Try error :java.sql.SQLException: Closed Resultset: next
 
271-280

271. மருதம்
அருவி அன்ன பரு உறை சிதறி
யாறு நிறை பகரும் நாடனைத் தேறி,
உற்றதுமன்னும் ஒரு நாள்; மற்று-அது
தவப் பல் நாள் தோள் மயங்கி,
வௌவும் பண்பின் நோய் ஆகின்றே,

தலைமகற்கு வாயில் நேர்ந்து புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது.- அழிசி நச்சாத்தனார்

272. குறிஞ்சி
தீண்டலும் இயைவதுகொல்லோ-மாண்ட
வில்லுடை வீளையர் கல் இடுபு எடுத்த
நனந் தலைக் கானத்து இனம் தலைப்பிரிந்த
புன்கண் மட மான் நேர்பட, தன்னையர்
சிலை மாண் கடு விசைக் கலை நிறத்து அழுத்திக்
குருதியொடு பறித்த செங் கோல் வாளி
மாறு கொண்டன்ன உண்கண்,
நாறு இருங் கூந்தல், கொடிச்சி தோளே!

கழறிய பாங்கற்குக் கிழவன் உரைத்தது. - ஒரு சிறைப் பெரியன்

273. பாலை
அல்குறு பொழுதில் தாது முகை தயங்கப்
பெருங் காடு உளரும் அசைவளி போல,
தண்ணிய கமழும் ஒண்ணுதலோயே!
நொந்தனஆயின், கண்டது மொழிவல்;
பெருந் தேன் கண்படு வரையில் முது மால்பு
அறியாது ஏறிய மடவோன் போல,
ஏமாந்தன்று, இவ் உலகம்;
நாம் உளேம் ஆகப் பிரியலன் தெளிமே.

''பிரிவர்'' எனக் கவன்ற தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.- சிறைக்குடி ஆந்தையார்

274. பாலை
புறவுப் புறத்தன்ன புன் கால் உகாஅத்து
இறவுச் சினை அன்ன நளி கனி உதிர,
விடு கணை வில்லொடு பற்றி, கோடு இவர்பு,
வருநர்ப் பார்க்கும் வன்கண் ஆடவர்
நீர் நசை வேட்கையின் நார் மென்று தணியும்
இன்னாக் கானமும், இனிய-பொன்னொடு
மணி மிடை அல்குல் மடந்தை
அணி முலை ஆகம் முயங்கினம் செலினே.

பொருள் வலித்த நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது. - உருத்திரன்

275. முல்லை
முல்லை ஊர்ந்த கல் உயர்பு ஏறிக்
கண்டனம் வருகம்; சென்மோ-தோழி!-
எல் ஊர்ச் சேர்தரும் ஏறுடை இனத்துப்
புல் ஆர் நல் ஆன் பூண் மணிகொல்லோ?
செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு
வல் வில் இளையர் பக்கம் போற்ற,
ஈர் மணற் காட்டாறு வரூஉம்
தேர் மணிகொல்?-ஆண்டு இயம்பிய உளவே.

பருவ வரவின்கண் வரவு நிமித்தம் தோன்ற, தோழி தலைமகட்கு உரைத்தது.- ஒக்கூர் மாசாத்தி

276. குறிஞ்சி
பணைத் தோட் குறுமகள்
பாவை தையும்,
பஞ்சாய்ப் பள்ளம் சூழ்ந்தும், மற்று-இவள்
உருத்து எழு வன முலை ஒளி பெற எழுதிய
தொய்யில் காப்போர் அறிதலும் அறியார்,
முறையுடை அரசன் செங்கோல் அவையத்து
யான் தற் கடவின் யாங்கு ஆவதுகொல்?
பெரிதும் பேதை மன்ற-
அளிதோதானே-இவ் அழுங்கல் ஊரே!

தோழிக்குக் குறைமறாமல் தலைமகன் கூறியது. - கோழிக் கொற்றன்

277. பாலை
ஆசு இல் தெருவின் ஆசு இல் வியன் கடை,
செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது
ஓர் இல் பிச்சை ஆர மாந்தி,
அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்
சேமச் செப்பில் பெறீஇயரோ, நீயே-
''மின்னிடை நடுங்கும் கடைப் பெயல் வாடை,
எக் கால் வருவது?'' என்றி;
அக் கால் வருவர், எம் காதலோரே.

தலைமகன் பிரிந்தவழி, அவன் குறித்த பருவ வரவு தோழி அறிவரைக் கண்டு வினாவியது. - ஓரிற் பிச்சையார்

278. பாலை
உறு வளி உளரிய அம் தளிர் மாஅத்து
முறி கண்டன்ன மெல்லென் சீறடிச்
சிறு பசும் பாவையும், எம்மும், உள்ளார்
கொடியர் வாழி-தோழி!-கடுவன்
ஊழுறு தீம் கனி உதிர்ப்ப, கீழ் இருந்து,
ஏர்ப்பனஏர்ப்பன உண்ணும்
பார்ப்புடை மந்திய மலை இறந்தோரே.

பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் உரைத்தது. - பேரிசாத்தன்

279. முல்லை
திரிமருப்பு எருமை இருள் நிற மை ஆன்
வருமிடறு யாத்த பகுவாய்த் தெண் மணி,
புலம்பு கொள் யாமத்து, இயங்குதொறு இசைக்கும்
இது பொழுது ஆகவும் வாரார்கொல்லோ-
மழை கழூஉ மறந்த மா இருந் துறுகல்
துகள் சூழ் யானையின் பொலியத் தோன்றும்
இரும் பல் குன்றம் போகி,
திருந்து இறைப் பணைத் தோள் உள்ளாதோரே?

வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - மதுரை மருதன் இளநாகனார்

280. குறிஞ்சி
கேளிர்! வாழியோ, கேளிர்! நாளும் என்
நெஞ்சு பிணிக் கொண்ட அம் சில் ஓதிப்
பெருந் தோட் குறுமகள் சிறு மெல் ஆகம்
ஒரு நாள் புணரப் புணரின்,
அரை நாள் வாழ்க்கையும் வேண்டலன் யானே.

கழற்றெதிர்மறை -நக்கீரர்