தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


புன்னை

4. நெய்தல்
கானல் அம் சிறுகுடிக் கடல் மேம் பரதவர்
நீல் நிற புன்னைக் கொழு நிழல் அசைஇ,
தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி,
அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு,
5
'அலரே அன்னை அறியின், இவண் உறை வாழ்க்கை
அரிய ஆகும் நமக்கு' எனக் கூறின்,
கொண்டும் செல்வர்கொல்-தோழி!-உமணர்
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி,
கண நிரை கிளர்க்கும் நெடு நெறிச் சகடம்
10
மணல் மடுத்து உரறும் ஓசை கழனிக்
கருங் கால் வெண் குருகு வெரூஉம்
இருங் கழிச் சேர்ப்பின் தம் உறைவின் ஊர்க்கே?
தலைவன் சிறைப்புறத்தானாக, தோழி அலர் அச்சம் தோன்றச் சொல்லி வரைவு கடாயது.-அம்மூவனார்

31. நெய்தல்
மா இரும் பரப்பகம் துணிய நோக்கி,
சேயிறா எறிந்த சிறு வெண் காக்கை
பாய் இரும் பனிக் கழி துழைஇ, பைங் கால்
தான் வீழ் பெடைக்குப் பயிரிடூஉ, சுரக்கும்
5
சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே;
பெரும் புலம்பு உற்ற நெஞ்சமொடு, பல நினைந்து,
யானும் இனையேன்-ஆயின், ஆனாது
வேறு பல் நாட்டில் கால் தர வந்த
பல உறு பண்ணியம் இழிதரு நிலவுமணல்
10
நெடுஞ் சினைப் புன்னைக் கடுஞ் சூல் வெண் குருகு
உலவுத் திரை ஓதம் வெரூஉம்
உரவு நீர்ச் சேர்ப்பனொடு மணவா ஊங்கே.
தலைவன்சிறைப்புறத்தானாக, தலைவி வன்புறை எதிர்அழிந்தது.-நக்கீரனார்

49. நெய்தல்
படு திரை கொழீஇய பால் நிற எக்கர்த்
தொடியோர் மடிந்தெனத் துறை புலம்பின்றே;
முடிவலை முகந்த முடங்கு இறாப் பரவைப்
படு புள் ஓப்பலின் பகல் மாய்ந்தன்றே;
5
கோட்டு மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து,
எமரும் அல்கினர்; 'ஏமார்ந்தனம்' எனச்
சென்று நாம் அறியின், எவனோ-தோழி!
மன்றப் புன்னை மாச் சினை நறு வீ
முன்றில் தாழையொடு கமழும்
10
தெண் கடற் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே?
தோழி, தலைமகளை இரவுக்குறி நயப்பித்தது; சிறைப்புறமாகத் தோழி ஆற்றாமை வியந்ததூஉம் ஆம்.-நெய்தல் தத்தனார்

63. நெய்தல்
உரவுக் கடல் உழந்த பெரு வலைப்பரதவர்
மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண்,
கல்லென் சேரிப் புலவற் புன்னை
விழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும்
5
அழுங்கல் ஊரோ அறன் இன்று; அதனால்,
அறன் இல் அன்னை அருங் கடிப் படுப்ப,
பசலை ஆகி விளிவதுகொல்லோ-
புள் உற ஒசிந்த பூ மயங்கு அள்ளல்
கழிச் சுரம் நிவக்கும் இருஞ் சிறை இவுளி
10
திரை தரு புணரியின் கழூஉம்
மலி திரைச் சேர்ப்பனொடு அமைந்த நம் தொடர்பே?
அலர் அச்சத்தால்தோழி சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது.-உலோச்சனார்

67. நெய்தல்
சேய் விசும்பு இவர்ந்த செழுங் கதிர் மண்டிலம்
மால் வரை மறைய, துறை புலம்பின்றே;
இறவு அருந்தி எழுந்த கருங் கால் வெண் குருகு
வெண் கோட்டு அருஞ் சிறைத் தாஅய், கரைய
5
கருங் கோட்டுப் புன்னை இறைகொண்டனவே;
கணைக் கால் மா மலர் கரப்ப, மல்கு கழித்
துணைச் சுறா வழங்கலும் வழங்கும்; ஆயிடை,
எல் இமிழ் பனிக் கடல், மல்கு சுடர்க் கொளீஇ,
எமரும் வேட்டம் புக்கனர்; அதனால்,
10
தங்கின் எவனோதெய்ய-பொங்கு பிசிர்
முழவு இசைப் புணரி எழுதரும்
உடை கடற் படப்பை எம் உறைவின் ஊர்க்கே?
பகற்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி வரைவு கடாயது.-பேரி சாத்தனார்

74. நெய்தல்
வடிக் கதிர் திரித்த வல் ஞாண்பெரு வலை
இடிக் குரற் புணரிப் பௌவத்து இடுமார்,
நிறையப் பெய்த அம்பி, காழோர்
சிறை அருங் களிற்றின், பரதவர் ஒய்யும்
5
சிறு வீ ஞாழற் பெருங் கடற் சேர்ப்பனை,
'ஏதிலாளனும்' என்ப; போது அவிழ்
புது மணற் கானல் புன்னை நுண் தாது,
கொண்டல் அசை வளி தூக்குதொறும், குருகின்
வெண் புறம் மொசிய வார்க்கும், தெண் கடல்
10
கண்டல் வேலிய ஊர், 'அவன்
பெண்டு' என அறிந்தன்று; பெயர்த்தலோ அரிதே!
தலைவி பாணற்கு வாயில்மறுத்தது.-உலோச்சனார்

76. பாலை
வருமழை கரந்த வால் நிற விசும்பின்
நுண் துளி மாறிய உலவை அம் காட்டு
ஆல நீழல் அசைவு நீக்கி,
அஞ்சுவழி அஞ்சாது, அசைவழி அசைஇ,
5
வருந்தாது ஏகுமதி-வால் இழைக் குறுமகள்!-
இம்மென் பேர் அலர் நும் ஊர்ப் புன்னை
வீ மலர் உதிர்ந்த தேன் நாறு புலவின்
கானல் வார் மணல் மரீஇ,
கல் உறச் சிவந்த நின் மெல் அடி உயற்கே!
புணர்ந்து உடன்போகாநின்ற தலைவன் இடைச் சுரத்துத் தலைவிக்கு உரைத்தது.-அம்மூவனார்

78. நெய்தல்
கோட் சுறா வழங்கும் வாள் கேழ்இருங் கழி
மணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய,
பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம்,
வீழ் தாழ் தாழைப் பூக் கமழ் கானல்,
5
படர் வந்து நலியும் சுடர் செல் மாலை,
நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம்;
கேட்டிசின்-வாழி, தோழி!-தெண் கழி
வள் வாய் ஆழி உள் வாய் தோயினும்,
புள்ளு நிமிர்ந்தன்ன பொலம் படைக் கலி மா
10
வலவன் கோல் உற அறியா,
உரவு நீர்ச் சேர்ப்பன், தேர்மணிக் குரலே!
வரைவு மலிந்தது.-கீரங்கீரனார்

87. நெய்தல்
உள் ஊர் மா அத்த முள் எயிற்று வாவல்
ஓங்கல்அம் சினைத் தூங்கு துயில் பொழுதின்,
வெல் போர்ச் சோழர் அழிசிஅம் பெருங் காட்டு
நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு,
5
அது கழிந்தன்றே-தோழி!-அவர் நாட்டுப்
பனி அரும்பு உடைந்த பெருந் தாட் புன்னை
துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும்
சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும்,
பெருந் தண் கானலும், நினைந்த அப் பகலே.
வரைவிடை வைத்துப்பிரிய ஆற்றாளாய தலைவி கனாக் கண்டு, தோழிக்கு உரைத்தது.-நக்கண்ணையார்

91. நெய்தல்
நீ உணர்ந்தனையே-தோழி!-வீ உகப்
புன்னை பூத்த இன் நிழல் உயர் கரைப்
பாடு இமிழ் பனிக் கடல் துழைஇ, பெடையோடு
உடங்கு இரை தேரும் தடந் தாள் நாரை
5
ஐய சிறு கண் செங் கடைச் சிறு மீன்,
மேக்கு உயர் சினையின் மீமிசைக் குடம்பை,
தாய்ப் பயிர் பிள்ளை வாய்ப் படச் சொரியும்
கானல் அம் படப்பை ஆனா வண் மகிழ்ப்
பெரு நல் ஈகை நம் சிறு குடிப் பொலிய,
10
புள் உயிர்க் கொட்பின் வள் உயிர் மணித் தார்க்
கடு மாப் பூண்ட நெடுந் தேர்
நெடு நீர்ச் சேர்ப்பன் பகல் இவண் வரவே?
தோழி, தலைமகட்கு வரைவு மலிந்து உரைத்தது.-பிசிராந்தையார்

94. நெய்தல்
நோய் அலைக் கலங்கிய மதன் அழி பொழுதில்,
காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்;
யானே, பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி-
கை வல் கம்மியன் கவின் பெறக் கழாஅ
5
மண்ணாப் பசு முத்து ஏய்ப்ப, குவி இணர்ப்
புன்னை அரும்பிய புலவு நீர்ச் சேர்ப்பன்
என்ன மகன்கொல்-தோழி!-தன்வயின்
ஆர்வம் உடையர் ஆகி,
மார்பு அணங்குறுநரை அறியாதோனே!
தலைமகன்சிறைப்புறமாக, தலைவி, தோழிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது.-இளந்திரையனார்

101. நெய்தல்
முற்றா மஞ்சட் பசும் புறம் கடுப்பச்
சுற்றிய பிணர சூழ் கழி இறவின்
கணம் கொள் குப்பை உணங்கு திறன் நோக்கி,
புன்னை அம் கொழு நிழல் முன் உய்த்துப் பரப்பும்
5
துறை நணி இருந்த பாக்கம் உம் உறை நனி
இனிதுமன்; அளிதோ தானே-துனி தீர்ந்து,
அகன்ற அல்குல் ஐது அமை நுசுப்பின்,
மீன் எறி பரதவர் மட மகள்
மான் அமர் நோக்கம் காணா ஊங்கே.
பின்னின்ற தலைமகன், தோழி கேட்பச் சொல்லியது.-வெள்ளியந்தின்னனார்

145. நெய்தல்
இருங் கழி பொருத ஈர வெண் மணல்
மாக் கொடி அடும்பின் மா இதழ் அலரி
கூந்தல் மகளிர் கோதைக் கூட்டும்
காமர் கொண்கன், நாம் வெங் கேண்மை
5
ஐது ஏய்ந்தில்லா ஊங்கும், நம்மொடு
புணர்ந்தனன் போல உணரக் கூறி,
'தான் யாங்கு?' என்னும் அறன் இல் அன்னை;
யான் எழில் அறிதலும் உரியள் நீயும்; நம்
பராரைப் புன்னைச் சேரி, மெல்ல,
10
நள்ளென் கங்குலும், வருமரோ-
அம்ம வாழி!-தோழி அவர் தேர் மணிக் குரலே!
இரவுக்குறி வந்து தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி வரைவுகடாயது.-நம்பி குட்டுவன்

159. நெய்தல்
மணி துணிந்தன்ன மா இரும் பரப்பின்
உரவுத் திரை கொழீஇய பூ மலி பெருந் துறை,
நிலவுக் குவித்தன்ன மோட்டு மணல் இடிகரை,
கோடு துணர்ந்தன்ன குருகு ஒழுக்கு எண்ணி,
5
எல்லை கழிப்பினம்ஆயின், மெல்ல
வளி சீத்து வரித்த புன்னை முன்றில்,
கொழு மீன் ஆர்கைச் செழு நகர்ச் செலீஇய,
'எழு' எனின், அவளும் ஒல்லாள்; யாமும்,
'ஒழி' என அல்லம் ஆயினம்; யாமத்து,
10
உடைதிரை ஒலியின் துஞ்சும் மலி கடற்
சில் குடிப் பாக்கம் கல்லென
அல்குவதாக, நீ அமர்ந்த தேரே!
தலைவியின் ஆற்றாமையும் உலகியலும் கூறி, வரைவு கடாயது.-கண்ணம்புல்லனார்

163. நெய்தல்
உயிர்த்தனவாகுக, அளிய, நாளும்-
அயிர்த் துகள் முகந்த ஆனா ஊதையொடு
எல்லியும் இரவும் என்னாது, கல்லெனக்
கறங்கு இசை இன மணி கைபுணர்ந்து ஒலிப்ப,
5
நிலவுத் தவழ் மணற் கோடு ஏறிச் செலவர,
இன்று என் நெஞ்சம் போல, தொன்று, நனி
வருந்துமன்; அளிய தாமே: பெருங் கடல்
நீல் நிறப் புன்னைத் தமி ஒண் கைதை,
வானம் மூழ்கிய வயங்கு ஒளி நெடுஞ் சுடர்க்
10
கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிற்று
வைகுறு வனப்பின், தோன்றும்
கைதைஅம் கானல் துறைவன் மாவே!
வரைவு மலிந்து சொல்லியது.

167. நெய்தல்
கருங் கோட்டுப் புன்னைக் குடக்கு வாங்கு பெருஞ் சினை
விருந்தின் வெண் குருகு ஆர்ப்பின், ஆஅய்
வண் மகிழ் நாளவைப் பரிசில் பெற்ற
பண் அமை நெடுந் தேர்ப் பாணியின், ஒலிக்கும்
5
தண்ணம் துறைவன் தூதொடும் வந்த
பயன் தெரி பனுவற் பை தீர் பாண!
நின் வாய்ப் பணி மொழி களையா-பல் மாண்
புது வீ ஞாழலொடு புன்னை தாஅம்
மணம் கமழ் கானல், மாண் நலம் இழந்த
10
இறை ஏர் எல் வளைக் குறுமகள்
பிறை ஏர் திரு நுதல் பாஅய பசப்பே.
தோழி பாணற்கு வாயில் மறுத்தது; தூதொடு வந்த பாணற்குச் சொல்லியதூஉம் ஆம்.

172. நெய்தல்
விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய,
'நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப;
நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும்' என்று,
5
அன்னை கூறினள், புன்னையது நலனே-
அம்ம! நாணுதும், நும்மொடு நகையே;
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப,
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்
துறை கெழு கொண்க!-நீ நல்கின்,
10
இறைபடு நீழல் பிறவுமார் உளவே.
பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது; குறிபெயர்த்தீடும் ஆம்.

175. நெய்தல்
நெடுங் கடல் அலைத்த கொடுந் திமிற் பரதவர்
கொழு மீன் கொள்ளை அழி மணல் குவைஇ,
மீன் நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய
சிறு தீ விளக்கில் துஞ்சும், நறு மலர்ப்
5
புன்னை ஓங்கிய, துறைவனொடு அன்னை
தான் அறிந்தன்றோ இலளே; பானாள்
சேரிஅம் பெண்டிர் சிறு சொல் நம்பி,
சுடுவான் போல நோக்கும்,
அடு பால் அன்ன என் பசலை மெய்யே.
தோழி சிறைப்புறமாகச் சொல்லியது.

227. நெய்தல்
அறிந்தோர் 'அறன் இலர்' என்றலின், சிறந்த
இன் உயிர் கழியினும் நனி இன்னாதே;
புன்னைஅம் கானல் புணர் குறி வாய்த்த
பின் ஈர் ஓதி என் தோழிக்கு, அன்னோ!
5
படு மணி யானைப் பசும்பூட் சோழர்
கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண்,
கள்ளுடைத் தடவில் புள் ஒலித்து ஓவாத்
தேர் வழங்கு தெருவின் அன்ன,
கௌவை ஆகின்றது-ஐய!-நின் அருளே.
வரையாது நெடுங்காலம் வந்து ஒழுக, தோழி தலைமகனை வரைவு முடுகச் சொல்லியது.-தேவனார்

231. நெய்தல்
மை அற விளங்கிய மணி நிற விசும்பில்
கைதொழும் மரபின் எழு மீன் போல,
பெருங் கடற் பரப்பின் இரும் புறம் தோய,
சிறு வெண் காக்கை பலவுடன் ஆடும்
5
துறை புலம்பு உடைத்தே-தோழி!-பண்டும்,
உள் ஊர்க் குரீஇக் கரு உடைத்தன்ன,
பெரும் போது அவிழ்ந்த கருந் தாட் புன்னைக்
கானல்அம் கொண்கன் தந்த
காதல் நம்மொடு நீங்காமாறே.
சிறைப்புறமாகத் தோழி சொல்லி, வரைவு கடாயது.-இளநாகனார்

249. நெய்தல்
இரும்பின் அன்ன கருங் கோட்டுப் புன்னை
நீலத்து அன்ன பாசிலை அகம்தொறும்,
வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண்
பொன்னின் அன்ன நறுந் தாது உதிர,
5
புலிப் பொறிக் கொண்ட பூ நாறு குரூஉச் சுவல்
வரி வண்டு ஊதலின், புலி செத்து வெரீஇ,
பரியுடை வயங்கு தாள் பந்தின் தாவத்
தாங்கவும் தகை வரை நில்லா ஆங்கண்,
மல்லல்அம் சேரி கல்லெனத் தோன்றி,
10
அம்பல் மூதூர் அலர் எழ,
சென்றது அன்றோ, கொண்கன் தேரே?
வரைவிடை மெலிந்தது.-உலோச்சனார்

278. நெய்தல்
படு காழ் நாறிய பராஅரைப் புன்னை,
அடு மரல் மொக்குளின், அரும்பு வாய் அவிழ,
பொன்னின் அன்ன தாது படு பல் மலர்
சூடுநர் தொடுத்த மிச்சில் கோடுதொறும்
5
நெய் கனி பசுங் காய் தூங்கும் துறைவனை
இனி, அறிந்திசினே கொண்கன் ஆகுதல்-
கழிச் சேறு ஆடிய கணைக் கால் அத்திரி
குளம்பினும் சேயிறா ஒடுங்கின;
கோதையும் எல்லாம் ஊதை வெண் மணலே.
தோழி தலைமகட்கு வரைவு மலிந்தது.- உலோச்சனார்

307. நெய்தல்
கவர் பரி நெடுந் தேர் மணியும் இசைக்கும்;
பெயர் பட இயங்கிய இளையரும் ஒலிப்பர்;
கடல் ஆடு வியல் இடைப் பேர் அணிப் பொலிந்த
திதலை அல்குல் நலம் பாராட்டிய
5
வருமே-தோழி!-வார் மணற் சேர்ப்பன்:
இறை பட வாங்கிய முழவுமுதற் புன்னை
மா அரை மறைகம் வம்மதி-பானாள்,
பூ விரி கானல், புணர் குறி வந்து, நம்
மெல் இணர் நறும் பொழில் காணா
10
அல்லல் அரும் படர் காண்கம் நாம், சிறிதே.
குறி நீட ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.-அம்மூவனார்

311. நெய்தல்
பெயினே, விடு மான் உளையின் வெறுப்பத் தோன்றி,
இருங் கதிர் நெல்லின் யாணரஃதே:
வறப்பின், மா நீர் முண்டகம் தாஅய்ச் சேறு புலர்ந்து,
இருங் கழிச் செறுவின் வெள் உப்பு விளையும்,
5
அழியா மரபின் நம் மூதூர் நன்றே-
கொழு மீன் சுடு புகை மறுகினுள் மயங்கி,
சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே;
ஒன்றே- தோழி!-நம் கானலது பழியே:
கருங் கோட்டுப் புன்னை மலர்த் தாது அருந்தி,
10
இருங் களிப் பிரசம் ஊத, அவர்
நெடுந் தேர் இன் ஒலி கேட்டலோ அரிதே.
அலர் கூறப்பட்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது.-உலோச்சனார்

315. நெய்தல்
ஈண்டு பெருந் தெய்வத்து-யாண்டு பல கழிந்தென,
பார்த் துறைப் புணரி அலைத்தலின், புடை கொண்டு,
நல் எருது நடை வளம் வைத்தென, உழவர்
5
புல்லுடைக் காவில் தொழில் விட்டாங்கு,
நறு விரை நன் புகை கொடாஅர், சிறு வீ
ஞாழலொடு கெழீஇய புன்னை அம் கொழு நிழல்
முழவு முதற் பிணிக்கும் துறைவ! நன்றும்
விழுமிதின் கொண்ட கேண்மை நொவ்விதின்
10
தவறும்; நன்கு அறியாய்ஆயின், எம் போல்,
ஞெகிழ் தோள், கலுழ்ந்த கண்ணர்,
மலர் தீய்ந்தனையர், நின் நயந்தோரே.
தலைமகனைப் பரத்தை நொந்து சொல்லியது.- அம்மூவனார்

323. நெய்தல்
ஓங்கித் தோன்றும், தீம் கள் பெண்ணை
நடுவணதுவேதெய்ய-மடவரல்
ஆயமும் யானும் அறியாது அவணம்
ஆய நட்பின் மாண் நலம் ஒழிந்து, நின்
5
கிளைமை கொண்ட வளை ஆர் முன்கை
நல்லோள் தந்தை சிறுகுடிப் பாக்கம்:
புலி வரிபு எக்கர்ப் புன்னை உதிர்த்த
மலி தாது ஊதும் தேனோடு ஒன்றி,
வண்டு இமிர் இன் இசை கறங்க, திண் தேர்த்
10
தெரி மணி கேட்டலும் அரிதே;
வரும் ஆறு ஈது; அவண் மறவாதீமே.
தோழி இரவுக்குறி நேர்ந்தது.- வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்

327. நெய்தல்
நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின்,
பாடு இல கலுழும் கண்ணொடு சாஅய்ச்
சாதலும் இனிதே-காதல்அம் தோழி!-
அந் நிலை அல்லஆயினும், 'சான்றோர்
5
கடன் நிலை குன்றலும் இலர்' என்று, உடன் அமர்ந்து,
உலகம் கூறுவது உண்டு என, நிலைஇய
தாயம் ஆகலும் உரித்தே-போது அவிழ்
புன்னை ஓங்கிய கானற்
தண்ணம் துறைவன் சாயல் மார்பே.
வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாய தலைமகள் வன்புறை எதிர் அழிந் தது.-அம்மூவனார்

354. நெய்தல்
தான் அது பொறுத்தல் யாவது-கானல்
ஆடு அரை ஒழித்த நீடு இரும் பெண்ணை
வீழ் காவோலைச் சூழ் சிறை யாத்த
கானல் நண்ணிய வார் மணல் முன்றில்,
5
எல்லி அன்ன இருள் நிறப் புன்னை
நல் அரை முழுமுதல் அவ் வயின் தொடுத்த
தூங்கல் அம்பித் தூவல் அம் சேர்ப்பின்,
கடு வெயில் கொதித்த கல் விளை உப்பு
நெடு நெறி ஒழுகை நிரை செலப் பார்ப்போர்
10
அளம் போகு ஆகுலம் கடுப்ப,
கௌவை ஆகின்றது, ஐய! நின் நட்பே?
தோழியால் செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது; மனைவயின் தோழியைத் தலைமகன் புகழ்ந்தாற்கு மறுத்துச் சொல்லியதூஉம் ஆம்.- உலோச்சனார்

375. நெய்தல்
நீடு சினைப் புன்னை நறுந் தாது உதிர,
கோடு புனை குருகின் தோடு தலைப் பெயரும்
பல் பூங் கானல் மல்கு நீர்ச் சேர்ப்ப!
அன்பு இலை; ஆதலின், தன் புலன் நயந்த
5
என்னும் நாணும் நன்னுதல் உவப்ப,
வருவைஆயினோ நன்றே-பெருங் கடல்
இரவுத் தலை மண்டிலம் பெயர்ந்தென, உரவுத் திரை
எறிவன போல வரூஉம்
உயர் மணல் படப்பை எம் உறைவின் ஊரே.
வரையாது நெடுங்காலம் வந்தொழுக, தலைமகளது நிலை உணர்ந்த தோழி வரைவு கடாயது-பொதும்பில் கிழார் மகன் வெண்கண்ணி

388. நெய்தல்
அம்ம வாழி, தோழி!-நன்னுதற்கு
யாங்கு ஆகின்றுகொல் பசப்பே-நோன் புரிக்
கயிறு கடை யாத்த கடு நடை எறி உளித்
திண் திமில் பரதவர் ஒண் சுடர்க் கொளீஇ,
5
நடு நாள் வேட்டம் போகி, வைகறைக்
கடல் மீன் தந்து, கானற் குவைஇ,
ஓங்கு இரும் புன்னை வரி நிழல் இருந்து,
தேம் கமழ் தேறல் கிளையொடு மாந்தி,
பெரிய மகிழும் துறைவன் எம்
10
சிறிய நெஞ்சத்து அகல்வு அறியானே?
வரைவு நீட ஆற்றாளாகிய தோழிக்குத் தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது;'மனையுள் வேறுபடாது ஆற்றினாய்' என்றாற்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்.-மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:24:49(இந்திய நேரம்)