|
|
வளையோய்! உவந்திசின்-விரைவுறு கொடுந் தாள் |
|
அளை வாழ் அலவன் கூர் உகிர் வரித்த |
|
ஈர் மணல் மலிர் நெறி சிதைய, இழுமென |
|
உரும் இசைப் புணரி உடைதரும் துறைவற்கு |
|
உரிமை செப்பினர் நமரே; விரிஅலர்ப் |
|
புன்னை ஓங்கிய புலால்அம் சேரி |
|
இன் நகை ஆயத்தாரோடு |
|
இன்னும் அற்றோ, இவ் அழுங்கல் ஊரே? |
உரை |
|
தலைமகன் தமர் வரைவொடு வந்தவழி, ''நமர் அவர்க்கு வரைவு நேரார்கொல்லோ?''என்று அஞ்சிய தலைமகட்குத் தோழி வரைவு மலிந்தது. - அம்மூவன் |
|
நெடு நீர் ஆம்பல் அடைப் புறத்தன்ன |
|
கொடு மென் சிறைய கூர்உகிர்ப் பறவை |
|
அகல்இலைப் பலவின் சாரல் முன்னி, |
|
பகல் உறை முது மரம் புலம்பப் போகும் |
|
சிறு புன் மாலை உண்மை |
|
அறிவேன்-தோழி-! அவர்க் காணா ஊங்கே. |
உரை |
|
பிரிவிடைத் தோழிக்குக் கிழத்தி மெலிந்து கூறியது. - கடியலூர் உருத்திரங் கண்ணனார் |
|
ஆர் கலி வெற்பன் மார்பு புணை ஆக, |
|
கோடு உயர் நெடு வரைக் கவாஅன், பகலே, |
|
பாடு இன் அருவி ஆடுதல் இனிதே; |
|
நிரை இதழ் பொருந்தாக் கண்ணோடு, இரவில், |
|
பஞ்சி வெண் திரி செஞ் சுடர் நல் இல் |
|
பின்னு வீழ் சிறுபுறம் தழீஇ, |
|
அன்னை முயங்கத் துயில் இன்னாதே. |
உரை |
|
பகற்குறி வந்தொழுகும் தலைமகன் வெளிப்பாடஞ்சி இரவுக்குறி நயந்தானது குறிப்பறிந்த தோழி, இரவின்கண் அன்னையது காவல் அறிந்து, பின்னும் ''பகற்குறியே நன்று, அவ் இரவுக்குறியின்'', என்று, பகற்குறியும் இரவுக்குறியும் மறுத்து, தலைமகன் சிறைப்புறத்தானாக வரைவு கடாயது. - உறையூர் முதுகூற்றன். |
|
நீர் நீடு ஆடின் கண்ணும் சிவக்கும்; |
|
ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்; |
|
தணந்தனைஆயின், எம் இல் உய்த்துக் கொடுமோ- |
|
அம் தண் பொய்கை எந்தை எம் ஊர்க் |
|
கடும் பாம்பு வழங்கும் தெருவில் |
|
நடுங்கு அஞர் எவ்வம் களைந்த எம்மே? |
உரை |
|
பரத்தையிற் பிரிந்து வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது.- கயத்தூர் கிழான் |
|
பெயல் கால் மறைத்தலின், விசும்பு காணலரே; |
|
நீர் பரந்து ஒழுகலின், நிலம் காணலரே; |
|
எல்லை சேறலின், இருள் பெரிது பட்டன்று; |
|
பல்லோர் துஞ்சும் பானாள் கங்குல் |
|
யாங்கு வந்தனையோ?-ஓங்கல் வெற்ப!- |
|
வேங்கை கமழும் எம் சிறுகுடி |
|
யாங்கு அறிந்தனையோ? நோகோ யானே. |
உரை |
|
இரவுக்குறி நேர்ந்த தலைமகற்குத் தோழி நொந்து கூறியது. - கபிலர் |
|
நிழல் ஆன்று அவிந்த நீர் இல் ஆர் இடைக் |
|
கழலோன் காப்பப் கடுகுபு போகி, |
|
அறுசுனை மருங்கின் மறுகுபு வெந்த |
|
வெவ் வெங் கலுழி தவ்வெனக் குடிக்கிய |
|
யாங்கு வல்லுநள்கொல் தானே-ஏந்திய |
|
செம் பொற் புனை கலத்து அம் பொரிக் கலந்த |
|
பாலும் பல என உண்ணாள், |
|
கோல் அமை குறுந் தொடித் தளிர் அன்னோளே? |
உரை |
|
மகட்போக்கிய செவிலித்தாய் உரைத்தது. - கயமன் |
|
முனி படர் உழந்த பாடு இல் உண்கண் |
|
பனி கால் போழ்ந்து, பணை எழில் ஞெகிழ் தோள், |
|
மெல்லிய ஆகலின் மேவரத் திரண்டு, |
|
நல்ல என்னும் சொல்லை மன்னிய- |
|
ஏனல்அம் சிறு தினை காக்கும் சேணோன் |
|
ஞெகிழியின் பெயர்ந்த நெடு நல் யானை |
|
மீன் படு சுடர் ஒளி வெரூஉம் |
|
வான் தோய் வெற்பன் மணவா ஊங்கே. |
உரை |
|
தோழி கிழவன் கேட்கும் அண்மையனாகக் கிழத்திக்குச் சொல்லியது. - கபிலர் |
|
வீங்குஇழை நெகிழ, விம்மி, ஈங்கே |
|
எறிகண் பேதுறல்; ''ஆய்கோடு இட்டுச் |
|
சுவர்வாய் பற்றும் நின் படர் சேண் நீங்க |
|
வருவேம்'' என்ற பருவம் உதுக்காண்: |
|
தனியோர் இரங்கும் பனி கூர் மாலைப் |
|
பல் ஆன் கோவலர் கண்ணிச் |
|
சொல்லுப அன்ன, முல்லை வெண் முகையே. |
உரை |
|
தலைமகன் பிரிவிடைக் கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது. - கொற்றன் |
|
கண்டிசின்-பாண!-பண்பு உடைத்து அம்ம: |
|
மாலை விரிந்த பசு வெண் நிலவின் |
|
குறுங் காற் கட்டில் நறும் பூஞ் சேக்கை, |
|
பள்ளி யானையின் உயிர்த்தனன் நசைஇ, |
|
புதல்வற் தழீஇயினன் விறலவன்; |
|
புதல்வன் தாய் அவன் புறம் கவைஇயினளே. |
உரை |
|
பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகன் வாயில் வேண்டிப் பெறாது, தானே புக்குக் கூடியது கண்டு தோழி, பாணற்குச் சொல்லியது. - பேயன். |
|
வெறி என உணர்ந்த வேலன் நோய் மருந்து |
|
அறியான் ஆகுதல் அன்னை காணிய, |
|
அரும் படர் எவ்வம் இன்று நாம் உழப்பினும், |
|
வாரற்கதில்ல-தோழி!-சாரல் |
|
பிடிக் கை அன்ன பெருங் குரல் ஏனல் |
|
உண் கிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே |
|
சிலம்பின் சிலம்பும் சோலை |
|
இலங்கு மலை நாடன் இரவினானே. |
உரை |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, வெறி அஞ்சிய தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைவி சொல்லியது - மதுரை ஈழத்துப் பூதன் தேவன் |
|