121-130

121. குறிஞ்சி
மெய்யே, வாழி?-தோழி-சாரல்
மைப் பட்டன்ன மா முக முசுக்கலை
ஆற்றப் பாயாத் தப்பல் ஏற்ற
கோட்டொடு போகியாங்கு, நாடன்
தான் குறி வாயாத் தப்பற்குத்
தாம் பசந்தன, என் தட மென் தோளே.

இரவுக்குறி வரும் தலைமகன் செய்யும் குறி பிறிது ஒன்றனான் நிகழ்ந்து, மற்று அவன் குறியை ஒத்தவழி, அவ் ஒப்புமையை மெய்ப்பொருளாக உணர்ந்து சென்று, ஆண்டு அவனைக் காணாது தலைமகள் மயங்கியவழிப் பின்னர் அவன் வரவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் கூறியது. - கபிலர்

122. நெய்தல்
பைங் கால் கொக்கின் புன் புறத்தன்ன
குண்டு நீர் ஆம்பலும் கூம்பின; இனியே
வந்தன்று, வாழியோ, மாலை!
ஒரு தான் அன்றே; கங்குலும் உடைத்தே!

தலைமகள் பொழுது கண்டு அழிந்தது. - ஓரம்போகியார்

123. நெய்தல்
இருள் திணிந்தன்ன ஈர்ந் தண் கொழு நிழல்,
நிலவுக் குவித்தன்ன வெண் மணல் ஒரு சிறை,
கருங் கோட்டுப் புன்னைப் பூம் பொழில் புலம்ப,
இன்னும் வாரார்; வரூஉம்,
பல் மீன் வேட்டத்து என்னையர் திமிலே,

பகற்குறியிடத்து வந்த தலைமகனைக் காணாத தோழி, அவன் சிறைப்புறத்தானாதல் அறிந்து, தலைமகட்குச் சொல்லியது. - ஐயூர் முடவன்

124. பாலை
உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின், அகன் தலை,
ஊர் பாழ்த்தன்ன ஓமைஅம் பெருங் காடு
இன்னா என்றிர்ஆயின்,
இனியவோ-பெரும!-தமியோர்க்கு மனையே?

புணர்ந்து உடன் போக நினைத்த தலைமகள் ஒழியப் போகலுற்ற தலைமகற்குத் தோழி சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ

125.நெய்தல்
இலங்கு வளை நெகிழச் சாஅய், யானே,
உளெனே வாழி-தோழி!-சாரல்
தழை அணி அல்குல் மகளிருள்ளும்
விழவு மேம்பட்ட என் நலனே, பழ விறல்
பறை வலம் தப்பிய பைதல் நாரை
திரை தோய் வாங்கு சினை இருக்கும்
தண்ணம் துறைவனொடு, கண்மாறின்றே,

வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள், தோழிக்குக் கூறுவாளாய், தலைவன் சிறைப்புறமாகச் சொல்லியது. - அம்மூவன்.

126. முல்லை
''இளமை பாரார் வளம் நசைஇச் சென்றோர்
இவணும் வாரார்; எவணரோ?'' என,
பெயல் புறந்தந்த பூங் கொடி முல்லைத்
தொகு முகை இலங்கு எயிறு ஆக
நகுமே-தோழி!-நறுந் தண் காரே.

பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - ஒக்கூர் மாசாத்தி

127. மருதம்
குருகு கொளக் குளித்த கெண்டை அயலது
உரு கெழு தாமரை வால் முகை வெரூஉம்
கழனிஅம் படப்பை காஞ்சி ஊர!
ஒரு நின் பாணன் பொய்யன் ஆக,
உள்ள பாணர் எல்லாம்
கள்வர் போல்வர், நீ அகன்றிசினோர்க்கே.

பாணன் வாயிலாகப் புக்கவழித் தலைமகற்குத் தோழி சொல்லியது. - ஓரம்போகியார்

128. நெய்தல்
குண கடல் திரையது பறை தபு நாரை
திண் தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை
அயிரை ஆர் இரைக்கு அணவந்தாஅங்குச்
சேயள் அரியோட் படர்தி;
நோயை-நெஞ்சே!-நோய்ப் பாலோயே.

அல்ல குறிப்பட்டு மீளும் தலைமகன் தன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது; உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் கூறியதூஉம் ஆம். - பரணர்

129. குறிஞ்சி
எலுவ! சிறாஅர் ஏமுறு நண்ப!
புலவர் தோழ! கேளாய் அத்தை;
மாக் கடல் நடுவண் எண் நாள் பக்கத்துப்
பசு வெண் திங்கள் தோன்றியாங்குக்
கதுப்பு அயல் விளங்கும் சிறுநுதல்
புதுக் கோள் யானையின் பிணித்தற்றால் எம்மே.

தலைமகன் பாங்கற்கு உரைத்தது. - கோப்பெருஞ்சோழன்

130. பாலை
நிலம் தொட்டுப் புகாஅர்; வானம் ஏறார்;
விலங்கு இரு முந்நீர் காலின் செல்லார்;
நாட்டின்நாட்டின் ஊரின்ஊரின்
குடிமுறை குடிமுறை தேரின்,
கெடுநரும் உளரோ?-நம் காதலோரே.

பிரிவிடை அழிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது; ''நீ அவர் பிரிந்தார் என்று ஆற்றாயாகின்றது என்னை? யான் அவர் உள்வழி அறிந்து தூது விட்டுக்கொணர்வேன்;நின் ஆற்றாமை நீங்குக!'' எனத் தோழி தலைமகளை ஆற்றுவித்தது. தோழி தூது விடுவாளாகத் தலைமகள் தனது ஆற்றாமையால் கூறியதூஉம் ஆம். - வெள்ளி வீதியார்