|
|
கூன் முள் முண்டகக் கூர்ம் பனி மா மலர் |
|
நூல் அறு முத்தின் காலொடு பாறித் |
|
துறைதொறும் பரக்கும் தூ மணற் சேர்ப்பனை |
|
யானும் காதலென்; யாயும் நனி வெய்யள்; |
|
எந்தையும் கொடீஇயர்வேண்டும்; |
|
அம்பல் ஊரும் அவனொடு மொழிமே. |
உரை |
|
வரைவு நீட்டித்தவிடத்து ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி வரைவு மலிவுகூறியது - குன்றியனார் |
|
ஆர் களிறு மிதித்த நீர் திகழ் சிலம்பில் |
|
சூர் நசைந்தனையையாய் நடுங்கல் கண்டே, |
|
நரந்தம் நாறும் குவை இருங் கூந்தல், |
|
நிரந்து இலங்கு வெண் பல், மடந்தை! |
|
பரிந்தனென் அல்லெனோ, இறைஇறை யானே? |
உரை |
|
வரைவு மலிவு கேட்ட தலைமகட்குத் தோழி, முன்னாளில் தான் அறத்தொடு நின்றமை காரணத்தால் இது விளைந்தது என்பது படக் கூறியது. - பனம்பாரனார் |
|
எம் அணங்கினவே-மகிழ்ந! முன்றில் |
|
நனை முதிர் புன்கின் பூத் தாழ் வெண் மணல், |
|
வேலன் புனைந்த வெறி அயர் களம்தொறும் |
|
செந் நெல் வான் பொரி சிதறி அன்ன, |
|
எக்கர் நண்ணிய எம் ஊர் வியன் துறை, |
|
நேர் இறை முன்கை பற்றி, |
|
சூரரமகளிரோடு உற்ற சூளே. |
உரை |
|
வரைவு நீட்டித்தவழித் தோழி தலைமகற்கு உரைத்தது. - கோப்பெருஞ்சோழன் |
|
யானே ஈண்டையேனே; என் நலனே, |
|
ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇக் |
|
கான யானை கை விடு பசுங் கழை |
|
மீன் எறி தூண்டிலின் நிவக்கும் |
|
கானக நாடனொடு, ஆண்டு, ஒழிந்தன்றே. |
உரை |
|
வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.- மீனெறி தூண்டிலார் |
|
மாக் கழி மணி பூக் கூம்ப, தூத் திரைப் |
|
பொங்கு பிதிர்த் துவலையொடு மங்குல் தைஇ, |
|
கையற வந்த தைவரல் ஊதையொடு |
|
இன்னா உறையுட்டு ஆகும் |
|
சில் நாட்டு அம்ம-இச் சிறு நல் ஊரே. |
உரை |
|
வரைவொடு புகுதானேல் இவள் இறந்துபடும்'' எனத் தோழி, தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது. - நெய்தல் கார்க்கியர் |
|
வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில் |
|
குளவி மொய்த்த அழுகற் சில் நீர் |
|
வளையுடைக் கையள், எம்மொடு உணீஇயர், |
|
வருகதில் அம்ம, தானே; |
|
அளியளோ அளியள், என் நெஞ்சு அமர்ந்தோளே! |
உரை |
|
தலைமகன் கொண்டுதலைப் பிரிதலை மறுத்துத் தானே போகின்றவழி,இடைச்சுரத்தின் பொல்லாங்கு கண்டு, கூறியது. - சிறைக்குடி ஆந்தையார் |
|
பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன |
|
நீர் உறை மகன்றிற் புணர்ச்சி போலப் |
|
பிரிவு அரிது ஆகிய தண்டாக் காமமொடு, |
|
உடன் உயிர் போகுகதில்ல - கடன் அறிந்து, |
|
இருவேம் ஆகிய உலகத்து, |
|
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே. |
உரை |
|
காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.- சிறைக்குடி ஆந்தையார் |
|
இடிக்கும் கேளிர்! நும் குறை ஆக |
|
நிறுக்கல் ஆற்றினோ நன்று மன் தில்ல; |
|
ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில் |
|
கை இல் ஊமன் கண்ணின் காக்கும் |
|
வெண்ணெய் உணங்கல் போலப் |
|
பரந்தன்று, இந் நோய்; நோன்று கொளற்கு அரிதே! |
உரை |
|
கழற்றெதிர்மறை. - வெள்ளிவீதியார் |
|
பதலைப் பாணிப் பரிசிலர் கோமான் |
|
அதலைக் குன்றத்து அகல் வாய்க் குண்டு சுனைக் |
|
குவளையொடு பொதிந்த குளவி நாறு நறு நுதல் |
|
தவ்வென மறப்பரோ-மற்றே; முயலவும், |
|
சுரம் பல விலங்கிய அரும் பொருள் |
|
நிரம்பா ஆகலின், நீடலோ இன்றே. |
உரை |
|
பிரிவிடை அழிந்த கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது. - மோசிகீரனார் |
|
குறுந் தாட் கூதளி ஆடிய நெடு வரைப் |
|
பெருந்தேன் கண்ட இருங் கால் முடவன், |
|
உட்கைச் சிறு குடை கோலி, கீழ் இருந்து, |
|
சுட்டுபு நக்கியாங்கு, காதலர் |
|
நல்கார் நயவார் ஆயினும், |
|
பல் கால் காண்டலும், உள்ளத்துக்கு இனிதே. |
உரை |
|
பிரிவிடை ஆற்றாமையான் தலைமகள் தோழிக்கு உரைத்தது. - பரணர் |
|