தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நாயக்கர் சிற்பங்களின் பொதுத் தன்மைகள்

5.2 நாயக்கர் சிற்பங்களின் பொதுத் தன்மைகள்

விசயநகர மன்னர் வழி வந்தவர்களே நாயக்க மன்னர்கள். விசய நகர மன்னர்கள் உருவாக்கி வளர்த்த சிற்ப-ஓவியக் கலை
அமைப்பையே நாயக்கர்கள் பின்பற்றினர். விசயநகரச் சிற்பக்
கலை அமைப்பிற்கும் நாயக்கரது சிற்பக்கலை அமைப்பிற்கும்
மிகுதியான வேறுபாடுகள் இல்லை. நாயக்கரது சிற்பக் கலை
விசயநகரச் சிற்பக் கலையினின்றும் சற்று வளர்ச்சியடைந்த
ஒன்று ஆகும்.

சான்றாக, விசயநகரச் சிற்பங்கள் அளவான உயரத்துடனும்
ஆபரணங்களுடனும் காணப்படும். ஆனால், நாயக்கர் சிற்பங்கள்
சுமார் எட்டு அடி உயரத்துடனும் கம்பீரமான தோற்றத்துடனும்
காணப்படும். உடை, நகை இவற்றில் அலங்காரம் அதிகமாகக்
காணப்படும். பக்கவாட்டுக் கொண்டை அமைப்பு விசயநகர-
நாயக்கரது சிற்பக் கலை மரபுக்கே உரிய பாணியாகும். ஆண்
சிற்பங்களிலும் பெண் சிற்பங்களிலும் இப்பாணி இடம்
பெற்றுள்ளது. தோள்கள் உருண்டு திரண்டும், கண்கள் அகன்றும்,
மூக்கு கூர்மையாகவும், உதடுகள் பருத்தும் இளநகையுடனும்
காணப்படும். கை மற்றும் கால் விரல்களில் நகங்கள் கூட
இயற்கையான அமைப்பில்     காட்டப்பட்டிருக்கும். பெண்
உருவங்களில் மார்பகங்கள் பெரிய அளவில் அமையும். சிற்ப
உருவங்களின் முழங்கால் முட்டிகள் வட்டமாகவும், கணுக்கால்
சதைப் பற்றுடனும் காணப்படும். கலை வரலாற்றில் சோழர் காலச்
சிற்பங்கள் புனையா ஓவியம் எனில் நாயக்கர் காலச் சிற்பங்கள்
புனைந்து நன்கு வண்ணம் தீட்டப்பட்ட ஓவியங்கள் என்று
உவமிக்கலாம். எனினும் கலை வரலாற்று அறிஞர்கள் நாயக்கர்
காலச் சிற்பங்களைப் பாராட்டுவது அருகியே காணப்படுகிறது.
காரணம், இவற்றில் உள்ள மிகையான அலங்காரங்களே ஆகும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 05:33:41(இந்திய நேரம்)