யாப்பு
பாடம்
Lesson
செய்யுள் உறுப்புகள்
பொருள் பொருந்துமாறு கட்டப்படும் செய்யுளில் உள்ளடங்கும் உறுப்புகள் பல உள்ளன. அவற்றை ஆறு பெயர்களில் பிரித்து வழங்குவர்.
எழுந்து வரும் ஒலிகளை எழுதுவது - எழுத்து.
எழுத்துகள் சேர்ந்து அசைக்கப்பெறுவது - அசை.
அசைகள் தனித்தும் சேர்ந்தும் சீராக அமைவது - சீர்.
முதல் சீரையும் அடுத்தச் சீரையும் சேர்த்துக் கட்டுவது - தளை.
பல சீர்கள் வரிசையாக அமைவது - அடி அல்லது வரி.
வரிகளுக்குள் அமையும் ஒழுங்குமுறை - தொடை.
எழுத்து
செய்யுள் உறுப்புகளில் முதலாவதாக அமைவது எழுத்து ஆகும். முந்தையப் பாடங்களில் நாம் கற்றுணர்ந்த முதல்எழுத்து, சார்பெழுத்து, உயிர், மெய், உயிர்மெய், குறில், நெடில், சுட்டு, வினா முதலானவையே எழுத்துத் தொடர்பான இலக்கணக் கூறுகளாகும்.
அசை
செய்யுளில் அமையும் சொற்களை ஒருவகை இலக்கணக் கட்டுக்கோப்புடன் பிரித்துக் காணும் யாப்பிலக்கணக் கூறுபாடே அசை எனப்படும்.
நிலை - 1
கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகளை உற்று நோக்குக.
வருக > வரு / க | க என்பதை எடுத்துக்கொள்க. குறில் தனியாக வந்துள்ளது. |
செல்க > செல் / க | செல் என்பதை எடுத்துக்கொள்க. குறில் ஒற்றுடன் சேர்ந்து வந்துள்ளது. |
மாதா > மா / தா | மாஎன்பதை எடுத்துக்கொள்க. நெடில் தனியாக வந்துள்ளது. |
மாங்காய் > மாங் / காய் | இதில் காய்என்பதை எடுத்துக் கொள்க. நெடில் ஒற்றுடன் சேர்ந்து வந்துள்ளது. |
இனி, இலக்கண வரையறையைக் காண்போம்.
குறில் தனித்து வரினும், குறில் ஒற்றுடன் சேர்ந்து வரினும், நெடில் தனித்து வரினும், நெடில் ஒற்றுடன் வரினும் அவற்றை நேரசை என்பர்.
நிலை - 2
கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகளைக் கூர்ந்து நோக்குக.
பல | இரண்டு குறில் எழுத்துகள் இணைந்து வந்துள்ளன. |
பலர் | இரண்டு குறில் எழுத்துகளுடன் ஒற்றெழுத்தும் சேர்ந்து வந்துள்ளன. |
விடா | ஒரு குறிலும் ஒரு நெடிலும் சேர்ந்து வந்துள்ளன. |
விடார் | குறில் நெடில் சேர்ந்து அவற்றுடன் ஒற்றெழுத்தும் இணைந்து வந்துள்ளன. |
இனி, இலக்கண வரையறையைக் காண்போம்.
இரு குறில் இணைந்து வரினும், இருகுறில் இணைந்து ஒற்றுடன் சேர்ந்து வரினும், குறிலும் நெடிலும் இணைந்து வரினும், குறிலும் நெடிலும் இணைந்து ஒற்றுடன் சேர்ந்து வரினும் அவற்றை நிரையசை என்பர்.
சீர்
நேர், நிரை என்னும் இருவகை அசைகளும் தனித்தும் சேர்ந்தும் இடம் பெறுவது சீர் எனப்பெறும். அது ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர், நாலசைச் சீர் என நான்கு வகைபெறும்.
மேலே கண்ட நேர், நிரை என்னும் இரண்டு அடிப்படை அசைகளைக் கொண்டு பல்வேறு வாய்பாடுகள் உருவாக்கப்பெறுகின்றன.
நிலை - 1
ஓரசைச் சீர்கள் இரண்டு - (நேர், நிரை என்பவையே ஓரசைச் சீர்கள்)
நிலை - 2
ஈரசைச் சீர்கள் நான்கு.
அசையமைப்பு | வாய்பாடு | எடுத்துக்காட்டு |
---|---|---|
நேர் + நேர் | தேமா | மாதா |
நிரை + நேர் | புளிமா | மனிதா |
நிரை + நிரை | கருவிளம் | திருமகள் |
நேர் + நிரை | கூவிளம் | பூமகள் |
நிலை - 3
அசையமைப்பு | வாய்பாடு | எடுத்துக்காட்டு |
---|---|---|
நேர் + நேர் + நேர் | தேமாங்காய் | பார்வேந்தன் |
நிரை + நேர் + நேர் | புளிமாங்காய் | தமிழ்வேந்தன் |
நிரை + நிரை + நேர் | கருவிளங்காய் | தமிழ்வளவன் |
நேர் + நிரை + நேர் | கூவிளங்காய் | பூவிழியாள் |
நிலை - 4
அசையமைப்பு | வாய்பாடு | எடுத்துக்காட்டு |
---|---|---|
நேர் + நேர் + நிரை | தேமாங்கனி | நீர்வாழ்வன |
நிரை + நேர்+ நிரை | புளிமாங்கனி | நிலம்வாழ்வன |
நிரை + நிரை + நிரை | கருவிளங்கனி | சுவைதருபழம் |
நேர் + நிரை + நிரை | கூவிளங்கனி | தேன்தருமலர் |
நிலை - 5 - வெண்பாவின் இறுதியில் அமையும் வாய்பாடுகள்
அசையமைப்பு | வாய்பாடு |
---|---|
நேர் | நாள் |
நிரை | மலர் |
நேர்பு (நேர் நேர்) | காசு |
நிரைபு (நிரை நேர்) | பிறப்பு |
தளை
யாப்பு இலக்கணத்தின் முதன்மையான உறுப்பு தளை ஆகும். தளை என்னும் சொல்லுக்கு, ‘கட்டுதல்’ என்று பொருள். ஒரு பாடலில், முதல் சீரின் இறுதியையும், இரண்டாம் சீரின் தொடக்கத்தையும் இணைத்துக்காட்டுவதே தளை எனப்பெறும்.
தளை ஏழு வகைபெறும். அவற்றைக் கீழ்க்காணும் அட்டவணை இனிது விளக்கும்.
வாழ்/ க | வாழ்/ க | மா முன் நேர் | நேர் ஒன்று ஆசிரியத் தளை |
நேர் நேர் | நேர் நேர் | ||
தே மா | தே மா | ||
மா முன் நேர் | |||
உத / வுக | பொரு / ளை | விள முன் நிரை | நிரை ஒன்று ஆசிரியத் தளை |
நிரை / நிரை | நிரை / நேர் | ||
கருவிளம் | புளிமா | ||
விள முன் நிரை | |||
நுண் / மாண் | நுழை / புலம் | மா முன் நிரை | |
நேர் / நேர் | நிரை / நிரை | ||
தே மா | கருவிளம் | ||
மா முன் நிரை | |||
நுழை / புலம் | இல் / லான் | விள முன் நேர் | இயற்சீர் வெண்டளை |
நிரை / நிரை | நேர் / நேர் | ||
கருவிளம் | தேமா | ||
விள முன் நேர் | |||
வந்/தா/ரை | வாழ்/விப்/போம் | காய் முன் நேர் | வெண்சீர் |
நேர்/நேர்/நேர் | நேர்/நேர்/நேர் | ||
தேமாங்காய் | தேமாங்காய் | ||
காய் முன் நேர் | |||
வந்/தவர்/களை | வர/வேற்/போம் | கனி முன் நிரை | ஒன்றிய வஞ்சித்தளை |
நேர்/நிரை/நிரை | நிரை/நேர்/நேர் | ||
கூவிளங்கனி | புளிமாங்காய் | ||
காய் முன் நேர் | |||
வந்/தவர்/களை | வாழ்/விப்/போம் | கனி முன் நிரை | ஒன்றாத வஞ்சித்தளை |
நேர்/நிரை/நிரை | நேர்/நேர்/நேர் | ||
கூவிளங்கனி | தேமாங்காய் | ||
கனி முன் நேர் | |||
வந்/தா/ரை | வர/வேற்/போம் | காய் முன் நிரை | கலித்தளை |
நேர்/நேர்/நேர் | நிரை/நேர்/நேர் | ||
தேமாங்காய் | புளிமாங்காய் | ||
காய் முன் நிரை |
அடி அல்லது வரி
சீர்கள் தொடர்ந்து அமைவதை அடி என்பர். பேச்சு வழக்கில் வரி என்ற சொல்லாலும் வழங்குகிறோம்.
கீழ்க்காணும் அட்டவணை அடிகளின் வகைகளை நன்கு விளக்கும்.
எடுத்துக்காட்டு | சீர் அளவு | அடி வகை |
ஆறுவது சினம் | இரண்டு சீர்கள் | குறள் அடி |
அறம் செய்ய விரும்பு | மூன்று சீர்கள் | சிந்தடி |
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் | நான்கு சீர்கள் | அளவடி |
உற்றுழி உதவும் நண்பனே உண்மை நண்பன் | ஐந்து சீர்கள் | நெடிலடி |
அற்பமாய் முயன்றார் யாரும் அறிவினால் பழுத்தார் இல்லை | ஆறு சீர்கள் (அதற்கு மேலும் வரலாம்) | கழிநெடிலடி |
தொடை
மலர்களைத் தொடுப்பது மாலை ஆகிறது. அவ்வாறே சொற்களைத் தொடுப்பது பாடல் ஆகிறது. அடுத்தடுத்து சொற்களைச் சேர்த்து தொடுக்கப் பெறுவது தொடை எனப்பெறும்.
மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை, அந்தாதி, இரட்டை, செந்தொடை எனத் தொடை எட்டு வகைபெறும்.
எடுத்துக்காட்டு | விளக்கம் | தொடை வகை |
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று |
முதல் அடியிலும் இரண்டாம் அடியிலும் முதல் எழுத்து (தோ) (ஒன்றி) ஒன்றாக வருவது | மோனை |
அ கர முதல எழுத்தெல்லாம் ஆதி ப கவன் முதற்றே உலகு |
முதல் அடியிலும் இரண்டாம் அடியிலும் இரண்டாம் எழுத்து (க) (ஒன்றி) ஒன்றாக வருவது | எதுகை |
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டா ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டா | அடிதோறும் இறுதிச் சொல் அல்லது சீர் (ஒன்றி) ஒன்றாக வருவது | இயைபு |
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் | முற்பகல், பிற்பகல் என்பனப் போல ஒன்றுக்கொன்று மாறுபட்ட சொற்கள் அமைவது | முரண் |
கொடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை | அடிதோறும் அளபெடை சொற்கள் அமைவது. | அளபெடை |
உலகுடன் விளங்கும் ஒளிதிகழ் அவர் மதி மதி நலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை முக்குடை நீழற் பொற்புடை யாசனம் | ஓரடியின் இறுதிச் சொல் அடுத்த அடியின் தொடக்கமாக அமைவது. | அந்தாதி |
ஒக்குமே யொக்குமே யொக்குமே யொக்கும் விளக்கினிற் சீறெரி யொக்குமே யொக்கும் குளக்கொட்டிப் பூவின் நிறம் | ஓர் அடி முழுவதும் வந்த சொல்லே திரும்ப வருவது. | இரட்டை |
“ஒன்றை எண்ணின் அதுநிக ழாது வேறு நிகழ விரும்புதல் இல்லை எவர்க்கும் இதுவே இயற்கை ஆகும்” | மேற்கண்ட தொடை அமைப்புகள் எவையும் இடம் பெறாமல் அமைவது. | செந்தொடை |
தொடை விகற்பம்
தொடை என்பது ஒரு பாடலின் அடிதோறும் காண்பது. அத்தகு நயங்களை ஒரே அடியில் இடமிருந்து வலமாகக் காண்பது தொடை விகற்பம் எனப்பெறும்.
மோனை, எதுகை, இயைபு, அளபெடை, அந்தாதி என்பனத் தொடை விகற்பங்களில் இடம்பெறும்.
முதல் எழுத்து ஒன்றிவரும் மோனை என்னும் தொடை விகற்பத்தைக் கீழ்க்காணும் அட்டவணையில் விளக்கமாகக் காணலாம்.
எடுத்துக்காட்டு | மோனை இடம்பெற்ற சீர்கள் | தொடை விகற்பத்தின் பெயர் | |||
---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | ||
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார் | ✔ | ✔ | ✘ | இணை | |
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்கம் | ✔ | ✘ | ✔ | ✘ | பொழிப்பு |
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் | ✔ | ✘ | ✘ | ✔ | ஒரூஉ |
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை | ✔ | ✔ | ✔ | ✘ | கூழை |
வானின்று உலகம் வழங்கி வருதலால் | ✔ | ✘ | ✔ | ✔ | மேற்கதுவாய் |
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் | ✔ | ✔ | ✘ | ✔ | கீழ்கதுவாய் |
கற்க கசடற கற்பவை கற்றபின் | ✔ | ✔ | ✔ | ✔ | முற்று |
அலகிடுதல்
ஒரு பாடலை அசை பிரித்துத் தளை காண்பது அலகிடுதல் எனப் பெறும். இதனை ஓர் எடுத்துக்காட்டின் மூலம் காண்போம்.

1. | மா முன் நிரை | - இயற்சீர் வெண்டளை |
2. | விள முன் நிரை | - இயற்சீர் வெண்டளை |
3. | மா முன் நிரை | - இயற்சீர் வெண்டளை |
4. | ஏவல் விடை | - இயற்சீர் வெண்டளை |
5. | வினா எதிர் வினாதல் | - இயற்சீர் வெண்டளை |
6. | உற்றது உரைத்தல் | - வெண்சீர் வெண்டளை |
7. | உறுவது கூறல் | - காசு |
செய்யுள் வகை
யாப்பு இலக்கணத்தில் விளக்கப்பட்ட உறுப்புகளுடன் முறையாக அமைந்த செய்யுட்களை இசை அடிப்படையிலும், இலக்கண அடிப்படையிலும் நான்காக வகைபடுத்தியுள்ளனர். அவையாவன :
1. வெண்பா
2. ஆசிரியப்பா
3. கலிப்பா
4. வஞ்சிப்பா
இவை ஒவ்வொன்றும் மேலும் பல உட்பிரிவுகளை உடையன. சில பா வகைகளை இங்குக் காண்போம்.
வெண்பா
கீழ்க்காணும் சான்றுகளை உற்று நோக்கவும்.
சான்று - 1
எண்ணித் துணிக கருமம் ; துணிந்தபின்
எண்ணுவம் என்ப திழுக்கு
இது வெண்பா வகையைச் சார்ந்தது. அதன் ஒரு பிரிவான குறள் வெண்பா என்னும் வகைக்கு உரியது.
இரண்டு அடிகளை உடையது. முதல் அடியில் நான்கு சீர்களும், இரண்டாம் அடியில் மூன்று சீர்களும் இடம் பெற்றுள்ளன.
சான்று - 2
முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
தொல்லை அளித்தாரைக் கேட்டறிதும் - எல்லை
நெறிமடல் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப !
அறிமடமும் சான்றோர்க்கு அணி.
இது வெண்பா வகையைச் சார்ந்தது.
அதன் ஒரு பிரிவான நேரிசை வெண்பா என்னும் வகைக்கு உரியது.
நான்கு அடிகளை உடையது. முதல் மூன்று அடிகளில் நான்கு சீர்களும், நான்காம் அடியில் மூன்று சீரும் கொண்டது. இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்று வந்துள்ளது.
சான்று - 3
மழையின்றி மாநிலத்தார்க் கில்லை, மழையும்
தவமில்லார் இல்வழி இல்லை, தவமும்
அரசிலார் இல்வழி இல்லை, அரசனும்
இல்வாழ்வார் இல்வழி இல்
இது வெண்பா வகையைச் சார்ந்தது.
அதன் ஒரு பிரிவான இன்னிசை வெண்பா என்னும் வகைக்கு உரியது.
நான்கு அடிகளை உடையது. முதல் மூன்று அடிகளில் நான்கு சீர்களும், நான்காம் அடியில் மூன்று சீரும் கொண்டது. இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெறாமல் வந்துள்ளது.
(குறிப்பு : இவை தவிர சிந்தியல் வெண்பா, பஃரொடை வெண்பா என்ற வகைகளும் உள்ளன.)
வெண்பாவின் பொது இலக்கணம்
மேற்கண்ட பாடல்களின் அடிப்படையில் வெண்பாவுக்கான பொது இலக்கணங்களை வரையறுத்து உள்ளனர். அவையாவன :
1. செப்பல் ஓசை பெற்று வருதல்.
2. ஈற்று அடி மூன்று சீர்களாகவும், ஏனைய அடிகள் நான்கு சீர்களாகவும் அமைவது.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை என்னும் தளைகளைப் பெற்று வருதல்.
4. இறுதி அடியின் இறுதிச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாடுகளுள் ஒன்றைப் பெற்றுவருவது.
ஆசிரியப்பா
வெண்பாவுக்கு அடுத்த நிலையில் இடம்பெறுவது ஆசிரியப்பா ஆகும். அது,
1. நேரிசை ஆசிரியப்பா
2. இணைக்குறள் ஆசிரியப்பா
3. நிலைமண்டில் ஆசிரியப்பா
4. அடிமறிமண்டில் ஆசிரியப்பா
என்னும் நான்கு வகைகளை உடையது.
கீழுள்ள எடுத்துக்காட்டினை ஆழ்ந்து நோக்குக.
நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவ ராடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே
இப்பாடல் ஆசிரியப்பாவின் இலக்கணப்படி அமைந்தது. இது நேரிசை ஆசிரியப்பா ஆகும்.
பாடலின் ஈற்றடிக்கு முன்னுள்ள அடி மூன்று சீர்களைப் பெற்று வந்துள்ளது.
மற்ற எல்லா அடிகளும் நான்கு சீர்களைப் பெற்று வந்துள்ளன.
ஈற்றடியின் இறுதிச்சீர் ‘ஏ’ என ஏகாரம் பெற்று முடிந்துள்ளது.
இவையாவும் ஆசிரியப்பாவின் அமைப்புகள் ஆகும்.
ஆசிரியப்பாவின் பொது இலக்கணம்
மேற்கண்ட பாடலின் அடிப்படையிலும் பொதுவாகவும் ஆசிரியப்பாவிற்கான பொது இலக்கணங்களை வரையறுத்து உள்ளனர். அவையாவன :
1. அகவல் ஓசை பெற்று வரும்.
2. அடிதோறும் நான்கு சீர்களைப் பெற்றுவரும்.
3. ஈற்று அயலடி மூன்று சீர்களைப் பெற்றுவரும்.
4. ஈற்றுச்சீர் ஏகாரம் பெற்று முடியும்.
5. ஆசிரியத் தளையும் சில சமயம் பிற தளைகளும் இடம்பெறும்.