகிறார். அவர் அருகே பூமகள் கீ்ழே
    அமர்ந்து வணங்குகிறாள். சக்கரத்தாழ்வாரும் மார்க்கண்டேய
    மாமுனியும் அருகில் அமர்ந்துள்ளனர். கந்தர்வ உருவங்கள்
    மேலே பறந்து செல்கின்றன. மாலின் திருவடிகளுக்கருகே மது,
    கைடபர் என்னும் அசுரர்கள் உள்ளனர். இந்த அசுரர்களிடமிருந்து
    நான்முகனைக் காப்பாற்ற அவர்களைக் கொன்றதைக் காட்டுவது இச்சிற்பம்.


    அனந்த சாயி


  • கோவர்த்தன தாரி


  • கோவர்த்தன கிரி மண்டபத்தின் பின் சுவர் முழுவதுமாக
    கோவர்த்தன தாரி கண்ணனின் சிற்பத் தொகுதி அமைந்துள்ளது.
    இந்திரனது ஆணையால் வருணன் கல் மழை பொழிவிக்கிறான்.

    அத்துன்பத்தில் இருந்து ஆயர்களைக் காக்க ஆயர்தம் குலத்
    தலைவனான கண்ணன் கோவர்த்தன மலையைத் தன் கையால்
    தூக்கிக் குடையாய்த் தாங்கும் காட்சி அழகாகச் சிற்பமாகியுள்ளது.
    அதனருகே சிறு குழந்தையை ஏந்தியபடிச் செல்லும் ஆயன்,
    தாடியுடன் கையில் கோல் கொண்டு செல்லும் முதியோன்,
    இடைச்சி, ஓலைப் பாயைச் சுருட்டித் தலையில் வைத்துக் கொண்டு
    உரியில் வரிசையாய் அடுக்கிய தயிர்க் குடங்களுடன் செல்லும்
    பெண், கன்றை நாவால் தடவும் பசு, பாற்குடம் ஏந்திப் பால்
    கறக்கும் ஆயன், துள்ளி விளையாடும் கன்று, ஆநிரைகள் என
    ஓர் ஆயர் பாடியை அப்படியே கண் முன் நிறுத்தும் காட்சியாக
    இச்சிற்பத் தொகுதி விளங்குகிறது.

  • பூவராக மூர்த்தி


  • ஊழிக் காலத்தில் பொங்கும் கடல் அலைகளிலிருந்தும்,
    அசுரனிடமிருந்தும் நிலமகளைக் காப்பாற்ற, அவளைத் தூக்கி
    எடுக்கும் வராக அவதாரக் (பன்றி வடிவம்) காட்சி வராகர்
    குடைவரையில் செதுக்கப்பட்டுள்ளது.

    வராகர், திருமகள், கொற்றவை, திரிவிக்ரமன் ஆகிய நான்கு
    சிற்பங்கள் இங்குக் காணப்படுகின்றன.


    பூவராக மூர்த்தி

    பூவராக மூர்த்தி பின்னிரு கைகளில் சங்கும் சக்கரமும்
    கொண்டுள்ளார். முன்னிரு கரங்களில் பூமகளைத் தூக்கித் தன்
    வலப்புறத்தில்     தாங்கியுள்ளார். அவரது வலது கால
    ஆதிசேடனாகிய பாம்பின் மீது இடம் பெறுகிறது.

  • அரச அரசி உருவங்கள்


  • பல்லவர் காலத்திலேயே இறையுருவங்களைப் போல அரச,
    அரசி உருவங்களை உயரமாகச் செதுக்கும் வழக்கம் இருந்துள்ளது.
    இதனை வராகர் குடைவரையில் இடம் பெற்றுள்ள பல்லவ
    மன்னர்கள் இருவருடைய உருவங்களை வைத்து அறியலாம்.
    சிம்ம விஷ்ணுவும், மகேந்திர வர்மனும் தத்தம் தேவியருடன்
    செதுக்கப்பட்டுள்ளனர்.

  • பாறைச் சிற்பம்


  • கோவர்த்தன கிரி மண்டபத்தின் அருகில் 96 அடி அகலமும்
    43 அடி உயரமும் உள்ள மிகப் பெரிய பாறை ஒன்று உள்ளது.
    அப்பாறையின் இடையில் மேலிருந்து கீழ்நோக்கிய பள்ளம் ஒன்று
    காணப்படுகின்றது. இந்த இயற்கையான பாறை அமைப்பைக் கண்ட
    சிற்பிகள் தம் கற்பனையைக் கலந்து இதை மிகச் சிறப்பான சிற்பத்
    தொகுதியாகக் காட்சிப் படுத்தியுள்ளனர்.

    இப்பாறையின் ஒரு பக்கத்தில் கங்கையைத் தேவ
    லோகத்திலிருந்து பூலோகத்திற்குக் கொண்டு வருவதற்காகப்
    பகீரதன் ஒற்றைக் காலில் நின்று சிவனை நோக்கித் தவமிருக்கும்
    காட்சி சிற்பமாகியுள்ளது. இவரது தவத்தைப் பாராட்டி வரம்
    அளிக்கச் சிவபெருமான் பறந்து வருகிறார். பாறைகளுக்கு இடையே
    இருக்கும் பள்ளத்தைத் தேவ கங்கையாக உருவகப்படுத்தி அது
    தேவலோகத்திலிருந்து பூமியை அடைந்து பாதாள லோகத்திற்கும்
    செல்வது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அப்பள்ளத்தில் நாக
    உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. தேவலோகத்தைச் சார்ந்த
    கணங்கள், கின்னரர், கிம்புருடர், கந்தர்வர் போன்ற உருவங்கள்
    இடம் பெற்றுள்ளன. புதரிலிருந்து எட்டிப் பார்க்கும் புலி, பாய்ந்து
    செல்லும் மான், ஆமை, படுத்து மூக்கைத் தடவிக் கொள்ளும்
    மான், குட்டிக்குப் பால் கொடுக்கும் புலி, பாய்ந்து வரும் சிங்கம்,
    வேடுவர்கள் என ஒரு காடே காட்சி ஆக்கப்பட்டுள்ளது.
    இப்பாறையில் மிகப் பெரிய இரு யானை உருவங்கள்
    செதுக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் இப்பாறைச் சிற்பம்
    அனைவரையும் கவர்வதாக அமைந்துள்ளது. இதில் இடம்
    பெற்றுள்ள பகீரதன் தவக் காட்சியை அர்ச்சுனன் தபசு
    என்றும் கூறுவதுண்டு.

    Tags   :

    புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 05:30:00(இந்திய நேரம்)