Primary tabs
பல்லவர், பாண்டியர், சோழர் கால ஓவியங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட
அமைப்பைக் கொண்டவை விசயநகர நாயக்கர் ஓவியங்கள் ஆகும். முந்தைய ஓவியங்களை
விட இவர்களுடைய ஓவியங்கள் அதிக அளவிலும் நமக்குக் கிடைத்துள்ளன. கோயில்களையும்,
மண்டபங்களையும், சிற்பங்களையும் அதிக அளவில் படைத்துச் சென்ற நாயக்கர்கள்
ஓவியங்களையும் அவ்வாறே படைத்துள்ளமை பாராட்டுக்கு உரியதாகும்.
நாயக்கர் ஓவியங்கள் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், அழகர்
கோயில், கூடலழகர் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்,மன்னார்குடி
இராசகோபால சுவாமி கோயில், ஸ்ரீவைகுண்டம் வைகுண்ட நாதர் கோயில்,
திருவரங்கம் அரங்கநாதர் கோயில், காஞ்சி
வரதராசப் பெருமாள் கோயில்,ஏகாம்பர நாதர் கோயில், திருவெள்ளறை
புண்டரிகாட்சர் கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில்
ஆகியவற்றிலும், கும்பகோணம்,
திருவீழி மிழலை, உத்திரமேரூர், திருவொற்றியூர், திருவலஞ்சுழி, சிதம்பரம்
மற்றும் நத்தம் கோவில்பட்டி எனப் பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களிலும்
கிடைக்கின்றன.
நாயக்கரது ஓவியக் கலைப் பாணியை “லெபாக்ஷி பாணி” என்று அழைப்பர். விசயநகர
அரசர்களின் குலதெய்வக் கோயிலான லெபாக்ஷி வீரபத்ராலயத்தில்
மகாபாரதம், இராமாயணம், புராணங்கள் தொடர்பான ஓவியங்களை அவர்கள் வரைவித்தனர்.
இங்கிருந்து அவர்களுடைய ஓவியங்கள் தமிழகத்தில் பரவியதால் ‘லெபாக்ஷி‘பாணி
ஓவியங்கள் என்று
அவை அழைக்கப்படுகின்றன.
‘லெபாக்ஷி‘பாணி ஓவியங்கள்
விசயநகர-நாயக்கர் ஓவியங்கள் பெரும்பாலும் இராமாயணம், மகாபாரதம், கிருஷ்ண
லீலை, போன்ற கதைகளை விளக்கும் ஓவியத் தொகுதிகளாக அமைகின்றன. சில கோயில்
கருவறைகளில் அந்தக் கோயில் கருவறைக்குரிய இறையுருவத்தையே கருவறையின்
பின் சுவரில் வரைவது வழக்கமாக இருக்கிறது. இவை தவிரத் திருமால் அவதாரங்கள்,
பஞ்சாயுத புருஷர்கள் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர்
கோயிலில் உள்ள ஓவியங்கள் மதுரைத் தல புராணமான திருவிளையாடற் புராணக்
கதைகளை விளக்கும் ஓவியங்களாக அமைகின்றன.
நாயக்கர் ஓவியங்களில் உருவங்கள் பக்கவாட்டில் பார்த்த நிலையில்(profile)
வரையப்பட்டு இருக்கும். இவற்றில் கண், மூக்கு, முழங்கை, கை விரல்கள்
ஆகியன கூர்மையாகத் தீட்டப்பட்டு இருக்கும்.
ஆபரணங்கள் அதிகம் காணப்படும். உடலமைப்பு சதைப் பற்று மிக்கதாய் இருக்கும்.
ஆடைகள்,
குறிப்பாகப் பெண்களின் சேலை முந்தானைகள் தனிச் சிறப்புடைய
பூ வேலைப்பாடுகளுடன் காணப்படும்.
பெண்கள் கொண்டை இட்டிருப்பர்; அக்கொண்டை பக்கவாட்டுக் கொண்டையாகவோ அல்லது
சற்றுத் தளர்ந்த நிலையிலான கொண்டையாகவோ காணப்படும். நீர் நிலைகளைக் காட்டும்
பொழுது அவற்றில் சங்குகள், மீன்கள் போன்றவற்றைக் காட்டுவர்; நதிகளை வெண்மை
நிறத்தில் வரைந்திருப்பர். இராமாயணம் போன்ற
ஓவியத் தொகுதியாக இருப்பின் தனித்தனிக்
கட்டங்களாகப் பிரித்து அதில் ஓவியங்களை வரைந்து அவற்றின்
மேல், கீழ்ப் பகுதிகளில் தெலுங்கிலோ, அல்லது
இலக்கியத் தமிழ்
அல்லாத வழக்குத் தமிழிலோ ஒவ்வொரு காட்சிக்கும் விளக்கம்
எழுதப்பட்டு இருக்கும்.
ஓவியங்கள் புராண, இதிகாசக் கதைகளை வெளிப்படுத்துவனவாக
இருப்பினும் அக்காலப் பழக்க வழக்கங்கள், நாகரிகம் ஆகியவற்றை வெளிப்படுத்துவனவாகவும்
அமைகின்றன. அக்காலத்தில் ஆண்களிடமும் பெண்களைப் போல் குடுமி வளர்ப்பது,
காதுகளில் தோடு அணிவது முதலான வழக்கம் இருந்ததை இந்த ஓவியங்கள் மூலம்
அறிய முடிகிறது. கால்களில் ஆண்கள் வீரக் கழல் அணிந்துள்ளனர். பெண்களது
ஆடை
கால்கள் வரையும் பக்கவாட்டில் விரிந்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஓவியத்தில் மறைந்தவை போக எஞ்சியுள்ள
சில ஓவியங்களில்
அவ்வோவியங்களை வரைந்தவர், வரைவித்தவர்
யார் என்பதை எழுதி அவர்களுடைய உருவங்களையும்
வரைந்துள்ளனர். ஓவியம் வரைய நான்கு பத்திகளுக்கு ஐந்து பொன் கூலி என்றும்,
வரைந்தவன் பெயர், பொன் சுகாரண மகா புத்திரப் பிள்ளை என்றும், அதனை எழுத
உபயம் செய்தவர் ஆழ்வார் திருநகரி வலோயுதம் பிள்ளை குமாரன் வீரபத்திரப்
பிள்ளை என்றும் அறிய முடிகிறது.
இக்கோயிலின் பெற்றாமரைக் குளத்தைச் சுற்றியுள்ள பிரகாரச் சுவரில் திருவிளையாடற்
புராணக் கதைகள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டிருந்தன. கால வெள்ளத்தில் பெரும்பாலான
ஓவியங்கள் அழிந்து போயின. சில ஆண்டுகளுக்கு முன்(1990களில்) நிகழ்ந்த
குடமுழுக்கு விழாவில் அவ்வோவியங்களின் பழமையும்
பெருமையும் அறியாதவர்கள் வெள்ளையடித்து ஓவியங்களை அழித்துவிட்டனர். இந்த
அழிவில் இருந்து தப்பிய ஓர் ஓவியம் ஊஞ்சல் மண்டபத்தின் விதானத்தில் உள்ளது.
இந்த ஓவியத்தில் மீனாட்சியை அண்ணன் திருமால் தாரை வார்க்க, சிவபெருமான்
மீனாட்சியின் திருக்கரம் பற்றும் திருமணக் காட்சி தீட்டப் பட்டுள்ளது.
அருகில் இருந்து இராணி மங்கம்மாள் இத்திருமண நிகழ்ச்சியைக் கண்டு களிப்பதாக
வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியம் மங்கம்மாள் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம்.
மங்கம்மாளுக்கு அருகில் விசயரங்க சொக்கநாத நாயக்கரும் இராமப்பையனும்
உள்ளனர். இவ்வோவியத்தின் பக்கவாட்டில் மீனாட்சி திக்கு விசயத்தில் அட்ட
திக்கு பாலகருடன் போரிட்டு வெல்கின்ற காட்சிகள் வரையப்பட்டுள்ளன. தற்பொழுது
அழிந்துபோன ஓவியங்களை அதே இடத்தில் மீண்டும் கேரளத்தைச் சேர்ந்த ஓவியர்
ஒருவர் வரைந்து
வருகிறார்.
மதுரைக்கு அருகில் உள்ள அழகர் கோயில் வசந்த மண்டபத்தில் இராமயாணக்
கதை ஓவியமாகச் சிறப்பாகத் தீட்டப்பட்டு உள்ளது. திருமாலிடம் தேவர்கள்
அனைவரும் இராவணனை அழிப்பது தொடர்பாக
வேண்டுவதில் இருந்து தொடங்கி, இராமர் முதலானோர் பிறப்பு, வளர்ப்பு, இராவணன்
அழிக்கப்படல் ஆகியவற்றைக் காட்டி, இராமர் முடிசூடலுடன் முடிவதாக அமைந்துள்ளது.
ஓவியத்தில் சில நாட்டுப்புறப் பண்பாட்டுக் கூறுகள் இடம் பெற்றுள்ளதைக்
காணலாம். உதாரணமாகக் கோசலை, கைகேயி, சுமத்திரை கருவுற்றிருந்தபோது தசரதன்
முகச் சவரம் செய்யாமல் இருப்பது, குழந்தைகள் பிறந்ததும் தாதியர் கால்களை
நீட்டிக் குழந்தைகளை நீராட்டுவது, தொட்டிலில் இட்டுத் தாலாட்டுவது போன்ற
காட்சிகளைக் கூறலாம்.
இந்த ஓவியங்கள் இயக்கத்தொழில் நுட்பத்துடன் (Animation Technique)
அமைந்துள்ளன. இராம-இலக்குவர்கள் குருவிடம் படிக்கத்
தொடங்கும் பொழுது ஓலையில் முதன் முலாக “ஸ்ரீராம ஜெயம்”
என எழுதுவதாகக்
காட்டப் பட்டுள்ளது. இராமரே தம் பெயரை
எழுதும் ஓவியம் நகைச்சுவை தருவதாக இருப்பினும், அக்காலத்தில்
எந்த
ஒரு காரியத்தைத் தொடங்கும் போதும் “ஸ்ரீராமஜெயம்” எழுதும்
வழக்கம் மக்களிடம் இருந்தது என்பதனை நாம் புரிந்து கொள்ள
முடிகிறது.
1) இதுபோன்ற இராமாயண ஓவியத் தொகுதிகள் ஸ்ரீவில்லிபுத்தூர்
ஆண்டாள் கோயில் யாளி மண்டப
விதானத்தில் இருந்து,
இன்றைய நிலையில் முழுவதுமாக அழிந்து விட்டன.
புதுக்கோட்டை திருக்கோகர்ணேஸ்வரர் கோயிலில் உள்ள இராமாயண
ஓவியங்கள் காணத் தக்கவை.
2) இராமநாதபுரம் அரண்மனையில் இத்தகைய இராமாயண ஓவியத்
தொகுதி காணப்படுகிறது. இந்த ஓவியமானது
இன்றளவும் சிதைவுறாத
வண்ணம் பாதுகாக்கப் படுகிறது.
3) திருவெள்ளறைக் கோயிலிலும் அழிந்தவை போக எஞ்சியுள்ள ஓவியங்களில்
இராமாயணக் கதை காட்டப்பட்டு உள்ளது.
மேற்குறிப்பிட்ட கோயில்களைத் தவிர வேறுபல கோயில்களிலும்
மிகச்சிறந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
இங்குத் திருமாலைப் பிரம்மா, சிவன் ஆகியோர் வணங்குவது
போன்ற ஓவியம் இடம் பெற்றுள்ளது. இதனை ஒட்டித் திக்கு பாலகர் ஓவியம் காணப்படுகிறது. திக்கு பாலகருடைய வாகனங்கள் கூடத் தீட்டப்பட்டு உள்ளன. கருடாழ்வார் மற்றும் ஆஞ்சநேயர் வரையப்பட்டு உள்ளனர். வைணவ அடியார்களின் உருவங்களும் கின்னரர், கின்னரி உருவங்களும் திருமாலின் பஞ்ச ஆயுதங்களான பாஞ்ச சன்யம் எனும் சங்கு, நந்தகி எனும் கத்தி, சுதர்ஸனம் எனும் சக்கரம், சாரங்கம் எனும் வில், கௌமோதகி எனும் கதை ஆகியனவும் வரையப்பட்டு உள்ளன.
இங்குத் திருமாலது உருவம் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற நிலையில் தீட்டப்பட்டு உள்ளது. திக்கு பாலகரது உருவங்களும் இடம் பெற்றுள்ளன. கோயிலின் மூன்றாம் தளத்தில் திருமாலின் அவதாரங்கள் வரையப்பட்டுள்ளன. ஆழ்வார் பன்னிருவர் ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன.
விசயநகர அரசின் காலத்தில், இங்குச் சமணரது கோயிலின் முன் முக மண்டபம் கட்டப்பட்டு, அதன் விதானத்தில் மகாவீரரின் ஓவியங்கள் வரையப்பட்டன. அவை இன்று சிதைந்து காணப்படுகின்றன. ஓவியங்களின் கீழே தமிழில் விளக்கம் எழுதப்பட்டுள்ளது.
இக்கோயில் கருவறையின் முன் உள்ள மண்டபத்திலும் நரசிம்மர் ஆலயத்திலும் ஆண்டாள் ஊஞ்சல் மண்டபத்திலும் சில ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. இவைகளில் சிறப்பானவை வஸ்திர அபகரணக் கண்ணன், காளிங்க நர்த்தனன், மன்மதன், ரதி, திருமால் ஓவியங்களாகும்.
இக்கோயிலின் வேணுகோபாலர் சன்னதிக்கு முன்னுள்ள மண்டப விதானத்தில் குழலூதும் கண்ணனும் அவனைச் சுற்றிக் கோபியரும் தீட்டப்பட்டு உள்ளனர். இத்தகு ஓவியங்கள் தஞ்சைக்கு அருகில் திருவீழி மிழலையிலும் காணப்படுகின்றன.
மதுரைக்கருகில் உள்ள நத்தம் கோவில்பட்டியில் உள்ள சிவன் கோயிலில் அம்மன் சன்னதியின் முன்மண்டப விதானத்தில் காளிதாசன் எழுதிய குமார சம்பவம் தொடர்பான ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் சிவபெருமான் பார்வதியின் காதல், சிவபெருமான் மீது மன்மதன் அம்பு தொடுத்தல், சிவபெருமான் மன்மதனைத் தன் நெற்றிக் கண்ணைத் திறந்து எரித்தல், சிவ - பார்வதி திருமணம், ஆறுமுகன் உருவாதல் எனக் குமார
சம்பவத்தினை மிக அழகாகச் சித்திரித்துள்ளனர்.