Tamil Virtual University - Manimegalai

3 மலர்வனம் புக்க காதை

 [ மலர்வனம்புக்க பாட்டு ]

வயந்த மாலைக்கு மாதவி உரைத்த

உயங்குநோய் வருத்தத்து உரைமுன் தோன்றி

மாமலர் நாற்றம் போல்மணி மேகலைக்கு

ஏது நிகழ்ச்சி எதிர்ந்துளது ஆதலின்

5

தந்தையும் தாயும் தாம்நனி உழந்த

வெந்துயர் இடும்பை செவியகம் வெதுப்பக்

காதல் நெஞ்சம் கலங்கிக் காரிகை

மாதர் செங்கண் வரிவனப்பு அழித்துப்

புலம்புநீர் உருட்டிப் பொதியவிழ் நறுமலர்

10

இலங்குஇதழ் மாலையை இட்டுநீ ராட்ட,

மாதவி மணிமே கலைமுகம் நோக்கித்

தாமரை தண்மதி சேர்ந்தது போலக்

காமர் செங்கையில் கண்ணீர் மாற்றித்

தூநீர் மாலை தூத்தகை இழந்தது

15

நிகர்மலர் நீயே கொணர்வாய் என்றலும்,

மதுமலர்க் குழலியொடு மாமலர் தொடுக்கும்

சுதமதி கேட்டுத் துயரொடும் கூறும்:

குரவர்க்கு உற்ற கொடுந்துயர் கேட்டுத்

தணியாத் துன்பம் தலைத்தலை எய்தும்

20

மணிமேக கலைதன் மதிமுகம் தன்னுள்

அணிதிகழ் நீலத்து ஆய்மலர் ஓட்டிய

கடைமணி உகுநீர் கண்டனன் ஆயின்

படையிட்டு நடுங்கும் காமன் பாவையை

ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ

25

பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின்

ஆங்ஙனம் அன்றியும் அணியிழை கேளாய்

ஈங்குஇந் நகரத்து யான்வருங் காரணம்:

பாரா வாரம் பல்வளம் பழுநிய

காராளர் சண்பையில் கௌசிகன் என்போன்

30

இருபிறப் பாளன் ஒருமகள் உள்ளேன்

ஒருதனி அஞ்சேன் ஓரா நெஞ்சமோடு

ஆரா மத்திடை அலர்கொய் வேன்தனை

மாருத வேகன்என் பான்ஓர் விஞ்சையன்

திருவிழை மூதூர் தேவர்கோற்கு எடுத்த

35

பெருவிழாக் காணும் பெற்றியின் வருவோன்

தாரன் மாலையன் தமனியப் பூணினன்

பாரோர் காணாப் பலர்தொழு படிமையன்

எடுத்தனன் என்கொணடு் எழுந்தனன் விசும்பில்

படுத்தனன் ஆங்குஅவன் பான்மையேன் ஆயினேன்

40

ஆங்குஅவன் ஈங்குஎனை அகன்றுகண் மாறி

 

நீங்கினன் தன்பதி நெட்டிடை ஆயினும்,

மணிப்பூங் கொம்பர் மணிமே கலைதான்

தனித்துஅலர் கொய்யும் தகைமையள் அல்லள்

பன்மலர் அடுக்கிய நன்மரப் பந்தர்

45

இலவந் திகையின் எயில்புறம் போகின்

உலக மன்னவன் உழையோர் ஆங்குஉளர்.

விண்ணவர் கோமான் விழாக்கொள் நல்நாள்

மண்ணவர் விழையார் வானவர் அல்லது

பாடுவண்டு இமிரா பல்மரம் யாவையும்

50

வாடா மாமலர் மாலைகள் தூக்கலின்

கைபெய் பாசத்துப் பூதம் காக்கும்என்று

உய்யா னத்திடை உணர்ந்தோர் செல்லார்.

வெங்கதிர் வெம்மையின் விரிசிறை இழந்த

சம்பாதி இருந்த சம்பாதி வனமும்.

55

தவாநீர்க் காவிரிப் பாவைதன் தாதை

கவேரன் ஆங்கு இருந்த கவேர வனமும்

மூப்புடை முதுமைய தாக்குஅணங்கு உடைய

மூப்புடை முதுமைய தாக்குஅணங்கு உடைய

அருளும் அன்பும் ஆர்உயிர் ஓம்பும்

60

ஒருபெரும் பூட்கையும் ஒழியா நோன்பின்

பகவனது ஆணையின் பல்மரம் பூக்கும்

உவவனம் என்பதுஒன்று உண்டு

விளிப்புஅறை போகாது மெய்புறத்து இடூஉம்

பளிக்கறை மண்டபம் உண்டுஅதன் உள்ளது

65

தூநிற மாமணிச் சுடரொளி விரிந்த

தாமரைப் பீடிகை தான்உண்டு ஆங்குஇடின்

அரும்புஅவிழ் செய்யும் அலர்ந்தன வாடா

சுரும்புஇனம் மூசா தொல்யாண்டு கழியினும்

மறந்தேன் அதன்திறம் மாதவி கேளாய்

70

கடம்பூண்டுஓர் தெய்வம் கருத்திடை வைத்தோர்

ஆங்குஅவர் அடிக்குஇடின் அவர்அடி தான்உறும்

நீங்காது யாங்கணும் நினைப்பில ராய்இடின்

ஈங்குஇதன் காரணம் என்னை என்றியேல்

சிந்தை இன்றியும் செய்வினை உறும்எனும்

75

வெந்திறல் நோன்பிகள் விழுமம் கொள்ளவும்

செய்வினை சிந்தை இன்றுஎனின் யாவதும்

எய்தாது என்போர்க்கு ஏது வாகவும்

பயம்கெழு மாமலர் இட்டுக் காட்ட

மயன்பணடு் இழைத்த மரபினது அதுதான்

80

அவ்வனம் அல்லது அணியிழை நின்மகள்

செவ்வனம் செல்லும் செம்மை தான்இலள்

மணிமே கலையொடு மாமலர் கொய்ய

அணியிழை நல்லாய் யானும் போவல்என்று

அணிப்பூங் கொம்பர் அவளொடும் கூடி

85

மணித்தேர் வீதியில் சுதமதி செல்வுழீஇ,

சிமிலிக் கரண்டையன் நுழைகோல் பிரம்பினன்

தவல்அருஞ் சிறப்பின் அராந்தா ணத்துஉளோன்

நாணமும் உடையும் நன்கனம் நீத்துக்

காணா உயிர்க்கும் கையற்று ஏங்கி

90

உண்ணா நோன்போடு உயவல் யானையின்

மண்ணா மேனியன் வருவோன் தன்னை

வந்தீர் அடிகள்நும் மலர்அடி தொழுதேன்

எந்தம் அடிகள் எம்உரை கேண்மோ

அழுக்குஉடை யாக்கையில் புகுந்த நும்உயிர்

95

புழுக்கறைப் பட்டோர் போன்றுஉளம் வருந்தாது

இம்மையும் மறுமையும் இறுதிஇல் இன்பமும்

தன்வயின் தரூஉம்என் தலைமகன் உரைத்தது

கொலையும் உண்டோ கொழுமடல் தெங்கின்

விளைபூந் தேறலின் மெய்த்தவத் தீரே

100

உண்டு தெளிந்துஇவ் யோகத்து உறுபயன்

கண்டால் எம்மையும் கையுதிர்க் கொண்ம்என

உண்ணா நோன்பி தன்னொடும் சூள்உற்று

உண்ம்என இரக்கும்ஓர் களிமகன் பின்னரும்

கணவிரி மாலை கட்டிய திரணையன்

105

குவிமுகிழ் எருக்கில் கோத்த மாலையன்

சிதவல் துணியொடு சேண்ஓங்கு நெடுஞ்சினைத்

ததர்வீழ்பு ஒடித்துக் கட்டிய உடையினன்

வெண்பலி சாந்தம் மெய்ம்முழுது உறீஇப்

பண்புஇல் கிளவி பலரொடும் உரைத்தாங்கு

110

அழூஉம் விழூஉம் அரற்றும் கூஉம்

தொழூஉம் எழூஉம் சுழலலும் சுழலும்

ஓடலும் ஓடும் ஒருசிறை ஒதுங்கி

நீடலும் நீடும் நிழலொடு மறலும்

மையல் உற்ற மகன்பின் வருந்திக்

115

கையறு துன்பம் கண்டுநிற் குநரும்,

சுரியல் தாடி மருள்படு பூங்குழல்

பவளச் செவ்வாய்த் தவள வாள்நகை

ஒள்அரி நெடுங்கண் வெள்ளிவெண் தோட்டுக்

கருங்கொடிப் புருவத்து மருங்குவளை பிறைநுதல்

120

காந்தள்அம் செங்கை ஏந்துஇள வனமுலை

அகன்ற அல்குல் அந்நுண் மருங்குல்

இகந்த வட்டுடை எழுதுவரிக் கோலத்து

வாணன் பேரூர் மறுகிடைத் தோன்றி

நீணிலம் அளந்தோன் மகன்முன் ஆடிய

125

பேடிக் கோலத்துப் பேடுகாண் குநரும்

வம்ப மாக்கள் கம்பலை மூதூர்ச்

சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதொறும்

மைஅறு படிவத்து வானவர் முதலா

எவ்வகை உயிர்களும் உவமம் காட்டி

130

வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய

கண்கவர் ஓவியம் கண்டுநிற் குநரும்,

விழவு ஆற்றுப் படுத்த கழிபெரு வீதியில்

பொன்நாண் கோத்த நன்மணிக் கோவை

ஐயவி அப்பிய நெய்அணி முச்சி

135

மயிர்ப்புறம் சுற்றிய கயிற்கடை முக்காழ்

பொலம்பிறைச் சென்னி நலம்பெறத் தாழச்

செவ்வாய்க் குதலை மெய்பெறா மழலை

சிந்துபு சின்னீர் ஐம்படை நனைப்ப

அற்றம் காவாச் சுற்றுடைப் பூந்துகில்

140

தொடுத்தமணிக் கோவை உடுப்பொடு துயல்வரத்

தளர்நடை தாங்காக் கிளர்பூண் புதல்வரைப்

பொலந்தேர் மீமிசைப் புகர்முக வேழத்து

இலங்குதொடி நல்லார் சிலர்நின்று ஏற்றி

ஆலமர் செல்வன் மகன்விழாக் கால்கோள்

145

காண்மி னோஎனக் கண்டுநிற் குநரும்

விராடன் பேர்ஊர் விசயனாம் பேடியைக்

காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின்

மணிமே கலைதனை வந்துபுறம் சுற்றி,

அணியமை தோற்றத்து அருந்தவப் படுத்திய

150

தாயோ கொடியள் தகவுஇலள் ஈங்குஇவள்

மாமலர் கொய்ய மலர்வனம் தான்புகின்

நல்இள அன்னம் நாணாது ஆங்குஉள

வல்லுந கொல்லோ மடந்தை தன் நடை

மாமயில் ஆங்குஉள வந்துமுன் நிற்பன

155

சாயல்கற் பனகொலோ தையல் தன்னுடன்

பைங்கிளி தாம்உள பாவைதன் கிளவிக்கு

எஞ்சல கொல்லோ இசையுந அல்ல

என்றுஇவை சொல்லி யாவரும் இனைந்துஉக,

செந்தளிர்ச் சேவடி நிலம்வடு உறாமல்

160

குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும்

திலகமும் வகுளமும் செங்கால் வெட்சியும்

நரந்தமும் நாகமும் பரந்துஅலர் புன்னையும்

பிடவமும் தளவமும் முடமுள் தாழையும்

குடசமும் வெதிரமும் கொழுங்கால் அசோகமும்

165

செருந்தியும் வேங்கையும் பெருஞ்சண் பகமும்

எரிமலர் இலவமும் விரிமலர் பரப்பி

வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச்

சித்திரச் செய்கைப் படாம்போர்த் ததுவே

ஒப்பத் தோன்றிய உவவனம் தன்னைத்

170

தொழுதனள் காட்டிய சுதமதி தன்னொடு

மலர் கொய்யப் புகுந்தனள் மணிமே கலைஎன்.

மலர்வனம் புக்க காதை முற்றிற்று..