தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

நாவலின் தோற்றமும் வகைகளும்

2.2 நாவலின் தோற்றமும் வகைகளும்

    ‘கவிதையின் கற்பனை     அழகுகளையும், உணர்ச்சி
வெளிப்பாடுகளையும் உரைநடையில் கொண்டு வர முடியும்
என்று உணர்த்தப்பட்ட பிறகு,     தமிழ் உரைநடைப்
படைப்பிலக்கியத்தில் முதலில்     தோன்றியது நாவல்
இலக்கியமே’ என, இரா.தண்டாயுதம் கூறுகிறார்.

  • புரிதலில் கடினம்
  •     ஓலைச் சுவடிக் காலத்தில் படைக்கப்பட்ட பெரும் கவிதை
    இலக்கியங்களை, மிகச் சிறந்த கல்வி அறிவும், பரந்துபட்ட
    இலக்கிய உணர்வும் உள்ளவர் மட்டுமே படிக்க முடியும் என்ற
    சூழல் நிலவியது. கதைகளைப் படிக்க, படித்துப் புரிந்து
    கொள்ள செய்யுள் வடிவம் சாதாரண மக்களுக்கு இடையூறாக
    இருந்தது. முதலில் செய்யுளைப் பிரித்துப் படித்து அதன்
    முழுப்பொருளையும் புரிந்து, கதையை விளங்கிக் கொள்ளுதல்
    மக்களுக்குச் சிரமமாக இருந்தது. செய்யுள் வடிவம் சில
    கட்டுப்பாடுகளுக்குரிய யாப்பு வடிவமாக இருந்ததால் கதை
    ஓட்டம் பாதிக்கப்பட்டது. கதையைப் படிக்க விரும்புவோர்
    மிகப் பெரும் இடர்களுக்கு உள்ளாக வேண்டியிருந்தது.

  • உரைநடையும் எளிமையும்
  •     உரைநடையில் அசை, சீர், தளை, தொடை, எதுகை,
    மோனை தேவையில்லை. மேலும் சாதாரண மக்கள் பேசும்
    நடையிலேயே எழுதுவது சுலபம். படிப்போரும் மிகச்
    சுலபமாக நாவலைப் படிக்க இயலும். எனவே உரைநடை
    வடிவத்தில் கதையை எழுதி நாவல் இலக்கியம் உருவாக்கினர்.

        நாவலின் தோற்றம் பற்றி ஹென்றி லாரன் என்ற
    ஆய்வாளர்     கீழ்க்கண்டவாறு     கூறுவதாகப்
    பேரா.இரா.தண்டாயுதம்
    எடுத்துரைக்கிறார்.

    “நாடகத்தின் ஒளியானது மிக வேகமாக இலக்கிய வானில்
    குன்றிடவே, புதிய விண்மீன் வரவை எதிர் நோக்கினர்.
    புதிய இலக்கிய வடிவம் ஒன்றைத் தருவதால் வேடிக்கை
    உணர்வைத் தருவதுடன்     அறக்கருத்தைத் தந்து
    முன்னேற்றும் தன்மை     உடையதாகவும் எளிமை
    உடையதாகவும், அந்தக் காலத்தின் தேவையை நிரப்பக்
    கூடியதாகவும் ரிச்சர்ட்சன்     புதிய வெள்ளியைப்
    படைத்தார்.”

    எனவே, நாவலின் தோற்றம் என்பது இலக்கிய உலகில் புதிய
    விடிவெள்ளியாக அறிஞர்களால் கருதப்பட்டது. வாழ்க்கையை
    அதன் போக்கிலேயே எதார்த்தமாகப் படம் பிடித்துக் காட்டும்
    ஓர் இலக்கிய வடிவமாக உரைநடையில் தோன்றியதுதான்
    நாவல்.

        நாவல் என்ற இலக்கிய வடிவம் தோன்றவில்லை என்றால்
    அவ்வக்கால மக்களின் சமூக வாழ்க்கை, வர்க்க வேறுபாடு,
    காதல் நிகழ்வுகள், உரையாடல் மொழி ஆகியவை பதிவு
    செய்யப்படாமல் போயிருக்க வாய்ப்புண்டு.

        நாவலில் இடம் பெறும் எந்த ஒரு கதை மாந்தரும் தனித்து
    இயங்கி வாழ்வதில்லை. கதை மாந்தர் சமூகத்தின் ஓர்
    அங்கமாகத் திகழ்வதால்     சமூகத்தின் வளர்ச்சியிலும்,
    வீழ்ச்சியிலும் தன் பங்கினைச் செய்கின்றனர். சமூகம் கதை
    மாந்தரைப் பாதிப்பதால் சமூகம் நாவலில் முக்கியப்
    பங்காற்றுகின்றது. எனவே, நாவல் இலக்கியம், தான் தோன்றிய
    காலத்துச் சமூக வாழ்வை முழுமையாகப் பதிவு செய்கிறது. இது
    எதிர்கால வரலாற்று ஆய்விற்கு முக்கியப் பங்காற்றுவதாக
    விளங்கும்.

        நாவல்களைப் பொதுவாக     இருபெரும் பிரிவுகளாக
    வகைப்படுத்தலாம்.

    (1)
    சமூக நாவல்
    (2)
    வரலாற்று நாவல்

        நாவலின் கதைப்     பின்னணி அடிப்படையில்தான்
    இப்பிரிவுகள் அமைகின்றன.

        சமூகவியலாளர் மனிதனைச் சமூக விலங்கு என்றே
    கூறுவர். அச்சமூக விலங்கு கூடி வாழும் பொழுது பல்வேறு
    பிரச்சனைகள் ஏற்படும். ஒரு குறிப்பிட்ட காலச் சூழலில்
    சமூகத்தில் மக்களுக்குள் உணர்வு அடிப்படையில், வாழ்வு
    அடிப்படையில் ஏற்படும் சிக்கல்களைச் சமூக நாவல்கள்
    பாத்திரங்கள் வாயிலாக வெளிப்படுத்துகின்றன. காதல், வறுமை, பொருளாதாரச் சிக்கல்கள், சாதியச் சிக்கல்கள், மத
    அடிப்படைச் சிக்கல்கள் முதலியவற்றைச் சமூக நாவல்கள்
    புலப்படுத்தக் கூடும். ஒரு படைப்பாளி, தான் வாழும்
    சமூகத்தில் கண்ட, கேட்ட, அனுபவித்த இன்பமான அல்லது
    சோகமான முடிவுகளைக் கொண்ட செய்திகளைச் சற்றுக்
    கற்பனையை இணைத்துச் சமூக நாவல்களாகப் படைப்பர். சமூக
    நாவல்களில் வரும் கதைப் பாத்திரங்களின் பெயர் மட்டும்
    கற்பனையாக இருந்து கதை உண்மையாக நடந்த நிகழ்ச்சியாக
    இருக்கக் கூடும். சமூக நாவல்களைப் பண்பு அடிப்படையில்

    (1)
    யதார்த்தம் அல்லது நடப்பியல் நாவல்
    (2)
    போலி யதார்த்த நாவல்

    என்று பிரிப்பர். இந்த அடிப்படையில் சமூக நாவல்களைப்
    பிரித்தால் நாவலில் யதார்த்தமும், யதார்த்தம் போல்
    கற்பனையும் அமைந்திருப்பதாக ஏற்றுக் கொள்ளலாம்.

        நாவல்களைக் கீழ்க்கண்ட முறையில் மேலும் பிரித்துக்
    காண்பர் ஆய்வாளர்கள்.

    (1)
    வட்டார நாவல்
    (2)
    குடும்ப நாவல்
    (3)
    சமுதாய நாவல்
    (4)
    குறுநாவல்
    (5)
    பெரு நாவல்
    (6)
    புதுமை நாவல்
    (7)
    உளவியல் நாவல்
    (8)
    ஆன்மிக நாவல்
    (9)
    துப்பறியும் நாவல்

    இவ்வாறு வகைப்படுத்தினாலும் இன்னும் மார்க்சிய நாவல்,
    அறிவியல் நாவல், அங்கத நாவல், கடித நாவல், பின்
    நவீனத்துவ நாவல் என்றும் பிரிப்பது உண்டு.

  • வட்டார நாவல்
  •     ஒரு குறிப்பிட்ட வட்டாரத்துக்குள் வாழும் மக்களின்
    சமூகப் பழக்க வழக்கங்களை அடிப்படையாகக் கொண்டு
    எழுதப்படும் நாவல் வட்டார நாவல் எனப்படும்.
    அம்மக்களின் உரையாடல் நடையிலேயே அந்நாவல்
    எழுதப்பட்டிருக்கும்.

        இராஜம் கிருஷ்ணனின் குறிஞ்சித்தேன் மலைவாழ்
    மக்களின் வாழ்க்கையை அவர்கள் மொழியிலேயே படம்
    பிடித்துக் காட்டுகிறது. அவரின் கரிப்பு மணிகள் தூத்துக்குடி
    பக்கத்தில் வாழும் உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வை
    வெளிப்படுத்துகிறது. தங்கர்பச்சானின் ஒன்பது ரூபாய்
    நோட்டு
    பண்ருட்டி பகுதி மக்களின் வாழ்வைக் காட்டுகிறது.
    மேலும், பொன்னீலனின் கரிசல், கி.ராஜ நாராயணனின்
    கோபல்ல கிராமம்,
    ஹெப்சிபா ஜேசுதாசின் புத்தம் வீடு
    ஆகிய     நாவல்களும்     வட்டாரத்     தன்மையை
    வெளிப்படுத்துகின்றன.

  • குடும்ப நாவல்
  •     குடும்பங்களில் ஏற்படும் சிக்கல்களை அக்குடும்பப்
    பாத்திரங்களைக் கொண்டே வெளிப்படுத்துவது குடும்ப
    நாவல்
    ஆகும். குடும்ப நாவல்களை எழுதுவதில்
    லஷ்மி
    தலைசிறந்து விளங்கினார். அவரின் பெரும்பாலான
    நாவல்கள் குடும்பப் பின்னணி நாவல்களே ஆகும். அனுராதா
    ரமணன், சிவசங்கரி
    போன்ற பெண் எழுத்தாளர்களே குடும்ப
    நாவல்கள் எழுதுவதில் முன் நின்றனர். ஆனாலும் தமிழில்
    அவ்வளவாக அறியப்படாத தஞ்சை பிரகாஷ் எழுதிய
    கரமுண்டார் வீடு
    குடும்ப நாவல்களில் சிறந்ததாக
    விளங்குகின்றது.

  • சமுதாய நாவல்
  •     ஒரு குறிப்பிட்ட சாதியினரின் அல்லது சமுதாய மக்களின்
    வாழ்க்கை முறை, செயல்பாடுகள், அவர்களின் பிரச்சனைகள்
    ஆகியவற்றை ஆராய்வது     சமுதாய     நாவலாகும்.
    சு.சமுத்திர
    த்தின் கோட்டுக்கு வெளியே என்ற நாவலை
    இதற்குச் சான்றாகக் கூறலாம். அகிலன் அவர்கள் எழுதிய
    பால்மரக் காட்டினிலே
    என்ற நாவல் மலேயா இரப்பர்த்
    தோட்டத் தொழிலாளிகளின் சமூக வாழ்க்கைப் பிரச்சனைகளை
    முழுவதுமாக வெளிப்படுத்தியது.

  • குறுநாவல்
  •     மிக அதிகமான பாத்திரங்களோடு நிறையப் பக்கங்களோடு
    இல்லாமல் குறைவான பாத்திரங்களைக் கொண்டு, சிறுகதையை
    விடச் சற்று பெரிதாக அமைந்து விளங்கும் நாவல்
    குறுநாவலா
    கும். எம்.வி.வெங்கட்ராமின் உயிரின் யாத்திரை,
    இருட்டு,
    ச.கலியாணராமனின் பஞ்சம் பிழைக்க போன்றவை
    இதற்குச் சான்றாக அமையும்.

  • பெரு நாவல்கள்
  •     அளவில் பெரியதாக, மிக அதிகமான பாத்திரங்களுடன்
    நிகழ்வுகள் அதிகமாக உள்ள நாவல் பெரு நாவலாகும். பெரு
    நாவல்கள் பல பாகங்களாகக் கூட வெளி வரலாம். தொடக்கக்
    காலத்தில் பெரிய நாவல்களைக் கல்கி தமிழில் எழுதினார்.
    கல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம்
    போன்றவை சில பாகங்களாக வெளிவந்த பெருநாவல்களாகும்.

  • புதுமை நாவல்கள்
  •     நாவல்கள்     கதையைத்     தொடங்கி     அதனை
    இன்பமுடிவாகவோ, துன்பமுடிவாகவோ     முடிப்பதையே
    வழக்கமாகக் கொண்டிருந்தன. சமூகத்திலும், வாழ்வுப்
    போக்கிலும் பல்வேறு புதிய முயற்சிகள் செய்து பார்க்கப்பட்டு
    அம்முயற்சிகள் வெற்றி பெறுவதை அல்லது தோல்வி
    அடைவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். நாவல்
    படைப்பிலும் புதிய முயற்சிகள் செய்யப்பட்டு, புதிய முறையில்
    கதை சொல்லும் பழக்கம் ஏற்பட்டது. க.நா.சுப்பிரமணியம்
    எழுதிய ஒரு நாள், எம்.வி.வெங்கட்ராம் எழுதிய காதுகள்
    போன்றவை புதிய முறையில் படைக்கப்பட்ட நாவல்களாகும்.
    ஒரு நாள் காலை முதல் இரவு முடிய ஒருவனின் வாழ்வில்
    நிகழ்ந்த     நிகழ்வுகளின்     அடிப்படையில்
    க.நா.சுப்பிரமணியத்தின்      ஒரு நாள் நாவல்
    படைக்கப்பட்டுள்ளது. தன் காதுகளில் ஏற்பட்ட ஒரு சிறு
    பிரச்சனையை     அடிப்படையாகக்     கொண்டு
    எம்.வி.வெங்கட்ராம் காதுகள் எனும் நாவலை எழுதினார்.
    கதைகளில் இவ்வாறு புதுமையை ஏற்படுத்துவது தற்காலத்தில்
    வழக்கத்தில் வருவதைப் புதிய நாவல்கள் படிக்கும் சூழலில்
    நாம் அறிந்து கொள்ளலாம். சுந்தர ராமசாமியின் ஜெ.ஜெ.
    சில குறிப்புகள்
    எனும் நாவல் தமிழில் தோன்றிய புதுமை
    நாவல் வகைகளுள் முதன்மையானது. கற்பனை மாந்தராகிய
    ஒரு எழுத்தாளரின் குறிப்புகளாக, உண்மை மாந்தரைக்
    கூறுவதுபோல் அமைந்தது இந்நாவலாகும்.

  • உளவியல் நாவல்
  •     மனிதரின் உளமெய்ம்மை (Psychic Reality) சார்ந்த
    நிலையில் வெளியாகும் நாவல்கள் இவ்வகையைச் சார்ந்தவை.
    மனிதனின் வாழ்க்கை அவன் செய்யும் செயல்களால் நடப்பது
    இல்லை. அவன் எண்ணுகிற எண்ணங்களால்தான் நடக்கிறது.
    உடலோடு உயிர் ஒட்டியுள்ள வரை மனமும் எண்ணங்களால்
    அலைகிறது. அவ்வெண்ணங்களின் அடிப்படையில் நாவல்
    பாத்திரங்கள் செயல்படுவதே     உளவியல் நாவல்களின்
    அடிப்படையாகும். எம்.வி.வெங்கட்ராமின் அரும்பு இந்நாவல்
    வகையைச் சார்ந்ததாகும்.

  • ஆன்மிக நாவல்
  •     ஆன்மிக எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டு
    அவ்வான்மிகக் கருத்துகளை மக்கள் மனத்தில் பதிப்பதற்காக
    எழுதப்படும் நாவல்கள்     ஆன்மிக நாவல்களாகும்.
    எம்.வி.வெங்கட்ராம்
    எழுதிய இருட்டு, உயிரின் யாத்திரை
    போன்றவை ஆன்மிகத்தின்     சிறப்புகளை     உணர்த்த
    எழுதப்பட்டவை. இருட்டு நாவலில் தீய சக்திகள் ஒருவர்
    உடலில் நுழைந்து கடவுள் மறுப்புக் கொள்கைகளை அவர்
    மூலம் பிரச்சாரம் செய்யச் சொல்லுகின்றன என்று கூறுகின்றார்.
    இத்தீய சக்திகள் எவ்வித நோயுமில்லாத மனிதர்களை
    இறுதியில் மரணத்தில் கொண்டு செலுத்திவிடும் தன்மை
    கொண்டவை என்று உரைக்கின்றார். நாத்திகர் தீயவர் என்றும்,
    ஆத்திகர் நல்லவர் என்றும் இந்நாவல் கூறுகின்றது.

  • துப்பறியும் நாவல்
  •     ஒரு கொலையோ அல்லது சதிச் செயலோ நடந்தால்,
    அதனைக் கண்டு பிடிக்க முயலும் ஒரு துப்பறியும் நிபுணரின்
    நுண்ணிய துப்பறியும் அறிவை விளக்குவது இவ்வகை
    நாவல்கள். தமிழில் தொடக்கக் காலத் துப்பறியும் நாவல்கள்
    சர் ஆர்தர் கானன்டாயில், ரெயினால்ட்ஸ்
    போன்ற
    ஐரோப்பியத் துப்பறியும் நாவலாசிரியர்களின் படைப்புகளின்
    தழுவல்களாகவே வெளிவந்தன. வடுவூர் துரைசாமி
    ஐயங்கார், ஆரணி குப்புசாமி முதலியார், ரங்கராஜூ,
    கோதை நாயகி அம்மாள்
    போன்றவர்கள் இத்தகு
    முயற்சிகளில் ஈடுபட்டனர். துப்பறியும் நாவலில் ஆர்தர்
    கானன்டாயிலின்
         கற்பனைப்     பாத்திரமான
    ஷெர்லாக்ஹோம்ஸ்
    என்ற பாத்திரத்தின் மறுபதிப்பாகச்
    சங்கர்லால்
    என்ற பாத்திரத்தை உண்மைப் பாத்திரம் போல்
    படைத்துப் புகழ் பெற்றவர் தமிழ்வாணன்.

  • வரலாற்று நாவல்கள்
  •     வரலாற்று நாவல்களுக்கும் சமூக நாவல்களுக்கும் சில
    ஒற்றுமை வேற்றுமைகள் உண்டு. வரலாற்று நாவல்களில்
    கதையும், கதை மாந்தர்களும் வரலாற்று நிகழ்ச்சிகளில் இருந்து
    எடுக்கப்பட்டிருக்கும். வரலாற்று நாவல்களில் வரலாற்று
    உண்மைகளைப் புள்ளிகளாக ஆங்காங்கே அமைத்து
    அவற்றைச் சுற்றித் தம் புனைவுகளை இழைகளாக இணைத்து
    நாவலாக்குகின்றனர்.

        வரலாற்றுச் சூழல்கள் இந்நாவல்களில் மையமாக இருக்கும்.
    நிகழ்வுகளும், பாத்திரங்களும் நாவல்களை நடத்திச்
    செல்வனவாக இருக்கும். உண்மைப் பெயர்களில் கற்பனை
    நிகழ்வுகளும், வரலாற்று நிகழ்வுகளும் இணைக்கப்பட்டு
    நாவல்கள் எழுதப்பட்டிருக்கும்.

        பழங்கால மக்களின் வாழ்வு முறை, உணவு, உடை, பழக்க
    வழக்கங்கள் மிக விரிவாக விவரிக்கப்பட்டிருக்கும். தமிழில்
    வரலாற்று நாவல்களை எழுதியதில் முன்னோடியாகத்
    திகழ்பவர் கல்கி. அவரைத் தொடர்ந்து அகிலன்,
    நா.பார்த்தசாரதி,  கோவி.மணிசேகரன்
    போன்றோர்
    வரலாற்று நாவல்களை எழுதிப் புகழ் பெற்றனர். சாண்டில்யன்
    தமிழில் மிகுதியான வரலாற்று நாவல்களை எழுதினார்.

    கல்கி
    அகிலன்
    கோவி.மணிசேகரன்

    வரலாற்று நாவல்களை இரு வகைகளாகப் பிரிக்கலாம்.

    (1)
    பழங்கால வரலாற்று நாவல்
    (2)
    சமகால வரலாற்று நாவல்

    இவற்றுள் பழங்கால வரலாற்று நாவல்களை எழுதுவது மிகச்
    சுலபமானது. பெரும்பாலும்     பெயர்களை உண்மைப்
    பெயர்களாகக் கொண்டு,     நிகழ்ச்சிகளைக் கதையின்
    சுவைக்காகக் கற்பனையாகப் படைக்கலாம். பாத்திரங்களுக்குப்
    பொய்ப் பெயர் கொடுத்து மெய்ப்பொருள் கூறுவதாகவும்;
    மெய்ப் பெயர் கொடுத்துப் பொய்ப் பொருள் கூறுவதாகவும்
    கதையை அமைத்துச் சுவை கூட்டலாம்.

    ஆனால் சமகால வரலாற்று நிகழ்வுகளை நாவலாக்கினால்
    நிகழ்ச்சிகள் அனைத்தும் உண்மைகளாக இருக்க வேண்டும்.
    கற்பனைப் பாத்திரங்களைப் பயன்படுத்த முடியாது. கல்கியின்
    தியாகபூமி, அலையோசை
    போன்றவை சமகால வரலாற்று
    நாவல்களாகும்.

    Tags   :

    புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:34:46(இந்திய நேரம்)